Sunday, 3 February 2013

ஜமுனா-14


14
“சின்னக் கொழந்தை மாதிரி பிடிவாதம் பண்ணினா எப்படி? மறுபடியும் மழை வர்றாப்பிலே வானம் மூடிண்டிருக்கு, நான் போடமாட்டேன்.”
“இதிலே பிடிவாதம் என்ன டீ... வயறு எரியறது. வேறே எதுவும் பிடிக்கல்லே. கொஞ்சம் தயவு பண்ணுடீ...”
“ரூம்லே ராஜா ஷேவ் பண்ணிண்டிருக்கான். ரொம்ப கொஞ்சாதேள். கேட்டா சிரிப்பான்.”
“இல்லேன்னா ஒன் பிடிவாதமும்... என் அடக்கமும் அவனுக்குத் தெரியாதாக்கும்?”
“அடக்கம்...அடடா... அப்பப்பா! எவ்வளவு அடக்கம்... காரியம் முடியணும்னா ஐஸா கரைவேள்!”
“இல்லேன்னா பந்தமா எரிவேனாக்கும்?”
“நீங்க பந்தமாகவும் எரிய வேணாம், ஐஸாவும் கரைய வேணாம். என்ன பல்டி அடிச்சுட்டாலும் நான் போட முடியாது.”
கீழுதட்டை மடித்தவாறு ரேஸரை பக்குவமாக சோப்பு நுரை வழிய இழுத்துக் கொண்டிருந்த ராஜாமணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவனுடைய தந்தை ஆனந்தராவுக்கும் தாய் கங்காபாய்க்கும் மத்தியில் இப்படி ஒரு விளையாட்டு அடிக்கடி நடக்கும். அந்த வயதான தம்பதிகள் மத்தியில் பிசிரில்லாத பந்தம் இருப்பதை, அந்தக் கொஞ்சலும், கோபமும் தெரிவிக்கும், மனம் ஈடுபட்டு அவன் ரசிப்பான்.
“என்னப்பா அது?” என்ற அறையிலிருந்தவாறே குரல் கொடுத்தான்.
“ஒண்ணுமில்லேடா” என்ற ஆனந்தராவின் குரல் தயங்கியவாறு வந்தது.
“ஒண்ணுமில்லையா? நான் சொல்றேன் கேளுடா ராஜா. இவ்வளவு குளுந்திருக்கு... காலையிலே பழையதக்கு தயிர் விட்டுண்டு, வடுமாங்காய் கடிச்சுண்டு சாப்பிடணுங்கிறார். ஏற்கனவே ஈர ஒடம்பு, ஊசியும் மருந்தும் இப்பத்தான் போயிட்டு வர்றேன்னு கிளம்பியிருக்கு, இதுக்குள்ளற பழையதைச் சாப்பிட்டு ஒடம்பைக் கெடுத்துண்டாத்தானே. டாக்டர் ஆத்துக்குப் போய் மணிக்கணக்கிலே அரட்டை அடிக்கலாம்.”
“டாக்டர் ரங்கநாதன்ட்டே கேட்டேன். அவர், பழையது, தயிர், வடுமாங்காயிலே எந்த வகையான அப்ஜெக்ஷனும் கிடையாதுன்னுட்டார்.”
“ஒங்க உடம்பு அவருக்கு என்ன தெரியும்?”
“அவர்கூட அதையே தான் டெய்லி சாப்பிடறாராம். இதோ பார் ஆனந்தராவ், இந்த இட்லி சாம்பார் மசால் தோசையிலே இருக்கறதெல்லாம் விட எஃபக்ட் அதுலேதான் இருக்குன்னார்.”
அறையில் இருந்தவாறே ராஜாமணி குறுக்கிட்டான்.
“பேசாம போடேம்மா... இவ்வளவு தூரம் அப்பாவைக் கெஞ்ச வைக்கறியே?”
“நீ சும்மா இருடா. நோக்கென்ன தெரியும்? அவஸ்தைப்படறவர் அவரா, டாக்டர் ரங்கநாதனா?”
“அடியே... அடியே... நீ பெரிய எம்.டி. மாதிரி பேசாதே டாக்டர் ரங்கநாதன் பெரிய ஜீனியஸ்...”
ஆனந்தராவுக்கு நாக்கு சாப்பிட்டு விட்டது.
“சரி... வேறே என்ன பண்ணியிருக்கப் போறே... ரவா உப்புமா தானே... விடிஞ்சா ரவா உப்புமா... பொழுது போன ரவா உப்புமா... ம்..ம்...ம்...”
மனம் விழுந்த மாதிரி அவர் பேசியது கங்காபாய்க்குப் பொறுக்கவில்லை. அதிகமாய்த்தான் அவரை ஆட்டிப் படைக்கிறோமோ என்று சுரத்து குறைந்தது.
“நேக்கென்ன வந்தது? நல்லதைச் சொன்னா கேக்க மாட்டேள். படறச்சே, நானும்னா சேர்ந்து அவஸ்தைப்படறேன். நாக்கை அடக்க மாட்டேள். பழையதையே கொண்டாறேன். திருப்தியா இருங்கோ.”
கங்காபாய் எப்போதும் கடைசியில் விட்டுக் கொடுத்து விடுவாள். இதுவும் ராஜாமணிக்குத் தெரிந்த சங்கதி தான்.
கூடத்திலிருந்து ஆனந்தராவ் குரல் கொடுத்தார்.
“ராஜா, ஷேவ் பண்ணிக்கிறியா?”
“ஆமாம்ப்பா...”
“குளிச்சிட்டு எங்கே போகப் போறே?”
“ஹர்த்தால் தமாஷ் பார்க்கலாம்னு இருக்கேன்.”
“நான் ஒரு கோழித் தூக்கம் போட்டுட்டு கடைக்கு வர்றேன்.”
அவருக்கு உடல் நிலை சரியில்லை. ஓய்வு தேவையென்று டாக்டர் சொன்னது ராஜாமணிக்குக் கவனம் வந்தது.
“நானே போறேம்பா. நீங்க ரெஸ்ட் எடுங்கோ!”
“இந்தாங்கோ, ஒங்க பழைய சாதம்” என்று கங்காபாய் வந்தது போட்டது. எதுவும் மனசில் ராஜாமணி. அப்பாவிடம் ஜமுனாவைப் பற்றிய பேச நினைத்த யோசனையைத் தள்ளிப் போட்டான். ஒரு பெண்ணால் முகத்துக்கு எதிரில் நிராகரிக்கப்பட்டு விட்ட சோகம் மனதிற்குள் இன்னும் பெரிய பளுவாகத் தங்கியிருந்தது.
கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான்.
‘இந்த மூக்கு... கண்... உதடுகள்... நண்பர்கள் வீட்டில்... ஹைஸ்கூலில்... எத்தனை பெண்கள் அவனிடம் பிரியமாய்ப் பேசுகிறார்கள். எங்கே போனாலும் அவனுக்கு ஒரு செல்ல மாப்பிள்ளை மாதிரி என்ன வரவேற்பு... எத்தனை பெண் உள்ளங்கள் அவன் மனசோடு ரகசியம் பேசத் துடித்தன.’
கண்ணாடியில் மீண்டும் முகத்தைப் பார்க்கத்தான்.
‘என்ன அகந்தை ஒனக்கு! நான் போய் நேரடியாக ஜமுனா மாதிரி ஒரு அபூர்வமாக அழகியைக் காதலிக்கிறேன் என்றதும், அவள் காலடியில் மயங்கி விழுந்துவிட வேண்டுமோ...? இது என்ன கொழுப்பு? அதற்காகத் தான் பிளேட் கூட ஷேவிங் செய்யும்போது வெட்டி விட்டது’ என்று நினைத்தான்.
மோகன் மாரி ஒருவனை நேசிப்பதற்குக் கூட அவளுக்கு முழு உரிமை உண்டு. அவனுக்குத் தெரிந்து எத்தனையோ பெண்கள் நம்ப முடியாத பேர் வழிகளிடம் காதல் கொண்டிருந்தார்கள். மோகனையும் ஜமுனாவையும் தன் மனசுதான் இணைத்துக் கொண்டதேயொழிய உண்மையில் அவர்கள் இருவருக்கும் மத்தியில் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கலாம். வெறும் அனுமானம். தனக்குக் கிடைத்த தோல்வியின் கசப்பிலிருந்து மனமே பழி வாங்குவது போல் குரூரமாகப் பிணைந்து விட்ட அனுமானம்...
ஜமுனா மாதிரி உன்னதமான பெண்ணாவது... மோகன் மாதிரி பேர் வழிகளை ஏறெடுத்துப் பார்ப்பதாவது?
“சீ... என்ன மனசு எனக்கு... சாக்கடை ஓடுகின்ற இந்த மனசுக்கு ஜமுனா எப்படிக் கிடைப்பாள்?”
ராஜாமணி ஷேவிங் செய்வதை மறந்து ஜன்னலுக்கு வெளியே இருண்டு கொண்டு வந்த வானத்தைப் பார்த்தான்.
“போஸ்ட்” என்று வெளியே கேசவலு நாயுடுவின் கனத்த சாரீரம் கேட்டது.
ராஜா என்று குரல் கொடுத்தார் ஆனந்தராவ்.
“ராஜாமணி சார்” என்று கேசவலு நாயுடு கூப்பிட்டார்.
“இதோ வர்றேன்” என்று சோப்பைக் காகிதத்தில் வழித்து ரேஸரைக் கழற்றிக் கோப்பையில் போட்டு விட்டு வெளியே போனான் ராஜாமணி.
“ஒங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் கவர்...”
பட்டை பட்டையாகத் திருநாமம். நெற்றி உச்சியில் நரையைக் கூடத் தொட்டிருந்து. கண்கள் குந்து சாலேஸ்திரக் கண்ணாடி வழியாகப் பயமுறுத்துவது போல் தெரிந்தன. ஸ்தூல சரீம். மூச்சு வாங்கிற்று. முதுமை.
“அப்பாவுக்கு தபால்.”
“ரிஜிஸ்டர் கவரா?” என்று யோசித்தவாறே ரசீதை வாங்கி போஸ்ட்மேன் நாயுடு தடித்த சிவப்புப் பேனாவினால் கையெழுத்திட்டான்.
தபால்களை வாங்கிக் கொண்டான். அவனுக்கு வந்த கவர், அலுவலகங்களில் பயன்படும்பெரிய பழுப்புக் கவர் மாதிரி இருந்தது. அனுப்பியவர் விலாசத்தைப் படிப்பதற்குள் நாயுடு குறுக்கிட்டார்.
“ராஜா சார். அப்பா இருக்காரா?”
“இருக்காங்க.”
“கூப்பிடுங்க...”
“சாப்பிடறார்.”
“அப்படியா?” அவர் திண்ணையில் உட்கார்ந்தார். பெரிய பூசணிப்பழம் பழுத்து உட்கார்ந்த மாதிரி இருந்தது. திருஷ்டிப் பரிகாரத்துக்கு நாமம் போட்டு வைத்த பூசணிப் பழம்.
“இதுதான் என்னுடைய கடைசி பட்டுவாடா-” நாயுடு சிரித்துக் கொண்டு சொல்ல முயன்றார். அந்தச் சிரிப்பில் அங்குமிங்கும் விழுந்துபோன பற்களின் காலியிடங்கள் தெரிந்தன.
“ஐஸீ... என்ன விஷயம் நாயுடு?”
“இன்னியோட நான் ரிடையராகிறேன்”
ஆனந்தராவ் அதற்குள் சாப்பிட்டு முடித்து விட்டுக் கைகளையும் வாயையும் துண்டில் ஒற்றிக் கொண்டே வெளியே வந்து விட்டார்.
“என்ன நாயுடு... சாவதானமா ஒக்காந்துட்டேள்?”
“இந்தாங்க தபால். நாயுடு இன்னியோடு ரிடையராகிறாராம்.”
தபாலை வாங்கிக் கொண்ட ஆனந்தராவ், “அப்படியா நாயுடு?” என்று ஆச்சரியத்தோடு நிமிர்ந்தார்.
“ஆமாம் ராயரே?” அதற்குள் நாயுடுவிற்குக் குரல் கம்மி விட்டது. சட்டென்று அவர் கண்களில் இறுக்கம் நெகிழ்ந்து கண்ணீர் தளதளவென்று இறங்கி விட்டது.
என்ன நாயுடு இது... சின்னப்பிள்ளை மாதிரி...?
ஆனந்தராவுக்கும் நெஞ்சு நெகிழ்ந்து விட்டது.
போஸ்ட் என்ற அந்த கனத்த சரீரம் இனிமேல் அந்த வீதியிலோ, வேறெங்குமோ காதில் விழப் போவதில்லை என்ற விஷயம் அவரையும் கலக்கி விட்டது.
“முப்பத்தஞ்சு வருசம் ராயரே... எல்லாம் விளையாட்டு மாதிரி முடிஞ்சு போச்சு. ஒங்க மாதிரி பெரியவா ஆசீர்வாதத்தாலே எந்த கம்ப்ளெயிண்டும் இல்லாமெ வண்டி ஓடிப்போச்சு. இந்த ஒரே பீட்லே பதினஞ்சு வருசம் வுட்டு வச்சாங்க. யாராரோ டக்கர் அடிச்சும் முடியல்லே. இது ஒண்ணு போறாதா எனக்க சரடிபிகேட்டு... மனசு தான் தாங்கல்ல... பாத்துப் பழகின மனுஷாளை சடுக்குன்னு விட்டுப் பிரியற மாதிரி இருக்கு.”
“இதென்ன பிரமாதம் நாயுடு... மனசை நீர் அலட்டிக்கப்படாது. நாங்களாம் எங்கே போயிடறோம் நீங்க போஸ்ட்டுன்னு வந்து நின்னாத்தான் பேசுவோம். இல்லேன்னா மொகத்தைத் திருப்பிக்குவோமா என்ன? ராஜாமணி உள்ளே போய் அம்மாவைக் காப்பி தரச் சொல்லு என்று ஆனந்தராவ் தாமே உள்ளே எழுந்து போனார்.
பீரோவில் சுப்பண்ணாவுக்கு புது வருஷத்துக்காக எடுத்துக் கொடுக்கத் தவறி விட்ட வேஷ்டித் துண்டு இருப்பது ஞாபகம் வந்தது. எழுந்து போய் பீரோவைத் திறந்து அவற்றை எடுத்துக் கொண்டு, நூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கட்டிலிருந்து உருவி எடுத்தவாறு திரும்பி வந்தார்.
நாயுடு எப்பேர்ப்பட்டவர்! துக்கத்தை ஹாஸ்யமாக்கி விடுவார். துன்பத்தை லகுவாக்கி சேர்ந்து விழுகின்ற மனதைத் தூக்கி தோளில் ஏற்றி நிமிர்த்துவார். ஒவ்வொரு வீட்டின் குடும்ப சங்கதியும் அவருக்கு மனப்பாடம்.
அம்மா கொடுத்த காப்பியோடு வந்தான் ராஜாமணி.
ஆனந்தராவ் மேலே சுற்றியிருந்த கண்ணாடிக் காகிதம் மொரமொரக்க வேஷ்டியையும் துண்டையும் நீட்டினார். ரூபாய் நோட்டை உள்ளே செருகியிருந்தார்.
அந்த சன்மானத்தை வாங்கும்போது குழந்தை மாதிரி வெடித்து அழுது விட்டார் நாயுடு.
நாயுடுவின் குலுங்கும் முதுகை ஒரு கையால் அணைத்துக் கொண்டார் ஆனந்தராவ்.
நாயுடுவையும் அப்பாவையும் விட்டு விட்டு ராஜாமணி ஆவலோடு ரிஜிஸ்டர் கவரைப் பிரித்தான்.
ஐ.எஃப்.எஸ் விண்ணப்ப பாரம். சோமையா அனுப்பியிருந்தார். கூட ஒரு கடிதம். அவன் விறுவிறுவென்று கண்களை ஓட்டினான். அவரது வாழ்த்துக்களைச் சொல்லியிருந்தார். ஒரு மாதம் ஊட்டியில் கழிக்க அவனைக் கூப்பிட்டிருந்தார். கோடை விடுமுறையைக் கழிக்க டேராடூன் பாரஸ்ட் காலேஜ் புரொபசர்கள் எல்லாம் வருகிறார்கள். ஃபாரஸ்ட்ரியைப் பற்றித் தெரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பமாம்.
ராஜாமணிக்கு உள்ளம் பொங்கி வழிந்தது.
“அப்பா... அப்பா... டி.எஃப்.ஓ. சோமையா லெட்டர் போட்டியிருக்கார். ஐ.ஃப்.ஓ. அப்ளிகேஷன் அனுப்பியிருக்கார். ஊட்டிக்கு ஒரு மாசம் வரச் சொல்லி இன்வைட் பண்ணியிருக்கார்.”
அவன் குரலில் துள்ளிய களிப்பிற்கு எதிரொலி இல்லை. கங்காபாய் ஆனந்தராவைப் பார்த்தாள். அவர் அவளைப் பார்த்தார். அந்த இரு முகங்களிலும் ஒரு வாட்டம் பரஸ்பரம் பரிமாறப்பட்டது. அப்போது மீண்டும் மழை ஆரம்பமாயிற்று.

No comments:

Post a Comment