Sunday, 3 February 2013

ஜமுனா-14


14
“சின்னக் கொழந்தை மாதிரி பிடிவாதம் பண்ணினா எப்படி? மறுபடியும் மழை வர்றாப்பிலே வானம் மூடிண்டிருக்கு, நான் போடமாட்டேன்.”
“இதிலே பிடிவாதம் என்ன டீ... வயறு எரியறது. வேறே எதுவும் பிடிக்கல்லே. கொஞ்சம் தயவு பண்ணுடீ...”
“ரூம்லே ராஜா ஷேவ் பண்ணிண்டிருக்கான். ரொம்ப கொஞ்சாதேள். கேட்டா சிரிப்பான்.”
“இல்லேன்னா ஒன் பிடிவாதமும்... என் அடக்கமும் அவனுக்குத் தெரியாதாக்கும்?”
“அடக்கம்...அடடா... அப்பப்பா! எவ்வளவு அடக்கம்... காரியம் முடியணும்னா ஐஸா கரைவேள்!”
“இல்லேன்னா பந்தமா எரிவேனாக்கும்?”
“நீங்க பந்தமாகவும் எரிய வேணாம், ஐஸாவும் கரைய வேணாம். என்ன பல்டி அடிச்சுட்டாலும் நான் போட முடியாது.”
கீழுதட்டை மடித்தவாறு ரேஸரை பக்குவமாக சோப்பு நுரை வழிய இழுத்துக் கொண்டிருந்த ராஜாமணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவனுடைய தந்தை ஆனந்தராவுக்கும் தாய் கங்காபாய்க்கும் மத்தியில் இப்படி ஒரு விளையாட்டு அடிக்கடி நடக்கும். அந்த வயதான தம்பதிகள் மத்தியில் பிசிரில்லாத பந்தம் இருப்பதை, அந்தக் கொஞ்சலும், கோபமும் தெரிவிக்கும், மனம் ஈடுபட்டு அவன் ரசிப்பான்.
“என்னப்பா அது?” என்ற அறையிலிருந்தவாறே குரல் கொடுத்தான்.
“ஒண்ணுமில்லேடா” என்ற ஆனந்தராவின் குரல் தயங்கியவாறு வந்தது.
“ஒண்ணுமில்லையா? நான் சொல்றேன் கேளுடா ராஜா. இவ்வளவு குளுந்திருக்கு... காலையிலே பழையதக்கு தயிர் விட்டுண்டு, வடுமாங்காய் கடிச்சுண்டு சாப்பிடணுங்கிறார். ஏற்கனவே ஈர ஒடம்பு, ஊசியும் மருந்தும் இப்பத்தான் போயிட்டு வர்றேன்னு கிளம்பியிருக்கு, இதுக்குள்ளற பழையதைச் சாப்பிட்டு ஒடம்பைக் கெடுத்துண்டாத்தானே. டாக்டர் ஆத்துக்குப் போய் மணிக்கணக்கிலே அரட்டை அடிக்கலாம்.”
“டாக்டர் ரங்கநாதன்ட்டே கேட்டேன். அவர், பழையது, தயிர், வடுமாங்காயிலே எந்த வகையான அப்ஜெக்ஷனும் கிடையாதுன்னுட்டார்.”
“ஒங்க உடம்பு அவருக்கு என்ன தெரியும்?”
“அவர்கூட அதையே தான் டெய்லி சாப்பிடறாராம். இதோ பார் ஆனந்தராவ், இந்த இட்லி சாம்பார் மசால் தோசையிலே இருக்கறதெல்லாம் விட எஃபக்ட் அதுலேதான் இருக்குன்னார்.”
அறையில் இருந்தவாறே ராஜாமணி குறுக்கிட்டான்.
“பேசாம போடேம்மா... இவ்வளவு தூரம் அப்பாவைக் கெஞ்ச வைக்கறியே?”
“நீ சும்மா இருடா. நோக்கென்ன தெரியும்? அவஸ்தைப்படறவர் அவரா, டாக்டர் ரங்கநாதனா?”
“அடியே... அடியே... நீ பெரிய எம்.டி. மாதிரி பேசாதே டாக்டர் ரங்கநாதன் பெரிய ஜீனியஸ்...”
ஆனந்தராவுக்கு நாக்கு சாப்பிட்டு விட்டது.
“சரி... வேறே என்ன பண்ணியிருக்கப் போறே... ரவா உப்புமா தானே... விடிஞ்சா ரவா உப்புமா... பொழுது போன ரவா உப்புமா... ம்..ம்...ம்...”
மனம் விழுந்த மாதிரி அவர் பேசியது கங்காபாய்க்குப் பொறுக்கவில்லை. அதிகமாய்த்தான் அவரை ஆட்டிப் படைக்கிறோமோ என்று சுரத்து குறைந்தது.
“நேக்கென்ன வந்தது? நல்லதைச் சொன்னா கேக்க மாட்டேள். படறச்சே, நானும்னா சேர்ந்து அவஸ்தைப்படறேன். நாக்கை அடக்க மாட்டேள். பழையதையே கொண்டாறேன். திருப்தியா இருங்கோ.”
கங்காபாய் எப்போதும் கடைசியில் விட்டுக் கொடுத்து விடுவாள். இதுவும் ராஜாமணிக்குத் தெரிந்த சங்கதி தான்.
கூடத்திலிருந்து ஆனந்தராவ் குரல் கொடுத்தார்.
“ராஜா, ஷேவ் பண்ணிக்கிறியா?”
“ஆமாம்ப்பா...”
“குளிச்சிட்டு எங்கே போகப் போறே?”
“ஹர்த்தால் தமாஷ் பார்க்கலாம்னு இருக்கேன்.”
“நான் ஒரு கோழித் தூக்கம் போட்டுட்டு கடைக்கு வர்றேன்.”
அவருக்கு உடல் நிலை சரியில்லை. ஓய்வு தேவையென்று டாக்டர் சொன்னது ராஜாமணிக்குக் கவனம் வந்தது.
“நானே போறேம்பா. நீங்க ரெஸ்ட் எடுங்கோ!”
“இந்தாங்கோ, ஒங்க பழைய சாதம்” என்று கங்காபாய் வந்தது போட்டது. எதுவும் மனசில் ராஜாமணி. அப்பாவிடம் ஜமுனாவைப் பற்றிய பேச நினைத்த யோசனையைத் தள்ளிப் போட்டான். ஒரு பெண்ணால் முகத்துக்கு எதிரில் நிராகரிக்கப்பட்டு விட்ட சோகம் மனதிற்குள் இன்னும் பெரிய பளுவாகத் தங்கியிருந்தது.
கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான்.
‘இந்த மூக்கு... கண்... உதடுகள்... நண்பர்கள் வீட்டில்... ஹைஸ்கூலில்... எத்தனை பெண்கள் அவனிடம் பிரியமாய்ப் பேசுகிறார்கள். எங்கே போனாலும் அவனுக்கு ஒரு செல்ல மாப்பிள்ளை மாதிரி என்ன வரவேற்பு... எத்தனை பெண் உள்ளங்கள் அவன் மனசோடு ரகசியம் பேசத் துடித்தன.’
கண்ணாடியில் மீண்டும் முகத்தைப் பார்க்கத்தான்.
‘என்ன அகந்தை ஒனக்கு! நான் போய் நேரடியாக ஜமுனா மாதிரி ஒரு அபூர்வமாக அழகியைக் காதலிக்கிறேன் என்றதும், அவள் காலடியில் மயங்கி விழுந்துவிட வேண்டுமோ...? இது என்ன கொழுப்பு? அதற்காகத் தான் பிளேட் கூட ஷேவிங் செய்யும்போது வெட்டி விட்டது’ என்று நினைத்தான்.
மோகன் மாரி ஒருவனை நேசிப்பதற்குக் கூட அவளுக்கு முழு உரிமை உண்டு. அவனுக்குத் தெரிந்து எத்தனையோ பெண்கள் நம்ப முடியாத பேர் வழிகளிடம் காதல் கொண்டிருந்தார்கள். மோகனையும் ஜமுனாவையும் தன் மனசுதான் இணைத்துக் கொண்டதேயொழிய உண்மையில் அவர்கள் இருவருக்கும் மத்தியில் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கலாம். வெறும் அனுமானம். தனக்குக் கிடைத்த தோல்வியின் கசப்பிலிருந்து மனமே பழி வாங்குவது போல் குரூரமாகப் பிணைந்து விட்ட அனுமானம்...
ஜமுனா மாதிரி உன்னதமான பெண்ணாவது... மோகன் மாதிரி பேர் வழிகளை ஏறெடுத்துப் பார்ப்பதாவது?
“சீ... என்ன மனசு எனக்கு... சாக்கடை ஓடுகின்ற இந்த மனசுக்கு ஜமுனா எப்படிக் கிடைப்பாள்?”
ராஜாமணி ஷேவிங் செய்வதை மறந்து ஜன்னலுக்கு வெளியே இருண்டு கொண்டு வந்த வானத்தைப் பார்த்தான்.
“போஸ்ட்” என்று வெளியே கேசவலு நாயுடுவின் கனத்த சாரீரம் கேட்டது.
ராஜா என்று குரல் கொடுத்தார் ஆனந்தராவ்.
“ராஜாமணி சார்” என்று கேசவலு நாயுடு கூப்பிட்டார்.
“இதோ வர்றேன்” என்று சோப்பைக் காகிதத்தில் வழித்து ரேஸரைக் கழற்றிக் கோப்பையில் போட்டு விட்டு வெளியே போனான் ராஜாமணி.
“ஒங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் கவர்...”
பட்டை பட்டையாகத் திருநாமம். நெற்றி உச்சியில் நரையைக் கூடத் தொட்டிருந்து. கண்கள் குந்து சாலேஸ்திரக் கண்ணாடி வழியாகப் பயமுறுத்துவது போல் தெரிந்தன. ஸ்தூல சரீம். மூச்சு வாங்கிற்று. முதுமை.
“அப்பாவுக்கு தபால்.”
“ரிஜிஸ்டர் கவரா?” என்று யோசித்தவாறே ரசீதை வாங்கி போஸ்ட்மேன் நாயுடு தடித்த சிவப்புப் பேனாவினால் கையெழுத்திட்டான்.
தபால்களை வாங்கிக் கொண்டான். அவனுக்கு வந்த கவர், அலுவலகங்களில் பயன்படும்பெரிய பழுப்புக் கவர் மாதிரி இருந்தது. அனுப்பியவர் விலாசத்தைப் படிப்பதற்குள் நாயுடு குறுக்கிட்டார்.
“ராஜா சார். அப்பா இருக்காரா?”
“இருக்காங்க.”
“கூப்பிடுங்க...”
“சாப்பிடறார்.”
“அப்படியா?” அவர் திண்ணையில் உட்கார்ந்தார். பெரிய பூசணிப்பழம் பழுத்து உட்கார்ந்த மாதிரி இருந்தது. திருஷ்டிப் பரிகாரத்துக்கு நாமம் போட்டு வைத்த பூசணிப் பழம்.
“இதுதான் என்னுடைய கடைசி பட்டுவாடா-” நாயுடு சிரித்துக் கொண்டு சொல்ல முயன்றார். அந்தச் சிரிப்பில் அங்குமிங்கும் விழுந்துபோன பற்களின் காலியிடங்கள் தெரிந்தன.
“ஐஸீ... என்ன விஷயம் நாயுடு?”
“இன்னியோட நான் ரிடையராகிறேன்”
ஆனந்தராவ் அதற்குள் சாப்பிட்டு முடித்து விட்டுக் கைகளையும் வாயையும் துண்டில் ஒற்றிக் கொண்டே வெளியே வந்து விட்டார்.
“என்ன நாயுடு... சாவதானமா ஒக்காந்துட்டேள்?”
“இந்தாங்க தபால். நாயுடு இன்னியோடு ரிடையராகிறாராம்.”
தபாலை வாங்கிக் கொண்ட ஆனந்தராவ், “அப்படியா நாயுடு?” என்று ஆச்சரியத்தோடு நிமிர்ந்தார்.
“ஆமாம் ராயரே?” அதற்குள் நாயுடுவிற்குக் குரல் கம்மி விட்டது. சட்டென்று அவர் கண்களில் இறுக்கம் நெகிழ்ந்து கண்ணீர் தளதளவென்று இறங்கி விட்டது.
என்ன நாயுடு இது... சின்னப்பிள்ளை மாதிரி...?
ஆனந்தராவுக்கும் நெஞ்சு நெகிழ்ந்து விட்டது.
போஸ்ட் என்ற அந்த கனத்த சரீரம் இனிமேல் அந்த வீதியிலோ, வேறெங்குமோ காதில் விழப் போவதில்லை என்ற விஷயம் அவரையும் கலக்கி விட்டது.
“முப்பத்தஞ்சு வருசம் ராயரே... எல்லாம் விளையாட்டு மாதிரி முடிஞ்சு போச்சு. ஒங்க மாதிரி பெரியவா ஆசீர்வாதத்தாலே எந்த கம்ப்ளெயிண்டும் இல்லாமெ வண்டி ஓடிப்போச்சு. இந்த ஒரே பீட்லே பதினஞ்சு வருசம் வுட்டு வச்சாங்க. யாராரோ டக்கர் அடிச்சும் முடியல்லே. இது ஒண்ணு போறாதா எனக்க சரடிபிகேட்டு... மனசு தான் தாங்கல்ல... பாத்துப் பழகின மனுஷாளை சடுக்குன்னு விட்டுப் பிரியற மாதிரி இருக்கு.”
“இதென்ன பிரமாதம் நாயுடு... மனசை நீர் அலட்டிக்கப்படாது. நாங்களாம் எங்கே போயிடறோம் நீங்க போஸ்ட்டுன்னு வந்து நின்னாத்தான் பேசுவோம். இல்லேன்னா மொகத்தைத் திருப்பிக்குவோமா என்ன? ராஜாமணி உள்ளே போய் அம்மாவைக் காப்பி தரச் சொல்லு என்று ஆனந்தராவ் தாமே உள்ளே எழுந்து போனார்.
பீரோவில் சுப்பண்ணாவுக்கு புது வருஷத்துக்காக எடுத்துக் கொடுக்கத் தவறி விட்ட வேஷ்டித் துண்டு இருப்பது ஞாபகம் வந்தது. எழுந்து போய் பீரோவைத் திறந்து அவற்றை எடுத்துக் கொண்டு, நூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கட்டிலிருந்து உருவி எடுத்தவாறு திரும்பி வந்தார்.
நாயுடு எப்பேர்ப்பட்டவர்! துக்கத்தை ஹாஸ்யமாக்கி விடுவார். துன்பத்தை லகுவாக்கி சேர்ந்து விழுகின்ற மனதைத் தூக்கி தோளில் ஏற்றி நிமிர்த்துவார். ஒவ்வொரு வீட்டின் குடும்ப சங்கதியும் அவருக்கு மனப்பாடம்.
அம்மா கொடுத்த காப்பியோடு வந்தான் ராஜாமணி.
ஆனந்தராவ் மேலே சுற்றியிருந்த கண்ணாடிக் காகிதம் மொரமொரக்க வேஷ்டியையும் துண்டையும் நீட்டினார். ரூபாய் நோட்டை உள்ளே செருகியிருந்தார்.
அந்த சன்மானத்தை வாங்கும்போது குழந்தை மாதிரி வெடித்து அழுது விட்டார் நாயுடு.
நாயுடுவின் குலுங்கும் முதுகை ஒரு கையால் அணைத்துக் கொண்டார் ஆனந்தராவ்.
நாயுடுவையும் அப்பாவையும் விட்டு விட்டு ராஜாமணி ஆவலோடு ரிஜிஸ்டர் கவரைப் பிரித்தான்.
ஐ.எஃப்.எஸ் விண்ணப்ப பாரம். சோமையா அனுப்பியிருந்தார். கூட ஒரு கடிதம். அவன் விறுவிறுவென்று கண்களை ஓட்டினான். அவரது வாழ்த்துக்களைச் சொல்லியிருந்தார். ஒரு மாதம் ஊட்டியில் கழிக்க அவனைக் கூப்பிட்டிருந்தார். கோடை விடுமுறையைக் கழிக்க டேராடூன் பாரஸ்ட் காலேஜ் புரொபசர்கள் எல்லாம் வருகிறார்கள். ஃபாரஸ்ட்ரியைப் பற்றித் தெரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பமாம்.
ராஜாமணிக்கு உள்ளம் பொங்கி வழிந்தது.
“அப்பா... அப்பா... டி.எஃப்.ஓ. சோமையா லெட்டர் போட்டியிருக்கார். ஐ.ஃப்.ஓ. அப்ளிகேஷன் அனுப்பியிருக்கார். ஊட்டிக்கு ஒரு மாசம் வரச் சொல்லி இன்வைட் பண்ணியிருக்கார்.”
அவன் குரலில் துள்ளிய களிப்பிற்கு எதிரொலி இல்லை. கங்காபாய் ஆனந்தராவைப் பார்த்தாள். அவர் அவளைப் பார்த்தார். அந்த இரு முகங்களிலும் ஒரு வாட்டம் பரஸ்பரம் பரிமாறப்பட்டது. அப்போது மீண்டும் மழை ஆரம்பமாயிற்று.

Saturday, 2 February 2013

ஜமுனா-13


13
கல்யாணம் முடிந்து தெருவை அடைத்துப் போட்டிருந்த பந்தலைப் பிரித்த மாதிரி வெளிவாங்கிற்று வானம். மாலை மணி மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது.
நாளைக்கும் பாக்கி வைத்திருப்பது போல் மந்தமாகக் காய்ந்த வெய்யிலைப் பார்த்து விட்டு ஈரத் துணிகளை இப்போதே ஆறப்போட வேசண்டியது தான் என்று உள்ளே வந்தாள் ஜமுனா.
ரங்கையர் ஒய்.எம்.சி.ஏ.வுக்குப் போய் இருந்தார். அப்பாவின் அங்கவஸ்திரமும் குடையும் கயிற்றில் தொங்குவதைப் பார்த்தும் எவ்வளவு தைரியமாகத்தான் பேசி விட்டோம் என்று ஞாபகம் வந்து அவளுக்கு மனம் நலிந்தது. என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று பிரமித்தாள்.
நவகாளி, ராமநவமிக்கு பிரசங்கியை ஏற்பாடு செய்வதற்காக மட்டும் அங்கே வரவில்லை. ஜமுனாவுக்கு வரன் ஒன்று கிடைத்திருப்பதைப் பற்றித் தெரிவிக்கத்தான் வந்திருந்தார். ரங்கையர் ஜமுனாவின் ஜாதகத்தை ஏற்கெனவே அவரிடம் கொடுத்திருந்தது ஜமுனாவுக்கு தெரியாது.
திவ்யமான பொருத்தம் என்ற ஜோஸ்யர் சிலாகித்ததாக ஆரம்பித்து வரனுடைய போட்டோவைக் கொடுத்தார். முப்பத்தைந்து வயது. சிலுப்பிக் கொண்டு நின்ற சுருட்டை முடி, ஸ்பெக்ஸ் வழியாக தப்புக் கண்டு பிடித்த மாதிரிப் பார்க்கும் ஒரு பார்வை. பெரிய உதடுகளில் கர்வப்புன்னகை. சிவராமகிருஷ்ணன் பி.எஸ்.ஸி., ஆடிட்டர் வேலை. ஏழாயிரத்துச் சொச்சம் சம்பளம். பெண் அழகாய் இருந்தால் போதுமாம். வரதட்சிணை வேண்டாமாம்.
நவகாளி அந்த விவாகத்தை நடத்தியே வைப்பது என்ற தோரணையில் பேசத் தொடங்கினார். ஒரு மணிக்கு சாப்பாடு முடிந்தது. முதல் ஈடு மழை இடைவேளை விட்ட மாதிரி சற்றுத் தணிந்த போது மீண்டும் ரங்கையரை முடுக்கி விட்டுத்தான் குடையோடு கிளம்பினார்.
அவர் போய் மழை மறுபாட்டம் ஆரம்பித்தபோது, ரங்கையர் ஜமுனாவிடம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்:
“போட்டோவைப் பார்த்தியாமா?”
“பார்த்தேம்பா.”
“பிடிக்கிறதா?”
“.........”
பதில் வராததைக் கண்டு ரங்கையர் தாம் ஒரு தரம் போட்டோவைப் பார்த்துக் கொண்டார். அவருக்குப் பிடிக்கவில்லை. நவகாளிக்கு தன் குடும்பத்திலிருந்து ஈடுபாடு அவருக்கு ஞாபகம் வந்தது. போட்டோக்கள் பொய் சொல்வதை அவர் அறிந்திருக்கிறார். நவகாளி ஈடுபட்டுச் செய்யும் முயற்சியை நம்ப வேண்டும் என்ற மனசின் உட்குரல் சொல்லிற்று. இன்னும் எத்தனை நாள் ஜமுனா காத்திருப்பாள்?
“என்னம்மா?”
ஜமுனா மௌனமாயிருந்தான். மழை வெளியே பலக்கப் பிடித்துக் கொண்டது. அந்தக் கேள்விக்கு அவள் பதில் சொல்லியாக வேண்டும். உண்மைகளை உடைத்துச் சொல்ல வேண்டிய தருணம், இவ்வளவு துரிதமாகச் சற்றும் எதிர்பாராத ஒரு வேகத்தில் உருவாகி விட்டது தான், அவள் வாயை அடைத்து விட்டது.
“பிடிக்கலையா?”
“அப்பா...அப்பா... உங்கள் முகத்தைத் தொங்க வைக்கப் போகும் பதிலை வைத்திருக்கிறேனே... இதைக் கேட்டு நீங்கள் எப்படித் திடுக்கிடுவேள்... என்ன செய்றது? இப்படி நேர்ந்து விட்டது. எந்தத் தப்பும் நடக்கலே. இருந்தாலும் மனசு திருடு போய் விட்டது. என் ஜாக்கிரதையை மீறி, என் கண்டிப்பை மீறி. நீங்க எப்படிப்பா தாங்குவேள்?” மனசு மறுகிற்று.
“மனசு விட்டுச் சொல்லம்மா...”
அவள் தன்னைத் தயார் செய்து கொண்டாள்.
“இப்ப எனக்குக் கல்யாணம் வேண்டாம்பா.”
மனசுக்குப் பிடிக்கவில்லையென்றால், ஜமுனா வெளிப்படையாகச் சொல்லி விடுவாள். இந்தப் பதில் வேறு மாதிரி இருக்கவே அவர் திடுக்கிட்டார். அவள் குரலும் வேறு மாதிரி இருந்தது.
“அப்படீன்னா...”
அதை அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கே நேரிட்டதை அவளால் தாள முடியவில்லை. தன் மனசை அவரிடம் தெரிவிக்க ஒருத்தர் இருந்திருந்தால்? அண்ணா ராகவன்? ஊஹும். அம்மா... அம்மா இருந்திருந்தால்... ஜமுனா வசமிழந்து விட்டாள். திடீரென்று துக்கம் பொங்கிற்று. விசித்து விசித்து அழத் தொடங்கினாள்.
“ஜமுனா... ஜமுனா... என்னம்மா?” - அவளைத் தேற்றுவதற்காக எழுந்த ரங்கையர், ஏதோ ஒரு அச்சம் தடுக்க அப்படியே நின்று விட்டார்.
ஜமுனா தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள். மழை வெளியே விளாசிற்று.
இப்போது இதை விட்டு விடலாம் என்று நினைத்தார் ரங்கையர். ஆனால் இது ஏதோ அபாயக் குறி என்று அவருக்குள் ஓர் உணர்வு துணுக்கென்றது.
“ஏம்மா... அழறே... என்ன நடந்துடுத்து? பிடிக்கலேன்னா வாண்டாம்!”
அவள் அழுகை தணிகிறவரை அவர் காத்திருந்தார். ஜமுனா முழங்காலிட்டு அதன் மீது முகத்தைக் கவிழ்த்துக் 
கொண்டிருந்தாள். முதுகு விம்மி விம்மித் தணிந்தது. மழை ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
மழையும் அழுகையும் தணிகிறவரை அவர் காத்திருந்தார்.
திகிலும் அரைகுறைச் சந்தேகங்களும், தாயற்று வளர்ந்த மகளின் வாடிக் கொண்டு வரும் பருவமும், காலா காலத்தில் அவளது கடமையை நிறைவேற்றாத கையறு நிலையும் அவரது நெஞ்சைப் பின்னின. ரங்கையர் துன்பத்தை மௌனமாகத் தாங்குவது போல் கண்களை மூடிக் கொண்டார்.
வழிந்த கண்ணீரோடு அவரை நிமிர்ந்து பார்த்த ஜமுனா ரங்கையரின் மூடிய கண்களைக் கண்டதும், தைரியமிழந்து மீண்டும் முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டாள்.
“ஜமுனா...” அவர் குரல் கரகரத்தது.
“.......”
“என்னண்டே சத்தியமா இரும்மா.”
“ஏம்மா இப்படி அழறே? நோக்கு வேற அபிப்ராயம் இருக்கா...?” அதைக் கேட்கும் போது அவர் குரல் நடுங்கிற்று.
“........”
“வேற யாரையோ மனசுலே நெனச்சண்டிருக்கியா?”
அவள் பதில் முழங்காலின் மேல் பதிந்திருந்த தலை அசைவின் மூலம் வெளிப்பட்டது.
“யாரது?” - ரங்கையரின் தந்தை உள்ளம் திடீரென்று நிலை தாழ்ந்தது போல ஹீனமுற்றது.
“மோகன்... எதிர்த்தாத்து மோகன்.”
“பழக்கம் உண்டோ?”
“ம்...ம்...ம்”
“எத்தனை நாளா?”
“ஆறு மாசமா”
மழை அப்போது நின்றது. ஓங்காரம் அடங்கி பிசுகிசுவென்ற தூரல்கள் விழுந்து கொண்டிருந்தன. வெளியே சாக்கடை வெள்ளம் ஓடுவதையும், தெருவில் பேச்சுக் குரல்கள் ஈசலாய்க் கிளம்பியதையும், கேட்டுக் கொண்டு மரக் கட்டை மாதிரி உட்கார்ந்திருந்தார் ரங்கையர்.
அவரது பெருமை சீலம், ஞானம், மகள் மீது வைத்திருந்த பாசம், அவர் போற்றிய தர்மம் எல்லாம் உருண்டு உடைந்து சாக்கடை வெள்ளமாக ஓடிப்போக, தான் மட்டும் வெறிச்சிட்டு நிற்பதாக உணர்ந்தார்.
மோகனை அவருக்குத் தெரியும். ஓட்டலில் அக்கவுண்ட் வைத்திருந்தான். எப்போதும் சிகரெட்டும் கையுமாக அலைவான். கிளப்பில் சூதாடுவதாகவும், வேறு என்ன என்னவோ சகவாசங்கள் உண்டென்றும் கேள்விப்பட்டிருக்கிறார். அவனுக்கு ஓட்டலில் ஒருநாள் சாம்பார் பரிமாறும்போது, மது நாற்றம் கூட வந்தது. சரளமாக அவன் மராட்டி பேசினான், நிச்சயம் அவள் ஐயராக இருக்க முடியாது.
அவர் சிலை போல் உட்கார்ந்திருந்தார். அவரது முழு வாழ்க்கையும் அவர் முன் ஒரு கேள்விக் குறியாயிற்று. ‘கடாம்பி’ நாராயணதாஸர்... நவகாளி நாராயணசாமி... ஸ்மிருதிகளிலும் பிரமாணங்களிலும் மூச்சு விடாமல் தர்க்கம் செய்யும் வைத்தியநாத ஐயர்... சங்க மடத்துக் காரியஸ்தர்கள்...ஆனந்தராவ்... ஆனந்தபவன் சகாக்கள்... வாடிக்கைக்காரர்கள்... எவ்வளவு பெரிய வட்டம்.
அவர் தலை சுழன்றது.
‘என்ன வாழ்க்கை வாழ்ந்து விட்டு இந்த சங்கதியைக் கேட்க இன்னும் உயிர் இருக்கிறதே!’
“ஜம்னா... ஒன்னை எவ்வளவு ஆசாரத்தோடு வளர்த்தேன். ஒன் புத்தியை எவ்வளவு மேலான விஷயங்களிலே செலுத்தினேன்... இவ்வளவு கீழ்த்தரத்துக்கு ஒன்னை எந்தப் பிசாசும்மா சேர்த்துட்டது?”
- அவர் மௌனமாகக் குமுறினார். ஜமுனாவின் தலை நிமிரவேயில்லை.
“இது ஏன் நேர்ந்தது... எப்படி நேர்ந்தது” என்று கேள்விகள் அவர் மனசில் சம்மட்டி கொண்டு தாக்கின.
வெகுநேரம் கழித்து அவர் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு பேசினார்.
“இது நடக்காது ஜம்னா... அவன் ஒரு நீசன்... நோக்குத் தெரியாது... அவனுக்கு எத்தனையோ துர்ச்சகவாசம் பழக்கம் உண்டு.”
“நேக்கு எல்லாம் தெரியும்பா.”
அந்தப் பதில் அவரை மேலும் திணற அடித்தது.
“தெரிஞ்சுமா? நோக்கென்ன பைத்தியமா...?”
“அவர் ஒரு கட்டுப்பாடில்லாதவர் தாம்பா... ஆனா அவரை அடக்கி நேர் பண்ணினா ரொம்ப உயர்ந்த மனுஷரா ஆயிடுவார்!”
“அவர்... சீ!” ரங்கையருக்கு குமட்டிற்று. அவள் குரலில் தெரிந்த தீர்மானமும், அவனை அளந்து வைத்திருப்பது போல் அவள் பேசுவதும் நெருப்பாய்த் தகித்தது. தன்னை மறந்த மூர்க்கம் பிறந்தது.
“என் உயிர் இருக்கிறவரைக்கும் அது நடக்காது ஜம்னா.” அந்த விஷயத்துக்கு மறு தீர்மானமே இல்லாதது போல் தீர்க்கமாக முடிவு கட்டிய மாதிரி, அவர் குரலில் வைரம் பாய்ந்திருந்தது.
“அப்பா...” என்று அதிர்ந்து போய்க் கேவினாள் ஜமுனா.
“நானும்... என் மனசும்... நேக்கும் அதே மாதிரி...!”
அவள் விம்மினாள்.
“போறும் நிறுத்து! நோக்கு விவாகமே ஆகாமே நீ கன்னியாவே இருந்துட்டாலும் சரி... இது ஒண்ணு மட்டும் நடக்காது!”
ரங்கையர், போட்ட சட்டையோடு அங்கவஸ்திரம் கூட இல்லாமல் குடையைக் கூட மறந்து, வெளியே புறப்பட்டு விட்டார்.
‘நானும் அவர் மகள் தான்’ என்று சொல்லிக் கொண்டு அவள் வீட்டு வேலைகளைக் கவனிக்க எழுந்தாள். நிறைந்திருந்த குடங்களில், மிஞ்சிய மழைத்துளி முகட்டிலிருந்து சிதறி வட்டம் போட்டது.
“ப்பாய்ங்... ப்பாய்ங்” என்ற ஐஸ் வண்டிக்காரன் வெளியேயிருந்து ஹாரன் அடித்தான். அவனிடம் மத்தியானத்தில் ஒன்றில் இரண்டில் ஜமுனா பால் ஐஸ் வாங்குவாள்.
“வேண்டாம்பா... இந்த மழையில் ஐஸ் எதுக்கு?”
“ஹர்த்தால் ஆச்சேன்னு ஏகமா சரக் போட்டேன். வியாபாரமே ஆகலேம்மா, மழை மோசம் பண்ணிடுச்சி” - அவன் பெருமூச்சு விட்டான்.
“அப்படியா... சரி... எனக்கு வழக்கமாகக் கொடுக்கற பால் ஐஸைக் குடு.”
ஐஸைக் கொடுத்து விட்டு வண்டிக்காரன் தெருக் கோடியில் மறைந்தான்.
“இந்த மழையிலே ஐஸா?” என்று ஒரு குரல் கேட்டது.
அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். ‘மோகன்!’ பனியனோடு நின்று கொண்டிருந்தான். பொறுப்பற்ற ஷோக் பேர்வழியைப் போல் அவன் சிரித்தான்.
அவள் பார்வையில் ஏதோ ஆழம் தட்டுப்பட்டது போல் அவன் சிரிப்பு மறைந்தது. அவன், தெருவில் வலமும் இடமும் திரும்பிப் பார்த்து விட்டு, போஸ்ட் என்றான். அது அவர்கள் மத்தியில் ஒரு சங்கேதம். தபால் அனுப்புகிறேன் என்று அர்த்தம்.
ஜமுனா அவனைப் பார்த்து நெடுமூச்செறிந்து உள்ளே திரும்பினாள். மோகன் இப்போது ஏதாவது ஒரு புத்தகத்தில் சீட்டை மறைத்து அனுப்புவான். அதைக் கொண்டு வரும் பொடியனிடம் ஐஸைக் கொடுத்து விடலாம் என்று ஒரு டம்ளரில் அதைப் போடத் திரும்பினாள்.
“அக்கா... மோகன் மாமாட்டே பொஸ்தகம் கேட்டியாமே!” என்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் அரை நிஜார் சுந்தரம்.
அவன் போன பிறகு ஜமுனா புத்தகத்தைத் திறந்து கடிதத்தை எடுத்துப் பிரித்தாள்.
“அன்புள்ள ஜமுனா,
இனிமேல் நான் இங்கிருக்க முடியாது. நம் விஷயம் எல்லாருக்கும் தெரிந்து விட்டது. என்னைத் தாகுவதற்குத் திட்டம் தீட்டுகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து. எனவே இன்று இரவு புளூமவுண்டன் எக்ஸ்பிரஸில் நாம் இருவரும் புறப்படுகிறோம். புறப்படுவாய் அல்லவா? உன்னை நம்பி ஏற்பாடு செய்யலாமா?
உயிரில் பிரிவதாய் இருந்தாலும் அது உன்னோடு பிரிய வேண்டும் என்று துடிக்கிறேன். உன் சம்மதத்தை தெரிவிக்க உங்கள் வீட்டுக் கொடிக் கம்பியின் மீது உன் பச்சை ஜாக்கெட்டைக் காயப்போடு.
துணிமணிகளையும், முடிந்த அளவு ரொக்கத்தையும் எடுத்து ஒரு பெட்டியில் போட்டு வைத்திருக்கவும். ஒரு கூலியான அனுப்புகிறேன். அவன் தலையில் பெட்டியை வைத்துவிடவும். தெருத் திருப்பத்தில் நான் டாக்ஸியுடன் காத்திருக்கிறேன். மற்றவை நேரில்.
உன்,
மோகன்
“எவ்வளவு துரிதமாக விஷயங்கள் ஓடி வருகின்றன! ஏன் இந்த வேகம்? என்ன செய்வது... அப்பா... அப்பா...”
வெகுநேரம் திக்பிரமை பிடித்தது போல் நின்றாள் ஜமுனாபிறகு அந்தக் கடிதத்தைப் புத்தகத்தினுள் வைத்து விட்டு அவள் உள்ளே போனாள்.
அரை மணி நேரம் கழித்து அந்த வீட்டுக் கொடிக் கம்பியில் அவளது பச்சை ஜாக்கெட் உலர்ந்து கொண்டிருந்தது.

ஜமுனா-12


12
வேதாந்த கீதம் புருஷம் பஜேஹம்
ஆத்மானம் ஆனந்தகனம் ஹ்ருதிஸ்தம்
கஜானனம் யம்ஸ்ரீமகசா ஜனானாம்
மகாநதகாரோ விலயம் பிரயாதி:
கூடத்தை ஒட்டிய வடக்குப் பார்த்த அறையிலிருந்து ரங்கையரின் கம்பீர தொனி, நாத ஜங்காரத்தோடு வந்தது. அறைக்கு வெளியே கூடத்தில் சிறிய துண்டுப் பாயின் மீது அமர்ந்து, ஜமுனா பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள்.
ரங்கையரின் ஸ்லோகங்கள் கரவில்லாத இருதயத்திலிருந்து வருவது போல், ஆன்ம லயத்தின் சங்கீதமாய் ஒரு நதியின் கம்பீர கதியாய் ஒலித்தன. இது சாரதா திலகத்தில் வரும் கணேச ஸ்துதி என்று புரிந்து கொண்டாள் ஜமுனா.
வாசலில் மழை திடீரென்று பலத்தது. கொட்டி முழக்கப் போகிறேன் என்று அச்சுறுத்துவது போல் ஆரம்பித்துச் சட்டென்று குறைந்தது. சாரல் தெறிக்கவே ஜமுனா எழுந்து பாயையும் தாம்பாளத்தையும் நகர்த்திக் கொண்டு, சற்று உள் தள்ளி உட்கார்ந்தாள். சட்டென்று தாழ்ந்த மழை, ஓரிரு விநாடியில் கிறுகிறுவென்று உயர்ந்தது. மீண்டும் ஒரு தணிவு.
நடையில் மாட்டியிருந்த பழங்காலத்து அறுகோண ஜப்பான் கடிகாரம் டங்டங் கென்ற நிறுத்தி நிறுத்தி ஒரு நிதானத்தோடு பத்து மணி அடித்தது.
மீண்டும் ரங்கையரின் குரல் சங்க நாதம் போல் உள்ளிருந்து வந்தது.
ஈஸா வாஸ்யம் இதம் சர்வம்
யத் கிம் ச ஜத்யரம் ஜகத்
தென தியக்தென புஞ்சீதா
மா கிருதஹ் கஸ்ய ஸ்வித்-தனம்
ரங்கையர் ஸ்லோகம் சொல்வதை நிறுத்தி விட்டு கொழந்தே “ஜம்னா...” என்று அழைத்தார். அந்த அழைப்பில் வாஞ்சை குழைந்தது.
“என்ன அப்பா?”
“இப்ப சொன்னேனே, அந்த ஸ்லோகத்தைக் கேட்டியோ?”
“கேட்டேம்பா...”
“எதிலே வர்றது சொல்லு பார்ப்போம்.”
“ஈசோபநிஷத்திலே மொதல் ஸ்லோகம்.”
“பேஷ்! அர்த்தம்?”
“அசையும் ஜகத்திலுள்ள ஒவ்வோர் அசையும் பொருளிலும் ஈஸ்வரன் நிரம்பி இருக்கார். இந்தப் பொருள்களின் மேலே இருக்கற பற்றை விடுவதன் மூலம் தான், நீ சுகம் பெறுவது சாத்தியம். பிறத்தியார் எவருடைய செல்வத்திலும் ஆசை வைக்காதே...”
ரங்கையர், உள்ளே இடப்புறம் ஸ்ரீராமச்சந்திரனும் வலப்புறம் கிருஷ்ண பகவானும் அவற்றின் கீழே ஸ்ரீராம கிருஷ்ணருமாகக் காட்சியளித்த படங்களின் அடியில் மான் தோல் மீது உட்கார்ந்தவாறு பேசினார்.
“இந்த ஸ்லோகத்தின் மேலே காந்திக்கு அபாரப் பிரமை தெரியுமோ?”
“அப்படியாப்பா...?”
“ஆமாம், திடீர்னு ஒரு வேளைலே எல்லா வேதங்களும் உபநிஷத்துகளும் வெந்து சாம்பலாகப் போயிட்டாலும் ஈசோபநிஷத்தின் இந்த மொதல் லோகம் மட்டும் மிஞ்சினா. அது ஒவ்வொரு ஹிந்துவினுடைய நினைவிலே நீங்காமே நின்னுடும்ன்னா, ஹிந்து மதம் அழியாமே என்னிக்கும் வாழும்னு சொல்லியிருக்கிறார்!”
“சத்திய வாக்குதான்.”
ஜமுனாவின் பதில் ரங்கையருக்குப் புளகத்தை ஏற்படுத்திற்று. மெதுவாகப் புன்னகை செய்து கொண்டார். தந்தையின் ஞானம் மகளிடம் சிந்தியிருப்பது பெருமை தந்தது.
விளையாட்டுப் போக்கு மறைந்து மழை சோவென்று பலக்கப் பிடித்துக் கொண்டது. ரங்கையர் மான் தோலிலிருந்து எழுந்து ஒரு தரம் கைகூப்பி நமஸ்கரித்து விட்டுக் கதவோரமாகப் போட்டிருந்த ஸ்டூலின் மீது வந்து உட்கார்ந்தார்.
மகளோடு பேச வேண்டுமென்ற ஆவல், மழையின் இரைச்சலைப் பொருட்படுத்தவில்லை. அவர் வந்து உட்கார்ந்தும் ரங்கையரின் மனப்போக்கு புரிந்து ஜமுனா அவரை நிமிர்ந்து பார்த்துப் புன்னகை செய்தாள்.
“இந்த வருஷத்தில் நீங்க காத்தாலே பத்து மணிக்கு வீட்டிலே இருக்கிறது இதான் இரண்டாவது தடவை காலையிலே இருந்து நீங்க ஓட்டலுக்குப் போகலே.”
“மொதல் தடவை எப்போ?”
“வைகாசியிலே ராகவன் வந்திருந்தானே, அன்னிக்குக் காலையிலே நீங்க ஓட்டலுக்குப் போகலே!”
“அவர் வீட்டில் தங்குவதை ஜமனா எவ்வளவு ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறாள்’ என்று எண்ணி ரங்கையர் மெதுவாகச் சிரித்துவிட்டு மழையைப் பார்த்தார். பகலில் வீட்டில் தங்கும் அனுபவம் இதமாகத்தான் இருந்தது.
“பாவம்...! ஹர்த்தால்காராளுக்குப் பெரிய ஏமாற்றம்!”
“ஏம்பா?”
“அவங்க ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த விடாமே மழையே ஆர்ப்பாட்டம் நடத்திண்டிருக்கே!”
ஜமுனா தட்டிலிருந்த முல்லைப் பூக்களை கிளறிக் கொடுத்தாள்.
ரங்கையரின் தந்தை உள்ளம் நெகிழ்ந்து பூரித்தது.
“இவள் வயசுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆகப்போறது. இன்னும் சரியான வரன் தகையலே. வரதட்சணை... வரதட்சணைன்னு ஓநாயா அலையற கும்பல் தான் வந்துண்டிருக்கு. இந்தச் சௌந்தர்யம்... இந்த ஞானம்... இந்தப் புத்திச் சாதுர்யம் எதுவும் எந்த யோக்கியவான் கண்ணிலும் படல்லே... இருக்கட்டும். விதி எப்படியோ லபி அப்படி... எவனோ ஒருத்தன் இவளுக்குன்னு பொறந்திருக்கான். இந்தப் புஷ்பம் பரிபூரணமா பூத்து மலர்ந்திருக்கிற இந்த வேளைக்கு வருவானோ... இன்னம் தாமதிச்சு வருவானோ... நம்ம பிரயத்தனம் எல்லாம் விரயமாயிண்டே போறதப் பார்த்தா பகவத் சங்கல்பம் ஏதோ இருக்குன்னு தோணறது...’ என்று நினைத்தவாறு தமக்குள் பீறிட்ட பெருமூச்சை ஸ்வரம் குறைந்து மௌனப்படுத்தினர் ரங்கையர்.
வெளியே நிலையாகப் பெய்த மழையில் திடீரென்று ஒரு மாறுதல். படபடவென்று சிறிய தவளைக்குஞ்சுகள், கூடத்திலும் வாசலிலும் தாவுவது போல ஆலங்கட்டிகள் சிதறித் தெறித்தன.
“அப்பா... அப்பா... ஆலங்கட்டி விழறதுப்பா” என்று மகிழ்ச்சியோடு கூவினாள் ஜமுனா.
சிறிதும் பெரிதுமாக வாசலில் தெறித்து வீழ்ந்த ஆலங்கட்டிகள் வந்த விசையில் தரையில் மோதி இன்னொரு துள்ளுத்துள்ளின. தன்னை மறந்து கைகொட்டிச் சிரித்தாள் ஜமுனா.
அந்த ஆச்சரியமும் குதூகலமும் அவள் முகத்தில் பளீரென்று விகசித்தன. ரங்கையர் புன்னகையோடு அவளைப் பார்த்தார். ஒரு குழந்தை மாதிரி வினோதங்களையும் ஆனந்தத்தையும் வாங்கிக் கொள்ளும் ஜமுனாவின் உள்ளம் அவரைக் கிளர்ச்சியுறச் செய்தது.
வாசல் தரையில் விழும் ஆலங்கட்டிகளின் விளையாட்டை ரசிக்கத் தொடங்கினார்.
“ஒங்களுக்கு ஒண்ணு ஞாபகம் வர்றதாப்பா?”
“என்னது கொழந்தே?”
“நானும் ராகவனும் அப்போ ரொம்ப சின்னவங்களாயிருந்தோம். இந்த மாதிரி ஆலங்கட்டி மழை பெய்தது. அதை சீசாவிலே போட்டு எடுத்து வச்சா, தேள் கடிக்கு நல்லதுன்னு பள்ளிக்கூடத்திலே பிள்ளைகள் சொல்றதைக் கேட்டு நம்பிண்டு. ஒரு சீசாவை எடுத்துண்டு ராகவன் அவசரமா ஓடி வந்தான். கால் சறுக்கிப் போதேர்னு வாசல்லே வெள்ளமா நின்னுருந்த மழை ஜலத்திலே விழுந்துட்டான். நீங்க ஓடி வந்து அவனைத் தூக்கினேன். தலையிலே அவனுக்கு நல்ல அடி!”
ஜமுனாவின் ஞாபக சக்தி எவ்வளவு கூர்மையானது என்று தமக்குள் வியந்து கொண்டார்.
ஜமுனா திடீரென்று அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள்.
“சமுத்திரத்திலே கப்பலிலே போகறச்சே கூட, கனமா மழை பெய்யும் இல்லேப்பா?”
“ஏன் பெய்யாது...? மழைக்கு இடமா, காலமா?”
“சமுத்திரம் அப்போ பெரிசா குமுறுமாமே?”
“இருக்கும்”
“பெரிய புயல், சூறாவளிகூட வருமோல்லியோ?”
“வரலாம்.”
தூர தேசங்களின் சமுத்திர வெளிகளில் இரவு பகல் பேதமின்றிப் புயலும் அலைகளும் போராடும் சூழ்நிலைகளில் ராகவனை வைத்து நினைக்க அவரது தந்தை உள்ளம் சங்கடப்பட்டது. ஜமுனா மேற்கொண்டு பேசாமல் ஏதோ மனோ நிலையில் மௌனமானாள்.
ஆலங்கட்டிகள் டப் டப் பென்று தெறித்துத் தெறித்து விழுந்தன.
ரங்கையரை ராகவன் நினைவு தாக்கி வருத்தத் தொடங்கிற்று.
பால்யத்திலிருந்தே ராகவன் அவருக்கு ஒரு கவலை. எவ்வளவு உயரமான மரமாக இருந்தாலும் விறுவிறுவென்று ஏறிவிடுவது. ஏரியில் நீர் ததும்பும் காலத்தில்குதித்து நீந்துவது, சைக்கிள் ரேஸ் விடுவது என்று எப்போதும் சாகசத்துக்கே துடித்துக் கொண்டு நிற்பான். முனிசிபல் ஹைஸ்கூலில் படிக்கும்போது, முக்கியமான வாலிபால் ப்ளேயர். ஸ்போர்ட்ஸிலும் எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான்.
ராகவனின் உடம்பில் ஹனுமத் பிரசன்னம் இருப்பதாக ரங்கையர் கணக்கிட்டார். ராகவனுக்கும் ஆஞ்சநேயர் என்றால் பரம பக்தி. தினசரி கடைத் தெருவில் இருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போய் விட்டு வருவான். ஒன்பதாவதுக்கு மேல் அவனுடைய அடங்காத இளமைத் துடிப்பைப் பற்றிக் கவலை ஏற்படவே அவனை ஒய்.எம்.சி.ஏ. மாணவர் ஹாஸ்டலில் சேர்த்து விட்டார் ரங்கையர்.
ஒய்.எம்.சி.ஏ. அவனுடைய கட்டுப்பாடற்ற சக்திப் பெருக்கைச் சாணை தீட்டி வைரமாக்கிற்று. நிர்வாகி ஜான்ஸன் அவனை நெறிப்படுத்தினார். ஸ்காட்லாந்திலிருந்து கடல் கடந்து வந்து அந்தச் சிற்றூரின் மாணவர் குலத்தில் தன்னை அடையாளம் கண்டு கொண்ட அவரது பரந்த இதயம் ராகவனின் மன வரம்புகளை விஸ்தரித்தது.
கடல் கடந்து சென்று தேசங்களை மனத்தால் தழுவிக் கொள்ளும் ஆவலை அவர் வளர்த்தார். மெர்ச்சன்ட் நேவியைப் பற்றி ஒய்.எம்.சி.ஏ.வில் திரையிடப் பெற்ற ஒரு சினிமா அவன் கனவுகளுக்கு உருவமளித்தது. ஒய்.எம்.சி.ஏ.விலேயே படித்து விட்டு, விசாகப்பட்டினத்தில் கமாண்டராகப் பணிபுரிந்த ஒருவர் தற்செயலாகத் தனது பழைய ஹாஸ்டலைப் பார்க்க வந்த போது, ராகவன் அவரைச் சந்தித்தான்.
ரங்கையரிடம் சொல்லிக் கொள்ளாமல் ராகவன் அடுத்த மாதம் விசாகப்பட்டினத்திற்குத் தன்னந்தனியாக ரயில் 
றிவிட்டான்.
ஒரு மாதம் கழித்துக் கப்பற் பயிற்சியில் சேர அவருடைய சம்மதக் கையெழுத்துக்கு கடிதம் வந்த போது தான் அவன் விலாசம் தெரிந்தது. கடிதத்தை எடுத்துக் கொண்டு அவர் ஒய்.எம்.சி.ஏவுக்குப் போனார். ஜான்சன் அவருக்குத் தைரியம் தந்தார். ரங்கையர், ராகவன் பாதைக்குத் தடையாக இருக்க விரும்பவில்லை.
வருஷங்கள் ஐந்து ஓடி மறைந்தன.
தெருக்கதவைத் தள்ளித் திறந்து கொண்டு குடையும் கையுமாகத் தெப்பலாக நனைந்தவாறு நவகாளிநாராயண சாமியின் உருவம் உள்ளே நுழைந்தது.
“என்னடா நாணா இது.. இந்த மழையிலே?” என்று திடுக்கிட்டு எழுந்து அவரை வரவேற்றார் ரங்கையர்.
ஒரே பாய்ச்சலில் உள்ளே வந்தார் நவகாளி.
வயது ஐம்பத்தைந்துக்கு மேல். நெருப்பு மாதிரிச் சிவப்பு. நெட்டை, திடகாத்திரம், பெரிய காதுகள், வழுக்கைக்கு வழிவிட்டு அலையோடிய அமெரிக்கன் கிராப்பு, சுத்த நரை, ஆடைகள் எல்லாம் கதர், பிறைச்சந்திர வடிவத்தில் சந்தனக்கீற்று நெற்றியில் கரைந்து ஆறாக ஓடிற்று. கண்களில் தீர்மானமும் உயிர்ச் சக்தியும் ஆரத் தழுவும் அன்பும் மின்னத் தெறித்தன. கலகல வென்று வெண்கலக் குரல்.
“தலையைத் துவட்டுங்கோ மாமா!” என்று டவலைக் கொண்டு வந்தாள் ஜமுனா நவகாளியிடமிருந்து குடைய வாங்கினாள்.
“மகராஜியா இருக்குமா” என்று டவலை வாங்கியவர் “என்னடா ரங்கா... டர்க்கி டவலா... கதர்த்துண்டு கிடையாதா? கதரைக் கை கழுவிட்டயோ?” என்றார்.
“டேய் நாணா, ஆபத்துக்குப் பாபமில்லே. கதர்த்துண்டு தேடறதுக்குள்ளே ஜலதோஷம் பிடிச்சிடும். காந்திஜி மன்னிப்பார். தொடச்சுக்கோ” என்று கிண்டல் செய்தார் ரங்கையர்.
தலையைத் துவட்டிக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார் நவகாளி.
நவகாளி நாராயணசாமி, அலிப்பூரிலும் கடலூரிலும் ஏழெட்டு வருஷம் சுதந்திரப் போராட்டத்தில் சிறையிருந்தவர். தீவிர பிரம்மச்சாரி, காந்திஜியின் நவகாளி யாத்திரையில் உயிருக்குத் துணிந்து கலந்து கொண்டவர். நவகாளிப் பட்டம் அப்போது ஒட்டியதுதான். தியாகி நிலத்திலும் மான்யத்திலும் பாரத மாதா தேசிய பாடசாலை என்று ஒரு பள்ளி நடத்துகிறார். முஸ்லீம்களின் அத்யந்த நண்பர். அதே சமயம் ஹிந்துப் பண்டிகைகளையும் விழாக்களையும் ஆத்மீக ஈடுபாட்டோடு, ஊரில் பக்தி இயக்கம் பரவுகிற மாதிரி விமரிசையாகக் கொண்டாடுவார். பொது நிகழ்ச்சிகள் நவகாளி இல்லாமல் சோபிக்காது.
“நான் வந்துண்டே இருந்தேனா, வழியிலே ஒய்.எம்.சி.ஏ. ஜான்சன், அஞ்சுகை ராந்தல் பக்கமா ஒதுங்கிண்டிருந்தார். நான் ஒன்னண்டை வர்றேன்னு கேட்டுத் தெரிஞ்சுண்டு அவசியமா ஒன்னை ஒய்.எம்.சி.ஏ.வுக்கு மழை விட்டப்புறமா வரச் சொன்னார். நான் வரலேன்னா, அவரே வந்திருப்பாராம். விலாசம் தெரியாமே திணறினார்!” என்றார் நவகாளி.
“என்ன விஷயம்?”
“நான் கேட்டேன், ராகவன் சமாசாரம்னாரு. விவரமா சொல்லலே!”
“ராகவன் சமாசாரமா?” - ரங்கையருக்கு ஏனோ மனம் கலங்கிற்று.
அவசியமில்லாமல் அவர் கூப்பிட்டு அனுப்பமாட்டார் என்று அவர் உள்மனம் அரித்தது, என்னது?
திடீரென்று வானத்தில் ஓர் இடி இடித்தது. காது செவிடுபடும் அந்த ஓசையில் அவர் சற்று நடுங்கிவிட்டார்.