Thursday, 31 January 2013

ஜமுனா-11


11
திடீரென்று ஒரு இருட்டு, முன் வரிசையில் சீழ்க்கை ஒலிகள். கதவைத் திறந்து விட்டார்கள். திரையில் நெளிந்த கனவு மறைந்ததும் வெக்கையும் புழுக்கமும், பீடி சிகரெட்டுகளின் புகையுமாகக் குமட்டிற்று. கரண்டு ஆஃப் என்று யாரோ சொல்லும் வார்த்தை மிதந்து வந்தது. ராஜாமணி பத்து நிமிஷம் தாமதித்தான். அதற்கு மேல் பொறுக்காமல் வெளியே வந்தபோது கேட் கீப்பர் “சார் பாஸ்” என்று நீட்டினான்.
வேண்டாம்பா... என்ற மறுத்துவிட்டு நியூ சினிமாவை விட்டு வெளியே நகர்ந்தான் ராஜாமணி.
இரவு மணி பதினொன்றுக்கு மேல் ஆகியிருக்கும். சாலையில் விளக்குகள் இல்லை. கொஞ்ச நேரத்தில் வருமோ வராதோ... விளக்கு இல்லாத சாலைகூட ஒரு சுகம்தான்.
வெளியே வெம்மை தணிந்து காற்று குலாவிற்று. அண்ணாந்து பார்த்தான். ஏரிக்கரைக்கு மேலே பன்னிரண்டாம் பிறைச் சந்திரன். மூன்று நாளில் நிறையப் போகும் குதூகலத்தில் பவனி வந்தது. அம்பாரமாகக் குவிந்திருந்த கருமேகங்கள் சந்திரனின் நேர்ப் பாதைக்கு வழி விட்ட மாதிரி ஒதுங்கியிருந்தன.
ராஜாமணிக்கு ஜமுனா கவனம் வந்தது. அது மறந்து நினைக்கிற கவனம் இல்லை. இடைவிடாத ஊற்றுக்கண் போல் உள்ளிருந்து சுரந்து கொண்டேயிருந்த தியானம், தோல்வி... தோல்வி என்று அந்தத் தியானத்தில் ஒரு சிதைவும் சேர்ந்ததால், எதிலாவது மனசை அமிழ்த்தி மறக்கத்தான் சினிமாவுக்கு வந்தான்.
அந்தப் படமும் ஒரு காதல் கதைதான். புறக்கணிக்கப்பட்டதாகத் தன்னைக் கருதி குடியில் தன்னை அழித்துக் கொள்பவன் கதை. ஏனோ முடிவு வரை காத்திருந்து அந்தத் துயரில் தன்னைக் கரைத்துக் கொள்ள அவனுக்குப் பிடிக்கவில்லை.
இப்படிப் பளிச்சென்ற ஜமுனா மறுத்து விடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவனது இளமை, படிப்பு, அந்தஸ்து, லட்சியக் கனவுகள் எல்லாமே பொய்ம் மணல் போல் புதைந்துவிட்ட மாதிரி உணர்ந்தான் ராஜாமணி.
அசட்டுத்தனமாக ஆரம்பித்துப் பரிதாபமான முறையில் சரிந்து விட்டோமோ என்ற மனம் நொந்தது. எல்லாமே முடிந்து போனது போலவும் தேர் திரும்ப முடியாது முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டது போலவும் அவனுக்கு ஒரு திகைப்பு.
ஜமுனா... ஜமுனா... ஜமுனா...
அந்தக் கண்ணிமைகளும் குறுவியர்வை படிந்த மேலுதடும் அவன் மனசில் குறி பார்த்து வீசும் கத்திகளாக மேலும் மேலும் வந்து பாய்ந்தன.
நிராசைகளால் உருவாக்கப்பட்டது வாழ்க்கை என்ற வேதாந்தக் கசப்பு பிறந்தது. அந்த நிஜத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்குத்தான் சினிமா... சங்கீதம் என்று மனிதர்கள் அழகான பொய்களைச் சிருஷ்டித்திருப்பதாக நினைத்தான்.
இளைஞனின் எண்ணங்களில் முதற்காதலின் தீவிரம் எழுச்சியும் வீழ்ச்சியுமாகப் பின்னும் எண்ணிக்கையற்ற நினைவுக் கோலங்களில் அவன் மனம் தத்தளித்தது.
ஜமுனா... ஜமுனா...
“பால்ய நினைவுகளோடு நின்று விடாமல் அவளை ஏன் சந்தித்தோம்? அந்தச் சந்திப்பும் திருமணமானவளாக இன்னொருவனின் சொத்தாக அவள் ஆன பின்பு நேர்ந்திருக்கக் கூடாதா?’
சர்க்கரை பூசிய முலாம் பழமும், அவள் சுறுசுறுப்பும், அந்தச் சாதுரியமும் அவனை இடைவிடாமல் துரத்தின.
‘எனக்கு வேண்டும், என்ன தைரியம்?’ பார்த்த இரண்டாவது சந்திப்பில் பால்ய சிநேகிதத்தை நினைவூட்டி அவளை அப்படிக் கேட்டது எத்தனை பெரிய குற்றம் என்று கண்டனம் ஒரு பக்கம் எழுந்தது.
ராஜாமணி பூதராங் குளத்தை நெருங்கியபோது, கீழண்டைப் புறமாகத் தர்க்காவிற்குப் பக்கத்தில் ஜட்கா வண்டிகள் நிற்குமிடத்தில் தொப்பென்று ஏதோ சத்தம் கேட்டது. மனம் துணுக்குற்ற நின்று கவனித்தான். பிறையும் நட்சத்திரமுமாக பச்சைக் கொடி பறந்த தர்க்காவிற்கு அருகில் ஜன நடமாட்டம் இல்லை. மீண்டும் எகிறித் துள்ளுகின்ற மாதிரி தொப்பென்ற சத்தம்.
சற்று நெருங்கிப் பார்த்தான். பின்னங்கால்களைக் கட்டிப் போட்டிருந்த கழுதை ஒன்று குப்பை மேய்ந்து கொண்டு நின்றது. ஒருமுறை பிளிறிவிட்டு முன்னங்கால்களால் சற்று நகர்ந்து ஒரு குதிகுதித்துப் பின்னங்கால்களை நகர்த்திற்று.
ராஜாமணிக்குப் புன்னகை வந்தது. விரைவில் அது மறைந்து கழுதையின் மீது ஒரு பரிதாபம் பிறந்தது... தோல்வி உருவாக்கியிருந்த வேதாந்தம், அவன் மனசில் கால்கள் கட்டப்பட்ட கழுதைக்கும் வாழ்க்கைக்கும் ஒரு முடிச்சுப் போட்டது.
சிறிது நேரம் அந்தக் கழுதையின் சோகத்தில் அவன் பங்கேற்றுக் கொண்டு நின்றான்.
எதிரில் மிட்டாய் வண்டியைத் தள்ளிக் கொண்டே வந்து கணகணவென்று மணி அடித்தார் சோடேலால், ராஜாமணி திரும்பிப் பார்த்தான்.
“பாஸந்தி ஹை?” என்று கேட்டான். சோடேலாலின் பாஸந்தி ஒரு மறக்க முடியாத சங்கதி.
“ஹை” என்று அவன் தேவையைக் கேட்காமல் தொன்னையை எடுத்து பாஸந்திப் பாத்திரத்தின் தட்டைத் திறந்து கொண்டே பேசத் தொடங்கினார்.
“படா ஸாப் கைஸா ஹை?”
“அப்பாதானே... நல்லா இருக்கார்.”
“ஒடும்பு நல்லா இல்லே” என்று கொச்சைத் தமிழில் சொன்னார் சோடேலால்.
“வயசாயிடுத்து.”
“ஓட்டலை நீ கவனிக்கணும்.”
வயதானவர்கள் வயதானவர்களுக்குச் செய்யும் சிபாரிசு என்று நினைத்தவாறு ராஜாமணி, காகித அட்டையில் செய்து நீட்டிய ஸ்பூனில், பாஸந்தியை சாலையில் நின்றவாறே ருசி பார்த்தான்.
அவருடைய குறும்புக் கண்களில் ஒரு நகைச்சுவை ஒளி பிறந்தது.
“ஷாதி நஹீ ஹோகா?”
“இன்னும் ஆகல்லே.”
“ஜல்தி கரோ... ஆனந்த பவன் கோ படா ஹோட்டல் பனோ.”
ஆனந்த பவனைப் பெரிய ஓட்டல் ஆக்க வேண்டுமாம். கொஞ்ச நாட்களாக எல்லா மூலைகளிலிருந்தும் அதே குரல் கேட்கிறது. ஆனந்தபவன்... ஆனந்தபவன்... அந்தக் கல்லா மேடையின் நாற்காலியில் அவன் கனவுகளையெல்லாம் கட்டிப் போட்டு, உயரப் பறக்க விரும்பும் அவன் இறக்கைகளை முறித்துவிட்டு, பெல் அடித்து பில்வாங்கும் முடிவே இல்லாத சள்ளைக்கு அவனை ஆளாக்கவே எல்லோரும் முயற்சிக்கிறார்கள்.
ஜமுனா கூட அதைத்தான் கேட்டாள்.
“ஜமுனா... ஜமுனா.”
தொன்னையைத் தூக்கி எறிந்து விட்டு ராஜாமணி. ஜேபியில் சில்லறையை எடுத்து நீட்டினான்.
பஸ் ஸ்டாண்ட் நெருங்கியபோது பளிச்சென்று தெருவிளக்குகள் எரிந்தன.
பஸ் ஸ்டாண்டில் மின்சாரக் கம்பத்தில் பெரிய மூங்கில் தட்டி கட்டியிருந்தது. சிவப்பு எழுத்துக்களில் நாளைக்கு சர்வ கட்சி ஹர்த்தால் நடக்கப் போவதாக எழுதி வைத்திருந்தது.
நாளைக்கு ஹோட்டல் இருக்காது... என்று ராஜாமணி நினைத்துக் கொண்டு நடந்தான். ஆனந்தபவனின் கல் படிக்கட்டுகளில் ஏறி, எஃகு மடிப்புக் கதவை உலுக்கினான். இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குப் போய்த் தூக்கமில்லாமல் தவிக்கப் பிடிக்கவில்லை.
உள்ளே ஏதோ பேச்சுக் குரல்கள் கேட்டன. எல்லோரும் பேச்சு சுவாரசியத்தில் ஆழ்ந்திருந்தால் கலகலவென்ற அதிர்ந்த ஸ்ப்ரிங்க கதவைக் கவனிக்கவில்லை. கை மட்டும் நுழைகிற இடைவெளித் திறப்பில் உள்பக்கமாகத் தொங்கிய பூட்டைக் கடகடவென்ற ஆட்டினான்.
பேச்சுக் குரல் நின்றது.
“யாரது?” என்று உமாசங்கர் குரல் கேட்டது.
“வந்துதான் பாரேன்” என்றான் ராஜாமணி.
“ராஜாவா? இதோ வந்துட்டேன்.” சற்று நேரத்தில் கல்லா மேடையருகில் எரிந்த ஜீரோவாட் வெளிச்சத்தில் அழுக்கு வேட்டியுடன் அவன் சாவியை எடுத்து வருவது தெரிந்தது.
கதவைத் தள்ளித் திறந்து கொண்டே உள்ளே நுழைந்தான் ராஜாமணி.
“ஏன் இன்னும் தூங்காம முழிச்சுக்கிட்டிருக்கீங்க... நாளைக்கு ஹர்த்தால் தானேன்னு சீட்டாட ஆரம்பிச்சுட்டீங்களா?”
“சீட்டா... என்ன ராஜா.. அதைவிட முக்கியமான விஷயம் நடந்துக்கிட்டிருக்கு.”
“என்னது?” என்று உள் படிக்கட்டில் ஏறினான் ராஜாமணி.
ஃபேமிலி ரூமுக்குப் பக்கத்தில் உள் ஹாலில் நுழையம் எதிர்க் கையில் டேபிளின் பக்கத்தில் சப்பணம் போட்டுக் கொண்டு சுப்பண்ணா நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர் கால் விசிறி மாதிரி ஆடிக் கொண்டிருந்தது. மேஜை மீது ஓட்டலின் வெள்ளைப் பூனை சுருண்டு படுத்திருந்தது.
“என்ன ராஜா, தூக்கம் வரலியா?” என்று கேட்டவாறே எழுந்திருக்கப் போனார் சுப்பண்ணா.
“உக்காருங்க மாமா” என்று அவரைத் தடுத்து விட்டு. “என்ன சங்கதி... பஞ்சாயத்தா? என்ற கேட்டவாறே எதிர் நாற்காலியில் ராஜாமணி போய் உட்கார்ந்தான்.
“பஞ்சாயத்தில்லே, ஊர்வம்புதான்.”
ஹாலுக்கு வெளியே இருந்த முற்றத்தில் பயங்கரமான குறட்டை ஓசை வந்தது.
“யார் மாமா அது?”
“வழக்கமான கேஸ்... ஊதுவத்திக்காரரு... ஊரைச் சுத்தின அலுப்பிலே வந்து படுத்துட்டார். படுத்ததிலே இருந்து இப்படி ஒரே அவுட்டு சத்தம்தான்.”
நாளைக்கு ஹர்த்தால் என்ற விச்ராந்தி ஓட்டல் முழுவதும் தெரிந்தது. உள்ளே பாத்திரங்களைத் தண்ணீர் கொட்டி கடமுடவென்ற உருட்டியவாறே அலம்பும் ஓசை வந்தது.
“மாமா. அலமேலு இன்னும் வீட்டுக்குப் போகலே?” என்று சப்பண்ணாவைக் கிளப்பினான் சாரங்கன்.
“எலேய் மணி... இவன் என்னைக் கிளப்பி விடறான்!” என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார் சுப்பண்ணா.
“மணி இருந்தாத்தானே?” என்று ஐயாசாமி பதில் கொடுத்தான்.
“வீட்டிலே தங்கம் தனியா இருப்பாளோ” என்று 
உமாசங்கர் மேலும் கிளறினான்.
“டேய் உமா... நீ பெரிய வம்பன். ஒண்ணுமே தெரியாத சாதுவாட்டம் இருந்துட்டு கிளறிக் கிளறி மைசூர்ப்பாகு பிடிச்சடுவே” என்று கூறியவாறே வெற்றிலைச் செல்லத்தை இடுப்பிலிருந்து எடுத்து மேஜை மேல் வைத்தார் சுப்பண்ணா.
“என்ன மாமா... நீங்க பாட்டுக்கு சரக்கூடம் கட்டறேள்? விஷயம் என்ன?”
“இது தெரியாதா ஒனக்கு... நம்ம மணி இருக்கானோல்லயோ... அவன் தங்கத்தை மோப்பம் பிடிச்சுட்டு அலையறான், நேத்து அவ கழுத்திலே போட்டிருந்த மூணு பவுன் சங்கலியை சந்தைக் கூட்டத்திலே கோட்டை விட்டுட்டாளாம்..”
சுப்பண்ணா சொல்லிக் கொண்டே போகும்போது பாபா கையைக் கட்டிக் கொண்டு வந்து சுவர் ஓரமாக நின்றான்.
“பாபா வேறே கதை சொல்றான்... நம்ம ரங்கையர் ஆத்துக்கு எதுத்தளாப்பிலே இருக்கிறானே... ஒரு மெடிகல் ரெப்ரஸன்டேடிவ் - மோகன்... நம்ம ஓட்டல்லேகூட கணக்கு வச்சிருக்கானே அவன்...”
சாலையில் ஒரு தெய் நாய் எந்தச் சோகத்திலோ ஓலமிட்டது.
“என்னடாது அச்சான்யம்...ம்..சரி... அவனுக்கும் தங்கத்துக்கும் பழக்கம் உண்டாம். இவளேதான் அவன்கிட்டே செயினைக் கழட்டிக் கொடுத்தாள்னு பாபா சொல்றான்...!”
“என்ன பாபா?” என்று அவன் பக்கம் திரும்பினார் சுப்பண்ணா.
அவன் மெதுவாகத் தலையசைத்தான்.
“லோகம் எப்படியெல்லாம் சொழல்றதுன்னே புரியல்லே ராஜா...” என்று அவர் ஏதோ சொல்லிக் கொண்டு போனார். ராஜாமணி காதில் எதுவும் விழவில்லை.
குமாரசாமி கோவிலில் ஜமுனாவின் பின்னால் மோகன் வந்ததும், வேறு ஏதாவதும் இருக்கலாம் என்று ஜமுனா சொன்னதும், ஒன்றையொன்று துரத்திக் கொண்டு அவன் நினைவில் மோதின. அந்த மோகன், பெண்களை நைச்சியம் செய்யும் அவன் பார்வை. ஒரு கள்ளப் புன்னகை... அவன் ரங்கையர் வீட்டுக்கு எதிரில் குடியிருக்கிறான் என்ற ஞாபகம் எல்லாம் அவன் மனத்தில் அலைகளாக மோதின.
“ஜமுனா... ஜமுனா... உன்னைப் போன்ற தேவதைகளை சைத்தான்கள் சீரழிக்குமா?”

No comments:

Post a Comment