Tuesday, 19 September 2017

ஜமுனா-15

ஜமுனா-15
அநேக தடவை ரங்கையர் ஜான்ஸனைச் சந்தித்திருக்கிறார். ஒய்.எம்.சி.ஏ-வில் டீ பார்ட்டி நடக்கும்போது, ராகவன் படிக்கிற காலத்தில் அப்புறம் சந்தர்ப்பம் கிடைத்த வேளையில், சமயத்தில் தெருவில் எதிர்ப்படும் போது, தலை நரைத்து, புருவம் நரைத்து கண்ணிமைகள் கூட நரைத்து விட்டாலும் அந்த முகம் பால்ய வயதுப் பையன் மாதிரி இளமைச் சாயல் மாறாத முகம். வெள்ளை வெளேரென்ற ஐரோப்பிய வெளுப்பில், முழங்கையை முட்டும் அரைக்கை ஷர்ட், நாலு முழம் வேஷ்டி, கையை வீசி வீசிப் போட்டபடி தோள்களை அசைத்து கொண்டு ஒரு மாலுமி நடை நடப்பார். மஞ்சள் பாரித்த பல் வரிசையைக் காட்டியவாறு ஜான்ஸன் சிரிக்கும்போது, முகத்தைத் தொங்கப் போடும் வருத்தம் ஒன்றைப் பார்த்து குறும்புக்காரச் சிறுவன் ஒருவன் சிரிப்பது போலிருக்கும்.
அவருக்குக் கவலை இல்லை, சொந்தத்திற்கு என்று இரண்டு சட்டை, இரண்டு வேஷ்டி, ஆஸ்தி அதுதான். எங்கோ ஸ்காட்லாந்தின் கிராமத்தில் ஓடை போகும் காட்டோரத்தில் சொத்து வீடு குடும்பம் எல்லாமிருந்தும் கிறிஸ்துவின் நற்செய்தி அவரது மனசில் நங்கூரமிட்ட நாளிலிருந்து யாவும் அர்த்தமற்றுப் போயின.
பாதிரியாகி மதத்தைப் பரப்பும் ஆவலோ, பிரசங்க மேடைகளில் அங்கியும் ஆபரணங்களும் தரித்துக் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேட்கையோ அவருக்குப் பிடிக்கவில்லை. உபதேசிக்கப்பட்டவற்றை வாழ்ந்து பார்க்கும் எண்ணம்தான் மேலோங்கிற்று.
மாண்ட்ரீலில் அவர் இதயத்தைப் புரிந்து கொண்ட ஜிம் பாட்டர்ஸன், அவரை இந்தியாவுக்கு அனுப்பினார்.
திருப்பத்தூரின் அடர்ந்த மரங்கள் இருளடித்திருந்த ஒரு மூலையில், ரயில்வே ஸ்டேஷன் அருகாமையில் ஜான்ஸனின் மனம் சென்று நின்றது. பறவைகள் பாடிய அந்தப் பிரதேசத்தில் ஒய்.எம்.சி.ஏ-வுக்கு ஒருநாள் ஒரு கொத்தனார் முதற் செங்கல்லை எடுத்து வைத்தது ரங்கையருக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது.
ஜான்ஸன் பிரம்மசாரி. யாராரோ பெற்ற பிள்ளைகளைச் சொந்த பிள்ளைகளாகக் கருதி வளர்க்கக் குடும்பம் என்ற ஒன்று இடம் தராது என்று நிர்ணயித்தவர்.
ஐந்தாம் வருஷம் ஜான்ஸனைத் தவிர வேறு பிள்ளைகள் இல்லாத அவரது தாய், ஸ்காட்லாந்தின் கிராமத்து ஓடையருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது காலமானாள். சொத்து முழுவதையும் ஒய்.எம்.சி.ஏ-வுக்கு உயில் எழுதி விட்டு! கேபிள் வந்த போது ஏலகிரி மலைக்கு மாணவர்களைப் பிக்னிக் அழைத்துச் செல்ல ஜான்ஸன் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அங்கே பத்து நாள் காம்ப்.
கேபிளைப் படித்ததும், ஐந்து நிமிஷம் அவர் தன் ஆபீஸ் ரூமுக்குள் போய் உட்கார்ந்தார். நாற்காலிக்கு நேர் எதிரில் சிலுவையில் புன்னகையோடு தொங்கும் மனுஷ குமாரனின் படம் இருந்தது.
‘மரிதோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும். நீ என்னைப் பின்பற்றி வா!’ என்று தகப்பனின் அடக்கத்துக்குப் போக அனுமதி கேட்ட சீடனுக்கு ஏசு சொன்ன வாக்கு. அகச் செவியில் கேட்ட, சலனம் நின்றது.
அவரது தாய்க்கு வயது தொண்ணூறு, முதிர்ந்த பழம், ஜான்ஸன் அதுவரை அவள் பொருட்டுக் கண்ணீர் சிந்தியது இல்லை. கர்த்தரின் சேவையில் ஒப்படைக்கப்பட்ட வாழ்க்கையில், கண்ணீருக்கு அவசியமே இல்லை என்று அவர் கருதினார். குறுகுறுத்த கண்கள் சாந்தி பெற்று விட்டன. ஏசு சிலுவையிலிருந்து மீண்டும் புன்னகை செய்தார்.
‘ஒரு பிள்ளையை என் நாமத்தில் நிமித்தம் ஏற்றுக் கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்கிறான்.’
ஜான்ஸன் தெம்பு கொண்டார். ஒலிவ மலைக்க அருகே பெத்பகேயின் தேவாலயத்தில் மனுஷமாரனுக்கு குழந்தைகள் ஓசன்னா சொன்னபோது, கோபித்துக் கொண்ட பிரதான ஆசாரியருக்கும் வேதபாரகர்களுக்கும் அவர் சொன்ன மறுமொழி நினைவில் மின்னிற்று.
‘குழந்தைகளுடைய வாயினாலும், பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?’
ஜான்ஸன் எழுந்து வெளியே போய் விசிலை ஊதினார். சிறுவர்கள் முன் காம்புக்குக் கையை வீசி வீசிப் போட்டவாறு அதே மிடுக்குடன் முன்பே நடந்தார். அவரது தாய், ஓடைக்கு அருகே அடக்கம் பண்ணப்பட்ட செய்தி வந்ததும் கர்த்தரின் நாமத்தை வாழ்த்தினார். அவர் வாயில் ரங்கையர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறார்.
ஜான்ஸனின் ஒவ்வொரு சந்திப்பிலும், ரங்கையரின் மனசு பளு குறைந்த மாதிரி குளிர்ந்த அருவியில் குளித்த மாதிரி உற்சாகம் பெறும். இந்த முறை அந்தச் சந்திப்பு வேறு விதமாக இருந்தது. மழை வெள்ளம் வடிந்து ஒய்.எம்.சி.ஏ-வின் மைதானமும் மரங்களும் குளிர்ந்திருந்தன.
ரங்கையர் கனத்த உள்ளத்தோடு சில்லிட்டிருந்த சிமெண்ட் படிக்கட்டில் ஏறியவுடன் ஜான்ஸன் எதிர்ப்பட்டார்.
‘ஹல்லோ, ரங்கையர்!’ ஜான்ஸனின் குரலில் ஒரு வினோதமான சீழ்க்கை கலந்திருந்தது. மூன்று வருஷமாக அவர் ஈசனோபிலியாவில் அவதிப்பட்டு வந்தார். அதனால் பேசும்போது மூச்சிழுப்பில் விசில் ஓசை வரும்.
ஜான்ஸனின் பெரிய கை அவர் உள்ளங்கையை மெதுவாக அழுத்தித் தோளைத் தொட்டது.
“இங்கே வான்டாம். மேலே போய் பேஸ்வோம்” என்று ஓர் ஐரோப்பியக் கொச்சையில் சொன்னார்.
ரங்கையருக்கள் பூகம்பம் ஒன்று கிடுகிடுத்தது. ஜான்ஸனின் முகத்திலும் ஸ்பரிசத்திலும் அமிதமான பரிவு, எந்த இடத்திலும் பேசுபவர், அவர் ஏன் மேலே கூப்பிடுகிறார்?”
“எதைச் சொல்லப் போகிறார்?”
ரங்கையர் தேக்குக் கிராதியிட்ட மாடிப்படியின் பிடிச்சவரை ஆதாரமாகப் பற்றிக் கொண்டே மாடியேறினார்.
“உக்காருங்கோ ரங்கையர்” என்று நாற்காலியைக் காட்டி விட்டு எதிரில் ஒரு ஸ்டீல் சேரில் ஜான்ஸன் அமர்ந்தார்.
“உங்கள் வூட்டு எனக்கு தெரியாது. இல்லேன்னா நான் வந்து இருப்பேன். ஜீசஸ், மனுசனுக்கு ரொம்ப சோதனை வக்கிறார். மன்சன் தாங்கணும். எய்ந்து மர்படியும் நிக்னம்.”
ரங்கையர் அவரையே மெதுவாய்த் தலையசைத்தவாறு பார்த்தார்.
“நீங்கள் உர்தி ஆனவர். சோதனை வந்து இருக்கு. எனக்கு ரொம்ப வர்தம். ரங்கையர்... ஜீசஸ் உங்கள் மன்ஸ்க்கு இன்னம் உர்தி தர்வார்” என்று சொல்லி விட்டுக் கண்களை மூடிக் கொண்டார். எதையோ எப்படித் தெரிவிப்பது என்று அவர் தனக்குள் தயங்குவது வெளிப்படையாகத் தெரிந்தது. அந்தச் சங்கடத்திலிருந்து அவரை மீட்க வேண்டிய கடமையை ரங்கையர் உணர்ந்தார்.
“தைரியமா சொல்லுங்கோ... எதுவானாலும் நேர்ந்தப்புறம் மனுஷாள் ஏத்துக்க வேண்டியது. அதானே?”
“எஸ்..எஸ்” என்று அவரைப் பார்த்துப் பலமாக ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினார் ஜான்ஸன்.
“உங்கள் பையன் ராகவன்... ம்ம்ம்...ஷிப் ஆக்ஸிடெண்ட்லே காலமாயிட்டான்.”
ஜான்ஸனின் வாயிலிருந்து அந்த வார்த்தை வெளியானதும் அவருள் நடுங்கிக் கொண்டிருந்த அந்த பூகம்பம் வெடித்தது. முதலில் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. வெறும் சொற்கூட்டம் போல் ஒரு நொடி தோன்றிய அவை திடீரென்று பூகம்பமாய் வெடித்தன.
நாற்காலியின் கைப்பிடியை ரங்கையர் இறுகப் பற்றிக் கொண்டார்.
அப்போது திடீரென்று ஒரு பேரிரைச்சலோடு, ஜன்னலுக்கு வெளியே தெரிந்த தண்டவாளங்களில் ஓர் எக்ஸ்பிரஸ் வண்டியின் என்ஜின் பாய்ந்து பார்வைக்கு மறைந்தது. கடகடத்துக் கொண்டு தொடர்ந்த, ரயில் பெட்டிகள் ஜான்ஸனின் சொற்கள் உருவாக்கிய பெரிய சூன்யத்தை மிதித்துக் கொண்டு பறந்தன.
“ஆய்ல் டாங்கர் வெடிச்சு ராகவன் காலம் ஆய்ட்டான்.”
ரங்கையர் குமுறி வந்த அழுகையை மேல் துண்டை எடுத்து வாயில் புதைத்தவாறு அடக்கினார்.
“ராகவா... இந்த முடிவுக்கா இவ்வளவு சாகசம் பண்ணே? மெடல் மெடலா வாங்கினே... கப்பு கப்பா ஜெயிச்சே... மரம் ஏறினே... குதிச்சே... எத்தனை சாகசம்டா மகனே... எத்தனை சாகசம்! செஞ்ச சாகசம் போறும்னு பகவான் முடிவு கட்டிட்டானோ? ஒங்கம்மா இருந்தா அவ மனசு எப்படி வெடிச்சுப் போயிருக்குண்டா... மகனே!”
புத்திரபாசம் ரங்கையரைச் சிறிது நேரம் பித்தனாக்கி விட்டது. எதிரில் ஜான்ஸன் இல்லாமற் போயிருந்தால் அவர் கதறிக் கதறித் துடித்திருப்பார். வாயில் புதைத்திருந்த துண்டைப் பற்கள் இறுகக் கடித்தன. மார்பு விம்மி விம்மி அடங்கி எழுந்தது.
அந்த வயதான தந்தையின் விழுதுகள் அறுந்து போன சேதி தன் வாயால் வர நேரிட்ட துன்பத்தை ஜான்ஸன் மௌனமாக அனுபவித்தார்.
ரங்கையர் சுயநிலைக்கு வந்தபோது, அந்த இடைவெளியில் பல வருடங்கள் அதிகமாய் வயது கூடிப் பாதிக்கு மேல் பலம் அழிந்து போனதை உணர்ந்தார்.
“எனக்கு ரொம்ப ரொம்ப வர்தம் ரங்கையர். இன்னும் ஒரு சங்தி. ராகவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஒரு ஆண் கொழந்தை இருக்கு. அவன் வைஃப் ஒரு அமேரிக்கன். ரெண்டு பேரும் கீலே இர்காங்கோ. உங்கள்கிட்டே பேஸ்னுமாம். அவுங்கோ இன்னிக்கி காலை ரயில்வே வன்தாங்கோ.”
ரங்கையரை முறுக்கிப் பிழிந்து யாரோ வீசியெறிந்தது போல் அவர் உணர்ந்தார்.
‘பகவானே... என்னை ஏன் இப்படிச் சோதனைக்கு மேலே சோதனை பண்றே? ராகவா, மிலேச்சப் பெண்ணையா கல்யாணம் பண்ணிண்டே? போன லீவிலே வந்தபோது ஒரு வார்த்தைகூட சொல்லலியே... என் ஆசாரத்தின் மேலேயும் சீலத்தின் மேலேயும் சேத்தை வாரி எறைச்சுட்டு அத்து வானத்திலே என்னை நிறுத்திட்டுப் போயிடற சங்கல்பத்தோட தான் எனக்கு மகனாகப் பொறந்தியா? ஆண் கொழந்தை வேறே இருக்காமே!’
சூறைக் காற்றில் உதிர்ந்த இலை பறப்பது போல அவர் மனம் சுற்றிச் சுழன்றது.
“கூப்டுகினு வர்றேன்.”
ஜான்சன் கீழே போய் ஓரிரு நிமிஷத்தில் திரும்பி வந்தார்.
ரங்கையரின் அனுமானங்களை பொய்த்துப் போகச் செய்தவளாக அந்த அமெரிக்கப் பெண், கையில் குழந்தையோடு உள்ளே வந்தாள். மிதமான உயரம் சிறிது இந்தியக் களை தெரிகிற முகம். மருளுகிற மான் கண்கள்.
வெள்ளை வாயில் புடவை, வெள்ளை ரவிக்கை, புடவை கட்டிப் பயிற்சி வந்துவிட்ட மாதிரி உடம்புக்குப் பொருத்தி விட்ட மாதிரி, அந்த உடையில் ஒரு பாந்தம், பொன்னிறமான கேசம். அதைச் சுற்றி முறுக்கிக் கோடாலி முடிச்சிட்டிருந்தாள்.
நேரே வந்தவள், கை கூப்பிக் குழந்தையோடு நமஸ்கரித்தாள். பிறகு, குழந்தையை அவர் காலடியில் போட்டு விட்டுத் தானும் அவரது பாதத்தை தொட்டு வணங்கினாள்.
“தீர்க்காயுஸா இரும்மா” என்ற தொண்டை கரகரக்கக் கூறினார். அவளுக்கு அது புரியுமா என்ற சந்தேகம். இன்னும் காலடியில் தவழ்ந்த குழந்தையை ரங்கையர் குனிந்து தூக்கினார்.
எல்லாம் கனவில் நடப்பது போல இருந்தது.
குழந்தை அவரைப் பார்த்து சிரித்தது. ராகவனின் மூக்கு, ராகவனின் நெற்றி, அதே காதுகள், வாய் அவன் தாயைக் கொண்டிருந்தது. கண்கள் அவனுடைய அம்மா மாதிரி நீலம், துயர் இல்லாத உல்லாச நீலம். அவரது மார்பில் எதுவோ இளகிப் பாகாக ஓடிற்று. குழந்தையை மார்புறத் தழுவிக் கொண்டார். வம்சக் கொடி!”
பேச்சற்ற அந்த நிமிஷங்கள் முடிந்தன.
“உன் பேரென்ன?” என்று அவளிடம் கேட்டார்.
“ஹி ஈஸ் ஆஸ்கிங் யுவர் நேம்” என்று ஜான்ஸன் மொழி பெயர்த்தார்.
மாமனாரும் மருமகளுக்கும் இடையில் மொழி பெயர்ப்பு தேவையா இருக்கிற அந்த வினோதம் ரங்கையர் மனசைப் பிளந்தது.
“என் பெயர் மோனிகா மில்லர்...” என்று கொச்சைத் தமிழில் அவள் பதில் சொன்னாள்.
“ராகவனுக்கும் உனக்கும் கல்யாணம் ஆகி எத்தனை நாளாச்சு?”
“ரெண்டரை வருஷம்”
“கல்யாணம் எங்கே நடந்தது? சர்ச்சிலா, ரிஜிஸ்டர் ஆபீசிலா?”
“பாம்பே மஹாலக்ஸ்மி கோவுல்லே.”
அவர் அதிர்ச்சியுடன் பார்த்தார்.
“ரகு எனக்கு தாலி கட்டித்தான் கல்யாணம் நடந்தது. புரோஹித் மந்த்ரம் சொன்னார். நாங்கள் நெருப்பு சுத்தி வந்தோம்.”
சாஸ்த்ரீயமாக நடந்த விவாகம் தான்.
அப்படியானால்... அப்படியானால்... அவள் சர்ச்சுக்குப் போவதில்லையா?
“நீ ஒரு கிறிஸ்துவப் பெண் தானே?”
“இல்லே ஹிண்டு, ரகு என்னை ஹிண்டு ஆக்கிட்டார்.”
பேதைப் பெண். இந்துவாக யாரும் மாற முடியாது! இந்துவாக ஒருவர் பிறக்கத்தான் முடியும். இதை அவன் அவளிடம் தெரிவிக்கவில்லையோ?
குழந்தை நெளிந்து வீறிட்டது. அவளிடம் அதை நீட்டினார்.
“குழந்தைக்குப் பேர் என்ன?”
“யோகி”
ராகவனின் விதவையாக ரங்கையரின் மாட்டும் பெண்ணாக மோனிகா மில்லர் அவர் வீட்டில் வாழ வந்திருப்பதாகத் தெரிவித்த போது, மகத்தான சோதனை ஒன்று ரங்கையர் முன்பு விஸ்வரூபம் எடுத்தது.[தொடரும்]


No comments:

Post a Comment