Saturday, 2 February 2013

ஜமுனா-13


13
கல்யாணம் முடிந்து தெருவை அடைத்துப் போட்டிருந்த பந்தலைப் பிரித்த மாதிரி வெளிவாங்கிற்று வானம். மாலை மணி மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது.
நாளைக்கும் பாக்கி வைத்திருப்பது போல் மந்தமாகக் காய்ந்த வெய்யிலைப் பார்த்து விட்டு ஈரத் துணிகளை இப்போதே ஆறப்போட வேசண்டியது தான் என்று உள்ளே வந்தாள் ஜமுனா.
ரங்கையர் ஒய்.எம்.சி.ஏ.வுக்குப் போய் இருந்தார். அப்பாவின் அங்கவஸ்திரமும் குடையும் கயிற்றில் தொங்குவதைப் பார்த்தும் எவ்வளவு தைரியமாகத்தான் பேசி விட்டோம் என்று ஞாபகம் வந்து அவளுக்கு மனம் நலிந்தது. என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று பிரமித்தாள்.
நவகாளி, ராமநவமிக்கு பிரசங்கியை ஏற்பாடு செய்வதற்காக மட்டும் அங்கே வரவில்லை. ஜமுனாவுக்கு வரன் ஒன்று கிடைத்திருப்பதைப் பற்றித் தெரிவிக்கத்தான் வந்திருந்தார். ரங்கையர் ஜமுனாவின் ஜாதகத்தை ஏற்கெனவே அவரிடம் கொடுத்திருந்தது ஜமுனாவுக்கு தெரியாது.
திவ்யமான பொருத்தம் என்ற ஜோஸ்யர் சிலாகித்ததாக ஆரம்பித்து வரனுடைய போட்டோவைக் கொடுத்தார். முப்பத்தைந்து வயது. சிலுப்பிக் கொண்டு நின்ற சுருட்டை முடி, ஸ்பெக்ஸ் வழியாக தப்புக் கண்டு பிடித்த மாதிரிப் பார்க்கும் ஒரு பார்வை. பெரிய உதடுகளில் கர்வப்புன்னகை. சிவராமகிருஷ்ணன் பி.எஸ்.ஸி., ஆடிட்டர் வேலை. ஏழாயிரத்துச் சொச்சம் சம்பளம். பெண் அழகாய் இருந்தால் போதுமாம். வரதட்சிணை வேண்டாமாம்.
நவகாளி அந்த விவாகத்தை நடத்தியே வைப்பது என்ற தோரணையில் பேசத் தொடங்கினார். ஒரு மணிக்கு சாப்பாடு முடிந்தது. முதல் ஈடு மழை இடைவேளை விட்ட மாதிரி சற்றுத் தணிந்த போது மீண்டும் ரங்கையரை முடுக்கி விட்டுத்தான் குடையோடு கிளம்பினார்.
அவர் போய் மழை மறுபாட்டம் ஆரம்பித்தபோது, ரங்கையர் ஜமுனாவிடம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்:
“போட்டோவைப் பார்த்தியாமா?”
“பார்த்தேம்பா.”
“பிடிக்கிறதா?”
“.........”
பதில் வராததைக் கண்டு ரங்கையர் தாம் ஒரு தரம் போட்டோவைப் பார்த்துக் கொண்டார். அவருக்குப் பிடிக்கவில்லை. நவகாளிக்கு தன் குடும்பத்திலிருந்து ஈடுபாடு அவருக்கு ஞாபகம் வந்தது. போட்டோக்கள் பொய் சொல்வதை அவர் அறிந்திருக்கிறார். நவகாளி ஈடுபட்டுச் செய்யும் முயற்சியை நம்ப வேண்டும் என்ற மனசின் உட்குரல் சொல்லிற்று. இன்னும் எத்தனை நாள் ஜமுனா காத்திருப்பாள்?
“என்னம்மா?”
ஜமுனா மௌனமாயிருந்தான். மழை வெளியே பலக்கப் பிடித்துக் கொண்டது. அந்தக் கேள்விக்கு அவள் பதில் சொல்லியாக வேண்டும். உண்மைகளை உடைத்துச் சொல்ல வேண்டிய தருணம், இவ்வளவு துரிதமாகச் சற்றும் எதிர்பாராத ஒரு வேகத்தில் உருவாகி விட்டது தான், அவள் வாயை அடைத்து விட்டது.
“பிடிக்கலையா?”
“அப்பா...அப்பா... உங்கள் முகத்தைத் தொங்க வைக்கப் போகும் பதிலை வைத்திருக்கிறேனே... இதைக் கேட்டு நீங்கள் எப்படித் திடுக்கிடுவேள்... என்ன செய்றது? இப்படி நேர்ந்து விட்டது. எந்தத் தப்பும் நடக்கலே. இருந்தாலும் மனசு திருடு போய் விட்டது. என் ஜாக்கிரதையை மீறி, என் கண்டிப்பை மீறி. நீங்க எப்படிப்பா தாங்குவேள்?” மனசு மறுகிற்று.
“மனசு விட்டுச் சொல்லம்மா...”
அவள் தன்னைத் தயார் செய்து கொண்டாள்.
“இப்ப எனக்குக் கல்யாணம் வேண்டாம்பா.”
மனசுக்குப் பிடிக்கவில்லையென்றால், ஜமுனா வெளிப்படையாகச் சொல்லி விடுவாள். இந்தப் பதில் வேறு மாதிரி இருக்கவே அவர் திடுக்கிட்டார். அவள் குரலும் வேறு மாதிரி இருந்தது.
“அப்படீன்னா...”
அதை அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கே நேரிட்டதை அவளால் தாள முடியவில்லை. தன் மனசை அவரிடம் தெரிவிக்க ஒருத்தர் இருந்திருந்தால்? அண்ணா ராகவன்? ஊஹும். அம்மா... அம்மா இருந்திருந்தால்... ஜமுனா வசமிழந்து விட்டாள். திடீரென்று துக்கம் பொங்கிற்று. விசித்து விசித்து அழத் தொடங்கினாள்.
“ஜமுனா... ஜமுனா... என்னம்மா?” - அவளைத் தேற்றுவதற்காக எழுந்த ரங்கையர், ஏதோ ஒரு அச்சம் தடுக்க அப்படியே நின்று விட்டார்.
ஜமுனா தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள். மழை வெளியே விளாசிற்று.
இப்போது இதை விட்டு விடலாம் என்று நினைத்தார் ரங்கையர். ஆனால் இது ஏதோ அபாயக் குறி என்று அவருக்குள் ஓர் உணர்வு துணுக்கென்றது.
“ஏம்மா... அழறே... என்ன நடந்துடுத்து? பிடிக்கலேன்னா வாண்டாம்!”
அவள் அழுகை தணிகிறவரை அவர் காத்திருந்தார். ஜமுனா முழங்காலிட்டு அதன் மீது முகத்தைக் கவிழ்த்துக் 
கொண்டிருந்தாள். முதுகு விம்மி விம்மித் தணிந்தது. மழை ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
மழையும் அழுகையும் தணிகிறவரை அவர் காத்திருந்தார்.
திகிலும் அரைகுறைச் சந்தேகங்களும், தாயற்று வளர்ந்த மகளின் வாடிக் கொண்டு வரும் பருவமும், காலா காலத்தில் அவளது கடமையை நிறைவேற்றாத கையறு நிலையும் அவரது நெஞ்சைப் பின்னின. ரங்கையர் துன்பத்தை மௌனமாகத் தாங்குவது போல் கண்களை மூடிக் கொண்டார்.
வழிந்த கண்ணீரோடு அவரை நிமிர்ந்து பார்த்த ஜமுனா ரங்கையரின் மூடிய கண்களைக் கண்டதும், தைரியமிழந்து மீண்டும் முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டாள்.
“ஜமுனா...” அவர் குரல் கரகரத்தது.
“.......”
“என்னண்டே சத்தியமா இரும்மா.”
“ஏம்மா இப்படி அழறே? நோக்கு வேற அபிப்ராயம் இருக்கா...?” அதைக் கேட்கும் போது அவர் குரல் நடுங்கிற்று.
“........”
“வேற யாரையோ மனசுலே நெனச்சண்டிருக்கியா?”
அவள் பதில் முழங்காலின் மேல் பதிந்திருந்த தலை அசைவின் மூலம் வெளிப்பட்டது.
“யாரது?” - ரங்கையரின் தந்தை உள்ளம் திடீரென்று நிலை தாழ்ந்தது போல ஹீனமுற்றது.
“மோகன்... எதிர்த்தாத்து மோகன்.”
“பழக்கம் உண்டோ?”
“ம்...ம்...ம்”
“எத்தனை நாளா?”
“ஆறு மாசமா”
மழை அப்போது நின்றது. ஓங்காரம் அடங்கி பிசுகிசுவென்ற தூரல்கள் விழுந்து கொண்டிருந்தன. வெளியே சாக்கடை வெள்ளம் ஓடுவதையும், தெருவில் பேச்சுக் குரல்கள் ஈசலாய்க் கிளம்பியதையும், கேட்டுக் கொண்டு மரக் கட்டை மாதிரி உட்கார்ந்திருந்தார் ரங்கையர்.
அவரது பெருமை சீலம், ஞானம், மகள் மீது வைத்திருந்த பாசம், அவர் போற்றிய தர்மம் எல்லாம் உருண்டு உடைந்து சாக்கடை வெள்ளமாக ஓடிப்போக, தான் மட்டும் வெறிச்சிட்டு நிற்பதாக உணர்ந்தார்.
மோகனை அவருக்குத் தெரியும். ஓட்டலில் அக்கவுண்ட் வைத்திருந்தான். எப்போதும் சிகரெட்டும் கையுமாக அலைவான். கிளப்பில் சூதாடுவதாகவும், வேறு என்ன என்னவோ சகவாசங்கள் உண்டென்றும் கேள்விப்பட்டிருக்கிறார். அவனுக்கு ஓட்டலில் ஒருநாள் சாம்பார் பரிமாறும்போது, மது நாற்றம் கூட வந்தது. சரளமாக அவன் மராட்டி பேசினான், நிச்சயம் அவள் ஐயராக இருக்க முடியாது.
அவர் சிலை போல் உட்கார்ந்திருந்தார். அவரது முழு வாழ்க்கையும் அவர் முன் ஒரு கேள்விக் குறியாயிற்று. ‘கடாம்பி’ நாராயணதாஸர்... நவகாளி நாராயணசாமி... ஸ்மிருதிகளிலும் பிரமாணங்களிலும் மூச்சு விடாமல் தர்க்கம் செய்யும் வைத்தியநாத ஐயர்... சங்க மடத்துக் காரியஸ்தர்கள்...ஆனந்தராவ்... ஆனந்தபவன் சகாக்கள்... வாடிக்கைக்காரர்கள்... எவ்வளவு பெரிய வட்டம்.
அவர் தலை சுழன்றது.
‘என்ன வாழ்க்கை வாழ்ந்து விட்டு இந்த சங்கதியைக் கேட்க இன்னும் உயிர் இருக்கிறதே!’
“ஜம்னா... ஒன்னை எவ்வளவு ஆசாரத்தோடு வளர்த்தேன். ஒன் புத்தியை எவ்வளவு மேலான விஷயங்களிலே செலுத்தினேன்... இவ்வளவு கீழ்த்தரத்துக்கு ஒன்னை எந்தப் பிசாசும்மா சேர்த்துட்டது?”
- அவர் மௌனமாகக் குமுறினார். ஜமுனாவின் தலை நிமிரவேயில்லை.
“இது ஏன் நேர்ந்தது... எப்படி நேர்ந்தது” என்று கேள்விகள் அவர் மனசில் சம்மட்டி கொண்டு தாக்கின.
வெகுநேரம் கழித்து அவர் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு பேசினார்.
“இது நடக்காது ஜம்னா... அவன் ஒரு நீசன்... நோக்குத் தெரியாது... அவனுக்கு எத்தனையோ துர்ச்சகவாசம் பழக்கம் உண்டு.”
“நேக்கு எல்லாம் தெரியும்பா.”
அந்தப் பதில் அவரை மேலும் திணற அடித்தது.
“தெரிஞ்சுமா? நோக்கென்ன பைத்தியமா...?”
“அவர் ஒரு கட்டுப்பாடில்லாதவர் தாம்பா... ஆனா அவரை அடக்கி நேர் பண்ணினா ரொம்ப உயர்ந்த மனுஷரா ஆயிடுவார்!”
“அவர்... சீ!” ரங்கையருக்கு குமட்டிற்று. அவள் குரலில் தெரிந்த தீர்மானமும், அவனை அளந்து வைத்திருப்பது போல் அவள் பேசுவதும் நெருப்பாய்த் தகித்தது. தன்னை மறந்த மூர்க்கம் பிறந்தது.
“என் உயிர் இருக்கிறவரைக்கும் அது நடக்காது ஜம்னா.” அந்த விஷயத்துக்கு மறு தீர்மானமே இல்லாதது போல் தீர்க்கமாக முடிவு கட்டிய மாதிரி, அவர் குரலில் வைரம் பாய்ந்திருந்தது.
“அப்பா...” என்று அதிர்ந்து போய்க் கேவினாள் ஜமுனா.
“நானும்... என் மனசும்... நேக்கும் அதே மாதிரி...!”
அவள் விம்மினாள்.
“போறும் நிறுத்து! நோக்கு விவாகமே ஆகாமே நீ கன்னியாவே இருந்துட்டாலும் சரி... இது ஒண்ணு மட்டும் நடக்காது!”
ரங்கையர், போட்ட சட்டையோடு அங்கவஸ்திரம் கூட இல்லாமல் குடையைக் கூட மறந்து, வெளியே புறப்பட்டு விட்டார்.
‘நானும் அவர் மகள் தான்’ என்று சொல்லிக் கொண்டு அவள் வீட்டு வேலைகளைக் கவனிக்க எழுந்தாள். நிறைந்திருந்த குடங்களில், மிஞ்சிய மழைத்துளி முகட்டிலிருந்து சிதறி வட்டம் போட்டது.
“ப்பாய்ங்... ப்பாய்ங்” என்ற ஐஸ் வண்டிக்காரன் வெளியேயிருந்து ஹாரன் அடித்தான். அவனிடம் மத்தியானத்தில் ஒன்றில் இரண்டில் ஜமுனா பால் ஐஸ் வாங்குவாள்.
“வேண்டாம்பா... இந்த மழையில் ஐஸ் எதுக்கு?”
“ஹர்த்தால் ஆச்சேன்னு ஏகமா சரக் போட்டேன். வியாபாரமே ஆகலேம்மா, மழை மோசம் பண்ணிடுச்சி” - அவன் பெருமூச்சு விட்டான்.
“அப்படியா... சரி... எனக்கு வழக்கமாகக் கொடுக்கற பால் ஐஸைக் குடு.”
ஐஸைக் கொடுத்து விட்டு வண்டிக்காரன் தெருக் கோடியில் மறைந்தான்.
“இந்த மழையிலே ஐஸா?” என்று ஒரு குரல் கேட்டது.
அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். ‘மோகன்!’ பனியனோடு நின்று கொண்டிருந்தான். பொறுப்பற்ற ஷோக் பேர்வழியைப் போல் அவன் சிரித்தான்.
அவள் பார்வையில் ஏதோ ஆழம் தட்டுப்பட்டது போல் அவன் சிரிப்பு மறைந்தது. அவன், தெருவில் வலமும் இடமும் திரும்பிப் பார்த்து விட்டு, போஸ்ட் என்றான். அது அவர்கள் மத்தியில் ஒரு சங்கேதம். தபால் அனுப்புகிறேன் என்று அர்த்தம்.
ஜமுனா அவனைப் பார்த்து நெடுமூச்செறிந்து உள்ளே திரும்பினாள். மோகன் இப்போது ஏதாவது ஒரு புத்தகத்தில் சீட்டை மறைத்து அனுப்புவான். அதைக் கொண்டு வரும் பொடியனிடம் ஐஸைக் கொடுத்து விடலாம் என்று ஒரு டம்ளரில் அதைப் போடத் திரும்பினாள்.
“அக்கா... மோகன் மாமாட்டே பொஸ்தகம் கேட்டியாமே!” என்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் அரை நிஜார் சுந்தரம்.
அவன் போன பிறகு ஜமுனா புத்தகத்தைத் திறந்து கடிதத்தை எடுத்துப் பிரித்தாள்.
“அன்புள்ள ஜமுனா,
இனிமேல் நான் இங்கிருக்க முடியாது. நம் விஷயம் எல்லாருக்கும் தெரிந்து விட்டது. என்னைத் தாகுவதற்குத் திட்டம் தீட்டுகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து. எனவே இன்று இரவு புளூமவுண்டன் எக்ஸ்பிரஸில் நாம் இருவரும் புறப்படுகிறோம். புறப்படுவாய் அல்லவா? உன்னை நம்பி ஏற்பாடு செய்யலாமா?
உயிரில் பிரிவதாய் இருந்தாலும் அது உன்னோடு பிரிய வேண்டும் என்று துடிக்கிறேன். உன் சம்மதத்தை தெரிவிக்க உங்கள் வீட்டுக் கொடிக் கம்பியின் மீது உன் பச்சை ஜாக்கெட்டைக் காயப்போடு.
துணிமணிகளையும், முடிந்த அளவு ரொக்கத்தையும் எடுத்து ஒரு பெட்டியில் போட்டு வைத்திருக்கவும். ஒரு கூலியான அனுப்புகிறேன். அவன் தலையில் பெட்டியை வைத்துவிடவும். தெருத் திருப்பத்தில் நான் டாக்ஸியுடன் காத்திருக்கிறேன். மற்றவை நேரில்.
உன்,
மோகன்
“எவ்வளவு துரிதமாக விஷயங்கள் ஓடி வருகின்றன! ஏன் இந்த வேகம்? என்ன செய்வது... அப்பா... அப்பா...”
வெகுநேரம் திக்பிரமை பிடித்தது போல் நின்றாள் ஜமுனாபிறகு அந்தக் கடிதத்தைப் புத்தகத்தினுள் வைத்து விட்டு அவள் உள்ளே போனாள்.
அரை மணி நேரம் கழித்து அந்த வீட்டுக் கொடிக் கம்பியில் அவளது பச்சை ஜாக்கெட் உலர்ந்து கொண்டிருந்தது.

No comments:

Post a Comment