Saturday 7 October 2017

மணல்வெளி மான்கள்:3


                                                          மணல்வெளி மான்கள்:3
அம்மா.அம்மா. இப்படி சின்னச்சின்னப் பல் சக்கரங்களாக ஒன்றையொன்று தள்ளி, சிறியது பெரியதைத் தள்ளி, எதற்கோ எங்குமே இயங்கும் யந்திரங்களின் உந்துவிசை அவள்தானா? இருக்கலாம். யார் அறிவார்?
பேச்சை மாற்றியாக வேண்டியிருக்கிறது. இதோ பாம்பு உரித்துப் போட்ட தோல் கிடக்கிறதே இது மாதிரி. புது வளர்ச்சிக்கு, புதிய பரிமாணத்திற்கு புகழ்ச்சியில் மூச்சுத் திணறி விடாமல் இருக்க, ஆள் மாற்றமடைவது போல் பேச்சும் மாற வேண்டும்.
நொணாமரத்து மாசிலாகிட்டே என்னத்துக்குத் தகராறு?
நானா பண்றேன்?
பின்னே?
நல்ல கதையா இருக்கே! அவ கொளுந்தியா மச்சினன் துபாய்ல வேலை வாங்கித் தர்றான்னு ஆயிர ரூபாயை வாங்கிக்குடுத்தேன். அஞ்சு வட்டி அசலுக்கு நெஞ்சு முட்ட வட்டி ஆயிடுச்சி. வேல வேணாம். ரூபா குடுண்ணு மூணுமாசமாகக் கேக்கறேன். தோ தோண்ணு வாய்தா வக்கிறான். போன செவ்வாச் சந்தையிலே ஆறாந் தேதி தர்றதா சொன்னான். இன்னிக்குத் தேதி எட்டு.
என்ன சொல்றான்?
கேக்கப்போனா அவன் கொளுந்தியாள வுட்டுட்டு எங்கியோ ஓடிட்டான்னாம். இவன் தானே ஜாமீனு. பொறுப்பா பதில் சொல்லணுமில்லே.
கௌதம் காது கொடுத்தான்.
நீ என்ன பண்றியோ பண்ணிக்கன்னான். கொலவுழும்ணு கத்தினேன். கொடலை உருவிடுவேன்னான். உருவுடா பார்க்கலாம். நீ ஆம்பளையானாக் கொடலை உருவுடான்னேன்.
கை வச்சுட்டான். இல்லியா?
ஆதி பதில் சொல்லவில்லை.
அவனாலும் கொடுக்க முடியாது. அவன் நெலையே ஆட்டம் கண்டு போச்சு. தெரியும்லே.
தெரியும் தெரியும்.
ஆறு மாசத்துக்குள்ளே ஒருத்தன் ரெண்டு அடி வாங்கினான்னா...அதுவும் என்ன மாதிரி அடி?
கௌதம் நினைவில் தோய்வது போன்று பேச்சை நிறுத்தினான்.
கூழ் தீர்ந்து விட்டது. ஆதி இரண்டு தம்ளர்களையும் பாத்திரத்தையும் கழுவ எழுந்தான். கௌதம்தாம்போகிப் பாலத்தின் மீது வீட்டு வேலை முடிந்து துணி வெளுப்பதற்காக இடுப்பில் ஆளுக்கு ஓர் அன்னக் கூடையோடு கைவீசி நடந்துவரும் பெண்களைப் பார்த்தான். பாத்திரங்களை அலம்பிக் கொண்டே ஆதி பேசினான்.
நான் கொடுத்த பணத்தைக் கேக்கத் தானே போனேன், தம்பீ?
நீ போன வேளை சரியில்லே.
நான் என்ன செய்யட்டும், என் கடன்காரன் பொழுது விடியறப்பவே என் வீட்டுக் கதவைத் தட்டிடறான்.
லேசான காற்று வந்தது. அலையலையாகப் பயிர் வரிசைகளை, மயில் கழுத்து நெளிவது போல அசையச் செய்தபடி, அந்த அலை நுணாமரத்துப் பம்பு ஷெட் வரை ஒரு சிறு தூரப் பயணம் போயிற்று.
காற்றோட்டத்தோடு கண்ணோட்டம் செலுத்திய கௌதம் பார்வையை மாசிலாவின் குத்தகை நிலத்தில் நிறுத்தினான்.
பதின்மூன்று ஏக்கர் நிலம் அது!
முதலில் மாசிலா பத்து வயதுப் பையனாக மண் மிதித்த பூமி. அவனுடைய அப்பன் மாரிமுத்துதான் கைபிடித்து அவனை அழைத்து வந்தானாம்.
விட்டலாபுரமே சொல்லும்.
கோரையும் காட்டுச் செடிகளுமாகப் புதர் மண்டியிருந்த நிலம். ஆற்றை ஒட்டிய சிறு மேடு. குறுக்கு வழியென்று மாட்டு வண்டிப் பாதைக்காகச் சக்கரங்கள் ஓடி ஓடி திமிசு வாங்கிய பூமி.
மாரிமுத்துவை கௌதம் பார்த்ததில்லை. விட்டலாபுரம் சொல்லியிருக்கிறது.
கருங்காலி மரத்துச் சட்டம் மாதிரி, வலுவான கட்டடம் உள்ள உடம்பாம். ஆள் வைத்து வேலை வாங்கினான் என்றாலும் வெள்ளி முளைத்ததும் தெரியாது; மறைவதும் தெரியாதாம். அப்படி ஓர் ஈடுபாடு! அவன் சமப்படுத்திய நிலம் அது!
இன்றுதானே டிராக்டர்! அன்று மாரிமுத்து கலப்பையைப் பிடித்தால் ஏர்முனை அரையடி இறங்குமாம். மாசிலாவின் ஏர்முனை முக்கால் அடி இறங்குவதைக் கௌதம் பார்த்திருக்கிறான்.
எவ்வளவு வியர்வை. எல்லாம் ரத்தம். வியர்வையான ரத்தம். அவன் அப்பன் மாரிமுத்து மஞ்சள் காமாலையில் உயிர் விட்டான். விட்டலாபுரத்து விளைச்சல். காண கொல்லி மலையில் இருந்து இறங்கி வந்து உதிரம் ஊற்ற வந்த சொந்தம்.
நுணா மரத்துப் பம்பு ஷெட் அவர்கள் முன்னின்று வெட்டியதுதான். முகம் தெரியாத முதலாளி, பணம்தான் அனுப்ப முடியும். பணமா கிணற்றை வெட்டும்? மனிதர்கள் தேவைப்பட்டனர். மாரிமுத்துவையும் மாசிலாவையும் போல் மண்ணை நேசித்த மனிதர்கள்.
மண் கூட மாதா மாதிரிதான். அம்மாவேதான். முட்டி முட்டிக் குடிக்கிற கன்றுக்குத் தாய்ப் பசு நிறையத்தான் சுரக்கிறது. சொந்தமா சொந்தமில்லையா என்ற கணக்கு வழக்குப் பார்க்காமல் மாதாவின் மார்பில் முட்டி முட்டி வெட்டிய கிணறு அது.
வருஷத்தில் பத்து நாட்கள் மட்டுமே வெள்ளம் ஓடும் பாலாற்றில், மீதி நாட்களில் விட்டலாபுரம் பெண்களுக்கு நுணா மரத்துப் பம்பு ஷெட்தான். படித்துறை, வம்பளப்பு கவுண்ட்டர்.
கரண்ட் வந்துச்சு தம்பி.
போ... போ, போயி மோட்டார் ஸ்விட்சைப் போடு.
ஆதி ஸ்விட்சைப் போட்டு விட்டான்.
உறுமிக் கொண்டே எழுந்து உதறிவிட்டு ஹூங்காரமாக ஒலிக்கத் தொடங்கியது மோட்டார்.
3
ந்தோமா வேலையைப் பார்த்துக் கொண்டு விடுவிடுவென்று போனோமா என்று முடிவதில்லை. சாலையில் நேரே கண்மூடிக் கொண்டு நடப்பது சுளுவில்லை. அதுவும் அவனுக்கு.
கௌதமை எதிர்ப்பட்டவர்கள் அடிக்கடி நிறுத்தினார்கள்.
முதலில் காலியான இரட்டை மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டு வந்த சிங்காரம். வயசு நாற்பது. பெரிய கெய்ஸர் மீசை. கற்றாழை நார் மாதிரி இதற்குள் வெளுப்பு. உடம்பு வாடாத மாதிரியே முகத்தில் சதா ஒரு குதூகலம்.
கடகடவென்று சக்கரப்பட்டை கப்பிரோட்டில் உருள, கடையாணியில் சலங்கை மாட்டுக் கழுத்தில் மணியோசை.
தா... தா!மாட்டை இழுத்துப் பிடித்துக் கொண்டே, யோவ் மரிகப்புள்ளே, நெலா காயற ராவிலே நடக்கற மாதிரி என்ன ஒய்யார நடைபோட்டு வர்றீரு?என்றான் சிங்காரம்.
யார் வாயையாவது கிண்ட வேண்டும் சிங்காரத்துக்கு. அவனுக்குக் கல்யாணமாகவில்லை. அதனால் ஒன்றும் குறைந்து விடவில்லை. போன வாரம் காஞ்சிபுரம் பஸ்ஸில் அவன் பக்கத்தில் எவளோ ஒரு நாற்பது வயதுக்காரி உட்கார்ந்திருந்தாளாம்.
என்ன வேட்டைதானா? ஆத்தங்கரை மீட்டிங் நடந்தாப்லே இருக்கு!என்று கேட்டு விட்டுச் சிங்காரம் கண்ணைச் சிமிட்டினான்.
கௌதமுக்குச் சிரிப்பு வந்தது. காட்டவில்லை.
மாமா, ஒம் புத்தி உன்னை விட்டுப் போகாதே!
புத்தியாச்சே மரிகப்புள்ளே! போய்ட்டா எப்பிடி?
இந்த நியூஸை விசாரிக்கத்தான் வண்டியை நிறுத்தினியா?
அஃகாம். இது பெரிய நூஸு. இத வேற விசாரிக்க வேணும்!என்று மேலே ஏதோ சொல்லப் போன சிங்காரம் நிறுத்தினான்.
நுங்கோ நுங்கு... நுங்கோ நுங்குஎன்று கூவிக் கொண்டு வந்த ஒரு நுங்குக்காரி. ஊரின் கடைசிக் குடிசையும் முடிந்து விடவே கூவலை நிறுத்தினாள்.
சிங்காரத்தின் பார்வை, அவள் மேல் விழுந்து விட்டதே, பேச்சு நின்றதன் காரணம் என்று புரிந்து கொண்டான் கௌதம்.
நுங்கு என்னாம்மா வெலை?
சிங்காரத்தின் பார்வையில் நுங்குக்காரி ஏகமாய் நெளிந்தாள். சரி, சிங்காரத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பமாகி விட்டது.
நான் வரட்டுமா மாமா?
ஆங்... ஆங்... அப்ப பொறப்படறேங்கிறியா... புத்திசாலி மரிகப்புள்ளே நீ! நெல் அவிக்க அடுப்புத் தீனிக்கு தென்ன மட்ட ஏத்தத்தான் போயிட்டிருக்கேன். கல்யாணிம்மா காலம்பறவே காரியத்துக்குப் பூடுச்சாம். சபாபதி மொய்லியாரு அண்ணாசாமி தோப்புல காத்துக்கிட்டிருப்பாரு!
கௌதம் புன்முறுவல் பூத்தான். அவனுக்கு புரிந்தது. சிங்காரம் எதைப் புரிய வைக்க விரும்புகிறானோ அது!
நித்யா தனியாக இருக்கிறாளாம்.
அன்ன வாசலுக்கா போறே...ஐயோ இந்த வெயில்லியா?என்று நுங்குக்காரியிடம் சிங்காரம் உருகத் தொடங்கியதும் கௌதம் வெட்டிக் கொண்டான்.
நிச்சயம் நுங்குக்காரி வண்டியில் ஏறியிருப்பாள்.
கௌதமுக்கு ஒரு சிரிப்பு. இரக்கமா ஏளனமா விவரம் தெரிந்து எதையோ கடந்த கசப்பா.... என்று இனம் புரியாத சிரிப்பு.
பெண் – சிங்காரத்தின் பலவீனம். அவன் தேடிக் கொண்டே இருக்கிறான். எதையோ தொலைத்துவிட்டுத் தேடுவது போல்! தொலைந்தது எது, எப்போது?
நித்யா தனியாய் இருந்தால் உடனே பாய்ந்து கொண்டு ஓடிவிட மாட்டேன் என்று இவனுக்குத் தெரியும். இருந்தாலும் சொல்கிறான். இவன் புத்திக்குத் தக்கபடி.
ன்ன கௌது யோசனை... என்னைப் பாத்துட்டுப் பாக்காம நடக்கிறியே!
சவுந்தரம்மாள். நெற்றியில் குங்கும வட்டம். பட்டுச் சேலை. கழுத்தில் இரட்டை வடச் சங்கிலி. கண்ணில், பிரியம் நட்சத்திரச் சுடர் போல் தெறித்தது.
கவனிக்கலே பெரியம்மா! எங்கே பட்டுப் புடவையும் நகையுமா கௌம்பிட்டே?
காலைலியே சொல்லலே? போஸ்ட் மாஸ்டரு பொண்ணு வயசுக்கு வந்திருக்குன்னு.
சாயங்காலம்தான் வீட்டுக்கு அழைச்சுக்கறாங்கன்னு சொன்னியே?
காலைலே புண்யாதானம் பண்றாங்களாம்! ஆளு மேல ஆளு வந்துடிச்சு.
சரி போய்ட்டு வாங்க!என்று சிரித்துக் கொண்டே விடை கொடுத்தான்.
சாவியப் பக்கத்து வூட்டுத் தாத்தாகிட்டே குடுத்துட்டு வந்திருக்கேன்!என்று திரும்பி நடக்கப் போன சவுந்தரம் நின்றாள்.
நீ ஒம்பது மணிக்கெல்லாம் வந்துடுவேன்னு இமாம் பாய் யூட்ல இருந்து இடியாப்பம் வாங்கி வச்சிருந்தேன்! அது வரட்டி மாதிரி காஞ்சிட்டிருக்குதோ என்னவோ?என்றாள்.
நான் சாப்டுட்டேன் பெரியம்மா!
சாப்டுட்டியா எங்கே?
ஆதிகேசவனுக்குக் கூழ் வந்திருந்துது.
இப்பிடி ஏதாவது ஏடாகோடம் பண்ணுவேனு எனக்குத் தெரியுமே! அதெல்லாம் நடக்காது. சில்வர் பொகுணியிலே இடியாப்பமும் தேங்காய்ப் பால் கிண்ணமும் இருக்கு. நீ காலி பண்ணித்தான் ஆவணும்.
காலிதானே பண்ணச் சொல்றே?
அப்பிடியா கத... சரி நட போவலாம் ஊட்டுக்கு. நீ தின்னுட்டப்பறம் நான் அலுவலுக்குப் போறேன்என்று திரும்பி விட்டாள் சவுந்தரம்.
இல்ல பெரியம்மா. நான் சாப்டுக்கறேன்.
நாலு எட்டு நடந்தவள் மீண்டும் திரும்பினாள்.
ஆங் கௌது! இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். கல்யாணியம்மா வூட்டிலே வெள்ளைப் பொன்னி வேவிச்சிருந்தாங்களாமே. அது மிஷினுக்குப் போய்ட்டு வந்திடுச்சாம். போன ஐட்டத்திலேயே குடுக்கறேன் குடுக்கறேன்னு கல்யாணியம்மா டவுன் வியாபாரிக்கு அளந்துட்டுது.ஒரு எட்டு போயி கண்டுக்கிறியா?
நித்யாவின் அம்மா ஓர் உறவினர் கருமாதிக்குப் போயிருக்கிறாள் என்று பதில் நாக்கு வரையில் வந்து நின்று விட்டது. சரி என்று தலையசைத்து நடந்தான்[தொடரும்]

மணல்வெளி மான்கள்-2

                          மணல்வெளி மான்கள்-2
தா... ஹை!என்று மாடுகளை அதட்டினான். ஒன்று திரும்பிப் பார்த்துக் கொம்புகளை ஆட்டிற்று. கலகலவென்று கழுத்துச் சலங்கை மணிகள் அதிர்ந்தன.
அது முட்டற மாடு. ஒன்னைக் கெணத்துலே தள்ளப் போவுதுஎன்று நித்யா மிரட்டினாள்.
இப்பப் பாரு...
கௌதம் அவற்றின் அருகே சென்று கழுத்தை நீவி, முதுகை இதமாகத் தட்டிக் கொடுத்தான். கொம்பை ஆட்டிய மாட்டின் முதுகுத் தோல் சிலிர்த்துத் துடித்தது.
வடக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு பின்னோக்கி இழுத்தான். மாடுகள் இரண்டும் பின்வாங்கி நடந்தன. கிணற்றை எட்டிப் பார்த்தான். சால் கிணற்று நீரை முத்தமிட்டது. அமிழ்ந்தது. நிறைந்தது.
தா...ஹைஎன்று மாடுகளைத் தட்டி விட்டதும் தாழ்வாகக் குழி போல் இறங்கிய நடைபாதையில் அவை நகர்ந்தன. கூடவே போய் ஒருவாகாக சிவுக்கென்று வடக்கயிற்றின் மீது உட்கார்ந்தான். அவற்றின் இழுவைப் பளு சற்றே குறைந்தது.
கிரிகிரிகிரியென்று ராட்டின சங்கீதம். இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல.
தொட்டியில் கொக்கரித்துக் கொண்டு தண்ணீர் பாய்ந்தது.
பரவால்லே. எண்பது மார்க்!என்றாள் நித்யா.
திரும்பி அவளைப் பார்த்தான். அவள் கண்களில் வேறு பார்வை. பொய்க் கூச்சமின்றி, மாசுபடாத சௌஜன்யத்தோடு, தன்னை வெளியிடும் அந்த வெளியீட்டிலேயே கிட்டும் பரவசத்தோடு...
...தொட்டி நீர் மாதிரி மனசு உள்ளே நிறைந்தது. மாடுகளை விட்டு விட்டு... அவன் மனசில் இச்சை ஓடிய ஓட்டத்தை இழுத்துப் பிடித்தான் – மூக்கணாங்கயிறு போட்டான். வேலை முக்கியமானது. உரம் ஊட்டுவது!
ரெண்டு சாலோட நிறுத்திக்கோ. நான் மொதல்லே துணியை நனைச்சுக்கணும்!
இரண்டாவது சாலுக்கு மாடுகளைக் கிணற்று மேட்டுக்க ஏற்றும் போது தான் கௌதம் திரும்பிப் பார்த்தான். நுணா மரத்துப் பம்பு ஷெட் தெரிந்தது. சிறு கூட்டம். ஆதி கையை ஆட்டி ஆட்டிப் பேசும் அங்க அசைவு. தகராறு யாருடன்?
சால் கிணற்றில் அமிழ்ந்து சாலுடன் இணைந்த தொண்டலக் கயிறு எவ்வி இழுத்தது. ஆதி கையை நீட்டி நீட்டிப் பேசக் கண்ட அதிர்ச்சியில் கௌதம் சால் நிரம்பியதைப் பொருட்படுத்தவில்லை. ஆதி அப்படிப் பேசுகிறவன் அல்ல! கன்னத்தில் அறைந்தால் கூட மென்று விழுங்கி வாங்கிக் கொள்பவன்.
கூட்டத்தைப் பிளந்து, இழுத்துப் பிடித்த இரண்டு புஜங்களை உதறிக் கொண்டு, நுணா மரத்துப் பம்பு ஷெட்டில் குடியிருக்கும் மாசிலா, ஓங்கி ஆதி மார்பில் ஒரு குத்து விட்டது இங்கிருந்து தெரிந்தது. கௌதம் கூர்ந்து கவனித்தான்.
ஆதி பதிலுக்கு மாசிலா மீது தாவி விட்டான். அதற்குள் நாலைந்து பேர் இழுத்து, அவனைத் தடுத்துக் கொண்டு நின்றனர்.
மாட்டுக்காரே! நீ இப்படி ஒட்டினா நான் துணியை நனைச்ச மாதிரிதான்!நித்யா அதட்டினாள். கவனம் திருப்பி, நிற்கும் மாடுகளை தட்டிக் கொடுத்தான். இரண்டாவது சால் நீர் தொட்டிக்குள் கொப்புளித்தது.
நுணா மரத்துப் பம்பு ஷெட்டிலே அடிதடிபோல இருக்கு நித்யா!
அவளும் திரும்பினாள். தூரத்தில் நுணா மரத்தடியில் கூட்டம் இரு பிளவாக ஆதியையும் மாசிலாவையும் பிரித்து நிறுத்திக் கொண்டிருந்தது.
யாரு யாரை அடிச்சது?
மாசிலா ஆதியை அடிச்சுட்டான்.
நித்யா பார்த்துக் கொண்டே நின்றாள். முகம் திரும்பாமல் சொன்னாள்.
இது இத்தோட நிக்கப் போறதில்லே...
அவள் குரலில் அருள் வாக்கு சொல்கிற மாதிரி ஒரு தூர திருஷ்டி ஒலி.
என்ன சொல்றே?
ஆமா! நாலஞ்சு நாளுக்கு முன்னாடி கூட ஊர்ல ஆதியண்ணனுக்கும் மாசிலாவுக்கும் தகராறுன்னு பேச்சு அடிபட்டது.
தகராறா?
ஒனக்குத் தெரியாது! நீ எங்கே இருக்கே? ஊர் ஊரா பம்பு ஷெட் ரிப்பேருக்குப் போயிடறே...
என்ன விஷயம்?
ஆதியண்ணன் மாசிலாவுக்குத் தெரிஞ்சவன் யார்கிட்டேயோ துபாய்க்குப் போறதுக்காக ஆயிரம் ரூபாய் பணம் குடுத்திருக்காம். ஆறு மாசமாகப் போவுது. இதோ அதோன்னு இழுக்கிறானாம் அந்த ஆளு....
ஆதிக்கு அப்படி ஓர் ஆசை உண்டு என்று கௌதம் அறிவான். இருபத்தெட்டு வயசாகியும் எதிலும் நிலை கொள்ள முடியவில்லை அவனால். மேஸ்திரி வேலை செய்தான். டீக்கடை வைத்தான். டைலராயிருந்தான். ஜவ்வாது மலையில் மூங்கில் கூப்பு காண்ட்ராக்டராக இருந்த முனீம்சாயபுக்கு உதவியாளாய்ப் போனான்.
இந்த நிலம் கூட குத்தகைப் பயிர்தான். நிலை கொள்வதற்கு, தன்னைக் கண்டுபிடிப்பதற்கு, அவன் செய்து வரும் இடைவிடாத பரிசோதனைகளில் இதுதான் சமீபமானது.
துபாய்! எத்தனை மனக்கோட்டைகளுக்கு அங்கே கதவு திறந்திருக்கிறது? தங்கம் தெருவிலே கொட்டிக் கிடக்கிறதென்று போகிறார்களோ!
பா... பா... பாஎன்று குரல் கேட்டுத் திரும்பினான்.
தலையில் கஞ்சிக் கலயத்தோடு ஆதியின் அம்மா மங்கலட்சுமி நின்றாள்.
அவன் பிறவி ஊமை.
மகன் எங்கே என்று கேட்கிறாள்.
என்ன சொல்வது?
கஞ்சிக் கலயத்தை வச்சுட்டுப் போகச் சொல்லு. வேற விவரம் சொல்லாதே. அதுக்கு மனசு துடிச்சிடும். வாயும் பேச முடியாம பேபேன்னு கத்திக்கிட்டு கண்ணிலே மாலை மாலையாகத் தண்ணி விடும்என்றாள் நித்யா.
2
யய்ய...இது வேணாம் தம்பி.
சண்டையிலிருந்து திரும்பிய சக்தி தடுத்தாள்.
ஏன்?
உனக்கு நாஷ்டா வாங்கியாரச் சொல்லியிருக்கேன்.
இருக்கட்டும். அதையும் ரெண்டு பேரும் சாப்பிடுவோம்.
இது கேப்பக் கூளு. நீயெல்லாம் சாப்பிடக் கூடாது.
ஒரு மணி நேரத்துக்கு முன் சண்டை போட்ட ஆதியா இவன்? என்னமாய்க் கூசிக் குறுகுகிறான்? மனிதன் கூச்சப்படும்போதுதான் அவன் மேன்மை வெளிப்படுகிறது.
நானும் கிராமத்தான் தான் ஆதி! நான் ஒண்ணும் மகாராஜா பிள்ளை இல்லே. சாதாரண ஹெட் கான்ஸ்டபிள் மகன்.
அதுக்கில்லே.
அம்மா போனப்புறம் அப்பாவுக்குப் பிடிக்குமேன்னு கூழ் கிண்டக் கத்துக்கிட்டேன்.
பட்டம் வாங்கியிருக்கியே தம்பீ! பம்பு செட்டு ரிப்பேர் பண்ண வச்சதே தப்பு. அப்புறம் வேற கூளைக் கொடுக்கணுமா?
மேலும் அவனைப் பரிதவிக்க அனுமதியாமல் ஈய டிபன் தூக்கின் மூடியைத் திறந்தான். கும்மென்று மணம் தூக்கிற்று.
சுடக் கூழா.
ஏன் உனக்குப் புடிக்காதா தம்பீ?
நானா சொன்னேன்? இங்கே ஒரே ஒரு டம்ளர்தானே இருக்கு? இன்னும் ஒரு டம்ளர் வேணுமே!
இரு... பம்பு ஷெட்டிலே வேற ஒரு கிளாஸ் வச்சிருக்கேன்.
ஆதி எழுந்து போனான்.
யதேச்சையாகப் பார்வையைத் திருப்பிய போது சின்னதாகத் தேய்ந்து போன டிடர்ஜெண்ட் கட்டி தெரிந்தது. நித்யா விட்டு விட்டுப் போனது. ஆதி சண்டையிலிருந்து மீண்டு வருமுன்பே அவள் போய்விட்டாள்.
அவன் அவளுக்காகத் தண்ணீர் இறைத்ததையும், துணி துவைத்துக் கொண்டே அவர்கள் வம்பளந்ததையும் கூட்டம் பார்த்திருக்கிறது. கௌதம் நினைத்தான் விட்டலாபுரத்தில் ஒருவன் பார்த்தாலே ஊரே பார்த்த மாதிரி. இது கூட்டம். கொஞ்சம் சிறகு வைத்துப் பறக்க விடுவார்கள். சிலருக்கு ஆதங்கம். பலருக்கு வயிற்றெரிச்சல்.
வெளியூரானுக்குத் தாண்டா நாம் ஊர்லே யோகம்!
அன்றைக்கு பஸ் ஸ்டாப்பில் டீக்கடை வைத்திருக்கிற நாயருக்கும், தனக்கும் என்று பொதுவாக ஒருவன் வீசிவிட்டுப் போன சொல் நினைவு வந்தது.
அவன் திரும்பி, எத்தனையோ தாம்போகிப் பாலத்தையும் ஆற்று மணல் வெளியையும் கரையோரம் இமைத்து நிற்கும் தென்னை மர வரிசையையும், ஊருக்கு மகுடமிட்டு நிற்கும் அனந்த சயனப் பெருமாள் கோயிலையும் பார்த்தான்.
நெஞ்சில் ஏதோ கேவிற்று. ஆறாம் வகுப்பிலிருந்து ப்ளஸ் டூ வரை ஏழு வருஷம். ஆற்றில் ஏழு வெள்ளங்கள். தாம்போகிக் கண்மாய்க்குள் ஆற்று வெள்ளம் பாயும் போது எதிர் நீச்சல்கள்.
பிறந்து வளர்ந்து இந்த ஊரின் அழகும் அருமையும் அறியாது மாண்டு போன ஆயிரக்கணக்கானோருக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தம் எனக்கில்லையா?
அம்மா கையைப் பிடித்துக் கொண்டு போய் ஹைஸ்கூலில் சேர்த்தாள். பையன் எப்படிப் படிக்கிறான் சார்? என்று மாதம் தவறாமல் வகுப்பு விடாமல் வந்து, ஆசிரியருக்குத் தாய்மைக் கரிசனத்தைக் கூச்சமின்றி வெளிப்படுத்தினாள். கடைசியில் அதோ அந்த ஈச்ச மரப் புதர் அருகே சாம்பலானாள். அப்புறம் அவன் பதக்கம் வாங்கியதைப் பத்திரிகைகள் படம் போட்டு வெளியிட்டன. விட்டலாபுரம் மேல் நிலைப் பள்ளியின் பெயரையும் சேர்த்து.
தான் வெளியூர், இங்கே தனக்குச் சொந்தமில்லை என்று பொறுமுகிறவர்களை நினைத்தான்.
இதற்கு மேல் ஒரு சொந்தமா? யார் வழங்குவது அதை? கிராம நிர்வாக அதிகாரியா? ஜனன மரண ரிஜிஸ்தரா?
நித்யா விட்டலாபுரத்தில் பிறந்தவள். அந்த ஊர் மண் காலில் ஒட்டிக்கொண்டு கூட அடுத்த ஊருக்குப் போய்விடக் கூடாதாம்.
கையில் தம்ளரோடு ஆதி திரும்புவதைக் கண்டதும் மனசுக்குள் யாரோடு நாம் சண்டை போடுகிறோம் என்று விழிப்பு வந்தது. யாரிடமுமில்லை. சொந்த ஊர் என்பதால் மட்டும் சொந்தம் வந்து விடாது. இல்லாததால் அது போய் விடாது.
ஆதி தம்ளரைக் கழுவிக் கொண்டு வந்திருந்தான்.
அவன் மிதமான உயரம். சிரிக்கும் போது ஒரு பேதைமை. உழைக்கும்போது ஒரு மூர்ச்சனை. ஆதிக்கு இது சொந்த ஊர். காலின் சக்கரம் சென்னை, பம்பாய், தில்லி என்று திரிந்து சுற்றிவிட்டு இப்போது துபாய்க்குத் துடிக்கிறது.
கூழை வாங்கி ஒரு மிடறு குடித்தான்.
ஆலிலையில் எலுமிச்சையளவு புளியும் வெங்காயமும் வைத்து அரைத்த துவையல்.
இதைத் தொட்டுக்கோ தம்பி...
கூழில் மிதமான உப்பு. லேசாக மோர் விட்டிருந்தாள் மகாலட்சுமி. துவையல் நாவில் ஊற்றிய நீரில் ஐக்கியமாகி, சுகம் மண்டை வரை எட்டியது.
அற்புதம் ஆதி!
சும்மானாச்சும் சொல்லாத தம்பீ!
எளிமை, தான் எளிமையானதே என்று உணர்ந்திருப்பதால் அது எத்தனை சத்தியம்!
இந்த ஊரை விட்டுட்டு, இந்த ஆத்தோர நெலத்தை விட்டுட்டு, இந்தக் கூழை விட்டுட்டு, ஏன் எங்கேயோ பறந்து போயிடணும்னு துடிக்கிறே ஆதி?
அவன் வாயைத் துடைத்துக் கொண்டான். ஏதோ தவறு நேர்ந்து, அதற்கு நீதி உபதேசம் கேட்கிற பாவனையில் ஆதியின் முகம் பவ்யமாயிற்று.
இதுக்கு மேல நிம்மதியும், திருப்தியும் வெளியே கிடைக்கும்னா நினைக்கிறே?
ஆதி அவனையே ஒரு முறை கண் சிமிட்டாமல் பார்த்தான். பிறகு தலைகுனிந்து இன்னொரு தம்ளர் கூழ் வார்த்தான்.
அப்படியில்லே தம்பி...சொல்லிக் கொண்டே தம்ளரை நீட்டினான்.
கௌதம் வாங்கிக் கொண்டான்.
நீ பட்டம் வாங்கினே. வேலை கிடைக்கலேன்னு ரோதனை கொட்டிக்காம பொசுக்குணு தெரிஞ்ச வேலைகளைச் செஞ்சு காலம் தள்றே. தெம்பா இருக்கே. மனசைச் சஞ்சலப்பட விடாமே கட்டுலே நிக்கிறே.
இதெல்லாம் எதுக்கு இப்போ? காதுக்குப் பூ சுத்தறியா?
அட நீ ஒண்ணு! உள்ளதுதானப்பா.
இப்ப நான் சொல்லட்டா?
சொல்லு.
எனக்குக் கட்டும் இல்லே. கத்தரிக்காயும் இல்லை. வேலைக்கு எழுதிப் போடறேன். வர்றதில்லை. வந்து தான் எதுவும் ரொம்பணும்னு விதியில்லே. அப்பா பென்ஷன் வந்துட்டிருக்கு. போன வருஷம் ஊர்ல புஞ்சை மோட்டிலே ரெண்டு புட்டிக் கடலைக்காய் வந்தது. கைச்செலவுக்கு அவருக்குப் போதும். படிக்க மட்டும் தானா செஞ்சேன்? எத்தனையோ கைத்தொழில் கத்துகிட்டேன் அதுங்க எல்லாம் எங்கே போறது? பழங்கடப்பானையிலே போட்டு மூடியா வக்கச் சொல்றே?
ஆதி துவையலை வழித்த விரலைப் பார்த்துக் கொண்டே கேட்டான்;
வெள்ளிக்கிளமை சினிமாக் கொட்டாயிலே பாதில மிஷின் ரிப்பேர்ன்னு அவுட் பாஸ் குடுத்தானே! அதை நீதான் ரிப்பேர் பண்ணினியா?
ஆதி திடீரென்று விஷயத்தை விட்டு விட்டு தன் அதிசயோக்திகளுக்குத் தாவி விட்டான். புரிந்தது.
ஆபரேட்டர் சொன்னாரா?
அடடா அவரு ஒன்னைப் புகழ்ந்ததை நீ கேட்டிருக்கணுமே!
நீயும் ஒரு கிளாஸ் கூழ் ஊத்திக்க.
ஆதியை மேலே பேச விடாமல் கரை மாற்றினான். ஆதியும் சொல்லுக்குக் கட்டுப்பட்டான்.
ஒரு வாய் அவன் விழுங்கட்டும் என்று காத்திருந்து கௌதம் கேட்டான்.
நீ இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லலே ஆதி.
நான் மறக்கலியே.
சொல்லு.
ஆதி ஆற்றைப் பார்த்தான், திடீரென்று முகம் திரும்பி அவனது கீழ்க் கன்னச்சதை நடுங்குவது தெரிந்தது. அழுகிறானோ?
கௌதமுக்கு அழுகை பிடிக்காது. அதுவும் ஆண் அழுகை. எதற்காகவும் என்ன நேரிட்டாலும் அழுது அழுது புலம்புவதும் அழுகையை ரசிப்பதும், ரசிக்கிறார்கள் என்பதற்காக அழுவதும்!
எட்டாவது முடித்த கையோடு பூந்துறை ஸ்டேஷனில் கௌதமின் அம்மா சாவித்திரியின் பிரேதத்தை இறக்கிய போது, ஓவென்று அவன் கதறிய கதறல் பூந்துறை ஸ்டேஷனைக் கலக்கிற்று.
அம்மாவின் பிரேதத்தோடு உடன் இறங்கிய அவன் தந்தை சபாநாயகம், அவனைக் கட்டிப் பிடித்துக் கதறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். அவன்கூட.
ஆனால் அவர் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர் வந்தது.
சீச்சீ, இதென்ன வெட்கக்கேடு! என்று அவர் வெட்கப்பட்டவர் போலக் கண்ணீர் முகத்தில் வழியுமுன் தோளில் போட்ட துண்டால் துடைத்துக் கொண்டார்.
பிறகு அவனை ஆழமாக, இடைவெளியின்றி வெகு நேரம் பார்த்துவிட்டு அவன் வலக்கையைத் தம் கையால் இறுகப் பற்றிக் கொண்டார். அதற்கப்புறம் அவர் அவனுக்கு அழ வாய்ப்பளித்ததே இல்லை.
என்ன ஆதி?
அவன் முகம் திரும்பினான். விழிகள் பளபளத்தன. அழுகை கரைகட்டி நின்றது. அதைச் சந்திக்க விரும்பாமல் இமை தாழ்த்தினான் கௌதம்.
அம்மாவுக்கு, எனக்குக் கல்யாணம் பண்ணிடணும்னு ஆசை தம்பீ... என் கைல நாலு காசு இல்லன்னா ஊமை மாமியாரை எந்த மருமவ மதிப்பா சொல்லு?
ஆதி மனசைத் தாக்கி விட்டான்!
அட பொம்பளை வேணும்னா எங்கியோ போய்ப் பொரண்டு எவளையோ இஸ்தாந்து வச்சுக்கலாம். இந்த வாயில்லா ஜன்மத்து மனசு கலங்காம அதுக்குச் சோறு போட்டு, துணி தொவிச்சு, வாரிப் போடறதுக்கு முன்னே கால் மாட்டிலே ஒக்கார ஒருத்தியாப் பார்க்கறேன். எல்லாம் பணம். எதுக்கும் பணம். போவுது காலம்! நானும் தேடறேன்.
ஆக இதுவும் அம்மாக்கள் விவகாரம்.[தொடரும்]