மணல்வெளி மான்கள்
1
தென் மேற்கிலிருந்து வட
கிழக்காக நீண்டிருக்கிறது அந்த நெடுஞ்சாலை. இரவும் பகலும் அதற்கு ஓய்வில்லை.
லாரிகள், பஸ்கள், வேன்கள் கார்கள்
என்று எல்லா வாகனங்களும் இருட்டு வெளிச்சம் பார்க்காமல், மழை வெய்யில்
என்று பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே இருக்கின்றன.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு என இரு
மாநகரங்களுக்கும் இடையே எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் அது போடப்பட்டது. தற்போது அதன்
ஒரு கிளை பிரிந்து வலுத்து, கோவைக்குப் போகிறது. அங்கிருந்து கேரளம், பெங்களூரிலிருந்து பூனா, பம்பாய்.
அந்தச் சாலையின் தொட்க்கப் புள்ளி எது
முடியும் புள்ளி எது என்று தற்போது சொல்ல முடியாதவாறு, காலம் அந்தச்
சாலையை ஒரு கிளையோடு மறு கிளையாய் இணைத்து என்னென்னவோ கோலம் போட்டு விட்டது.
மூன்று கடற்கரைகள், சென்னை பம்பாய் கன்னியாகுமரி ஆகியவை. கடைசியாக அந்தச் சாலையை வழிமறிக்கின்றன.
வழியில் எத்தனையோ சிறு பெருநகரங்கள், சிறிய பெரிய
ஊர்கள். அவற்றை அலட்சியமாகக் கடந்து வாகனங்கள் காலதேவனின் கட்டளையை ஏந்திச்
செல்வது போல் இடைவிடாது போய்க் கொண்டே இருக்கின்றன.
நெடுஞ்சாலை தன் சிறு கிளையாக, வடமேற்கே கை
நீட்டியது போல் ஒரு குறுஞ்சாலை. பூந்துறை ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிறது.
அந்தக் குறுக்குச்சாலை வெட்டித்
திரும்பும் இடம் தான் விட்டலாபுரம். தேர்வு நிலைப் பேரூராட்சி. 22 கி.மீட்டரில் ஒரு
மாவட்டத் தலைநகருக்கும், 9 கி.மீட்டரில் ஒரு வட்டத் தலைநகருக்கும் இடையில் மாட்டிக் கொள்கிற எந்தப்
பேரூரும் சிற்றூரும் எப்படி வளர வழியின்றித் தேங்கித் திகைத்து நிற்குமோ, அப்படித்தான்
விட்டலாபுரமும் நின்றது. நூற்றாண்டு நூற்றாண்டுகளாக
பாலாற்றுப் படுகை இருப்பதால் தொழில்
வேளாண்மைதான். தென்னை, நெல், கரும்பு, மாதா கோயில், மசூதி, பெருமாள், சிவன், கோயில்கள் உண்டு. எல்லையம்மன் செல்லியம்மன் இவர்களுக்கும்தான்!
ஆண்களுக்கும், பெண்களுக்கும்
தனித்தனி மேல்நிலைப் பள்ளிகள் ஒரு காவல் நிலையம், சினிமாக்கொட்டகை, கயிறு பாக்டரி, மரம் அறுக்கும் தொழிற்கூடம் எல்லாம் உண்டு. காலையில் ஓடும் வாகனங்களை, முறைத்து வெறித்து
வெறித்துப் பார்த்திருக்கும் விட்டலாபுரத்தில் கல்யாண முகூர்த்தங்கள் வந்தால், கொஞ்சம் கலகலப்பு
கூடிவிடும்.
விட்டலாபுரத்தில் நிறைய கல்யாணச்
சத்திரங்கள். அதுதவிர அனந்த சயன பெருமாள் கோயிலேயே ஒரே சமயத்தில் ஏழெட்டுக்
கல்யாணங்கள் நடக்கும்.
நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குள்ளே
நுழையும் குறுஞ்சாலையில் 2 கி.மீ. தள்ளி, பாலாற்றின் கரையோரமாக அனந்த சயன பெருமாள் கோயில்.
கரையோரங்கள் நாளுக்கு நாள் குறுகி, ஆறே குறுகிக்
கொண்டு வருகின்றது மனித ஆக்கிரமிப்பைப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி, பல ஆண்டுகளாக மழை
மேகங்கள் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன.
எல்லா அநீதிகளையும்
ஆக்கிரமிப்புக்களையும் புரட்டித் தள்ளி பிரளயப் பிரவாகமாக ஓடவேண்டிய ஒரு
மழைவெள்ளத்தை ஆற்று மணல் எதிர்நோக்கி நின்றது. ஆறா இல்லை ஏதாவது சுரங்கமா என்று
கேள்விக் குறிகள் போல் ஆங்காங்கே ஆயிரமாயிரமாக லாரிகளில் மணல் திருட்டுப் போய்
மூளி மூளியாக நிற்கிறது ஆறு.
ஆற்றங்கரை ஓரமாக ஒரு சிறு தென்னந் தோப்பு
உள்ள நிலம். கரையிலிருந்து உள்ளே ஒதுங்கி வெட்டிய பெரிய கிணறு. பம்பு ஷெட்.
கிணற்று நீர் வழிந்தோடி நிலத்துக்குப்பாய வெட்டிய கால்வாயின் குறுக்கே துணிதுவைக்க
வசதியாகப் பலகைக் கல் போட்டிருந்தது.
கிணற்றின் எதிர்ப்பக்கத்தில், பம்பு ஷெட்
போடுவதற்கு முன், தாழ்ந்து இறங்கும். மாடு இழுத்துக் கவலை ஓடி நீர் இறைக்கக் கட்டிய மேடை. மாடு
ஏறி இறங்கப் போட்ட பாதை. பட்டறைக் கம்பில் துருவேறிய அச்சுப் பதித்த மர ராட்டினம்.
இரண்டு மாடுகள் கால் கடுக்க கிணற்று மேட்டில் நின்றன. பம்பு ஷெட்டில் ஏதோ
ரிப்பேர்.
கிணற்றைச் சுற்றிலும் யாரும் இல்லை.
மாடுகள் மட்டும் நின்றன. கிணற்றுக்குள்ளேயிருந்து லொட்டு லொட்டென்று ஓர் ஓசை.
எதையோ யாரோ முடுக்குவது போல் விட்டு விட்டுக் கேட்கும் ஓசை.
வியர்த்தது, பின்னங்
கழுத்தில். பனியனுக்குள், உடம்பின் ஒவ்வொரு மயிர்க் காலிலும்...
பனியனையும் உரித்துச் சுருட்டிக் கிடாசி
விட்டு அப்படியே கிணற்றில், நிற்கிற திட்டிலிருந்தே ஒரு டைவ் அடிக்க வேண்டும்.
‘பொறு!’ அவன் உடம்பு அரிப்புக்குக் கட்டளையிட்டான். கட்டியிருந்த லுங்கி அவிழ்ந்தது.
ஸ்பேனரை ஸக்ஷன் பம்ப் கட்டை மீது வைத்து லுங்கியை இறுகக் கட்டினான்.
இன்னும் இரண்டு சுற்று சுற்றினால் அந்த
நட்டு இறுகிவிடும். ஸ்பானர்தான் வழுக்குகிறது. கொஞ்சம் வாய் விரிசல். இருந்தாலென்ன? கௌதமுக்குச்
சவால்கள். இப்படிச் சின்னச்சின்ன இடைஞ்சல்கள் பிடிக்கும்.
கௌதம் இரண்டு சுற்று வழுக்கி வழுக்கி ‘டைட்’ வைத்தான். ஸக்ஷன்
பம்பின் நட்டு, மாடு பிடித் திருவிழாவில் பிடித்து நிறுத்திய காளை மாதிரி ஸ்தம்பித்தது.
அவன் ஸ்பானரைக் கீழே வைத்தான். நெற்றி
வியர்வையை விரல் வைத்து வழித்தெறிந்தான்.
ஏழு மணிக்குக் கிணற்றில் இறங்கியது. ஒரு
மணி நேரம் ஆகியிருக்கலாம்.
போனது ஃபுட் வால்வ் லெதர் என்று
தெரியாமல் ஆதிகேசவன் அலைமோதிவிட்டான். கார் நெல்லுக்கு அன்றாடம் நீர் பாய்ச்ச
மோட்டார் பம்ப் கை விட்டு விட, பழைய பாணியில் கவலை மாடுகளை நம்பினான்.
ஏழு நாட்களாக மோட்டார் சப்தம் ஓய்ந்து
போன கிணற்றில் இனி அது பலிக்கும்.
ஆதி கிணற்றுக்கு மேலே தான் நின்று
கொண்டிருப்பான். கௌதம் உள்ளே இருந்து குரல் கொடுத்தான்.
“ஆதி... மோட்டாரைப் போடு.”
கிணற்றின் சுற்றுச் சுவரில் பட்டுப்பட்டு
எதிரொலிகள். ஒன்று, இரண்டு, மூன்று முறை... பதில் வரவில்லை. எங்கே போய்விட்டான்?
தன் சிரமம் பலித்திருக்கிறதா என்று
கௌதமுக்கு உடனே முடிவை எதிர்பார்க்கும் தவிப்பு. மேலே போகலாமா? ஸ்பானரை எடுக்கக்
கௌதம் குனிந்தபோது அவன் முதுகில் லொட்டென்று குறி பார்த்து அடித்த மாதிரி எதுவோ
தாக்கியது. முதுகைத் தாக்கிவிட்டு அந்த ஏதோ ஒன்று தாவி விழுந்து தண்ணீரில்
மறைந்தது.
சிவுக்கென்று தலை நிமிர்த்தினான்.
கிணற்றுக்கு மேலே சாலும் வடக்கயிறும் தொங்கின. யாரும் தென்படவில்லை. ஆனாலும் யாரோ
விளையாடுகிறார்கள். ஆதியா? இல்லை. அவனிடம் ஆதி விளையாடமாட்டான். ஸ்பானரை இன்னும் வைத்த இடத்திலிருந்து
எடுக்கவில்லை. எனவே மீண்டும் குனிந்தான்.
லொட்டென்று மீண்டும் முதுகில் பனியனின்
ஈர நைப்புக்கு உறைக்கிற மாதிரி ஒரு கொட்டையளவு ஏதோ விழுந்தது. அதிகம்
வலிக்கவில்லை.
வெள்ளி மணலாக அடி தெரிந்த கிணற்று நீரின்
இள நீலத்தில் ஒரு சிலும்பல். இப்போது விழுந்தது ஒரு சின்னஞ்சிறு மாம் பிஞ்சு.
கௌதம் மனசில் ஒரு முகம் தெரிந்தது.
நித்யாவாகத் தான் இருக்கும்.
“மேலே ஏறி வந்தா என்ன நடக்கும் தெரியுமா நித்யா?” என்று தலை உயர்த்தாமல் கத்தினான்.
‘நித்யா’ என்று கிணற்றில் எதிரொலி வந்தது. மும்முறை. கிணற்று நீரின் ஒருபுறத்தில், கரை மீதிருந்த நித்யாவின் பிம்பம் சிலும்பலில் நெளிந்தது.
“என்ன பண்ணுவே?” மேலே நின்றபடி நித்யா கேட்டாள்.
அவன் பிம்பத்தைப் பார்த்தே பேசினான்.
“ஆத்து மணல்லே, அன்னக் கூடையை இடுப்பிலே தூக்க வச்சு ஓட
ஓடத் துரத்துவேன்.”
“நீ?” என்றாள் நித்யா – எகத்தாளம். கொஞ்சம் சவால்.
கிணற்றின் அலைகள் தத்தித் தத்தி, கோடை வானத்தின் வெளிர் நீலப் பின்னணியில் நித்யாவின் முகபிம்பத்தை
அலைக்கழித்தன. அவள் பற்கள் தெரியச் சிரித்தாள்.
“மேலே யாரும் இல்லியா?”
அவன் பிம்பத்தைப் பார்த்துப் பேசினான். அவளும்
அவன் பிம்பத்தைப் பார்த்துப் பதில் சொன்னாள்.
“கேக்கறே பாரேன் கேள்வி!”
நாக்கைக் கடித்துக் கொண்டான்.
முட்டாள்! யாராவது
இருந்தால் அவள் இப்படி விளையாடுவாளா?
“ஆதி இருப்பானே!” அவன் சமாளித்தான்.
“நுணா மரத்துப் பம்பு ஷெட்டாண்ட ஒரு கூட்டம் நிக்குது. அவரு அங்கே நிக்கறாரு.”
“கூட்டமா?”
“ஆமா...என்னமோ தகராறுன்னு நெனைக்கிறேன்.”
“சரிதான். இப்பத்திக்கி வர மாட்டான்! அப்ப ஒண்ணு
செய்யி...”
“என்ன?”
“கெணத்திலே குதிச்சுடு!”
“ஐயா வந்து காப்பாத்திடுவீங்க...”
“நீ குதிச்சா உன்னைக் காப்பாத்தற சாக்கிலே சேர்ந்து குளிக்கலாம் பாரு.”
“இப்ப நெஜமாலும் ஒன் தலை மேல குதிச்சுடுவேன்.”
“இன்னும் சௌகரியம்.”
“வர வர உனக்கு வாய் கொழுத்துப் போச்சு. நான் போறேன்.”
அவள் முகம் விருட்டென்று மறைந்தது.
“நித்யா..நித்யா!”
என்ன?” மீண்டும் அவள்
பிம்பம்.
“மோட்டார் ஸ்விட்சு தெரியுமில்லே ஒனக்கு?”
“சொல்லு...”
“அதைப் போடேன். ஃபுட் வால்வ் லெதர் மாத்தினேன். தண்ணி எடுக்குதான்னு
பார்க்கணும்.”
“கரெண்ட் போயி அரை மணி நேரம் ஆவுது.”
அவன் வெறுத்துப் போனான். பிறகு அவள் வாயைக்
கிண்டினாள்.
“வழக்கமா ஒங்க அம்மாதானே துணி துவைக்க வருவாங்க?”
“ஆமா! அவங்க சொந்தக்காரங்க கருமாதிக்குப்
போயிருக்காங்க.”
“அதான் நேரா இங்கே வந்துட்டே.”
“ஆமா. பம்ப் ஷெட் ரிப்பேருக்குக்காக கெணத்திலே எறங்கி இருப்பாருன்னு ஞான
திருஷ்டியிலே தெரிஞ்சது.” மீண்டும் தலை மறைந்தாள்.
“துணி துவைக்கணுமா வேண்டாமா?”
“அதான் கரண்ட்டும் இல்லே... தண்ணியும் இறைக்கலியே!”
“மாடுங்க நுகத்தடி பூட்டி நிக்குதுங்க இல்லே?”
“நிக்குதுங்க.”
“இரு... தோ வர்றேன்.”
அவன் செருகு செருகாகப் படிக்குப் பதில்
கிணற்றோடு பதித்திருந்த ஜல்லிக் கல்லில் ஒவ்வொரு கல்லாகத் தாவித்தாவி ஏறினான்.
என்ன வேகமாக ஏறுகிறான்! கால் வழுக்கி விடாது என்று நினைத்தாள்
நித்யா.
அவளுக்கு அவன் வேகத்தின் மீது இலேசான பயம்.
அவன் கடைசி ஜல்லிக் கல்லில் நின்றபோது கண்
பூத்து விடுகிற மாதிரி கிழக்கு மேற்காய் ஆற்று மணல் தெரிந்தது.
விட்டலாபுரத்திற்கும் அன்னவாசலுக்கும் இடையில் பாலாற்றின் குறுக்கே போட்ட நீண்ட
தாம்போகிப் பாதை தெரிந்தது.
கல் பரவிய அந்தப் பாதை மீது எட்டரை மணி ரயிலின்
வரவுக்காகப் பூந்துறை ஸ்டேஷனுக்குச் செல்லும் டவுன் பஸ் போவது தெரிந்தது.
அந்த எட்டரை மணி பஸ்ஸைப் பார்க்கும் போதெல்லாம்
ஒரு மீன்கொத்தி மாதிரி மனசு இறந்த காலத்திற்குப் பாய்கிறது.
ஒரு நொடி - இல்லை; ஒரு
நொடியில் ஒரு சிறு கூறு...
அந்த பஸ்ஸில்தான் பூத்துறையில் அம்மா இறங்குவாள்
என்ற ஆவலோடு பதினாலு வயது கௌதம் பூந்துறைக்குப் போவான்.
மனசு விசித்திரமானது. பழக்க வாசனையுள்ள புறா
மாதிரி ஒரே கூட்டிற்குத் திரும்பித் திரும்பிப் போகிறது.
நினைவை உதறி விட்டு நித்யாவைப் பார்த்தான்.
பத்தொன்பது வயசில் எதற்குக் கோடாலி முடிச்சு? சாக்லேட் பாவாடை. பொன்னிழை ஓடிய கறுப்புத் தாவணி... அவன்
அவன் நெற்றித் திலகத்தை, கண்மையை, முகத்தை
ரசித்துக் கொண்டே நிற்பதை நித்யாவும் ரசித்தாள்.
“இவ்வளவு சிவப்பு ரொம்ப ஓவர்!”
அவன் தன் நிறத்தைச் சொல்கிறான் என்று அவளுக்கும்
புரிந்தது.
“என்ன பண்ணச் சொல்றே? கறுப்பு பெயிண்ட் அடிச்சுக்கவா?”
“முயற்சி பண்ணு!”
“இதைச் சொல்றதுக்குத்தான் கெணத்தை விட்டு மேல வந்தியா?”
பூட்டிய நுகத்தடியோடு சிவனே என்று
நிற்கும் கவலை மாடுகளை நோக்கி அவன் நடந்தான்.[தொடரும்]
No comments:
Post a Comment