Saturday, 2 February 2013

ஜமுனா-12


12
வேதாந்த கீதம் புருஷம் பஜேஹம்
ஆத்மானம் ஆனந்தகனம் ஹ்ருதிஸ்தம்
கஜானனம் யம்ஸ்ரீமகசா ஜனானாம்
மகாநதகாரோ விலயம் பிரயாதி:
கூடத்தை ஒட்டிய வடக்குப் பார்த்த அறையிலிருந்து ரங்கையரின் கம்பீர தொனி, நாத ஜங்காரத்தோடு வந்தது. அறைக்கு வெளியே கூடத்தில் சிறிய துண்டுப் பாயின் மீது அமர்ந்து, ஜமுனா பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள்.
ரங்கையரின் ஸ்லோகங்கள் கரவில்லாத இருதயத்திலிருந்து வருவது போல், ஆன்ம லயத்தின் சங்கீதமாய் ஒரு நதியின் கம்பீர கதியாய் ஒலித்தன. இது சாரதா திலகத்தில் வரும் கணேச ஸ்துதி என்று புரிந்து கொண்டாள் ஜமுனா.
வாசலில் மழை திடீரென்று பலத்தது. கொட்டி முழக்கப் போகிறேன் என்று அச்சுறுத்துவது போல் ஆரம்பித்துச் சட்டென்று குறைந்தது. சாரல் தெறிக்கவே ஜமுனா எழுந்து பாயையும் தாம்பாளத்தையும் நகர்த்திக் கொண்டு, சற்று உள் தள்ளி உட்கார்ந்தாள். சட்டென்று தாழ்ந்த மழை, ஓரிரு விநாடியில் கிறுகிறுவென்று உயர்ந்தது. மீண்டும் ஒரு தணிவு.
நடையில் மாட்டியிருந்த பழங்காலத்து அறுகோண ஜப்பான் கடிகாரம் டங்டங் கென்ற நிறுத்தி நிறுத்தி ஒரு நிதானத்தோடு பத்து மணி அடித்தது.
மீண்டும் ரங்கையரின் குரல் சங்க நாதம் போல் உள்ளிருந்து வந்தது.
ஈஸா வாஸ்யம் இதம் சர்வம்
யத் கிம் ச ஜத்யரம் ஜகத்
தென தியக்தென புஞ்சீதா
மா கிருதஹ் கஸ்ய ஸ்வித்-தனம்
ரங்கையர் ஸ்லோகம் சொல்வதை நிறுத்தி விட்டு கொழந்தே “ஜம்னா...” என்று அழைத்தார். அந்த அழைப்பில் வாஞ்சை குழைந்தது.
“என்ன அப்பா?”
“இப்ப சொன்னேனே, அந்த ஸ்லோகத்தைக் கேட்டியோ?”
“கேட்டேம்பா...”
“எதிலே வர்றது சொல்லு பார்ப்போம்.”
“ஈசோபநிஷத்திலே மொதல் ஸ்லோகம்.”
“பேஷ்! அர்த்தம்?”
“அசையும் ஜகத்திலுள்ள ஒவ்வோர் அசையும் பொருளிலும் ஈஸ்வரன் நிரம்பி இருக்கார். இந்தப் பொருள்களின் மேலே இருக்கற பற்றை விடுவதன் மூலம் தான், நீ சுகம் பெறுவது சாத்தியம். பிறத்தியார் எவருடைய செல்வத்திலும் ஆசை வைக்காதே...”
ரங்கையர், உள்ளே இடப்புறம் ஸ்ரீராமச்சந்திரனும் வலப்புறம் கிருஷ்ண பகவானும் அவற்றின் கீழே ஸ்ரீராம கிருஷ்ணருமாகக் காட்சியளித்த படங்களின் அடியில் மான் தோல் மீது உட்கார்ந்தவாறு பேசினார்.
“இந்த ஸ்லோகத்தின் மேலே காந்திக்கு அபாரப் பிரமை தெரியுமோ?”
“அப்படியாப்பா...?”
“ஆமாம், திடீர்னு ஒரு வேளைலே எல்லா வேதங்களும் உபநிஷத்துகளும் வெந்து சாம்பலாகப் போயிட்டாலும் ஈசோபநிஷத்தின் இந்த மொதல் லோகம் மட்டும் மிஞ்சினா. அது ஒவ்வொரு ஹிந்துவினுடைய நினைவிலே நீங்காமே நின்னுடும்ன்னா, ஹிந்து மதம் அழியாமே என்னிக்கும் வாழும்னு சொல்லியிருக்கிறார்!”
“சத்திய வாக்குதான்.”
ஜமுனாவின் பதில் ரங்கையருக்குப் புளகத்தை ஏற்படுத்திற்று. மெதுவாகப் புன்னகை செய்து கொண்டார். தந்தையின் ஞானம் மகளிடம் சிந்தியிருப்பது பெருமை தந்தது.
விளையாட்டுப் போக்கு மறைந்து மழை சோவென்று பலக்கப் பிடித்துக் கொண்டது. ரங்கையர் மான் தோலிலிருந்து எழுந்து ஒரு தரம் கைகூப்பி நமஸ்கரித்து விட்டுக் கதவோரமாகப் போட்டிருந்த ஸ்டூலின் மீது வந்து உட்கார்ந்தார்.
மகளோடு பேச வேண்டுமென்ற ஆவல், மழையின் இரைச்சலைப் பொருட்படுத்தவில்லை. அவர் வந்து உட்கார்ந்தும் ரங்கையரின் மனப்போக்கு புரிந்து ஜமுனா அவரை நிமிர்ந்து பார்த்துப் புன்னகை செய்தாள்.
“இந்த வருஷத்தில் நீங்க காத்தாலே பத்து மணிக்கு வீட்டிலே இருக்கிறது இதான் இரண்டாவது தடவை காலையிலே இருந்து நீங்க ஓட்டலுக்குப் போகலே.”
“மொதல் தடவை எப்போ?”
“வைகாசியிலே ராகவன் வந்திருந்தானே, அன்னிக்குக் காலையிலே நீங்க ஓட்டலுக்குப் போகலே!”
“அவர் வீட்டில் தங்குவதை ஜமனா எவ்வளவு ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறாள்’ என்று எண்ணி ரங்கையர் மெதுவாகச் சிரித்துவிட்டு மழையைப் பார்த்தார். பகலில் வீட்டில் தங்கும் அனுபவம் இதமாகத்தான் இருந்தது.
“பாவம்...! ஹர்த்தால்காராளுக்குப் பெரிய ஏமாற்றம்!”
“ஏம்பா?”
“அவங்க ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த விடாமே மழையே ஆர்ப்பாட்டம் நடத்திண்டிருக்கே!”
ஜமுனா தட்டிலிருந்த முல்லைப் பூக்களை கிளறிக் கொடுத்தாள்.
ரங்கையரின் தந்தை உள்ளம் நெகிழ்ந்து பூரித்தது.
“இவள் வயசுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆகப்போறது. இன்னும் சரியான வரன் தகையலே. வரதட்சணை... வரதட்சணைன்னு ஓநாயா அலையற கும்பல் தான் வந்துண்டிருக்கு. இந்தச் சௌந்தர்யம்... இந்த ஞானம்... இந்தப் புத்திச் சாதுர்யம் எதுவும் எந்த யோக்கியவான் கண்ணிலும் படல்லே... இருக்கட்டும். விதி எப்படியோ லபி அப்படி... எவனோ ஒருத்தன் இவளுக்குன்னு பொறந்திருக்கான். இந்தப் புஷ்பம் பரிபூரணமா பூத்து மலர்ந்திருக்கிற இந்த வேளைக்கு வருவானோ... இன்னம் தாமதிச்சு வருவானோ... நம்ம பிரயத்தனம் எல்லாம் விரயமாயிண்டே போறதப் பார்த்தா பகவத் சங்கல்பம் ஏதோ இருக்குன்னு தோணறது...’ என்று நினைத்தவாறு தமக்குள் பீறிட்ட பெருமூச்சை ஸ்வரம் குறைந்து மௌனப்படுத்தினர் ரங்கையர்.
வெளியே நிலையாகப் பெய்த மழையில் திடீரென்று ஒரு மாறுதல். படபடவென்று சிறிய தவளைக்குஞ்சுகள், கூடத்திலும் வாசலிலும் தாவுவது போல ஆலங்கட்டிகள் சிதறித் தெறித்தன.
“அப்பா... அப்பா... ஆலங்கட்டி விழறதுப்பா” என்று மகிழ்ச்சியோடு கூவினாள் ஜமுனா.
சிறிதும் பெரிதுமாக வாசலில் தெறித்து வீழ்ந்த ஆலங்கட்டிகள் வந்த விசையில் தரையில் மோதி இன்னொரு துள்ளுத்துள்ளின. தன்னை மறந்து கைகொட்டிச் சிரித்தாள் ஜமுனா.
அந்த ஆச்சரியமும் குதூகலமும் அவள் முகத்தில் பளீரென்று விகசித்தன. ரங்கையர் புன்னகையோடு அவளைப் பார்த்தார். ஒரு குழந்தை மாதிரி வினோதங்களையும் ஆனந்தத்தையும் வாங்கிக் கொள்ளும் ஜமுனாவின் உள்ளம் அவரைக் கிளர்ச்சியுறச் செய்தது.
வாசல் தரையில் விழும் ஆலங்கட்டிகளின் விளையாட்டை ரசிக்கத் தொடங்கினார்.
“ஒங்களுக்கு ஒண்ணு ஞாபகம் வர்றதாப்பா?”
“என்னது கொழந்தே?”
“நானும் ராகவனும் அப்போ ரொம்ப சின்னவங்களாயிருந்தோம். இந்த மாதிரி ஆலங்கட்டி மழை பெய்தது. அதை சீசாவிலே போட்டு எடுத்து வச்சா, தேள் கடிக்கு நல்லதுன்னு பள்ளிக்கூடத்திலே பிள்ளைகள் சொல்றதைக் கேட்டு நம்பிண்டு. ஒரு சீசாவை எடுத்துண்டு ராகவன் அவசரமா ஓடி வந்தான். கால் சறுக்கிப் போதேர்னு வாசல்லே வெள்ளமா நின்னுருந்த மழை ஜலத்திலே விழுந்துட்டான். நீங்க ஓடி வந்து அவனைத் தூக்கினேன். தலையிலே அவனுக்கு நல்ல அடி!”
ஜமுனாவின் ஞாபக சக்தி எவ்வளவு கூர்மையானது என்று தமக்குள் வியந்து கொண்டார்.
ஜமுனா திடீரென்று அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள்.
“சமுத்திரத்திலே கப்பலிலே போகறச்சே கூட, கனமா மழை பெய்யும் இல்லேப்பா?”
“ஏன் பெய்யாது...? மழைக்கு இடமா, காலமா?”
“சமுத்திரம் அப்போ பெரிசா குமுறுமாமே?”
“இருக்கும்”
“பெரிய புயல், சூறாவளிகூட வருமோல்லியோ?”
“வரலாம்.”
தூர தேசங்களின் சமுத்திர வெளிகளில் இரவு பகல் பேதமின்றிப் புயலும் அலைகளும் போராடும் சூழ்நிலைகளில் ராகவனை வைத்து நினைக்க அவரது தந்தை உள்ளம் சங்கடப்பட்டது. ஜமுனா மேற்கொண்டு பேசாமல் ஏதோ மனோ நிலையில் மௌனமானாள்.
ஆலங்கட்டிகள் டப் டப் பென்று தெறித்துத் தெறித்து விழுந்தன.
ரங்கையரை ராகவன் நினைவு தாக்கி வருத்தத் தொடங்கிற்று.
பால்யத்திலிருந்தே ராகவன் அவருக்கு ஒரு கவலை. எவ்வளவு உயரமான மரமாக இருந்தாலும் விறுவிறுவென்று ஏறிவிடுவது. ஏரியில் நீர் ததும்பும் காலத்தில்குதித்து நீந்துவது, சைக்கிள் ரேஸ் விடுவது என்று எப்போதும் சாகசத்துக்கே துடித்துக் கொண்டு நிற்பான். முனிசிபல் ஹைஸ்கூலில் படிக்கும்போது, முக்கியமான வாலிபால் ப்ளேயர். ஸ்போர்ட்ஸிலும் எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான்.
ராகவனின் உடம்பில் ஹனுமத் பிரசன்னம் இருப்பதாக ரங்கையர் கணக்கிட்டார். ராகவனுக்கும் ஆஞ்சநேயர் என்றால் பரம பக்தி. தினசரி கடைத் தெருவில் இருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போய் விட்டு வருவான். ஒன்பதாவதுக்கு மேல் அவனுடைய அடங்காத இளமைத் துடிப்பைப் பற்றிக் கவலை ஏற்படவே அவனை ஒய்.எம்.சி.ஏ. மாணவர் ஹாஸ்டலில் சேர்த்து விட்டார் ரங்கையர்.
ஒய்.எம்.சி.ஏ. அவனுடைய கட்டுப்பாடற்ற சக்திப் பெருக்கைச் சாணை தீட்டி வைரமாக்கிற்று. நிர்வாகி ஜான்ஸன் அவனை நெறிப்படுத்தினார். ஸ்காட்லாந்திலிருந்து கடல் கடந்து வந்து அந்தச் சிற்றூரின் மாணவர் குலத்தில் தன்னை அடையாளம் கண்டு கொண்ட அவரது பரந்த இதயம் ராகவனின் மன வரம்புகளை விஸ்தரித்தது.
கடல் கடந்து சென்று தேசங்களை மனத்தால் தழுவிக் கொள்ளும் ஆவலை அவர் வளர்த்தார். மெர்ச்சன்ட் நேவியைப் பற்றி ஒய்.எம்.சி.ஏ.வில் திரையிடப் பெற்ற ஒரு சினிமா அவன் கனவுகளுக்கு உருவமளித்தது. ஒய்.எம்.சி.ஏ.விலேயே படித்து விட்டு, விசாகப்பட்டினத்தில் கமாண்டராகப் பணிபுரிந்த ஒருவர் தற்செயலாகத் தனது பழைய ஹாஸ்டலைப் பார்க்க வந்த போது, ராகவன் அவரைச் சந்தித்தான்.
ரங்கையரிடம் சொல்லிக் கொள்ளாமல் ராகவன் அடுத்த மாதம் விசாகப்பட்டினத்திற்குத் தன்னந்தனியாக ரயில் 
றிவிட்டான்.
ஒரு மாதம் கழித்துக் கப்பற் பயிற்சியில் சேர அவருடைய சம்மதக் கையெழுத்துக்கு கடிதம் வந்த போது தான் அவன் விலாசம் தெரிந்தது. கடிதத்தை எடுத்துக் கொண்டு அவர் ஒய்.எம்.சி.ஏவுக்குப் போனார். ஜான்சன் அவருக்குத் தைரியம் தந்தார். ரங்கையர், ராகவன் பாதைக்குத் தடையாக இருக்க விரும்பவில்லை.
வருஷங்கள் ஐந்து ஓடி மறைந்தன.
தெருக்கதவைத் தள்ளித் திறந்து கொண்டு குடையும் கையுமாகத் தெப்பலாக நனைந்தவாறு நவகாளிநாராயண சாமியின் உருவம் உள்ளே நுழைந்தது.
“என்னடா நாணா இது.. இந்த மழையிலே?” என்று திடுக்கிட்டு எழுந்து அவரை வரவேற்றார் ரங்கையர்.
ஒரே பாய்ச்சலில் உள்ளே வந்தார் நவகாளி.
வயது ஐம்பத்தைந்துக்கு மேல். நெருப்பு மாதிரிச் சிவப்பு. நெட்டை, திடகாத்திரம், பெரிய காதுகள், வழுக்கைக்கு வழிவிட்டு அலையோடிய அமெரிக்கன் கிராப்பு, சுத்த நரை, ஆடைகள் எல்லாம் கதர், பிறைச்சந்திர வடிவத்தில் சந்தனக்கீற்று நெற்றியில் கரைந்து ஆறாக ஓடிற்று. கண்களில் தீர்மானமும் உயிர்ச் சக்தியும் ஆரத் தழுவும் அன்பும் மின்னத் தெறித்தன. கலகல வென்று வெண்கலக் குரல்.
“தலையைத் துவட்டுங்கோ மாமா!” என்று டவலைக் கொண்டு வந்தாள் ஜமுனா நவகாளியிடமிருந்து குடைய வாங்கினாள்.
“மகராஜியா இருக்குமா” என்று டவலை வாங்கியவர் “என்னடா ரங்கா... டர்க்கி டவலா... கதர்த்துண்டு கிடையாதா? கதரைக் கை கழுவிட்டயோ?” என்றார்.
“டேய் நாணா, ஆபத்துக்குப் பாபமில்லே. கதர்த்துண்டு தேடறதுக்குள்ளே ஜலதோஷம் பிடிச்சிடும். காந்திஜி மன்னிப்பார். தொடச்சுக்கோ” என்று கிண்டல் செய்தார் ரங்கையர்.
தலையைத் துவட்டிக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார் நவகாளி.
நவகாளி நாராயணசாமி, அலிப்பூரிலும் கடலூரிலும் ஏழெட்டு வருஷம் சுதந்திரப் போராட்டத்தில் சிறையிருந்தவர். தீவிர பிரம்மச்சாரி, காந்திஜியின் நவகாளி யாத்திரையில் உயிருக்குத் துணிந்து கலந்து கொண்டவர். நவகாளிப் பட்டம் அப்போது ஒட்டியதுதான். தியாகி நிலத்திலும் மான்யத்திலும் பாரத மாதா தேசிய பாடசாலை என்று ஒரு பள்ளி நடத்துகிறார். முஸ்லீம்களின் அத்யந்த நண்பர். அதே சமயம் ஹிந்துப் பண்டிகைகளையும் விழாக்களையும் ஆத்மீக ஈடுபாட்டோடு, ஊரில் பக்தி இயக்கம் பரவுகிற மாதிரி விமரிசையாகக் கொண்டாடுவார். பொது நிகழ்ச்சிகள் நவகாளி இல்லாமல் சோபிக்காது.
“நான் வந்துண்டே இருந்தேனா, வழியிலே ஒய்.எம்.சி.ஏ. ஜான்சன், அஞ்சுகை ராந்தல் பக்கமா ஒதுங்கிண்டிருந்தார். நான் ஒன்னண்டை வர்றேன்னு கேட்டுத் தெரிஞ்சுண்டு அவசியமா ஒன்னை ஒய்.எம்.சி.ஏ.வுக்கு மழை விட்டப்புறமா வரச் சொன்னார். நான் வரலேன்னா, அவரே வந்திருப்பாராம். விலாசம் தெரியாமே திணறினார்!” என்றார் நவகாளி.
“என்ன விஷயம்?”
“நான் கேட்டேன், ராகவன் சமாசாரம்னாரு. விவரமா சொல்லலே!”
“ராகவன் சமாசாரமா?” - ரங்கையருக்கு ஏனோ மனம் கலங்கிற்று.
அவசியமில்லாமல் அவர் கூப்பிட்டு அனுப்பமாட்டார் என்று அவர் உள்மனம் அரித்தது, என்னது?
திடீரென்று வானத்தில் ஓர் இடி இடித்தது. காது செவிடுபடும் அந்த ஓசையில் அவர் சற்று நடுங்கிவிட்டார்.

No comments:

Post a Comment