Saturday, 7 October 2017

மணல்வெளி மான்கள்:3


                                                          மணல்வெளி மான்கள்:3
அம்மா.அம்மா. இப்படி சின்னச்சின்னப் பல் சக்கரங்களாக ஒன்றையொன்று தள்ளி, சிறியது பெரியதைத் தள்ளி, எதற்கோ எங்குமே இயங்கும் யந்திரங்களின் உந்துவிசை அவள்தானா? இருக்கலாம். யார் அறிவார்?
பேச்சை மாற்றியாக வேண்டியிருக்கிறது. இதோ பாம்பு உரித்துப் போட்ட தோல் கிடக்கிறதே இது மாதிரி. புது வளர்ச்சிக்கு, புதிய பரிமாணத்திற்கு புகழ்ச்சியில் மூச்சுத் திணறி விடாமல் இருக்க, ஆள் மாற்றமடைவது போல் பேச்சும் மாற வேண்டும்.
நொணாமரத்து மாசிலாகிட்டே என்னத்துக்குத் தகராறு?
நானா பண்றேன்?
பின்னே?
நல்ல கதையா இருக்கே! அவ கொளுந்தியா மச்சினன் துபாய்ல வேலை வாங்கித் தர்றான்னு ஆயிர ரூபாயை வாங்கிக்குடுத்தேன். அஞ்சு வட்டி அசலுக்கு நெஞ்சு முட்ட வட்டி ஆயிடுச்சி. வேல வேணாம். ரூபா குடுண்ணு மூணுமாசமாகக் கேக்கறேன். தோ தோண்ணு வாய்தா வக்கிறான். போன செவ்வாச் சந்தையிலே ஆறாந் தேதி தர்றதா சொன்னான். இன்னிக்குத் தேதி எட்டு.
என்ன சொல்றான்?
கேக்கப்போனா அவன் கொளுந்தியாள வுட்டுட்டு எங்கியோ ஓடிட்டான்னாம். இவன் தானே ஜாமீனு. பொறுப்பா பதில் சொல்லணுமில்லே.
கௌதம் காது கொடுத்தான்.
நீ என்ன பண்றியோ பண்ணிக்கன்னான். கொலவுழும்ணு கத்தினேன். கொடலை உருவிடுவேன்னான். உருவுடா பார்க்கலாம். நீ ஆம்பளையானாக் கொடலை உருவுடான்னேன்.
கை வச்சுட்டான். இல்லியா?
ஆதி பதில் சொல்லவில்லை.
அவனாலும் கொடுக்க முடியாது. அவன் நெலையே ஆட்டம் கண்டு போச்சு. தெரியும்லே.
தெரியும் தெரியும்.
ஆறு மாசத்துக்குள்ளே ஒருத்தன் ரெண்டு அடி வாங்கினான்னா...அதுவும் என்ன மாதிரி அடி?
கௌதம் நினைவில் தோய்வது போன்று பேச்சை நிறுத்தினான்.
கூழ் தீர்ந்து விட்டது. ஆதி இரண்டு தம்ளர்களையும் பாத்திரத்தையும் கழுவ எழுந்தான். கௌதம்தாம்போகிப் பாலத்தின் மீது வீட்டு வேலை முடிந்து துணி வெளுப்பதற்காக இடுப்பில் ஆளுக்கு ஓர் அன்னக் கூடையோடு கைவீசி நடந்துவரும் பெண்களைப் பார்த்தான். பாத்திரங்களை அலம்பிக் கொண்டே ஆதி பேசினான்.
நான் கொடுத்த பணத்தைக் கேக்கத் தானே போனேன், தம்பீ?
நீ போன வேளை சரியில்லே.
நான் என்ன செய்யட்டும், என் கடன்காரன் பொழுது விடியறப்பவே என் வீட்டுக் கதவைத் தட்டிடறான்.
லேசான காற்று வந்தது. அலையலையாகப் பயிர் வரிசைகளை, மயில் கழுத்து நெளிவது போல அசையச் செய்தபடி, அந்த அலை நுணாமரத்துப் பம்பு ஷெட் வரை ஒரு சிறு தூரப் பயணம் போயிற்று.
காற்றோட்டத்தோடு கண்ணோட்டம் செலுத்திய கௌதம் பார்வையை மாசிலாவின் குத்தகை நிலத்தில் நிறுத்தினான்.
பதின்மூன்று ஏக்கர் நிலம் அது!
முதலில் மாசிலா பத்து வயதுப் பையனாக மண் மிதித்த பூமி. அவனுடைய அப்பன் மாரிமுத்துதான் கைபிடித்து அவனை அழைத்து வந்தானாம்.
விட்டலாபுரமே சொல்லும்.
கோரையும் காட்டுச் செடிகளுமாகப் புதர் மண்டியிருந்த நிலம். ஆற்றை ஒட்டிய சிறு மேடு. குறுக்கு வழியென்று மாட்டு வண்டிப் பாதைக்காகச் சக்கரங்கள் ஓடி ஓடி திமிசு வாங்கிய பூமி.
மாரிமுத்துவை கௌதம் பார்த்ததில்லை. விட்டலாபுரம் சொல்லியிருக்கிறது.
கருங்காலி மரத்துச் சட்டம் மாதிரி, வலுவான கட்டடம் உள்ள உடம்பாம். ஆள் வைத்து வேலை வாங்கினான் என்றாலும் வெள்ளி முளைத்ததும் தெரியாது; மறைவதும் தெரியாதாம். அப்படி ஓர் ஈடுபாடு! அவன் சமப்படுத்திய நிலம் அது!
இன்றுதானே டிராக்டர்! அன்று மாரிமுத்து கலப்பையைப் பிடித்தால் ஏர்முனை அரையடி இறங்குமாம். மாசிலாவின் ஏர்முனை முக்கால் அடி இறங்குவதைக் கௌதம் பார்த்திருக்கிறான்.
எவ்வளவு வியர்வை. எல்லாம் ரத்தம். வியர்வையான ரத்தம். அவன் அப்பன் மாரிமுத்து மஞ்சள் காமாலையில் உயிர் விட்டான். விட்டலாபுரத்து விளைச்சல். காண கொல்லி மலையில் இருந்து இறங்கி வந்து உதிரம் ஊற்ற வந்த சொந்தம்.
நுணா மரத்துப் பம்பு ஷெட் அவர்கள் முன்னின்று வெட்டியதுதான். முகம் தெரியாத முதலாளி, பணம்தான் அனுப்ப முடியும். பணமா கிணற்றை வெட்டும்? மனிதர்கள் தேவைப்பட்டனர். மாரிமுத்துவையும் மாசிலாவையும் போல் மண்ணை நேசித்த மனிதர்கள்.
மண் கூட மாதா மாதிரிதான். அம்மாவேதான். முட்டி முட்டிக் குடிக்கிற கன்றுக்குத் தாய்ப் பசு நிறையத்தான் சுரக்கிறது. சொந்தமா சொந்தமில்லையா என்ற கணக்கு வழக்குப் பார்க்காமல் மாதாவின் மார்பில் முட்டி முட்டி வெட்டிய கிணறு அது.
வருஷத்தில் பத்து நாட்கள் மட்டுமே வெள்ளம் ஓடும் பாலாற்றில், மீதி நாட்களில் விட்டலாபுரம் பெண்களுக்கு நுணா மரத்துப் பம்பு ஷெட்தான். படித்துறை, வம்பளப்பு கவுண்ட்டர்.
கரண்ட் வந்துச்சு தம்பி.
போ... போ, போயி மோட்டார் ஸ்விட்சைப் போடு.
ஆதி ஸ்விட்சைப் போட்டு விட்டான்.
உறுமிக் கொண்டே எழுந்து உதறிவிட்டு ஹூங்காரமாக ஒலிக்கத் தொடங்கியது மோட்டார்.
3
ந்தோமா வேலையைப் பார்த்துக் கொண்டு விடுவிடுவென்று போனோமா என்று முடிவதில்லை. சாலையில் நேரே கண்மூடிக் கொண்டு நடப்பது சுளுவில்லை. அதுவும் அவனுக்கு.
கௌதமை எதிர்ப்பட்டவர்கள் அடிக்கடி நிறுத்தினார்கள்.
முதலில் காலியான இரட்டை மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டு வந்த சிங்காரம். வயசு நாற்பது. பெரிய கெய்ஸர் மீசை. கற்றாழை நார் மாதிரி இதற்குள் வெளுப்பு. உடம்பு வாடாத மாதிரியே முகத்தில் சதா ஒரு குதூகலம்.
கடகடவென்று சக்கரப்பட்டை கப்பிரோட்டில் உருள, கடையாணியில் சலங்கை மாட்டுக் கழுத்தில் மணியோசை.
தா... தா!மாட்டை இழுத்துப் பிடித்துக் கொண்டே, யோவ் மரிகப்புள்ளே, நெலா காயற ராவிலே நடக்கற மாதிரி என்ன ஒய்யார நடைபோட்டு வர்றீரு?என்றான் சிங்காரம்.
யார் வாயையாவது கிண்ட வேண்டும் சிங்காரத்துக்கு. அவனுக்குக் கல்யாணமாகவில்லை. அதனால் ஒன்றும் குறைந்து விடவில்லை. போன வாரம் காஞ்சிபுரம் பஸ்ஸில் அவன் பக்கத்தில் எவளோ ஒரு நாற்பது வயதுக்காரி உட்கார்ந்திருந்தாளாம்.
என்ன வேட்டைதானா? ஆத்தங்கரை மீட்டிங் நடந்தாப்லே இருக்கு!என்று கேட்டு விட்டுச் சிங்காரம் கண்ணைச் சிமிட்டினான்.
கௌதமுக்குச் சிரிப்பு வந்தது. காட்டவில்லை.
மாமா, ஒம் புத்தி உன்னை விட்டுப் போகாதே!
புத்தியாச்சே மரிகப்புள்ளே! போய்ட்டா எப்பிடி?
இந்த நியூஸை விசாரிக்கத்தான் வண்டியை நிறுத்தினியா?
அஃகாம். இது பெரிய நூஸு. இத வேற விசாரிக்க வேணும்!என்று மேலே ஏதோ சொல்லப் போன சிங்காரம் நிறுத்தினான்.
நுங்கோ நுங்கு... நுங்கோ நுங்குஎன்று கூவிக் கொண்டு வந்த ஒரு நுங்குக்காரி. ஊரின் கடைசிக் குடிசையும் முடிந்து விடவே கூவலை நிறுத்தினாள்.
சிங்காரத்தின் பார்வை, அவள் மேல் விழுந்து விட்டதே, பேச்சு நின்றதன் காரணம் என்று புரிந்து கொண்டான் கௌதம்.
நுங்கு என்னாம்மா வெலை?
சிங்காரத்தின் பார்வையில் நுங்குக்காரி ஏகமாய் நெளிந்தாள். சரி, சிங்காரத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பமாகி விட்டது.
நான் வரட்டுமா மாமா?
ஆங்... ஆங்... அப்ப பொறப்படறேங்கிறியா... புத்திசாலி மரிகப்புள்ளே நீ! நெல் அவிக்க அடுப்புத் தீனிக்கு தென்ன மட்ட ஏத்தத்தான் போயிட்டிருக்கேன். கல்யாணிம்மா காலம்பறவே காரியத்துக்குப் பூடுச்சாம். சபாபதி மொய்லியாரு அண்ணாசாமி தோப்புல காத்துக்கிட்டிருப்பாரு!
கௌதம் புன்முறுவல் பூத்தான். அவனுக்கு புரிந்தது. சிங்காரம் எதைப் புரிய வைக்க விரும்புகிறானோ அது!
நித்யா தனியாக இருக்கிறாளாம்.
அன்ன வாசலுக்கா போறே...ஐயோ இந்த வெயில்லியா?என்று நுங்குக்காரியிடம் சிங்காரம் உருகத் தொடங்கியதும் கௌதம் வெட்டிக் கொண்டான்.
நிச்சயம் நுங்குக்காரி வண்டியில் ஏறியிருப்பாள்.
கௌதமுக்கு ஒரு சிரிப்பு. இரக்கமா ஏளனமா விவரம் தெரிந்து எதையோ கடந்த கசப்பா.... என்று இனம் புரியாத சிரிப்பு.
பெண் – சிங்காரத்தின் பலவீனம். அவன் தேடிக் கொண்டே இருக்கிறான். எதையோ தொலைத்துவிட்டுத் தேடுவது போல்! தொலைந்தது எது, எப்போது?
நித்யா தனியாய் இருந்தால் உடனே பாய்ந்து கொண்டு ஓடிவிட மாட்டேன் என்று இவனுக்குத் தெரியும். இருந்தாலும் சொல்கிறான். இவன் புத்திக்குத் தக்கபடி.
ன்ன கௌது யோசனை... என்னைப் பாத்துட்டுப் பாக்காம நடக்கிறியே!
சவுந்தரம்மாள். நெற்றியில் குங்கும வட்டம். பட்டுச் சேலை. கழுத்தில் இரட்டை வடச் சங்கிலி. கண்ணில், பிரியம் நட்சத்திரச் சுடர் போல் தெறித்தது.
கவனிக்கலே பெரியம்மா! எங்கே பட்டுப் புடவையும் நகையுமா கௌம்பிட்டே?
காலைலியே சொல்லலே? போஸ்ட் மாஸ்டரு பொண்ணு வயசுக்கு வந்திருக்குன்னு.
சாயங்காலம்தான் வீட்டுக்கு அழைச்சுக்கறாங்கன்னு சொன்னியே?
காலைலே புண்யாதானம் பண்றாங்களாம்! ஆளு மேல ஆளு வந்துடிச்சு.
சரி போய்ட்டு வாங்க!என்று சிரித்துக் கொண்டே விடை கொடுத்தான்.
சாவியப் பக்கத்து வூட்டுத் தாத்தாகிட்டே குடுத்துட்டு வந்திருக்கேன்!என்று திரும்பி நடக்கப் போன சவுந்தரம் நின்றாள்.
நீ ஒம்பது மணிக்கெல்லாம் வந்துடுவேன்னு இமாம் பாய் யூட்ல இருந்து இடியாப்பம் வாங்கி வச்சிருந்தேன்! அது வரட்டி மாதிரி காஞ்சிட்டிருக்குதோ என்னவோ?என்றாள்.
நான் சாப்டுட்டேன் பெரியம்மா!
சாப்டுட்டியா எங்கே?
ஆதிகேசவனுக்குக் கூழ் வந்திருந்துது.
இப்பிடி ஏதாவது ஏடாகோடம் பண்ணுவேனு எனக்குத் தெரியுமே! அதெல்லாம் நடக்காது. சில்வர் பொகுணியிலே இடியாப்பமும் தேங்காய்ப் பால் கிண்ணமும் இருக்கு. நீ காலி பண்ணித்தான் ஆவணும்.
காலிதானே பண்ணச் சொல்றே?
அப்பிடியா கத... சரி நட போவலாம் ஊட்டுக்கு. நீ தின்னுட்டப்பறம் நான் அலுவலுக்குப் போறேன்என்று திரும்பி விட்டாள் சவுந்தரம்.
இல்ல பெரியம்மா. நான் சாப்டுக்கறேன்.
நாலு எட்டு நடந்தவள் மீண்டும் திரும்பினாள்.
ஆங் கௌது! இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். கல்யாணியம்மா வூட்டிலே வெள்ளைப் பொன்னி வேவிச்சிருந்தாங்களாமே. அது மிஷினுக்குப் போய்ட்டு வந்திடுச்சாம். போன ஐட்டத்திலேயே குடுக்கறேன் குடுக்கறேன்னு கல்யாணியம்மா டவுன் வியாபாரிக்கு அளந்துட்டுது.ஒரு எட்டு போயி கண்டுக்கிறியா?
நித்யாவின் அம்மா ஓர் உறவினர் கருமாதிக்குப் போயிருக்கிறாள் என்று பதில் நாக்கு வரையில் வந்து நின்று விட்டது. சரி என்று தலையசைத்து நடந்தான்[தொடரும்]

No comments:

Post a Comment