Sunday, 3 February 2013

ஜமுனா-14


14
“சின்னக் கொழந்தை மாதிரி பிடிவாதம் பண்ணினா எப்படி? மறுபடியும் மழை வர்றாப்பிலே வானம் மூடிண்டிருக்கு, நான் போடமாட்டேன்.”
“இதிலே பிடிவாதம் என்ன டீ... வயறு எரியறது. வேறே எதுவும் பிடிக்கல்லே. கொஞ்சம் தயவு பண்ணுடீ...”
“ரூம்லே ராஜா ஷேவ் பண்ணிண்டிருக்கான். ரொம்ப கொஞ்சாதேள். கேட்டா சிரிப்பான்.”
“இல்லேன்னா ஒன் பிடிவாதமும்... என் அடக்கமும் அவனுக்குத் தெரியாதாக்கும்?”
“அடக்கம்...அடடா... அப்பப்பா! எவ்வளவு அடக்கம்... காரியம் முடியணும்னா ஐஸா கரைவேள்!”
“இல்லேன்னா பந்தமா எரிவேனாக்கும்?”
“நீங்க பந்தமாகவும் எரிய வேணாம், ஐஸாவும் கரைய வேணாம். என்ன பல்டி அடிச்சுட்டாலும் நான் போட முடியாது.”
கீழுதட்டை மடித்தவாறு ரேஸரை பக்குவமாக சோப்பு நுரை வழிய இழுத்துக் கொண்டிருந்த ராஜாமணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவனுடைய தந்தை ஆனந்தராவுக்கும் தாய் கங்காபாய்க்கும் மத்தியில் இப்படி ஒரு விளையாட்டு அடிக்கடி நடக்கும். அந்த வயதான தம்பதிகள் மத்தியில் பிசிரில்லாத பந்தம் இருப்பதை, அந்தக் கொஞ்சலும், கோபமும் தெரிவிக்கும், மனம் ஈடுபட்டு அவன் ரசிப்பான்.
“என்னப்பா அது?” என்ற அறையிலிருந்தவாறே குரல் கொடுத்தான்.
“ஒண்ணுமில்லேடா” என்ற ஆனந்தராவின் குரல் தயங்கியவாறு வந்தது.
“ஒண்ணுமில்லையா? நான் சொல்றேன் கேளுடா ராஜா. இவ்வளவு குளுந்திருக்கு... காலையிலே பழையதக்கு தயிர் விட்டுண்டு, வடுமாங்காய் கடிச்சுண்டு சாப்பிடணுங்கிறார். ஏற்கனவே ஈர ஒடம்பு, ஊசியும் மருந்தும் இப்பத்தான் போயிட்டு வர்றேன்னு கிளம்பியிருக்கு, இதுக்குள்ளற பழையதைச் சாப்பிட்டு ஒடம்பைக் கெடுத்துண்டாத்தானே. டாக்டர் ஆத்துக்குப் போய் மணிக்கணக்கிலே அரட்டை அடிக்கலாம்.”
“டாக்டர் ரங்கநாதன்ட்டே கேட்டேன். அவர், பழையது, தயிர், வடுமாங்காயிலே எந்த வகையான அப்ஜெக்ஷனும் கிடையாதுன்னுட்டார்.”
“ஒங்க உடம்பு அவருக்கு என்ன தெரியும்?”
“அவர்கூட அதையே தான் டெய்லி சாப்பிடறாராம். இதோ பார் ஆனந்தராவ், இந்த இட்லி சாம்பார் மசால் தோசையிலே இருக்கறதெல்லாம் விட எஃபக்ட் அதுலேதான் இருக்குன்னார்.”
அறையில் இருந்தவாறே ராஜாமணி குறுக்கிட்டான்.
“பேசாம போடேம்மா... இவ்வளவு தூரம் அப்பாவைக் கெஞ்ச வைக்கறியே?”
“நீ சும்மா இருடா. நோக்கென்ன தெரியும்? அவஸ்தைப்படறவர் அவரா, டாக்டர் ரங்கநாதனா?”
“அடியே... அடியே... நீ பெரிய எம்.டி. மாதிரி பேசாதே டாக்டர் ரங்கநாதன் பெரிய ஜீனியஸ்...”
ஆனந்தராவுக்கு நாக்கு சாப்பிட்டு விட்டது.
“சரி... வேறே என்ன பண்ணியிருக்கப் போறே... ரவா உப்புமா தானே... விடிஞ்சா ரவா உப்புமா... பொழுது போன ரவா உப்புமா... ம்..ம்...ம்...”
மனம் விழுந்த மாதிரி அவர் பேசியது கங்காபாய்க்குப் பொறுக்கவில்லை. அதிகமாய்த்தான் அவரை ஆட்டிப் படைக்கிறோமோ என்று சுரத்து குறைந்தது.
“நேக்கென்ன வந்தது? நல்லதைச் சொன்னா கேக்க மாட்டேள். படறச்சே, நானும்னா சேர்ந்து அவஸ்தைப்படறேன். நாக்கை அடக்க மாட்டேள். பழையதையே கொண்டாறேன். திருப்தியா இருங்கோ.”
கங்காபாய் எப்போதும் கடைசியில் விட்டுக் கொடுத்து விடுவாள். இதுவும் ராஜாமணிக்குத் தெரிந்த சங்கதி தான்.
கூடத்திலிருந்து ஆனந்தராவ் குரல் கொடுத்தார்.
“ராஜா, ஷேவ் பண்ணிக்கிறியா?”
“ஆமாம்ப்பா...”
“குளிச்சிட்டு எங்கே போகப் போறே?”
“ஹர்த்தால் தமாஷ் பார்க்கலாம்னு இருக்கேன்.”
“நான் ஒரு கோழித் தூக்கம் போட்டுட்டு கடைக்கு வர்றேன்.”
அவருக்கு உடல் நிலை சரியில்லை. ஓய்வு தேவையென்று டாக்டர் சொன்னது ராஜாமணிக்குக் கவனம் வந்தது.
“நானே போறேம்பா. நீங்க ரெஸ்ட் எடுங்கோ!”
“இந்தாங்கோ, ஒங்க பழைய சாதம்” என்று கங்காபாய் வந்தது போட்டது. எதுவும் மனசில் ராஜாமணி. அப்பாவிடம் ஜமுனாவைப் பற்றிய பேச நினைத்த யோசனையைத் தள்ளிப் போட்டான். ஒரு பெண்ணால் முகத்துக்கு எதிரில் நிராகரிக்கப்பட்டு விட்ட சோகம் மனதிற்குள் இன்னும் பெரிய பளுவாகத் தங்கியிருந்தது.
கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான்.
‘இந்த மூக்கு... கண்... உதடுகள்... நண்பர்கள் வீட்டில்... ஹைஸ்கூலில்... எத்தனை பெண்கள் அவனிடம் பிரியமாய்ப் பேசுகிறார்கள். எங்கே போனாலும் அவனுக்கு ஒரு செல்ல மாப்பிள்ளை மாதிரி என்ன வரவேற்பு... எத்தனை பெண் உள்ளங்கள் அவன் மனசோடு ரகசியம் பேசத் துடித்தன.’
கண்ணாடியில் மீண்டும் முகத்தைப் பார்க்கத்தான்.
‘என்ன அகந்தை ஒனக்கு! நான் போய் நேரடியாக ஜமுனா மாதிரி ஒரு அபூர்வமாக அழகியைக் காதலிக்கிறேன் என்றதும், அவள் காலடியில் மயங்கி விழுந்துவிட வேண்டுமோ...? இது என்ன கொழுப்பு? அதற்காகத் தான் பிளேட் கூட ஷேவிங் செய்யும்போது வெட்டி விட்டது’ என்று நினைத்தான்.
மோகன் மாரி ஒருவனை நேசிப்பதற்குக் கூட அவளுக்கு முழு உரிமை உண்டு. அவனுக்குத் தெரிந்து எத்தனையோ பெண்கள் நம்ப முடியாத பேர் வழிகளிடம் காதல் கொண்டிருந்தார்கள். மோகனையும் ஜமுனாவையும் தன் மனசுதான் இணைத்துக் கொண்டதேயொழிய உண்மையில் அவர்கள் இருவருக்கும் மத்தியில் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கலாம். வெறும் அனுமானம். தனக்குக் கிடைத்த தோல்வியின் கசப்பிலிருந்து மனமே பழி வாங்குவது போல் குரூரமாகப் பிணைந்து விட்ட அனுமானம்...
ஜமுனா மாதிரி உன்னதமான பெண்ணாவது... மோகன் மாதிரி பேர் வழிகளை ஏறெடுத்துப் பார்ப்பதாவது?
“சீ... என்ன மனசு எனக்கு... சாக்கடை ஓடுகின்ற இந்த மனசுக்கு ஜமுனா எப்படிக் கிடைப்பாள்?”
ராஜாமணி ஷேவிங் செய்வதை மறந்து ஜன்னலுக்கு வெளியே இருண்டு கொண்டு வந்த வானத்தைப் பார்த்தான்.
“போஸ்ட்” என்று வெளியே கேசவலு நாயுடுவின் கனத்த சாரீரம் கேட்டது.
ராஜா என்று குரல் கொடுத்தார் ஆனந்தராவ்.
“ராஜாமணி சார்” என்று கேசவலு நாயுடு கூப்பிட்டார்.
“இதோ வர்றேன்” என்று சோப்பைக் காகிதத்தில் வழித்து ரேஸரைக் கழற்றிக் கோப்பையில் போட்டு விட்டு வெளியே போனான் ராஜாமணி.
“ஒங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் கவர்...”
பட்டை பட்டையாகத் திருநாமம். நெற்றி உச்சியில் நரையைக் கூடத் தொட்டிருந்து. கண்கள் குந்து சாலேஸ்திரக் கண்ணாடி வழியாகப் பயமுறுத்துவது போல் தெரிந்தன. ஸ்தூல சரீம். மூச்சு வாங்கிற்று. முதுமை.
“அப்பாவுக்கு தபால்.”
“ரிஜிஸ்டர் கவரா?” என்று யோசித்தவாறே ரசீதை வாங்கி போஸ்ட்மேன் நாயுடு தடித்த சிவப்புப் பேனாவினால் கையெழுத்திட்டான்.
தபால்களை வாங்கிக் கொண்டான். அவனுக்கு வந்த கவர், அலுவலகங்களில் பயன்படும்பெரிய பழுப்புக் கவர் மாதிரி இருந்தது. அனுப்பியவர் விலாசத்தைப் படிப்பதற்குள் நாயுடு குறுக்கிட்டார்.
“ராஜா சார். அப்பா இருக்காரா?”
“இருக்காங்க.”
“கூப்பிடுங்க...”
“சாப்பிடறார்.”
“அப்படியா?” அவர் திண்ணையில் உட்கார்ந்தார். பெரிய பூசணிப்பழம் பழுத்து உட்கார்ந்த மாதிரி இருந்தது. திருஷ்டிப் பரிகாரத்துக்கு நாமம் போட்டு வைத்த பூசணிப் பழம்.
“இதுதான் என்னுடைய கடைசி பட்டுவாடா-” நாயுடு சிரித்துக் கொண்டு சொல்ல முயன்றார். அந்தச் சிரிப்பில் அங்குமிங்கும் விழுந்துபோன பற்களின் காலியிடங்கள் தெரிந்தன.
“ஐஸீ... என்ன விஷயம் நாயுடு?”
“இன்னியோட நான் ரிடையராகிறேன்”
ஆனந்தராவ் அதற்குள் சாப்பிட்டு முடித்து விட்டுக் கைகளையும் வாயையும் துண்டில் ஒற்றிக் கொண்டே வெளியே வந்து விட்டார்.
“என்ன நாயுடு... சாவதானமா ஒக்காந்துட்டேள்?”
“இந்தாங்க தபால். நாயுடு இன்னியோடு ரிடையராகிறாராம்.”
தபாலை வாங்கிக் கொண்ட ஆனந்தராவ், “அப்படியா நாயுடு?” என்று ஆச்சரியத்தோடு நிமிர்ந்தார்.
“ஆமாம் ராயரே?” அதற்குள் நாயுடுவிற்குக் குரல் கம்மி விட்டது. சட்டென்று அவர் கண்களில் இறுக்கம் நெகிழ்ந்து கண்ணீர் தளதளவென்று இறங்கி விட்டது.
என்ன நாயுடு இது... சின்னப்பிள்ளை மாதிரி...?
ஆனந்தராவுக்கும் நெஞ்சு நெகிழ்ந்து விட்டது.
போஸ்ட் என்ற அந்த கனத்த சரீரம் இனிமேல் அந்த வீதியிலோ, வேறெங்குமோ காதில் விழப் போவதில்லை என்ற விஷயம் அவரையும் கலக்கி விட்டது.
“முப்பத்தஞ்சு வருசம் ராயரே... எல்லாம் விளையாட்டு மாதிரி முடிஞ்சு போச்சு. ஒங்க மாதிரி பெரியவா ஆசீர்வாதத்தாலே எந்த கம்ப்ளெயிண்டும் இல்லாமெ வண்டி ஓடிப்போச்சு. இந்த ஒரே பீட்லே பதினஞ்சு வருசம் வுட்டு வச்சாங்க. யாராரோ டக்கர் அடிச்சும் முடியல்லே. இது ஒண்ணு போறாதா எனக்க சரடிபிகேட்டு... மனசு தான் தாங்கல்ல... பாத்துப் பழகின மனுஷாளை சடுக்குன்னு விட்டுப் பிரியற மாதிரி இருக்கு.”
“இதென்ன பிரமாதம் நாயுடு... மனசை நீர் அலட்டிக்கப்படாது. நாங்களாம் எங்கே போயிடறோம் நீங்க போஸ்ட்டுன்னு வந்து நின்னாத்தான் பேசுவோம். இல்லேன்னா மொகத்தைத் திருப்பிக்குவோமா என்ன? ராஜாமணி உள்ளே போய் அம்மாவைக் காப்பி தரச் சொல்லு என்று ஆனந்தராவ் தாமே உள்ளே எழுந்து போனார்.
பீரோவில் சுப்பண்ணாவுக்கு புது வருஷத்துக்காக எடுத்துக் கொடுக்கத் தவறி விட்ட வேஷ்டித் துண்டு இருப்பது ஞாபகம் வந்தது. எழுந்து போய் பீரோவைத் திறந்து அவற்றை எடுத்துக் கொண்டு, நூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கட்டிலிருந்து உருவி எடுத்தவாறு திரும்பி வந்தார்.
நாயுடு எப்பேர்ப்பட்டவர்! துக்கத்தை ஹாஸ்யமாக்கி விடுவார். துன்பத்தை லகுவாக்கி சேர்ந்து விழுகின்ற மனதைத் தூக்கி தோளில் ஏற்றி நிமிர்த்துவார். ஒவ்வொரு வீட்டின் குடும்ப சங்கதியும் அவருக்கு மனப்பாடம்.
அம்மா கொடுத்த காப்பியோடு வந்தான் ராஜாமணி.
ஆனந்தராவ் மேலே சுற்றியிருந்த கண்ணாடிக் காகிதம் மொரமொரக்க வேஷ்டியையும் துண்டையும் நீட்டினார். ரூபாய் நோட்டை உள்ளே செருகியிருந்தார்.
அந்த சன்மானத்தை வாங்கும்போது குழந்தை மாதிரி வெடித்து அழுது விட்டார் நாயுடு.
நாயுடுவின் குலுங்கும் முதுகை ஒரு கையால் அணைத்துக் கொண்டார் ஆனந்தராவ்.
நாயுடுவையும் அப்பாவையும் விட்டு விட்டு ராஜாமணி ஆவலோடு ரிஜிஸ்டர் கவரைப் பிரித்தான்.
ஐ.எஃப்.எஸ் விண்ணப்ப பாரம். சோமையா அனுப்பியிருந்தார். கூட ஒரு கடிதம். அவன் விறுவிறுவென்று கண்களை ஓட்டினான். அவரது வாழ்த்துக்களைச் சொல்லியிருந்தார். ஒரு மாதம் ஊட்டியில் கழிக்க அவனைக் கூப்பிட்டிருந்தார். கோடை விடுமுறையைக் கழிக்க டேராடூன் பாரஸ்ட் காலேஜ் புரொபசர்கள் எல்லாம் வருகிறார்கள். ஃபாரஸ்ட்ரியைப் பற்றித் தெரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பமாம்.
ராஜாமணிக்கு உள்ளம் பொங்கி வழிந்தது.
“அப்பா... அப்பா... டி.எஃப்.ஓ. சோமையா லெட்டர் போட்டியிருக்கார். ஐ.ஃப்.ஓ. அப்ளிகேஷன் அனுப்பியிருக்கார். ஊட்டிக்கு ஒரு மாசம் வரச் சொல்லி இன்வைட் பண்ணியிருக்கார்.”
அவன் குரலில் துள்ளிய களிப்பிற்கு எதிரொலி இல்லை. கங்காபாய் ஆனந்தராவைப் பார்த்தாள். அவர் அவளைப் பார்த்தார். அந்த இரு முகங்களிலும் ஒரு வாட்டம் பரஸ்பரம் பரிமாறப்பட்டது. அப்போது மீண்டும் மழை ஆரம்பமாயிற்று.

Saturday, 2 February 2013

ஜமுனா-13


13
கல்யாணம் முடிந்து தெருவை அடைத்துப் போட்டிருந்த பந்தலைப் பிரித்த மாதிரி வெளிவாங்கிற்று வானம். மாலை மணி மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது.
நாளைக்கும் பாக்கி வைத்திருப்பது போல் மந்தமாகக் காய்ந்த வெய்யிலைப் பார்த்து விட்டு ஈரத் துணிகளை இப்போதே ஆறப்போட வேசண்டியது தான் என்று உள்ளே வந்தாள் ஜமுனா.
ரங்கையர் ஒய்.எம்.சி.ஏ.வுக்குப் போய் இருந்தார். அப்பாவின் அங்கவஸ்திரமும் குடையும் கயிற்றில் தொங்குவதைப் பார்த்தும் எவ்வளவு தைரியமாகத்தான் பேசி விட்டோம் என்று ஞாபகம் வந்து அவளுக்கு மனம் நலிந்தது. என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று பிரமித்தாள்.
நவகாளி, ராமநவமிக்கு பிரசங்கியை ஏற்பாடு செய்வதற்காக மட்டும் அங்கே வரவில்லை. ஜமுனாவுக்கு வரன் ஒன்று கிடைத்திருப்பதைப் பற்றித் தெரிவிக்கத்தான் வந்திருந்தார். ரங்கையர் ஜமுனாவின் ஜாதகத்தை ஏற்கெனவே அவரிடம் கொடுத்திருந்தது ஜமுனாவுக்கு தெரியாது.
திவ்யமான பொருத்தம் என்ற ஜோஸ்யர் சிலாகித்ததாக ஆரம்பித்து வரனுடைய போட்டோவைக் கொடுத்தார். முப்பத்தைந்து வயது. சிலுப்பிக் கொண்டு நின்ற சுருட்டை முடி, ஸ்பெக்ஸ் வழியாக தப்புக் கண்டு பிடித்த மாதிரிப் பார்க்கும் ஒரு பார்வை. பெரிய உதடுகளில் கர்வப்புன்னகை. சிவராமகிருஷ்ணன் பி.எஸ்.ஸி., ஆடிட்டர் வேலை. ஏழாயிரத்துச் சொச்சம் சம்பளம். பெண் அழகாய் இருந்தால் போதுமாம். வரதட்சிணை வேண்டாமாம்.
நவகாளி அந்த விவாகத்தை நடத்தியே வைப்பது என்ற தோரணையில் பேசத் தொடங்கினார். ஒரு மணிக்கு சாப்பாடு முடிந்தது. முதல் ஈடு மழை இடைவேளை விட்ட மாதிரி சற்றுத் தணிந்த போது மீண்டும் ரங்கையரை முடுக்கி விட்டுத்தான் குடையோடு கிளம்பினார்.
அவர் போய் மழை மறுபாட்டம் ஆரம்பித்தபோது, ரங்கையர் ஜமுனாவிடம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்:
“போட்டோவைப் பார்த்தியாமா?”
“பார்த்தேம்பா.”
“பிடிக்கிறதா?”
“.........”
பதில் வராததைக் கண்டு ரங்கையர் தாம் ஒரு தரம் போட்டோவைப் பார்த்துக் கொண்டார். அவருக்குப் பிடிக்கவில்லை. நவகாளிக்கு தன் குடும்பத்திலிருந்து ஈடுபாடு அவருக்கு ஞாபகம் வந்தது. போட்டோக்கள் பொய் சொல்வதை அவர் அறிந்திருக்கிறார். நவகாளி ஈடுபட்டுச் செய்யும் முயற்சியை நம்ப வேண்டும் என்ற மனசின் உட்குரல் சொல்லிற்று. இன்னும் எத்தனை நாள் ஜமுனா காத்திருப்பாள்?
“என்னம்மா?”
ஜமுனா மௌனமாயிருந்தான். மழை வெளியே பலக்கப் பிடித்துக் கொண்டது. அந்தக் கேள்விக்கு அவள் பதில் சொல்லியாக வேண்டும். உண்மைகளை உடைத்துச் சொல்ல வேண்டிய தருணம், இவ்வளவு துரிதமாகச் சற்றும் எதிர்பாராத ஒரு வேகத்தில் உருவாகி விட்டது தான், அவள் வாயை அடைத்து விட்டது.
“பிடிக்கலையா?”
“அப்பா...அப்பா... உங்கள் முகத்தைத் தொங்க வைக்கப் போகும் பதிலை வைத்திருக்கிறேனே... இதைக் கேட்டு நீங்கள் எப்படித் திடுக்கிடுவேள்... என்ன செய்றது? இப்படி நேர்ந்து விட்டது. எந்தத் தப்பும் நடக்கலே. இருந்தாலும் மனசு திருடு போய் விட்டது. என் ஜாக்கிரதையை மீறி, என் கண்டிப்பை மீறி. நீங்க எப்படிப்பா தாங்குவேள்?” மனசு மறுகிற்று.
“மனசு விட்டுச் சொல்லம்மா...”
அவள் தன்னைத் தயார் செய்து கொண்டாள்.
“இப்ப எனக்குக் கல்யாணம் வேண்டாம்பா.”
மனசுக்குப் பிடிக்கவில்லையென்றால், ஜமுனா வெளிப்படையாகச் சொல்லி விடுவாள். இந்தப் பதில் வேறு மாதிரி இருக்கவே அவர் திடுக்கிட்டார். அவள் குரலும் வேறு மாதிரி இருந்தது.
“அப்படீன்னா...”
அதை அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கே நேரிட்டதை அவளால் தாள முடியவில்லை. தன் மனசை அவரிடம் தெரிவிக்க ஒருத்தர் இருந்திருந்தால்? அண்ணா ராகவன்? ஊஹும். அம்மா... அம்மா இருந்திருந்தால்... ஜமுனா வசமிழந்து விட்டாள். திடீரென்று துக்கம் பொங்கிற்று. விசித்து விசித்து அழத் தொடங்கினாள்.
“ஜமுனா... ஜமுனா... என்னம்மா?” - அவளைத் தேற்றுவதற்காக எழுந்த ரங்கையர், ஏதோ ஒரு அச்சம் தடுக்க அப்படியே நின்று விட்டார்.
ஜமுனா தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள். மழை வெளியே விளாசிற்று.
இப்போது இதை விட்டு விடலாம் என்று நினைத்தார் ரங்கையர். ஆனால் இது ஏதோ அபாயக் குறி என்று அவருக்குள் ஓர் உணர்வு துணுக்கென்றது.
“ஏம்மா... அழறே... என்ன நடந்துடுத்து? பிடிக்கலேன்னா வாண்டாம்!”
அவள் அழுகை தணிகிறவரை அவர் காத்திருந்தார். ஜமுனா முழங்காலிட்டு அதன் மீது முகத்தைக் கவிழ்த்துக் 
கொண்டிருந்தாள். முதுகு விம்மி விம்மித் தணிந்தது. மழை ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
மழையும் அழுகையும் தணிகிறவரை அவர் காத்திருந்தார்.
திகிலும் அரைகுறைச் சந்தேகங்களும், தாயற்று வளர்ந்த மகளின் வாடிக் கொண்டு வரும் பருவமும், காலா காலத்தில் அவளது கடமையை நிறைவேற்றாத கையறு நிலையும் அவரது நெஞ்சைப் பின்னின. ரங்கையர் துன்பத்தை மௌனமாகத் தாங்குவது போல் கண்களை மூடிக் கொண்டார்.
வழிந்த கண்ணீரோடு அவரை நிமிர்ந்து பார்த்த ஜமுனா ரங்கையரின் மூடிய கண்களைக் கண்டதும், தைரியமிழந்து மீண்டும் முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டாள்.
“ஜமுனா...” அவர் குரல் கரகரத்தது.
“.......”
“என்னண்டே சத்தியமா இரும்மா.”
“ஏம்மா இப்படி அழறே? நோக்கு வேற அபிப்ராயம் இருக்கா...?” அதைக் கேட்கும் போது அவர் குரல் நடுங்கிற்று.
“........”
“வேற யாரையோ மனசுலே நெனச்சண்டிருக்கியா?”
அவள் பதில் முழங்காலின் மேல் பதிந்திருந்த தலை அசைவின் மூலம் வெளிப்பட்டது.
“யாரது?” - ரங்கையரின் தந்தை உள்ளம் திடீரென்று நிலை தாழ்ந்தது போல ஹீனமுற்றது.
“மோகன்... எதிர்த்தாத்து மோகன்.”
“பழக்கம் உண்டோ?”
“ம்...ம்...ம்”
“எத்தனை நாளா?”
“ஆறு மாசமா”
மழை அப்போது நின்றது. ஓங்காரம் அடங்கி பிசுகிசுவென்ற தூரல்கள் விழுந்து கொண்டிருந்தன. வெளியே சாக்கடை வெள்ளம் ஓடுவதையும், தெருவில் பேச்சுக் குரல்கள் ஈசலாய்க் கிளம்பியதையும், கேட்டுக் கொண்டு மரக் கட்டை மாதிரி உட்கார்ந்திருந்தார் ரங்கையர்.
அவரது பெருமை சீலம், ஞானம், மகள் மீது வைத்திருந்த பாசம், அவர் போற்றிய தர்மம் எல்லாம் உருண்டு உடைந்து சாக்கடை வெள்ளமாக ஓடிப்போக, தான் மட்டும் வெறிச்சிட்டு நிற்பதாக உணர்ந்தார்.
மோகனை அவருக்குத் தெரியும். ஓட்டலில் அக்கவுண்ட் வைத்திருந்தான். எப்போதும் சிகரெட்டும் கையுமாக அலைவான். கிளப்பில் சூதாடுவதாகவும், வேறு என்ன என்னவோ சகவாசங்கள் உண்டென்றும் கேள்விப்பட்டிருக்கிறார். அவனுக்கு ஓட்டலில் ஒருநாள் சாம்பார் பரிமாறும்போது, மது நாற்றம் கூட வந்தது. சரளமாக அவன் மராட்டி பேசினான், நிச்சயம் அவள் ஐயராக இருக்க முடியாது.
அவர் சிலை போல் உட்கார்ந்திருந்தார். அவரது முழு வாழ்க்கையும் அவர் முன் ஒரு கேள்விக் குறியாயிற்று. ‘கடாம்பி’ நாராயணதாஸர்... நவகாளி நாராயணசாமி... ஸ்மிருதிகளிலும் பிரமாணங்களிலும் மூச்சு விடாமல் தர்க்கம் செய்யும் வைத்தியநாத ஐயர்... சங்க மடத்துக் காரியஸ்தர்கள்...ஆனந்தராவ்... ஆனந்தபவன் சகாக்கள்... வாடிக்கைக்காரர்கள்... எவ்வளவு பெரிய வட்டம்.
அவர் தலை சுழன்றது.
‘என்ன வாழ்க்கை வாழ்ந்து விட்டு இந்த சங்கதியைக் கேட்க இன்னும் உயிர் இருக்கிறதே!’
“ஜம்னா... ஒன்னை எவ்வளவு ஆசாரத்தோடு வளர்த்தேன். ஒன் புத்தியை எவ்வளவு மேலான விஷயங்களிலே செலுத்தினேன்... இவ்வளவு கீழ்த்தரத்துக்கு ஒன்னை எந்தப் பிசாசும்மா சேர்த்துட்டது?”
- அவர் மௌனமாகக் குமுறினார். ஜமுனாவின் தலை நிமிரவேயில்லை.
“இது ஏன் நேர்ந்தது... எப்படி நேர்ந்தது” என்று கேள்விகள் அவர் மனசில் சம்மட்டி கொண்டு தாக்கின.
வெகுநேரம் கழித்து அவர் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு பேசினார்.
“இது நடக்காது ஜம்னா... அவன் ஒரு நீசன்... நோக்குத் தெரியாது... அவனுக்கு எத்தனையோ துர்ச்சகவாசம் பழக்கம் உண்டு.”
“நேக்கு எல்லாம் தெரியும்பா.”
அந்தப் பதில் அவரை மேலும் திணற அடித்தது.
“தெரிஞ்சுமா? நோக்கென்ன பைத்தியமா...?”
“அவர் ஒரு கட்டுப்பாடில்லாதவர் தாம்பா... ஆனா அவரை அடக்கி நேர் பண்ணினா ரொம்ப உயர்ந்த மனுஷரா ஆயிடுவார்!”
“அவர்... சீ!” ரங்கையருக்கு குமட்டிற்று. அவள் குரலில் தெரிந்த தீர்மானமும், அவனை அளந்து வைத்திருப்பது போல் அவள் பேசுவதும் நெருப்பாய்த் தகித்தது. தன்னை மறந்த மூர்க்கம் பிறந்தது.
“என் உயிர் இருக்கிறவரைக்கும் அது நடக்காது ஜம்னா.” அந்த விஷயத்துக்கு மறு தீர்மானமே இல்லாதது போல் தீர்க்கமாக முடிவு கட்டிய மாதிரி, அவர் குரலில் வைரம் பாய்ந்திருந்தது.
“அப்பா...” என்று அதிர்ந்து போய்க் கேவினாள் ஜமுனா.
“நானும்... என் மனசும்... நேக்கும் அதே மாதிரி...!”
அவள் விம்மினாள்.
“போறும் நிறுத்து! நோக்கு விவாகமே ஆகாமே நீ கன்னியாவே இருந்துட்டாலும் சரி... இது ஒண்ணு மட்டும் நடக்காது!”
ரங்கையர், போட்ட சட்டையோடு அங்கவஸ்திரம் கூட இல்லாமல் குடையைக் கூட மறந்து, வெளியே புறப்பட்டு விட்டார்.
‘நானும் அவர் மகள் தான்’ என்று சொல்லிக் கொண்டு அவள் வீட்டு வேலைகளைக் கவனிக்க எழுந்தாள். நிறைந்திருந்த குடங்களில், மிஞ்சிய மழைத்துளி முகட்டிலிருந்து சிதறி வட்டம் போட்டது.
“ப்பாய்ங்... ப்பாய்ங்” என்ற ஐஸ் வண்டிக்காரன் வெளியேயிருந்து ஹாரன் அடித்தான். அவனிடம் மத்தியானத்தில் ஒன்றில் இரண்டில் ஜமுனா பால் ஐஸ் வாங்குவாள்.
“வேண்டாம்பா... இந்த மழையில் ஐஸ் எதுக்கு?”
“ஹர்த்தால் ஆச்சேன்னு ஏகமா சரக் போட்டேன். வியாபாரமே ஆகலேம்மா, மழை மோசம் பண்ணிடுச்சி” - அவன் பெருமூச்சு விட்டான்.
“அப்படியா... சரி... எனக்கு வழக்கமாகக் கொடுக்கற பால் ஐஸைக் குடு.”
ஐஸைக் கொடுத்து விட்டு வண்டிக்காரன் தெருக் கோடியில் மறைந்தான்.
“இந்த மழையிலே ஐஸா?” என்று ஒரு குரல் கேட்டது.
அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். ‘மோகன்!’ பனியனோடு நின்று கொண்டிருந்தான். பொறுப்பற்ற ஷோக் பேர்வழியைப் போல் அவன் சிரித்தான்.
அவள் பார்வையில் ஏதோ ஆழம் தட்டுப்பட்டது போல் அவன் சிரிப்பு மறைந்தது. அவன், தெருவில் வலமும் இடமும் திரும்பிப் பார்த்து விட்டு, போஸ்ட் என்றான். அது அவர்கள் மத்தியில் ஒரு சங்கேதம். தபால் அனுப்புகிறேன் என்று அர்த்தம்.
ஜமுனா அவனைப் பார்த்து நெடுமூச்செறிந்து உள்ளே திரும்பினாள். மோகன் இப்போது ஏதாவது ஒரு புத்தகத்தில் சீட்டை மறைத்து அனுப்புவான். அதைக் கொண்டு வரும் பொடியனிடம் ஐஸைக் கொடுத்து விடலாம் என்று ஒரு டம்ளரில் அதைப் போடத் திரும்பினாள்.
“அக்கா... மோகன் மாமாட்டே பொஸ்தகம் கேட்டியாமே!” என்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் அரை நிஜார் சுந்தரம்.
அவன் போன பிறகு ஜமுனா புத்தகத்தைத் திறந்து கடிதத்தை எடுத்துப் பிரித்தாள்.
“அன்புள்ள ஜமுனா,
இனிமேல் நான் இங்கிருக்க முடியாது. நம் விஷயம் எல்லாருக்கும் தெரிந்து விட்டது. என்னைத் தாகுவதற்குத் திட்டம் தீட்டுகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து. எனவே இன்று இரவு புளூமவுண்டன் எக்ஸ்பிரஸில் நாம் இருவரும் புறப்படுகிறோம். புறப்படுவாய் அல்லவா? உன்னை நம்பி ஏற்பாடு செய்யலாமா?
உயிரில் பிரிவதாய் இருந்தாலும் அது உன்னோடு பிரிய வேண்டும் என்று துடிக்கிறேன். உன் சம்மதத்தை தெரிவிக்க உங்கள் வீட்டுக் கொடிக் கம்பியின் மீது உன் பச்சை ஜாக்கெட்டைக் காயப்போடு.
துணிமணிகளையும், முடிந்த அளவு ரொக்கத்தையும் எடுத்து ஒரு பெட்டியில் போட்டு வைத்திருக்கவும். ஒரு கூலியான அனுப்புகிறேன். அவன் தலையில் பெட்டியை வைத்துவிடவும். தெருத் திருப்பத்தில் நான் டாக்ஸியுடன் காத்திருக்கிறேன். மற்றவை நேரில்.
உன்,
மோகன்
“எவ்வளவு துரிதமாக விஷயங்கள் ஓடி வருகின்றன! ஏன் இந்த வேகம்? என்ன செய்வது... அப்பா... அப்பா...”
வெகுநேரம் திக்பிரமை பிடித்தது போல் நின்றாள் ஜமுனாபிறகு அந்தக் கடிதத்தைப் புத்தகத்தினுள் வைத்து விட்டு அவள் உள்ளே போனாள்.
அரை மணி நேரம் கழித்து அந்த வீட்டுக் கொடிக் கம்பியில் அவளது பச்சை ஜாக்கெட் உலர்ந்து கொண்டிருந்தது.

ஜமுனா-12


12
வேதாந்த கீதம் புருஷம் பஜேஹம்
ஆத்மானம் ஆனந்தகனம் ஹ்ருதிஸ்தம்
கஜானனம் யம்ஸ்ரீமகசா ஜனானாம்
மகாநதகாரோ விலயம் பிரயாதி:
கூடத்தை ஒட்டிய வடக்குப் பார்த்த அறையிலிருந்து ரங்கையரின் கம்பீர தொனி, நாத ஜங்காரத்தோடு வந்தது. அறைக்கு வெளியே கூடத்தில் சிறிய துண்டுப் பாயின் மீது அமர்ந்து, ஜமுனா பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள்.
ரங்கையரின் ஸ்லோகங்கள் கரவில்லாத இருதயத்திலிருந்து வருவது போல், ஆன்ம லயத்தின் சங்கீதமாய் ஒரு நதியின் கம்பீர கதியாய் ஒலித்தன. இது சாரதா திலகத்தில் வரும் கணேச ஸ்துதி என்று புரிந்து கொண்டாள் ஜமுனா.
வாசலில் மழை திடீரென்று பலத்தது. கொட்டி முழக்கப் போகிறேன் என்று அச்சுறுத்துவது போல் ஆரம்பித்துச் சட்டென்று குறைந்தது. சாரல் தெறிக்கவே ஜமுனா எழுந்து பாயையும் தாம்பாளத்தையும் நகர்த்திக் கொண்டு, சற்று உள் தள்ளி உட்கார்ந்தாள். சட்டென்று தாழ்ந்த மழை, ஓரிரு விநாடியில் கிறுகிறுவென்று உயர்ந்தது. மீண்டும் ஒரு தணிவு.
நடையில் மாட்டியிருந்த பழங்காலத்து அறுகோண ஜப்பான் கடிகாரம் டங்டங் கென்ற நிறுத்தி நிறுத்தி ஒரு நிதானத்தோடு பத்து மணி அடித்தது.
மீண்டும் ரங்கையரின் குரல் சங்க நாதம் போல் உள்ளிருந்து வந்தது.
ஈஸா வாஸ்யம் இதம் சர்வம்
யத் கிம் ச ஜத்யரம் ஜகத்
தென தியக்தென புஞ்சீதா
மா கிருதஹ் கஸ்ய ஸ்வித்-தனம்
ரங்கையர் ஸ்லோகம் சொல்வதை நிறுத்தி விட்டு கொழந்தே “ஜம்னா...” என்று அழைத்தார். அந்த அழைப்பில் வாஞ்சை குழைந்தது.
“என்ன அப்பா?”
“இப்ப சொன்னேனே, அந்த ஸ்லோகத்தைக் கேட்டியோ?”
“கேட்டேம்பா...”
“எதிலே வர்றது சொல்லு பார்ப்போம்.”
“ஈசோபநிஷத்திலே மொதல் ஸ்லோகம்.”
“பேஷ்! அர்த்தம்?”
“அசையும் ஜகத்திலுள்ள ஒவ்வோர் அசையும் பொருளிலும் ஈஸ்வரன் நிரம்பி இருக்கார். இந்தப் பொருள்களின் மேலே இருக்கற பற்றை விடுவதன் மூலம் தான், நீ சுகம் பெறுவது சாத்தியம். பிறத்தியார் எவருடைய செல்வத்திலும் ஆசை வைக்காதே...”
ரங்கையர், உள்ளே இடப்புறம் ஸ்ரீராமச்சந்திரனும் வலப்புறம் கிருஷ்ண பகவானும் அவற்றின் கீழே ஸ்ரீராம கிருஷ்ணருமாகக் காட்சியளித்த படங்களின் அடியில் மான் தோல் மீது உட்கார்ந்தவாறு பேசினார்.
“இந்த ஸ்லோகத்தின் மேலே காந்திக்கு அபாரப் பிரமை தெரியுமோ?”
“அப்படியாப்பா...?”
“ஆமாம், திடீர்னு ஒரு வேளைலே எல்லா வேதங்களும் உபநிஷத்துகளும் வெந்து சாம்பலாகப் போயிட்டாலும் ஈசோபநிஷத்தின் இந்த மொதல் லோகம் மட்டும் மிஞ்சினா. அது ஒவ்வொரு ஹிந்துவினுடைய நினைவிலே நீங்காமே நின்னுடும்ன்னா, ஹிந்து மதம் அழியாமே என்னிக்கும் வாழும்னு சொல்லியிருக்கிறார்!”
“சத்திய வாக்குதான்.”
ஜமுனாவின் பதில் ரங்கையருக்குப் புளகத்தை ஏற்படுத்திற்று. மெதுவாகப் புன்னகை செய்து கொண்டார். தந்தையின் ஞானம் மகளிடம் சிந்தியிருப்பது பெருமை தந்தது.
விளையாட்டுப் போக்கு மறைந்து மழை சோவென்று பலக்கப் பிடித்துக் கொண்டது. ரங்கையர் மான் தோலிலிருந்து எழுந்து ஒரு தரம் கைகூப்பி நமஸ்கரித்து விட்டுக் கதவோரமாகப் போட்டிருந்த ஸ்டூலின் மீது வந்து உட்கார்ந்தார்.
மகளோடு பேச வேண்டுமென்ற ஆவல், மழையின் இரைச்சலைப் பொருட்படுத்தவில்லை. அவர் வந்து உட்கார்ந்தும் ரங்கையரின் மனப்போக்கு புரிந்து ஜமுனா அவரை நிமிர்ந்து பார்த்துப் புன்னகை செய்தாள்.
“இந்த வருஷத்தில் நீங்க காத்தாலே பத்து மணிக்கு வீட்டிலே இருக்கிறது இதான் இரண்டாவது தடவை காலையிலே இருந்து நீங்க ஓட்டலுக்குப் போகலே.”
“மொதல் தடவை எப்போ?”
“வைகாசியிலே ராகவன் வந்திருந்தானே, அன்னிக்குக் காலையிலே நீங்க ஓட்டலுக்குப் போகலே!”
“அவர் வீட்டில் தங்குவதை ஜமனா எவ்வளவு ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறாள்’ என்று எண்ணி ரங்கையர் மெதுவாகச் சிரித்துவிட்டு மழையைப் பார்த்தார். பகலில் வீட்டில் தங்கும் அனுபவம் இதமாகத்தான் இருந்தது.
“பாவம்...! ஹர்த்தால்காராளுக்குப் பெரிய ஏமாற்றம்!”
“ஏம்பா?”
“அவங்க ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த விடாமே மழையே ஆர்ப்பாட்டம் நடத்திண்டிருக்கே!”
ஜமுனா தட்டிலிருந்த முல்லைப் பூக்களை கிளறிக் கொடுத்தாள்.
ரங்கையரின் தந்தை உள்ளம் நெகிழ்ந்து பூரித்தது.
“இவள் வயசுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆகப்போறது. இன்னும் சரியான வரன் தகையலே. வரதட்சணை... வரதட்சணைன்னு ஓநாயா அலையற கும்பல் தான் வந்துண்டிருக்கு. இந்தச் சௌந்தர்யம்... இந்த ஞானம்... இந்தப் புத்திச் சாதுர்யம் எதுவும் எந்த யோக்கியவான் கண்ணிலும் படல்லே... இருக்கட்டும். விதி எப்படியோ லபி அப்படி... எவனோ ஒருத்தன் இவளுக்குன்னு பொறந்திருக்கான். இந்தப் புஷ்பம் பரிபூரணமா பூத்து மலர்ந்திருக்கிற இந்த வேளைக்கு வருவானோ... இன்னம் தாமதிச்சு வருவானோ... நம்ம பிரயத்தனம் எல்லாம் விரயமாயிண்டே போறதப் பார்த்தா பகவத் சங்கல்பம் ஏதோ இருக்குன்னு தோணறது...’ என்று நினைத்தவாறு தமக்குள் பீறிட்ட பெருமூச்சை ஸ்வரம் குறைந்து மௌனப்படுத்தினர் ரங்கையர்.
வெளியே நிலையாகப் பெய்த மழையில் திடீரென்று ஒரு மாறுதல். படபடவென்று சிறிய தவளைக்குஞ்சுகள், கூடத்திலும் வாசலிலும் தாவுவது போல ஆலங்கட்டிகள் சிதறித் தெறித்தன.
“அப்பா... அப்பா... ஆலங்கட்டி விழறதுப்பா” என்று மகிழ்ச்சியோடு கூவினாள் ஜமுனா.
சிறிதும் பெரிதுமாக வாசலில் தெறித்து வீழ்ந்த ஆலங்கட்டிகள் வந்த விசையில் தரையில் மோதி இன்னொரு துள்ளுத்துள்ளின. தன்னை மறந்து கைகொட்டிச் சிரித்தாள் ஜமுனா.
அந்த ஆச்சரியமும் குதூகலமும் அவள் முகத்தில் பளீரென்று விகசித்தன. ரங்கையர் புன்னகையோடு அவளைப் பார்த்தார். ஒரு குழந்தை மாதிரி வினோதங்களையும் ஆனந்தத்தையும் வாங்கிக் கொள்ளும் ஜமுனாவின் உள்ளம் அவரைக் கிளர்ச்சியுறச் செய்தது.
வாசல் தரையில் விழும் ஆலங்கட்டிகளின் விளையாட்டை ரசிக்கத் தொடங்கினார்.
“ஒங்களுக்கு ஒண்ணு ஞாபகம் வர்றதாப்பா?”
“என்னது கொழந்தே?”
“நானும் ராகவனும் அப்போ ரொம்ப சின்னவங்களாயிருந்தோம். இந்த மாதிரி ஆலங்கட்டி மழை பெய்தது. அதை சீசாவிலே போட்டு எடுத்து வச்சா, தேள் கடிக்கு நல்லதுன்னு பள்ளிக்கூடத்திலே பிள்ளைகள் சொல்றதைக் கேட்டு நம்பிண்டு. ஒரு சீசாவை எடுத்துண்டு ராகவன் அவசரமா ஓடி வந்தான். கால் சறுக்கிப் போதேர்னு வாசல்லே வெள்ளமா நின்னுருந்த மழை ஜலத்திலே விழுந்துட்டான். நீங்க ஓடி வந்து அவனைத் தூக்கினேன். தலையிலே அவனுக்கு நல்ல அடி!”
ஜமுனாவின் ஞாபக சக்தி எவ்வளவு கூர்மையானது என்று தமக்குள் வியந்து கொண்டார்.
ஜமுனா திடீரென்று அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள்.
“சமுத்திரத்திலே கப்பலிலே போகறச்சே கூட, கனமா மழை பெய்யும் இல்லேப்பா?”
“ஏன் பெய்யாது...? மழைக்கு இடமா, காலமா?”
“சமுத்திரம் அப்போ பெரிசா குமுறுமாமே?”
“இருக்கும்”
“பெரிய புயல், சூறாவளிகூட வருமோல்லியோ?”
“வரலாம்.”
தூர தேசங்களின் சமுத்திர வெளிகளில் இரவு பகல் பேதமின்றிப் புயலும் அலைகளும் போராடும் சூழ்நிலைகளில் ராகவனை வைத்து நினைக்க அவரது தந்தை உள்ளம் சங்கடப்பட்டது. ஜமுனா மேற்கொண்டு பேசாமல் ஏதோ மனோ நிலையில் மௌனமானாள்.
ஆலங்கட்டிகள் டப் டப் பென்று தெறித்துத் தெறித்து விழுந்தன.
ரங்கையரை ராகவன் நினைவு தாக்கி வருத்தத் தொடங்கிற்று.
பால்யத்திலிருந்தே ராகவன் அவருக்கு ஒரு கவலை. எவ்வளவு உயரமான மரமாக இருந்தாலும் விறுவிறுவென்று ஏறிவிடுவது. ஏரியில் நீர் ததும்பும் காலத்தில்குதித்து நீந்துவது, சைக்கிள் ரேஸ் விடுவது என்று எப்போதும் சாகசத்துக்கே துடித்துக் கொண்டு நிற்பான். முனிசிபல் ஹைஸ்கூலில் படிக்கும்போது, முக்கியமான வாலிபால் ப்ளேயர். ஸ்போர்ட்ஸிலும் எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான்.
ராகவனின் உடம்பில் ஹனுமத் பிரசன்னம் இருப்பதாக ரங்கையர் கணக்கிட்டார். ராகவனுக்கும் ஆஞ்சநேயர் என்றால் பரம பக்தி. தினசரி கடைத் தெருவில் இருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போய் விட்டு வருவான். ஒன்பதாவதுக்கு மேல் அவனுடைய அடங்காத இளமைத் துடிப்பைப் பற்றிக் கவலை ஏற்படவே அவனை ஒய்.எம்.சி.ஏ. மாணவர் ஹாஸ்டலில் சேர்த்து விட்டார் ரங்கையர்.
ஒய்.எம்.சி.ஏ. அவனுடைய கட்டுப்பாடற்ற சக்திப் பெருக்கைச் சாணை தீட்டி வைரமாக்கிற்று. நிர்வாகி ஜான்ஸன் அவனை நெறிப்படுத்தினார். ஸ்காட்லாந்திலிருந்து கடல் கடந்து வந்து அந்தச் சிற்றூரின் மாணவர் குலத்தில் தன்னை அடையாளம் கண்டு கொண்ட அவரது பரந்த இதயம் ராகவனின் மன வரம்புகளை விஸ்தரித்தது.
கடல் கடந்து சென்று தேசங்களை மனத்தால் தழுவிக் கொள்ளும் ஆவலை அவர் வளர்த்தார். மெர்ச்சன்ட் நேவியைப் பற்றி ஒய்.எம்.சி.ஏ.வில் திரையிடப் பெற்ற ஒரு சினிமா அவன் கனவுகளுக்கு உருவமளித்தது. ஒய்.எம்.சி.ஏ.விலேயே படித்து விட்டு, விசாகப்பட்டினத்தில் கமாண்டராகப் பணிபுரிந்த ஒருவர் தற்செயலாகத் தனது பழைய ஹாஸ்டலைப் பார்க்க வந்த போது, ராகவன் அவரைச் சந்தித்தான்.
ரங்கையரிடம் சொல்லிக் கொள்ளாமல் ராகவன் அடுத்த மாதம் விசாகப்பட்டினத்திற்குத் தன்னந்தனியாக ரயில் 
றிவிட்டான்.
ஒரு மாதம் கழித்துக் கப்பற் பயிற்சியில் சேர அவருடைய சம்மதக் கையெழுத்துக்கு கடிதம் வந்த போது தான் அவன் விலாசம் தெரிந்தது. கடிதத்தை எடுத்துக் கொண்டு அவர் ஒய்.எம்.சி.ஏவுக்குப் போனார். ஜான்சன் அவருக்குத் தைரியம் தந்தார். ரங்கையர், ராகவன் பாதைக்குத் தடையாக இருக்க விரும்பவில்லை.
வருஷங்கள் ஐந்து ஓடி மறைந்தன.
தெருக்கதவைத் தள்ளித் திறந்து கொண்டு குடையும் கையுமாகத் தெப்பலாக நனைந்தவாறு நவகாளிநாராயண சாமியின் உருவம் உள்ளே நுழைந்தது.
“என்னடா நாணா இது.. இந்த மழையிலே?” என்று திடுக்கிட்டு எழுந்து அவரை வரவேற்றார் ரங்கையர்.
ஒரே பாய்ச்சலில் உள்ளே வந்தார் நவகாளி.
வயது ஐம்பத்தைந்துக்கு மேல். நெருப்பு மாதிரிச் சிவப்பு. நெட்டை, திடகாத்திரம், பெரிய காதுகள், வழுக்கைக்கு வழிவிட்டு அலையோடிய அமெரிக்கன் கிராப்பு, சுத்த நரை, ஆடைகள் எல்லாம் கதர், பிறைச்சந்திர வடிவத்தில் சந்தனக்கீற்று நெற்றியில் கரைந்து ஆறாக ஓடிற்று. கண்களில் தீர்மானமும் உயிர்ச் சக்தியும் ஆரத் தழுவும் அன்பும் மின்னத் தெறித்தன. கலகல வென்று வெண்கலக் குரல்.
“தலையைத் துவட்டுங்கோ மாமா!” என்று டவலைக் கொண்டு வந்தாள் ஜமுனா நவகாளியிடமிருந்து குடைய வாங்கினாள்.
“மகராஜியா இருக்குமா” என்று டவலை வாங்கியவர் “என்னடா ரங்கா... டர்க்கி டவலா... கதர்த்துண்டு கிடையாதா? கதரைக் கை கழுவிட்டயோ?” என்றார்.
“டேய் நாணா, ஆபத்துக்குப் பாபமில்லே. கதர்த்துண்டு தேடறதுக்குள்ளே ஜலதோஷம் பிடிச்சிடும். காந்திஜி மன்னிப்பார். தொடச்சுக்கோ” என்று கிண்டல் செய்தார் ரங்கையர்.
தலையைத் துவட்டிக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார் நவகாளி.
நவகாளி நாராயணசாமி, அலிப்பூரிலும் கடலூரிலும் ஏழெட்டு வருஷம் சுதந்திரப் போராட்டத்தில் சிறையிருந்தவர். தீவிர பிரம்மச்சாரி, காந்திஜியின் நவகாளி யாத்திரையில் உயிருக்குத் துணிந்து கலந்து கொண்டவர். நவகாளிப் பட்டம் அப்போது ஒட்டியதுதான். தியாகி நிலத்திலும் மான்யத்திலும் பாரத மாதா தேசிய பாடசாலை என்று ஒரு பள்ளி நடத்துகிறார். முஸ்லீம்களின் அத்யந்த நண்பர். அதே சமயம் ஹிந்துப் பண்டிகைகளையும் விழாக்களையும் ஆத்மீக ஈடுபாட்டோடு, ஊரில் பக்தி இயக்கம் பரவுகிற மாதிரி விமரிசையாகக் கொண்டாடுவார். பொது நிகழ்ச்சிகள் நவகாளி இல்லாமல் சோபிக்காது.
“நான் வந்துண்டே இருந்தேனா, வழியிலே ஒய்.எம்.சி.ஏ. ஜான்சன், அஞ்சுகை ராந்தல் பக்கமா ஒதுங்கிண்டிருந்தார். நான் ஒன்னண்டை வர்றேன்னு கேட்டுத் தெரிஞ்சுண்டு அவசியமா ஒன்னை ஒய்.எம்.சி.ஏ.வுக்கு மழை விட்டப்புறமா வரச் சொன்னார். நான் வரலேன்னா, அவரே வந்திருப்பாராம். விலாசம் தெரியாமே திணறினார்!” என்றார் நவகாளி.
“என்ன விஷயம்?”
“நான் கேட்டேன், ராகவன் சமாசாரம்னாரு. விவரமா சொல்லலே!”
“ராகவன் சமாசாரமா?” - ரங்கையருக்கு ஏனோ மனம் கலங்கிற்று.
அவசியமில்லாமல் அவர் கூப்பிட்டு அனுப்பமாட்டார் என்று அவர் உள்மனம் அரித்தது, என்னது?
திடீரென்று வானத்தில் ஓர் இடி இடித்தது. காது செவிடுபடும் அந்த ஓசையில் அவர் சற்று நடுங்கிவிட்டார்.

Thursday, 31 January 2013

ஜமுனா-11


11
திடீரென்று ஒரு இருட்டு, முன் வரிசையில் சீழ்க்கை ஒலிகள். கதவைத் திறந்து விட்டார்கள். திரையில் நெளிந்த கனவு மறைந்ததும் வெக்கையும் புழுக்கமும், பீடி சிகரெட்டுகளின் புகையுமாகக் குமட்டிற்று. கரண்டு ஆஃப் என்று யாரோ சொல்லும் வார்த்தை மிதந்து வந்தது. ராஜாமணி பத்து நிமிஷம் தாமதித்தான். அதற்கு மேல் பொறுக்காமல் வெளியே வந்தபோது கேட் கீப்பர் “சார் பாஸ்” என்று நீட்டினான்.
வேண்டாம்பா... என்ற மறுத்துவிட்டு நியூ சினிமாவை விட்டு வெளியே நகர்ந்தான் ராஜாமணி.
இரவு மணி பதினொன்றுக்கு மேல் ஆகியிருக்கும். சாலையில் விளக்குகள் இல்லை. கொஞ்ச நேரத்தில் வருமோ வராதோ... விளக்கு இல்லாத சாலைகூட ஒரு சுகம்தான்.
வெளியே வெம்மை தணிந்து காற்று குலாவிற்று. அண்ணாந்து பார்த்தான். ஏரிக்கரைக்கு மேலே பன்னிரண்டாம் பிறைச் சந்திரன். மூன்று நாளில் நிறையப் போகும் குதூகலத்தில் பவனி வந்தது. அம்பாரமாகக் குவிந்திருந்த கருமேகங்கள் சந்திரனின் நேர்ப் பாதைக்கு வழி விட்ட மாதிரி ஒதுங்கியிருந்தன.
ராஜாமணிக்கு ஜமுனா கவனம் வந்தது. அது மறந்து நினைக்கிற கவனம் இல்லை. இடைவிடாத ஊற்றுக்கண் போல் உள்ளிருந்து சுரந்து கொண்டேயிருந்த தியானம், தோல்வி... தோல்வி என்று அந்தத் தியானத்தில் ஒரு சிதைவும் சேர்ந்ததால், எதிலாவது மனசை அமிழ்த்தி மறக்கத்தான் சினிமாவுக்கு வந்தான்.
அந்தப் படமும் ஒரு காதல் கதைதான். புறக்கணிக்கப்பட்டதாகத் தன்னைக் கருதி குடியில் தன்னை அழித்துக் கொள்பவன் கதை. ஏனோ முடிவு வரை காத்திருந்து அந்தத் துயரில் தன்னைக் கரைத்துக் கொள்ள அவனுக்குப் பிடிக்கவில்லை.
இப்படிப் பளிச்சென்ற ஜமுனா மறுத்து விடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவனது இளமை, படிப்பு, அந்தஸ்து, லட்சியக் கனவுகள் எல்லாமே பொய்ம் மணல் போல் புதைந்துவிட்ட மாதிரி உணர்ந்தான் ராஜாமணி.
அசட்டுத்தனமாக ஆரம்பித்துப் பரிதாபமான முறையில் சரிந்து விட்டோமோ என்ற மனம் நொந்தது. எல்லாமே முடிந்து போனது போலவும் தேர் திரும்ப முடியாது முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டது போலவும் அவனுக்கு ஒரு திகைப்பு.
ஜமுனா... ஜமுனா... ஜமுனா...
அந்தக் கண்ணிமைகளும் குறுவியர்வை படிந்த மேலுதடும் அவன் மனசில் குறி பார்த்து வீசும் கத்திகளாக மேலும் மேலும் வந்து பாய்ந்தன.
நிராசைகளால் உருவாக்கப்பட்டது வாழ்க்கை என்ற வேதாந்தக் கசப்பு பிறந்தது. அந்த நிஜத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்குத்தான் சினிமா... சங்கீதம் என்று மனிதர்கள் அழகான பொய்களைச் சிருஷ்டித்திருப்பதாக நினைத்தான்.
இளைஞனின் எண்ணங்களில் முதற்காதலின் தீவிரம் எழுச்சியும் வீழ்ச்சியுமாகப் பின்னும் எண்ணிக்கையற்ற நினைவுக் கோலங்களில் அவன் மனம் தத்தளித்தது.
ஜமுனா... ஜமுனா...
“பால்ய நினைவுகளோடு நின்று விடாமல் அவளை ஏன் சந்தித்தோம்? அந்தச் சந்திப்பும் திருமணமானவளாக இன்னொருவனின் சொத்தாக அவள் ஆன பின்பு நேர்ந்திருக்கக் கூடாதா?’
சர்க்கரை பூசிய முலாம் பழமும், அவள் சுறுசுறுப்பும், அந்தச் சாதுரியமும் அவனை இடைவிடாமல் துரத்தின.
‘எனக்கு வேண்டும், என்ன தைரியம்?’ பார்த்த இரண்டாவது சந்திப்பில் பால்ய சிநேகிதத்தை நினைவூட்டி அவளை அப்படிக் கேட்டது எத்தனை பெரிய குற்றம் என்று கண்டனம் ஒரு பக்கம் எழுந்தது.
ராஜாமணி பூதராங் குளத்தை நெருங்கியபோது, கீழண்டைப் புறமாகத் தர்க்காவிற்குப் பக்கத்தில் ஜட்கா வண்டிகள் நிற்குமிடத்தில் தொப்பென்று ஏதோ சத்தம் கேட்டது. மனம் துணுக்குற்ற நின்று கவனித்தான். பிறையும் நட்சத்திரமுமாக பச்சைக் கொடி பறந்த தர்க்காவிற்கு அருகில் ஜன நடமாட்டம் இல்லை. மீண்டும் எகிறித் துள்ளுகின்ற மாதிரி தொப்பென்ற சத்தம்.
சற்று நெருங்கிப் பார்த்தான். பின்னங்கால்களைக் கட்டிப் போட்டிருந்த கழுதை ஒன்று குப்பை மேய்ந்து கொண்டு நின்றது. ஒருமுறை பிளிறிவிட்டு முன்னங்கால்களால் சற்று நகர்ந்து ஒரு குதிகுதித்துப் பின்னங்கால்களை நகர்த்திற்று.
ராஜாமணிக்குப் புன்னகை வந்தது. விரைவில் அது மறைந்து கழுதையின் மீது ஒரு பரிதாபம் பிறந்தது... தோல்வி உருவாக்கியிருந்த வேதாந்தம், அவன் மனசில் கால்கள் கட்டப்பட்ட கழுதைக்கும் வாழ்க்கைக்கும் ஒரு முடிச்சுப் போட்டது.
சிறிது நேரம் அந்தக் கழுதையின் சோகத்தில் அவன் பங்கேற்றுக் கொண்டு நின்றான்.
எதிரில் மிட்டாய் வண்டியைத் தள்ளிக் கொண்டே வந்து கணகணவென்று மணி அடித்தார் சோடேலால், ராஜாமணி திரும்பிப் பார்த்தான்.
“பாஸந்தி ஹை?” என்று கேட்டான். சோடேலாலின் பாஸந்தி ஒரு மறக்க முடியாத சங்கதி.
“ஹை” என்று அவன் தேவையைக் கேட்காமல் தொன்னையை எடுத்து பாஸந்திப் பாத்திரத்தின் தட்டைத் திறந்து கொண்டே பேசத் தொடங்கினார்.
“படா ஸாப் கைஸா ஹை?”
“அப்பாதானே... நல்லா இருக்கார்.”
“ஒடும்பு நல்லா இல்லே” என்று கொச்சைத் தமிழில் சொன்னார் சோடேலால்.
“வயசாயிடுத்து.”
“ஓட்டலை நீ கவனிக்கணும்.”
வயதானவர்கள் வயதானவர்களுக்குச் செய்யும் சிபாரிசு என்று நினைத்தவாறு ராஜாமணி, காகித அட்டையில் செய்து நீட்டிய ஸ்பூனில், பாஸந்தியை சாலையில் நின்றவாறே ருசி பார்த்தான்.
அவருடைய குறும்புக் கண்களில் ஒரு நகைச்சுவை ஒளி பிறந்தது.
“ஷாதி நஹீ ஹோகா?”
“இன்னும் ஆகல்லே.”
“ஜல்தி கரோ... ஆனந்த பவன் கோ படா ஹோட்டல் பனோ.”
ஆனந்த பவனைப் பெரிய ஓட்டல் ஆக்க வேண்டுமாம். கொஞ்ச நாட்களாக எல்லா மூலைகளிலிருந்தும் அதே குரல் கேட்கிறது. ஆனந்தபவன்... ஆனந்தபவன்... அந்தக் கல்லா மேடையின் நாற்காலியில் அவன் கனவுகளையெல்லாம் கட்டிப் போட்டு, உயரப் பறக்க விரும்பும் அவன் இறக்கைகளை முறித்துவிட்டு, பெல் அடித்து பில்வாங்கும் முடிவே இல்லாத சள்ளைக்கு அவனை ஆளாக்கவே எல்லோரும் முயற்சிக்கிறார்கள்.
ஜமுனா கூட அதைத்தான் கேட்டாள்.
“ஜமுனா... ஜமுனா.”
தொன்னையைத் தூக்கி எறிந்து விட்டு ராஜாமணி. ஜேபியில் சில்லறையை எடுத்து நீட்டினான்.
பஸ் ஸ்டாண்ட் நெருங்கியபோது பளிச்சென்று தெருவிளக்குகள் எரிந்தன.
பஸ் ஸ்டாண்டில் மின்சாரக் கம்பத்தில் பெரிய மூங்கில் தட்டி கட்டியிருந்தது. சிவப்பு எழுத்துக்களில் நாளைக்கு சர்வ கட்சி ஹர்த்தால் நடக்கப் போவதாக எழுதி வைத்திருந்தது.
நாளைக்கு ஹோட்டல் இருக்காது... என்று ராஜாமணி நினைத்துக் கொண்டு நடந்தான். ஆனந்தபவனின் கல் படிக்கட்டுகளில் ஏறி, எஃகு மடிப்புக் கதவை உலுக்கினான். இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குப் போய்த் தூக்கமில்லாமல் தவிக்கப் பிடிக்கவில்லை.
உள்ளே ஏதோ பேச்சுக் குரல்கள் கேட்டன. எல்லோரும் பேச்சு சுவாரசியத்தில் ஆழ்ந்திருந்தால் கலகலவென்ற அதிர்ந்த ஸ்ப்ரிங்க கதவைக் கவனிக்கவில்லை. கை மட்டும் நுழைகிற இடைவெளித் திறப்பில் உள்பக்கமாகத் தொங்கிய பூட்டைக் கடகடவென்ற ஆட்டினான்.
பேச்சுக் குரல் நின்றது.
“யாரது?” என்று உமாசங்கர் குரல் கேட்டது.
“வந்துதான் பாரேன்” என்றான் ராஜாமணி.
“ராஜாவா? இதோ வந்துட்டேன்.” சற்று நேரத்தில் கல்லா மேடையருகில் எரிந்த ஜீரோவாட் வெளிச்சத்தில் அழுக்கு வேட்டியுடன் அவன் சாவியை எடுத்து வருவது தெரிந்தது.
கதவைத் தள்ளித் திறந்து கொண்டே உள்ளே நுழைந்தான் ராஜாமணி.
“ஏன் இன்னும் தூங்காம முழிச்சுக்கிட்டிருக்கீங்க... நாளைக்கு ஹர்த்தால் தானேன்னு சீட்டாட ஆரம்பிச்சுட்டீங்களா?”
“சீட்டா... என்ன ராஜா.. அதைவிட முக்கியமான விஷயம் நடந்துக்கிட்டிருக்கு.”
“என்னது?” என்று உள் படிக்கட்டில் ஏறினான் ராஜாமணி.
ஃபேமிலி ரூமுக்குப் பக்கத்தில் உள் ஹாலில் நுழையம் எதிர்க் கையில் டேபிளின் பக்கத்தில் சப்பணம் போட்டுக் கொண்டு சுப்பண்ணா நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர் கால் விசிறி மாதிரி ஆடிக் கொண்டிருந்தது. மேஜை மீது ஓட்டலின் வெள்ளைப் பூனை சுருண்டு படுத்திருந்தது.
“என்ன ராஜா, தூக்கம் வரலியா?” என்று கேட்டவாறே எழுந்திருக்கப் போனார் சுப்பண்ணா.
“உக்காருங்க மாமா” என்று அவரைத் தடுத்து விட்டு. “என்ன சங்கதி... பஞ்சாயத்தா? என்ற கேட்டவாறே எதிர் நாற்காலியில் ராஜாமணி போய் உட்கார்ந்தான்.
“பஞ்சாயத்தில்லே, ஊர்வம்புதான்.”
ஹாலுக்கு வெளியே இருந்த முற்றத்தில் பயங்கரமான குறட்டை ஓசை வந்தது.
“யார் மாமா அது?”
“வழக்கமான கேஸ்... ஊதுவத்திக்காரரு... ஊரைச் சுத்தின அலுப்பிலே வந்து படுத்துட்டார். படுத்ததிலே இருந்து இப்படி ஒரே அவுட்டு சத்தம்தான்.”
நாளைக்கு ஹர்த்தால் என்ற விச்ராந்தி ஓட்டல் முழுவதும் தெரிந்தது. உள்ளே பாத்திரங்களைத் தண்ணீர் கொட்டி கடமுடவென்ற உருட்டியவாறே அலம்பும் ஓசை வந்தது.
“மாமா. அலமேலு இன்னும் வீட்டுக்குப் போகலே?” என்று சப்பண்ணாவைக் கிளப்பினான் சாரங்கன்.
“எலேய் மணி... இவன் என்னைக் கிளப்பி விடறான்!” என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார் சுப்பண்ணா.
“மணி இருந்தாத்தானே?” என்று ஐயாசாமி பதில் கொடுத்தான்.
“வீட்டிலே தங்கம் தனியா இருப்பாளோ” என்று 
உமாசங்கர் மேலும் கிளறினான்.
“டேய் உமா... நீ பெரிய வம்பன். ஒண்ணுமே தெரியாத சாதுவாட்டம் இருந்துட்டு கிளறிக் கிளறி மைசூர்ப்பாகு பிடிச்சடுவே” என்று கூறியவாறே வெற்றிலைச் செல்லத்தை இடுப்பிலிருந்து எடுத்து மேஜை மேல் வைத்தார் சுப்பண்ணா.
“என்ன மாமா... நீங்க பாட்டுக்கு சரக்கூடம் கட்டறேள்? விஷயம் என்ன?”
“இது தெரியாதா ஒனக்கு... நம்ம மணி இருக்கானோல்லயோ... அவன் தங்கத்தை மோப்பம் பிடிச்சுட்டு அலையறான், நேத்து அவ கழுத்திலே போட்டிருந்த மூணு பவுன் சங்கலியை சந்தைக் கூட்டத்திலே கோட்டை விட்டுட்டாளாம்..”
சுப்பண்ணா சொல்லிக் கொண்டே போகும்போது பாபா கையைக் கட்டிக் கொண்டு வந்து சுவர் ஓரமாக நின்றான்.
“பாபா வேறே கதை சொல்றான்... நம்ம ரங்கையர் ஆத்துக்கு எதுத்தளாப்பிலே இருக்கிறானே... ஒரு மெடிகல் ரெப்ரஸன்டேடிவ் - மோகன்... நம்ம ஓட்டல்லேகூட கணக்கு வச்சிருக்கானே அவன்...”
சாலையில் ஒரு தெய் நாய் எந்தச் சோகத்திலோ ஓலமிட்டது.
“என்னடாது அச்சான்யம்...ம்..சரி... அவனுக்கும் தங்கத்துக்கும் பழக்கம் உண்டாம். இவளேதான் அவன்கிட்டே செயினைக் கழட்டிக் கொடுத்தாள்னு பாபா சொல்றான்...!”
“என்ன பாபா?” என்று அவன் பக்கம் திரும்பினார் சுப்பண்ணா.
அவன் மெதுவாகத் தலையசைத்தான்.
“லோகம் எப்படியெல்லாம் சொழல்றதுன்னே புரியல்லே ராஜா...” என்று அவர் ஏதோ சொல்லிக் கொண்டு போனார். ராஜாமணி காதில் எதுவும் விழவில்லை.
குமாரசாமி கோவிலில் ஜமுனாவின் பின்னால் மோகன் வந்ததும், வேறு ஏதாவதும் இருக்கலாம் என்று ஜமுனா சொன்னதும், ஒன்றையொன்று துரத்திக் கொண்டு அவன் நினைவில் மோதின. அந்த மோகன், பெண்களை நைச்சியம் செய்யும் அவன் பார்வை. ஒரு கள்ளப் புன்னகை... அவன் ரங்கையர் வீட்டுக்கு எதிரில் குடியிருக்கிறான் என்ற ஞாபகம் எல்லாம் அவன் மனத்தில் அலைகளாக மோதின.
“ஜமுனா... ஜமுனா... உன்னைப் போன்ற தேவதைகளை சைத்தான்கள் சீரழிக்குமா?”

Wednesday, 30 January 2013

ஜமுனா-10



10
கிறீச் கிறீச் சென்று ராட்டினம் இரையும் ஓசை வந்தது. தெருக்கதவு ஒந்திரித்தது போல் லேசாகத் திறந்திருந்தது ராஜாமணி வாசற்படியிலேயே நின்றான். கூப்பிடலாமா என்று யோசித்தான். காலை மணி பத்து. ரங்கையர் ஓட்டலில் இருந்தார். அதைத் தெரிந்து கொண்டே அவர் பெயரைக் கூப்பிடுவது நாடகம் மாதிரிப்பட்டது. ஜமுனாவைப் பெயர் சொல்லி அழைக்கும் உரிமை தனக்கு வரவில்லை என்று அவன் உள்ளூர உணர்ந்தான்.
ஆனந்தலட்சுமி ஊருக்குப் போய்விட்டது. அவனுக்குத் தெரியாது. அவளும் கூட இருப்பாள்! 
அதனால்  கதவைச் சுவாதீனமாகத் திறந்து கொண்டு உள்ளே போக முடியவில்லை.
அது மட்டும்தானா காரணம் என்று அவன் தன்னைக் கேட்டுக் கொண்டான். மனசின் அடிவாரத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஒரு தெரு நாய் மாதிரி படுத்திருந்து பல்லைக் காட்டியது.
ஜமுனாவை நினைக்கும்போதெல்லாம் அது உறுமிற்று. அவளது சுறுசுறுப்பு, ராணி மாதிரி ஓர் அநாயாச கம்பீரம், இமையை நிமிர்த்தி அவள் பார்க்கும் பார்வை, அந்த அழகான புன்னகையின் அதிகாரம். அவன் படிப்பு, அந்தஸ்து எல்லாம் அந்த அழகின் முன்னால் சாமான்யப்பட்டுபோய்த் தோன்றும் தாழ்வு மனப்பான்மையைத்தான் ராஜாமணி அனுபவித்தான். விதியின் சீட்டாட்டத்தில் சீட்டுக்கள் கை மாறிவிட்ட மாதிரி அவன் உணர்ந்தான். அவள் உள்ளவாறு ராணியாக இருக்க வேண்டியவள். தான் அவளுக்கு சேவகனாக இருக்க வேண்டியவன்.
குமாரசாமி கோயிலில் அவளைச் சந்தித்த பிறகு தினசரி அப்படி ஒரு சந்திப்புக்கு ஏங்கி அவன் கோயிலுக்கு வரத் தொடங்கினான். அடுத்த நாளில் இருந்து அவள் வருவதையே நிறுத்திவிட்டது அவனுக்கு உறைத்தது. அவள் எவ்வளவு கண்டிப்பானவள் என்பதும் தான் எவ்வளவு சராசரி என்றும் உறுத்திற்று.
உள்ளே ராட்டின ஓசை நின்று பக்கெட்டைக் கிணற்றுச் சுவர் மேல் வைப்பதும், பிறகு ஏதோ பாத்திரத்தில் அந்தத் தண்ணீரை ஊற்றவதும் தெளிவாய்க் காதில் விழுந்தன.
“போஸ்ட்” என்று எதிர்ச் சாரியில் சைக்கிளைத் தள்ளிக் கொண்டே வந்த போஸ்ட்மேன் கேசவலு நாயுடு, வீட்டெதிரில் நின்றார். ராஜாமணிக்கும் ஆனந்தபவனுக்கும் அவர் மிகவும் பரிச்சயமானவர்.
இந்நேரத்தில் ஜமுனா வீட்டெதிரில் நிற்பதைப் பார்த்தால் ரிடையராகப் போகும் கேசவலு நாயுடு சட்டென்று மோப்பம் பிடித்து விடுவார். ஆனது ஆகட்டுமென்று தைரியமாகக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தான்.
கரகரவென்று ராட்டின ஓசை கயிறு கிணற்றின் உள்ளே இறங்கிக் கொண்டிருப்பதைத் தெரிவித்தது. செருப்புச் சத்தம் கேட்டு ஜமுனா திரும்பிப் பார்த்தாள்.
கூந்தலில் ஒரு கற்றைச் சுருள் பிரிந்து நெற்றியில் விழுந்திருந்தது. முகத்தில் குறு வியர்வை. கொசுவத்தை இரண்டாக மடித்து இடீப்பில் செருகியிருந்ததால் செக்கச் சிவந்த முழங்கால்கள் வெளித் தெரிந்தன. அப்படியும் கொசுவம் நனைந்திருந்தது.
தெரு வாசற்படியை அடுத்து ஒரு சிறிய நடை, அதைத் தாண்டியதும் வால் மாதிரி நீண்ட வாசலில் கண்ணைப் பறிப்பது போல் வெள்ளை வெளேரென்று ஜமுனாவின் புடவை, ரவிக்கை, ப்ரா எல்லாம் வரிசையாக ஒரு கொடியில் காய்ந்தன. வெய்யிலில் உடைகளின் வெண்மை கண்ணைப் பறித்தது. அப்போது தான் உலர்த்திய சேலையிலிருந்து நீர் சொட்டிற்று.
“ரங்கையர் இருக்காரா?” - ஒரு பொய்யில் ஆரம்பித்தான் ராஜாமணி.
பக்கெட் தண்ணீர் விளிம்பைத் தொட்டுக் கிணற்றுக்குள் சப்தித்தது. ஒரு கையால் கயிற்றைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் முகத்தில் வியந்திருந்த கூந்தலை ஒதுக்கி விட்டவாறு அவனைப் பார்த்தாள். வளையல்கள் கலகலத்தன.
வெய்யிலில் நெற்றியைச் சுளித்துக் கொண்டு அவன் பார்த்ததும் ராஜாமணிக்குத் தன் துணிச்சல் ஆவியாவதை உணர்ந்தான்.
“அப்பா ஓட்டல்லேதானே இருப்பார்.”
அதற்கு மேல் அங்கே நின்று கொண்டிருப்பதற்குத் தனக்கு ஆதாரமில்லாதது புலப்பட்டது. அவனை வெளியே கிளம்ப விடாமல் ஏறுவெய்யிலில் புடத்தில் வைத்த தங்கம் போல் ஒளிரும் அவளது அழகு அவனைத் தடுத்தது.
ஜமுனா அவன் இன்னும் தாமதிப்பதைப் பார்த்து ஏதோ புரிந்து கொண்டாள். முகத்தைத் திருப்பிக் கொண்டு பக்கெட் இன்னும் நிரம்பக் கயிற்றைத் தளர்த்தி விட்டாள். நிரம்பிய பக்கெட் கயிற்றைச் சுண்டி இழுத்தது.
கிறீச் கிறீச் சென்ற பக்கெட்டை இயக்கும்போது ராட்டினம் இரையத் தொடங்கிற்று. ராஜாமணி வேலையின்றி வெட்டியாக நிற்பது போல் மோசமாக உணர்ந்தான். தண்ணீரை எடுத்துச் சுவரோரமாக வைத்திருந்த பக்கெட்டில் நிரம்பினாள். இரண்டு கைகளையும் ஈரம் போக அவள் உதறிவிட்டபோது, வளையல்கள் துள்ளிச் சிரித்தன. ஒரு விரலால் நெற்றியில் படிந்த குறுவியர்வையை வழித்துச் சுண்டினாள்.
வயிற்றில் செருகியிருந்த கொசுவத்தை அவிழ்த்து விட்டுக் கொண்டு அவன் அருகில் வந்தாள். என்ன பேசுவது என்று புரியாமல் மழுங்கி நின்ற ராஜாமணிக்கு. அவள் சமீபம் ஜிவ்வென்று ரத்தத்தைப் பொங்க வைத்தது.
துணி சோப்புவு அவள் உடம்பின் மணமும் கலந்த ஒரு வாசனை, ராஜாமணியை மேலும் தடுமாற வைத்தது. துணிகளை எல்லாம் துவைத்து முடித்த திருப்தியும் ஒரு தூய்மையும் அவள் முகத்தில் அயர்ச்சியாகப் படிந்திருந்தன.
கரைந்தது போக லேசாக மிஞ்சியிருந்த குங்குமத்தின் சுவடும், மேலுதட்டின் மேல் இழிகளாகப் பூத்திருந்த வியர்வையும், கைகளிலும் கால்களிலும் காணப்பட்ட ஈரமும், அவளதுஅழகில் ஒரு அயர்ச்சிக் களையைச் சேர்த்திருந்தன. செஞ்சந்தன நிறத்தில் மிளிர்ந்த அவளது வயிற்றுப் பாகமும், திரண்ட தோள்களின் வசீகரமும் ராஜாமணியின் இளமையை விழிக்கச் செய்தன.
அந்த சமீபத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் துணிச்சல் தனக்கு இல்லையே என்று அவன் வருந்தினான். ஜமுனா சாவதானமாக, சேலையின் பக்கத்தில் காயப் போட்டிருந்த டவலை எடுத்து கைகளைத் துடைத்துக் கொண்டாள்.
அப்புறம்? என்ற கேட்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் தன்னைச் சபலத்தின் தரை மட்டத்தில் தாழ்த்தி விட்டு விட்டு மீண்டும் ராணியானதை உணர்ந்தான் ராஜாமணி. அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.
“இங்கே ஆனந்தலட்சுமின்னு ஒருத்தர் வந்தாங்களே... அவங்க...?”
“காத்தாலே நாலரை மணிக்கு கேரளா எக்ஸ்பிரஸ்லே போயிட்டாங்க” என்ற அவள் பளிச்சென்று பதில் அளித்தாள்.
“எங்கே?”
“காசிக்கு...”
“அவங்க யாரு?”
“எனக்குத் தெரியாது...”
“நிஜம்மா...?!”
வாசலில் காயப் போட்டிருந்த வடகத்தை விட்டு வெய்யில் நகர்ந்து விட்டதைக் கவனித்த ஜமுனா, வெய்யிலுக்கு நேராக அதை மீண்டும் இழுத்து விட்டுக் கொண்டே அவனைக் கோபமாகத் திரும்பிப் பார்த்தாள்.
“சாரி... நிச்சயமாகவான்னு கேட்க நெனைச்சேன்” என்று தடுமாறினான்.
அவனது தடுமாற்றத்தைப் பார்த்ததும் ஜமுனாவுக்குப் புன்னகை வந்தது. சிரமத்தோடு அடக்கினாள்.
“எனக்குத் தெரிஞ்சவரை அதுதான் நிஜம். அதுதான் நிச்சயம்...”
“ரங்கையருக்கு அவங்க ஒறவா?”
அவள் நாரத்தங்காய் ஊறிய ஜாடியை வெய்யிலுக்கு நகர்த்தினாள்.
“அதான் சொன்னேனே... எனக்குத் தெரியாது...”
அவள் மறைக்கிறாள் என்று ராஜாமணிக்குத் தோன்றிற்று. பதில்கள் இப்படிக் கத்தியில் செதுக்குவது போல் ஒன்றிரண்டு வார்த்தைகளாய் நறுக் நறுக்கென்று வராமல் இருக்கலாமே என்று அவன் மனசு ஏங்கிற்று.
அவன் படிப்பு, புத்தகங்கள், அனுபவம் எதுவுமே அந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்வது என்று உதவாமல் போனது. அவனுக்கு இன்னும் அவமானத்தை உண்டாக்கிற்று.
“நீ ஏன் இப்பல்லாம் கோவிலுக்கு வர்றதில்லே?”
“கோவிலைச் சுத்த நான் போனா என்னைச் சுத்தறவா அதிகமாயிட்டா.”
பேசுவதற்கு அவனுக்கு ஒரு பிடி கிடைத்தது.
“சாரி ஜமுனா... எனக்கு அது நோக்கமில்லே.”
“உங்க நோக்கம் என்னவோ... எனக்கென்ன வந்தது? இப்ப வேறென்ன கேட்கப் போறேள்?”
“நீ ரொம்ப கோவிச்சுக்கறே. நீயும் நானும் புதுசாவா பார்த்துண்டிருக்கோம். பன்னெண்டு வருஷத்துக்கு முந்தி நாம் எவ்வளவு ஒத்துமையாப் பழகி இருக்கோம்.”
“...........”
“எதையோ பார்த்துப் பயந்துட்டேன்னு ரயில்வே ஸ்டேஷன்லே மணி ஐயர் கிட்டே மந்திரிச்சண்டு வர நீயும் நானும் ஒண்ணாப் போவோமே... ஆஸ்பத்திரிக்கு எதிரிலே காங்கிரஸ் மைதானத்திலே கல்பெஞ்சிலே உட்கார்ந்துண்டு கொடுக்காப்புளி வாங்கிச் சாப்பிடுவோமே...”
திடீரென்று ராஜாமணிக்கு நினைவுகள் ஒரு தைரியத்தை வழங்கின. அவன் அவற்றில் தோய்ந்து மூச்சு விடாமல் பேசத் தொடங்கினான்.
“நெய் வாங்கிவர அருணாசல ஐயர் கடைக்குப் போவோம். அப்போ புதுசா பிரஸ் வச்சிருந்தாங்க. அது லொடக் 
லொடக்குனு அடிக்கிற சத்தத்தைக் கேட்டு எவ்வளவு ஆச்சரியமா நீ பார்த்திருக்கே... ஒரு ஈய ஒரு ரூபாயை மஹாலட்சுமி சோடா பாக்டரிலே கொடுத்து சில்லுனு தண்ணீத் தொட்டியிலே அமிழ்ந்திருந்த கலர் ரெண்டு வாங்கிக் குடிச்சுட்டு வெளியே வர்றப்ப என்னை மடக்கிண்டானே... நீ போய்த்தானே நம்ம சர்வர் ஒருத்தனைக் கூட்டி வந்தே?”
ஜமுனா அவனது ஞாபக சக்தியில் கட்டுண்டு நின்றாள் அவளது கனிந்து சிவந்த உதடுகளில் பழைய காலம் ஒரு புன்னகையாய்ப் பாதரசம் போல் மினுமினுத்தது.
“நீ கான்வென்ட்டுக்குப் போனதும் திடீர்னு மாறிட்டே.”
“டொமினிக் சேவியோவுக்குப் போனதும் நீயும்தான்” என்று ஒருமையில் வந்த விளியை நறுக்கென்று நாக்கைக் கடித்து நிறுத்தினாள்.
பின்பு “நீங்களும்தான் மாறிட்டேள்” என்றாள்.
“பார்த்தா கோவப்படற அளவுக்கு நான் ஒண்ணும் மாறல்லே.”
“பார்வை விகல்பமானா கோபம் தன்னாலே வரும்.”
ராஜாமணிக்கு அவள் வேலியிடுவது துல்லியமாக உறைத்தது.
“நாம பார்க்காம போன அஞ்சு வருஷததிலே உன் அழகு அற்புதமா பூரிச்சிருக்கு.”
ஜமுனாவின் முகம் குப்பென்று சிவந்தது.
“அதனாலேதான் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை மொறைச்சுப் பார்க்கிற மாதிரி நான் பார்க்கிறேன். அது ஒனக்கு விகல்பமாப் படறது.”
அவள், நீர் சொட்டிக் கொண்டிருந்த சேலையை ஒன்றாய்ச் சேர்த்து, இன்னொரு தரம் முறுக்கிப் பிழிந்து விட்டாள்.
“இப்போ ராகவன் எங்கே இருக்கான்?”
“ஷெவ்ரான் டாங்கர்ஸ்... எண்ணெய்க் கப்பல். ஃபாகோஃபா கோன்னு அமெரிக்காவிலே ஒரு தீவாம். அங்கேயிருந்து எண்ணெய் எடுத்துண்டு தேசம் தேசமா சுத்தறது...”
“லீவிலே வருவானோ?”
“ரெண்டு மாசத்திலே வரணும்.”
“அதுக்குள்ளே நான் போயிடுவேன்.”
“எங்கே?”
“ஐ, எஃப்.எஸ்.டெஸ்ட் எழுதப் போவேன். செலக்ஷன் கெடைச்சடும். கெடைச்சுட்டா அஸிஸ்டெண்ட் கன்ஸர்வேட்டர் டிரெய்னிங்... டேராடூன்லே.”
அவள் ராட்டினத்தைக் கழற்றி எண்ணெய் போடுவதற்காக எடுத்து வந்தாள். நடந்து கொண்டே பேச்சுக் கொடுத்தாள்.
“ஆனந்தபவனை யார் பார்த்துப்பா?”
“ரங்கையர்... சுப்பண்ணா... எங்க அப்பா!”
அவளது அழகின் சிம்மாசனத்துக்கு இணையாக தான் உயர்ந்து வருவதுபோல் அவனுக்குப் பிரமை தட்டிற்று. ஜமுனா அவனை விசித்திரமாகப் பார்த்தாள்.
“ஏன் வெளியே போகணும்? சொந்தத் தொழிலும் ஊரும் இருக்கறச்சே யார்கிட்டேயோ கை கட்டி ஏன் உத்தியோகம் பார்க்கணும்?” ராட்டின உருளையை ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தாள்.
“காப்பி கிளப் போய் ஒரு உத்தியோகமா... இல்லே தொழிலா...? பி.எஸ்.ஸி முடிச்சட்டு இந்தக் குட்டையையே வளைய வளைய வர்றத்துக்கு என்ன பிடிப்பு இருக்கு?”
ஜமுனா ராட்டினத்தைக் கிணற்றின் மீது மாட்டினாள்.
“சொந்த பந்தம் எல்லாம் ஒரு பிடிப்பில்லையா...? எல்லா ஆபீசரும் ஆனந்தபவன் காப்பியை சாப்பிட்டாத்தான். அக்கடான்னு வேலை செய்யறதா அப்பா சொல்றாரே.
“ஆனந்தபவன் காப்பி இருக்கட்டும். இப்ப நீ எனக்கு ஒரு காப்பி தரமாட்டியா?”
ஜமுனா தைரியமாக அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“மாட்டேன்.”
“மாட்டியா?”
காப்பி தரமாட்டேன் என்று சொல்லிவிட்டு ஜமுனா உள்ளே போனாள். அவள் வெளியே வரும்போது தோலைச் செதுக்கி அழகாக அரிந்த முலாம்பழத் துண்டங்களின் மீது சர்க்கரையைத் தூவி ஒரு பிளாஸ்டிக் தட்டில் எடுத்துக் கொண்டு வந்தாள்.
“தட்டு அழகாயிருக்கே!” என்று சிலாகித்தான் ராஜா.
“அண்ணா ஹாங்காங்கிலே வாங்கி வந்தான்.”
“ராகவன்பாடு ஜாலி... ஹாங்காங், சிங்கப்பூர் எல்லாம் அவனுக்கு வாணியம்பாடி, ஆம்பூர் மாதிரி இருக்கு.”
“எல்லாம் இக்கரைக்கு அக்கரைதான்” என்று சூள் கொட்டினாள் ஜமுனா.
“ஏன் அப்படிச் சொல்றே?”
“நான் சொல்லலே. அவன் சொல்றான். வருஷம் பூரா தண்ணீலே மெதந்துண்டு நாடோடி மாதிரி அலையறேன்னு வருத்தப்படறான். சொந்த ஊர்ப் பாசம் அவனை அரிச்சண்டிருக்கு. பொழுது தப்பினா ஒரு விபத்து. நித்திய கண்டம் பூர்ணாயுசு.”
“சொந்த ஊரை விட்டு வெளியே போனாத்தான் அந்தப் பாசம் வரும்.”
“அதுக்காகத்தான் நீங்களும் போகப் போறேளா?
ஒரு விள்ளலை வாயில் போட்டுக் கொண்ட ராஜாமணி. நிமிர்ந்து பார்த்தான். எதையோ விழுங்கியதைப் போல் அவளது தொண்டை விம்மித் தணிந்தது. அந்தக் கழுத்தில் உண்டான அசைவு அதை முத்தமிட வேண்டும் போல் ஒரு கிளர்ச்சியைத் தோற்றுவித்தது. ராஜாமணி அவளையே பார்த்தான். அணு அணுவாக அவளது கண்கள் உதடு என்று ஒவ்வோர் அங்கத்திலும் முலாம்பழத்துச் சர்க்கரை மாதிரி அவன் கரைந்தான்.
“சாப்பிடுங்கோ” என்று நறுக்கென்று சொன்னாள்.
“ஜமுனா” அடிக்கடி வரம்புகளை ஞாபகப்படுத்தியது ராஜாமணியின் மனசில் அவள் மீது இருந்த மரியாதையை அதிகப்படுத்திற்று.
“இங்கே எனக்குண்ணு யார் இருக்கா?” என்று அவன் குரல் ஏங்கிற்று.
“இன்னும் யார் வேணும்?”
“நீ” என்று பளிச்சென்று கிடைத்த சந்தர்ப்பத்தைத் துணிச்சலோடு பயன்படுத்திக் கொண்டான் ராஜாமணி.
“அசட்டுப் பிசட்டென்று பேசாதேங்கோ. நாம ரெண்டு பேரும் பால்ய சிநேகிதம்கிற ஒறவு ஒண்ணைத் தவிர வேறு மாதிரி எதுவும் கற்பனை பண்ணிக்க வேண்டாம்.”
“ஜமுனா” என்று மெதுவாகக் கூப்பிட்டான் ராஜாமணி. அவள் பார்வை வாசற் கூடத்தில் உட்கார்ந்திருந்த அவனைச் சந்தித்தது. ராஜாமணியின் முகம் சிறுத்து விட்டது. கூம்பிச் சுண்டியிருந்த அந்த முகத்தோற்றம் பரிதாபமாக இருந்தது.
“நீங்க மாத்வ ராயர். நான் ஸ்மார்த்த ஐயர் ஆத்துப் பொண்ணு நடக்கிற கதை ஏதாவது இருந்தாப் பாருங்கோ.”
ராஜாமணி நிலைகுலைந்தான்.
“இந்த வித்தியாசம் இல்லேன்னா. இல்லேன்னா?”
“வேற ஏதாவது...”
ராஜாமணிக்கு அவள் சொன்னதில் ஏதோ நுட்பமான அர்த்தம் இருப்பதுபோல் பட்டது அது என்ன என்ற அவன் மனம் குடைந்தது. மிகுந்த ஏமாற்றத்தோடும் விவரிக்க முடியாத மனப் பளுவோடும் அவன் வெளியேறினான். ஒந்திரித்திருந்த கதவைத் திறந்து கொண்ட அவன் வெளியேறியபோது அந்த வீட்டுக்கு எதிர் மாடியில் கிராதியைப் பிடித்தவாறே, மோகன் அவளைப் பார்த்துச் சிரித்ததையும் ஜமுனா பொய்க் கோபத்தோடு உதடுகள் துறுதுறுக்க அவனுக்கு அழகு காட்டியதையும் ராஜாமணி கவனிக்கவில்லை.

Tuesday, 29 January 2013

ஜமுனா-9



9
“மணி நாலரை ஆச்சே... இன்னும் ரங்கையரைக் காணோமே” என்று தமது பழைய வெஸ்ட் எண்ட் வாட்ச்சின் 
பழுப்பேறிய டயலைப் பார்த்துவிட்டுப் பதைத்தார் ஆனந்தராவ்.
திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாலைச் சுறுசுறுப்போடு காணப்பட்டது. அங்கே நாலைந்து வண்டிகள்தான் நிற்கும் அவற்றில் பாம்பே கேரளா எக்ஸ்பிரஸும் ஒன்று. பெட்டிப் படுக்கைகள், தூக்குப் புட்டிகள், முகமன்கள், வைரப் புன்னகைகள், பட்டுப் புடவைகள்.
“வந்துடுவார் அண்ணா... ரங்கையர் சங்கதி தெரியாதா? கரெக்ட் டயத்துக்கு வந்து நின்னுடுவார்” என்ற பதற்றம் இல்லாமல் பதிலளித்துவிட்டு பிளாட்பார விளிம்பிற்குப் போய் எட்டி வெற்றிலைத் தாம்பூலத்தைத் துப்பிவிட்டு வந்தார் சுப்பண்ணா.
“காலையிலே நீ பல் துலக்கினியோ” என்று முகத்தைச் சளித்துக் கொண்டு கேட்டார் ஆனந்தராவ்.
“ஆச்சுண்ணா, உமாசங்கர் விடிகாலை மூணு மணிக்கு எழுப்பி ஒரு டிகிரி காப்பி கொடுத்தான்.”
“காப்பியை யார் கேட்டது... பல்...?”
“தொலக்கிண்டுதாண்ணா சாப்பிட்டேன்.”
“ஒடனே வெற்றிலை புகையிலை ஆசமனம் பண்ண ஆரம்பிச்சாச்சா?”
“ஹிஹ்ஹிஹ்ஹி” என்று அசட்டு இளிப்போடு தலை குனிந்தார் சுப்பண்ணா.
வேலூர் கோட்டையில் ஆனந்தராவ் தண்ணீர்ப் பந்தல் வைத்திருந்த காலத்திலிருந்து சுப்பண்ணாவின் வாய் இப்படி கவுளி கவுளியாக வெற்றிலையை மென்று துப்பிக் கொண்டிருக்கிறது. இதில் என்ன சுகமோ என்று நினைத்தார்.
“வண்டி நாலே முக்காலுக்கு இல்லே?”
“இன்னிக்குப் பத்து நிமிஷம் லேட். ஒங்களுக்கு ஏன் கவலை? ஒரு பொடிநடை வெளியே போய்ப் பார்த்துவிட்டு வர்றேன்.” - சுப்பண்ணாவுக்குப் புகையிலை தீர்ந்துவிட்ட ஞாபகம் பளீரென்று வந்தது.
“ரொம்ப தூரம் போயிட வேண்டாம். ஒன்னைத் தேடறதுக்கு ஒரு ஆள் அனுப்ப முடியாது.”
“நாற்சந்தி வரைக்கும் போறேன்.”
தூக்கக்கலக்கம் இன்னம் நீங்காத முகங்கள். சிலவற்றில் கவலைகள். பிரயாணக் கிளர்ச்சி தெரியும் முகங்கள். வெள்ளை வெளேரென்ற ஒரு குழந்தை சாக்ஸும் ஷýவுமாக பிளாட்பாரத்தை ஒரு விளையாட்டு மைதானமாகக் கருதி கலகலவென்று சிரித்துக் கொண்டு இங்குமங்கும் ஓடிற்று.
இவர்கள் எல்லாம் எங்கே எந்தக் காரணங்களுக்காகப் போகிறார்கள்? இந்தப் பிரயாணம் சந்தோஷமா.. துக்கமா.. எதை இன்னோர் ஊரில் அவர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கிறது?
ஆனந்தலட்சுமியும் புறப்படப் போகிறாள்.
நூல் தொய்ந்த காற்றாடியைச் சுண்டி மீண்டும் அது பறந்த பழைய வானத்திற்கு இழுத்தது போல் ஒரு விசை நினைவுகள்... நினைவுகள்.
வேலூர்க் கோட்டையில் ஜில்லா கோர்ட்டுக்கு அருகாமையில் சுப்பண்ணாவும் ரங்கையரும் மட்டும் உதவியாகக் கொண்டு அவர் தண்ணீர்ப் பந்தல் நடத்தினார். ஆனந்தலட்சுமி ஒரு வழக்கு சம்பந்தமாக அங்கே வருவாள். கோர்ட்டு பியூன் கூப்பிடுகிறவரை நாலுபேர் கண்களில் படக்கூடாது என்று தண்ணீர்ப் பந்தலில் காத்திருப்பாள்.
மணமான மறுவருஷமே ஆனந்தலட்சுமி விதவையானவள். புருஷன் வீட்டுச் சொத்தில் அவளுக்குப் பங்கில்லை என்ற பலாத்காரமாக அவள் கணவனின் பங்காளிகள் அதை அபகரித்துக் கொண்டார்கள். இதை விடுவதாவது என்று அவள் வீட்டார் அவளிடம் கையெழுத்து வாங்கி வழக்கு நடத்தினார்கள்.
அவள் அழகு அகால வைதவ்யத்தால் அபூர்வமாகச் சுடர்விட்டது. ஆனந்தராவுக்கும் எந்தக் கவலையும் இல்லாமல் மனம் செழிப்பாக இருந்த நேரம். ஆனந்தலட்சுமியின் பார்வையும் புன்னகையும் ஏதோ ஒரு பிறவியில் அவர்களுக்கிடையே இருந்த ஏதோ ஒரு சொந்தத்தை ஞாபகப்படுத்துவது போலத் தாக்கின.
ஆனந்தராவின் பாந்தமான முகத்திலும் கனிவான பேச்சிலும் அவளும் ஒரு புகலிடத்தை உணர்ந்தாள். வீட்டுக்குரியவள் பூட்டைத் திறந்து சுவாதீனமாக உள்ளே பிரவேசித்தது போல அவர் மனசில் அவள் நுழைந்தாள்.
அவருக்கும் கங்காபாய்க்கும் கல்யாணமாகி ஐந்து வருஷம் ஆகியிருந்தது. நீச்சு நிலையின்றி ஓடிய இளமை வேகம் அடங்கி மோகம் தீர்ந்து மிதப்பு நிலைக்கு வந்துவிட்ட பருவம்தான். எந்தக் குறைகளும் அவர்களிடையே இல்லை. எனினும் ஏதோ ஒரு வெற்றிடம். ஆனந்தலட்சுமியால் நிரப்பப்படவென்றே காத்திருந்தது.
ஆனந்தராவ் எதையும் மனைவியிடம் மறைப்பவர் அல்ல. சொன்னார். அதைச் செய்வதைத் தவிர வழி ஏதும் தெரியாதவர் போல் நடந்ததை எல்லாம் அவளிடம் சொன்னார். கங்காபாய் பதில் பேசவில்லை. கண்டிக்கவில்லை. ஒப்பாரி வைக்கவில்லை. வாழ்க்கையே பறிபோனது போல் ஓலமிடவில்லை. மௌனமானாள்.
அவர்களிடையே ஒரு கதவு சாத்தப்பட்டு விட்டது என்று ஆனந்தாவுக்கு ஸ்பஷ்டமாகப் புரிந்தது.
பாவமோ புண்ணியமோ, துரோகமோ என்று அவர் மனத்தில் மெல்லிய கூக்குரல்கள் எழுந்தன. ஆனந்தலட்சுமியின் புன்னகையிலும் அன்பிலும் அவை அடங்கிப் போயின.
கேஸ் அவள் பக்கம் தீர்ப்பான பின்னும் ஒரு வருஷம். ஜட்ஜ்மெண்ட் காப்பி. சொத்து சுவாதீனம், எத்தனையோ சந்தர்ப்பங்கள், வளர்ந்தவை. வளர்த்துக் கொண்டவை. திருப்பத்தூரில் ஓட்டல் வைக்க ஆனந்தராவைச் சிலர் வற்புறுத்தினர்.
அவர் திருப்பத்தூரில் ஓட்டல் திறந்தபோது ஆனந்த லட்சுமிக்கு அங்கே வர முகாந்திரம் குறைந்தது. எனினும் அவள் வந்தாள். இரண்டாவது பயணத்தில் அவள் வீடு திரும்பும் வேளையில் தடிக் கம்புகளுடன் ஏழெட்டுப் பேர் ஓட்டல் மாடியேறி வந்து விட்டனர். அவள் வீட்டு ஆட்கள்.
அவர்களிடம் ‘என் இஷ்டம்’ என்று ஒரே வார்த்தையில் ஆனந்தராவ் மேல் பாய்ந்த அவர்கள் கோபத்தைத் தடுத்தாள் அவள்.
“உன் இஷ்டமா... தொலைஞ்சு போ... வீட்டு வாசல் படி ஏறினா கொலை விழும்” என்று ஒருவன் கத்தினான். அவர்கள் வாய்க்கு வந்ததுபோல் திட்டிவிட்டு வெளியேறினார்கள்.
ஒரு வார்த்தையில் சகல உறவுகளையும் தன் பொருட்டு அவள் அறுத்துக் கொண்டது. ஆனந்தராவுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பாயிற்று. கச்சேரித் தெருவில் ஒரு வீடு பார்த்து அவளைக் குடி வைத்தார்.
உலகத்தின் பார்வையில் ஒரு படி தான் கீழிறங்கி விட்டதை அவர் அந்தராத்மா உணர்ந்தது. கங்காபாயின் மனமாகிய மௌனக் கோட்டையின் கதவுகள் மூடிவிட்டதும் பளிச்சென்று தெரிந்தது.
எனினும் நம்பி வந்தவள் என்ற கடமை உணர்ச்சியை அவர் பெரிதாகக் கருதினார்.
அவள் வரும்போது 57 சவரன் நகைகளோடு வந்திருந்தாள் சுக துக்கம் லாப நஷ்டம் என்று ஓடிய கால ஓட்டத்தில் அவரது ஓட்டல் வியாபாரத்துக்கும் ஒரு விபத்து வந்தது. கடையை மூட வேண்டிய நிர்ப்பந்தம். முதல் போதவில்லை. வியாபாரம் படுத்துவிட்டது. கடன் தலையை மிதித்தது.
நகைகளை மூட்டை கட்டி வந்து நீட்டினாள் ஆனந்தலட்சுமி.
“உன்கிட்டே இருந்துகூட நான் வாங்கிக்கணுமா?”
“ஏன், என்னண்டே வாங்கப்படாதா?”
“இதை வாங்கிக்கிறதை விட மறுபடியும் தண்ணீர்ப் பந்தல் வச்சுடலாம்.”
ஆனந்தலட்சுமியின் முகம் சுண்டி மார்பு விம்மிற்ற.
“மெய்தான். நான் என்ன ஒங்களண்டே தாலி கட்டிண்டவளா என்ன? உங்க கஷ்ட நஷ்டத்திலே எனக்கு என்ன பாத்தியத்தை இருக்கு?”
அவள் தாபம் அவரைத் தகித்தது.
“கொடு, லட்சுமி” என்று அவர் வாங்கிக் கொண்டார்.
“இதோ, இன்னியிலே இருந்து ஓட்டல் உன்னிது. ஏன்னா உன் மூலதனத்திலேதான் இனிமே அது மூச்சு விடணும். நான் அந்த ஓட்டலுக்கு இனிமே வெறும் மானேஜர் தான். ஓட்டல் விலாசத்தைக் கூட மாத்திப்பிடறேன்.”
வாக்களித்தவாறே செய்தார். ஓட்டல் விலாசம் மாறிற்று. நியூபாரத் கபே ஆனந்தபவனாயிற்ற. வியாபாரம் ஓங்கி ஊருக்குப் பிரியமான பொதுச் சொத்தாக அது வளர்ந்தது. ஆனந்தலட்சுமியின் ராசி என்று அவர் நினைத்தார்.
லாபம் வந்து நகைகளை மீட்டுக் கொண்டு வந்தார். அவள் வாங்க மறுத்து விட்டாள்.
“ஓட்டல்லே எனக்கிருக்கிற சொந்தத்தைப் பறிக்க நினைக்கிறேளா?” என்று கேட்டாள்.
வாய் பேசாமல் நகைகளை எடுத்துக் கொண்டு போய் இரும்புப் பெட்டியில் வைத்து மூடினார் ஆனந்தராவ்.
கட்டில், பீரோ, ரேடியோ, ஃபேன் என்று ஆனந்த லட்சுமியின் வீட்டில் ஓட்டல் லாபம் தளும்பிக் 
கொண்டிருப்பதைப் பொறுக்காதவர்கள் கங்காபாயைத் தூண்டி விட்டார்கள்.
விட்டுக் கொடுத்த எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து கங்காபாய் போராடத் தொடங்கினாள். கங்காபாய்க்கும் அவருக்குமிடையே பிளவு ஏற்படாமல் தான் ஒரு பாலமாக இருக்கவே ஆனந்தலட்சுமி விரும்பினாள்.
ஆனந்தராவின் நிம்மதி குலைந்ததும் குடும்பத்தில் விரிசல் விழுந்ததை அவள் உணர்ந்தாள். அதற்குத் தானே பொறுப்பு என்று ஊர் வாய் சொல்வது அவளை உறுத்தத் தொடங்கிற்று. கங்காபாய் போராட்டத்தின் முற்றுப்புள்ளி போல் பிறந்த வீட்டிற்குப் போனாள்.
அவளை விரட்டி அடித்துவிட்டு மாதிரி ஒரு விகாரத் தோற்றத்திற்குத் தான் ஆளானதை ஆனந்தலட்சுமி உணர்ந்தாள். எல்லா பந்தங்களுக்கும் ஒரு முடிவு உண்டு என்ற நினைவு அவளைக் கவிந்தது.
திடீரென்று ஒரு நாள் தனக்கு ஒரே துணையாக இருந்த சித்தியை அழைத்துக் கொண்டு ஆனந்தலட்சுமி எங்கேயோ புறப்பட்டாள். ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷன் முத்திரையோடு ஆனந்தராவுக்கு ஒரு கடிதம் வந்தது. அப்புறம் பல வருஷங்கள் தாண்டிச் சென்றன. ஆயிரம் அனுபவங்களுக்கு மத்தியிலும் நம்பி வந்தவளைக் காப்பாற்ற முடியாமற் போன வடு ஆனந்தராவை உறுத்திக் கொண்டே இருந்தது.
கூலியாள் பின்தொடர ரங்கையர் வந்தார். ஸ்தூல சரீரத்துடன் சாய்ந்து சாய்ந்து நடந்தவாறே ஆனந்தலட்சுமி பின்னால் வந்தாள்.
பெட்டி படுக்கைகளை வெளியே வைத்துவிட்டு ரங்கையர் நகர்ந்தார். வெயிட்டிங் ரூம் காலியாக இருந்தது. யாரோ உட்கார்ந்து விட்டுப் போனதன் அறிகுறியாக மின் விசிறி சுற்றிக் கொண்டிருந்தது.
“உக்காரு.”
ஆனந்தலட்சுமி நின்று கொண்டேயிருந்தாள். அவர் உட்கார்ந்தார். அவளும் உட்கார்ந்தாள்.
மின் விசிறி கடூரமாகக் கரகரத்தது. முகட்டில் தொங்கிய ஓட்டடை அந்தக் காற்றில் படபடத்தது. அவர் பெருமூச்சு விட்டார். அவள், ஆனந்தராவை ஆறுதலூட்டுவது போல் பார்த்தாள்.
“லட்சுமி... இருவத்தி அஞ்சு வருஷம் மனசிலே சொமந்த பளுவை எறக்க விடமாட்டேங்கிறே.”
இப்போது அவள் பெருமூச்சு விட்டாள்.
“நான் திரும்பி வந்தது தப்பு. பாழும் மனசு கேக்கல...”
“இன்னிக்கும் ஓட்டல் உன்னிது தான். இந்த வயசுலே குடும்பத்தை நீ குலைக்க முடியாது. கங்காபாய் கூட ஒப்புத் துண்டுட்டா. கச்சேரித் தெருவிலே அதுக்குப் பக்கத்து வீடு காலியா இருக்கு.
ஸ்டேஷனுக்குள் சுவாதீனமாக உலவும் ஒரு பெரிய கறுப்புப் பூனை உள்ளே நுழைந்தது. பளபள வென்று அதன் கண்கள் ஜ்வலித்தன. மெதுவாக அது கத்திற்று.
“மறுபடியும் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். நான் பிராயச்சித்தத்துக்காக காசிக்குப் போறேன். யார் யார் பொழப்பிலே எல்லாம் நொழைஞ்ச பாவத்தை கங்காதேவி மடியிலே விடப்போறேன். மறுபடியும் ஏன் பாரத்தை அதிகப்படுத்தறேள்?”
“லட்சுமி... ஓட்டல் உன்னிது.”
“என்னிது எதுவுமே இல்லே. எல்லாம் ஒங்களோடது. பகவானோடது. என்னிதெல்லாம் பாபங்கள் தான். மாங்கல்யம் போனதும் மனசை அடக்க முடியாத பாபம், போட்டியா வந்து சொந்தக்காரியை வயிறெரியச் செய்த பாபம்...”
அவர் இடைமறித்தார்.
“என்னைச் சந்திச்ச பாவம். என்னோட கொஞ்ச நாள் வாழ்ந்த பாவம்...” - ஆனந்தராவ் அடுக்கினார்.
தன்னைத்தானே குத்திக் கொள்ளும் அந்த சுய வதை அவள் வாயை அடைத்தது. அவள் மௌனம் அவர் வயிற்றிலிருந்து ஒரு நீண்ட பெருமூச்சை வரவழைத்தது.
“சரி... இந்தா...” - அவர் மடியிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தார்.
“இது என்ன?”
“உன் நகைகள், கொஞ்ச பணம்.”
‘எனக்கெதுக்கு? என்னண்டே மெஸ் நடத்திச் சேர்த்த பணமே நெறைய இருக்கு.”
“இருந்தா இருக்கட்டும். இதையும் வாங்கி வை.”
“என்கிட்டே கொடுத்தா கழுத்து நெறையக் கங்கையின் பிரவாகத்திலே சேர்ப்பேன்... ஏன் எங்கிட்டே 
கொடுக்கிறேள்? கடனைக் கழிக்கவா...?”
“பந்தமில்லாமே போனப்பறம் பாக்கி எதுக்கு?”
“மனசுக்குள்ளற கூட ஒரு பந்தம் வேண்டாங்கிறேளா... கேவலம், என் நகைக்குக் கூடவா ஒங்களோட இருக்கிற சொந்தமில்லே...?”
அவர் மனசில் அம்பு தைத்தது.
“இதை வச்சுண்டு நான் என்ன செய்யப் போறேன்?”
“என் மருமகள் கழுத்திலே மாட்டுங்கோ. நடுவிலே வந்த ஓடுகாலியின் நகை உங்களுக்குப் பிரியமில்லேன்னா ரங்கையன் பெண் ஜமுனா கழுத்திலே மாட்டுங்கோ.”
அவர் முகத்தில் வழி தெரிந்த மாதிரி ஒரு வெளிச்சம் பிறந்தது.
“சொல்ல மறந்துட்டேன். ரங்கையன் எங்கே?”
“வெளியே நிக்கறான்.”
ஆனந்தலட்சுமி வெளியே எழுந்து போய்க் கவனித்தாள். ரங்கையர் டிக்கெட் கொடுக்கும் அறைக்கு எதிரில் நின்று யாரோடோ பேசிக் கொண்டிருந்தார். அவள் திரும்பி வந்தாள்.
“ஜமுனாவுக்கு ரங்கையன் எப்போ கல்யாணம் பண்ணப் போறான்?”
“அவளோடே அண்ணன் ராகவன் ஏதோ மெர்ச்சண்ட் நேவியிலே வேலை செய்யறான். ஹாலண்டு கப்பல் கம்பெனி. முக்கால்வாசி ஒலகத்தைச் சத்திட்டான். இந்த லீவிலே திரும்பி வரப் போறானாம். அப்பதான் ஏற்பாடு செய்வான்.”
“எவ்வளவு நாளாகும்?”
“நாலஞ்சு மாசமாகும்... ஏன்?”
“இல்லே, அவ்வளவு நாள் தாமதிக்கப்படாது. அந்தப் பெண் யாரோ எதிர் வீட்டிலே ஒரு பையனோட சிநேகிதமா இருக்காப் போலிருக்கு. அவனை என்னாலே நம்ப முடியல்லே. ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்துடறதுக்கு முன்னாடி அவளோட கல்யாணத்தை முடிச்சுடறது நல்லது.”
ஆனந்தராவுக்கு இடி விழுந்த மாதிரி இருந்தது?
“ஜமுனாவா?”
“அவள்தான்.”
“நீ எப்படித் தெரிஞ்சுகிட்டே?”
“பொம்மனாட்டிகளுக்கு இந்த மாதிரி விஷயத்திலே மோப்ப சக்தி அதிகம்.”
ஜமுனாவா... ஜமுனாவா... அவர் மனத்திற்குள் அந்தக் கேள்வி மடியவில்லை. ஒவ்வொரு முறை ஒரு புதிய தொனியோடு புதிய திகிலோடு எழுந்து எழுந்து அடங்கிற்று. பரமவைதீகமான ரங்கையர் வாழ்வில் அவருடைய ஆசார சீலத்திற்கு என்னென்ன சோதனை!
மெர்ச்செண்ட் நேவியில் காப்ஸ்யூல் சூப் சாப்பிட்டுக் கொண்டு விஸ்கியும் ஃபீஃபுமாக உலகம் சுற்றும் ராகவன். காதலிக்கும் ஜமுனா.
முதல் மணி அடித்தது. ரங்கையர் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு போய் பிளாட்பார ஓரத்தில் வைத்தார்.
இரண்டாவது மணிக்குப் பின் வண்டி வந்து நின்றதும் இடம் தேடி சுப்பண்ணாவும் ரங்கையரும் ஆளுக்கொரு மூலைக்கு ஓடினார்கள். வண்டி குறைந்த நேரம் தான் நிற்கும்... பலர் அந்த ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டார்கள். கடைசியில் இடம் கிடைத்தது. அவள் பெட்டியில் ஏறினாள்.
ஆனந்தலட்சுமி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். காசியின் சத்திரங்களும், கங்கையின் பிரவாகமும், நாம ரூபம் அழிந்த அநாதை போல் அவள் உயிர் விளக்கு அவியப்போகும் காலமும் அவர் மார்பைச் சுருட்டி இழுத்தன.
திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆனந்தலட்சுமியின் கண்ணீர் சிதறுவதற்கு முன்பு வண்டி புறப்பட்டு விட்டது.

Monday, 28 January 2013

ஜமுனா -8


8
“ஒங்க தொழிற்சங்கத்திலே என்னையும் சேர்த்துக்கப்படாதா?” என்று கேட்டார் ஆனந்தராவ்.
ஐஸ் பாக்ஸுக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த மேஜையில் உட்கார்ந்திருந்த இருவரும் சிரித்தனர். ஒருவர் ஓட்டல் தொழிலாளிகள் சங்கத்தை ஆரம்பிப்பதற்காகப் பத்து நாட்களாக அலைந்து கொண்டிருக்கும் கண்ணப்பன், இன்னொருவர் கிரைண்டிங் மிஷின் ஏஜெண்டு நீலகண்டன்.
“என்ன சார் சிரிக்கிறீங்க?” என்று கேட்டார் ஆனந்தராவ்.
“இது தொழிலாளிகள் சங்கம். ஒங்களுக்குத்தான் தனியா ஓட்டல் முதலாளிகள் சங்கம் இருக்கே, அதிலே சேர்த்துடுங்கோ.”
“அந்த சங்கத்திலே என்னை சேத்துக்க மாட்டேனுட்டாளே” என்று உதட்டைப் பிதுக்கினார் ஆனந்தராவ்.
சர்வர் ரங்கையர் இருவருக்கும் காப்பி கொண்டு வந்து வைத்தார்.
“ஏன்?”
“சாப்பிடுங்கோ சார்... சொல்றேன்!”
கண்ணப்பன் காப்பி டபராவைத் தொட்டுப் பார்த்தார்.
“சூடாயிருக்கு... அப்புறமா சாப்பிடறேன். விஷயத்தை சொல்லுங்க.
கிரைண்டிங் மிஷின் நீலகண்டன் காப்பியைக் குடிக்கத் தொடங்கினார். சர்வர் ரங்கையர் கண்ணப்பனின் டபராவை எடுத்துக் காப்பியை ஆற்றலானார்.
“சர்க்கரை விலை ஏறிடுத்து. காப்பிக் கொட்டை விலை ஏறிடுத்து...” என்று ஆரம்பித்த ஆனந்தராவ், ஒரு மிடறு காப்பியைப் பருகிய நீலகண்டனைப் பார்த்து, “காப்பி எப்படி சார் இருக்கு?” என்று கேட்டார்.
“ஏ ஒன்!”
“ஒம்ம மாவு அரைக்கிற மிஷினை வாங்கப் போறேன்னு நெனச்சு சொல்லாதீங்கே. ஃபேக்டைச் சொல்லுங்கோ.”
“நீங்க வாங்கலேன்னா என் வியாபாரமே படுத்துடப் போவுதா என்ன...? ஏன் ராயரே, ஒம்ம கடைக்கே எதுக்குப் பத்து வருஷமா காப்பிக்கு வந்துட்டிருக்கிறேன்... சொல்லுங்கோ?”
“பலே பலே...!” என்று நீலகண்டனின் ரோஷத்தைச் சிலாகித்தார் ஆனந்தராவ்.
“காப்பி ஏ ஒன்” என்று ரங்கையர் ஆற்றிய டபராவில் ஒரு மிடறு பருகி விட்டுக் கண்ணப்பன் சொன்னார்.
“விலை என்ன தெரியுமா... நீங்க தர வேண்டாம்... ஸேம ரேட் மூணு ரூபா. மத்த கடையிலே மூணரை ரூபா முன்னே சொன்னேனே வெலைவாசி ஏறிட்டது. காப்பி விலையையும் மசால் தோசை மாதிரி மெயின் அயிட்டங்கள் விலையையும் ஏத்தச் சொன்னாங்க. நான் மாட்டேன்னுட்டேன். நான் முதலாளியா இருக்க லாயக்கில்லேன்னு சங்கத்திலே 
சேர்த்துக்க மாட்டேனுட்டாங்க.”
கண்ணப்பன் மெதுவாகச் சிரித்தார்.
“கிராக்கி பிடிக்கணும்கிற நோக்கமில்லே. கஸ்டமர் கையிலே காசை ஊர் ஒலகமெல்லாம் பிடுங்கிண்டு ஓடறது. நாவார வயிறார சாப்பிடவாவது வரலாம்னு ஓட்டலுக்கு வர்றார் கஸ்டமர். அவர் ஜேப்பிலேயும் வயித்திலேயும் அடிச்சா அனுப்பட்டும்? எனக்கு லாபம் மினிமமா வந்தாப் போறும். கஸ்டமர் வயிறு எரிஞ்சுண்டு ஆனந்தராயன் கூட கெட்டுப்பிட்டான், காசு ஆசை பிடிச்சுண்டுத்துன்னு வையாம போனாப் போறும்.”
கண்ணப்பன் உதட்டை மென்று கொண்டே ஆனந்தராவை உற்றுக் கவனித்தார்.
அந்த நேரத்தில் ஒரு பெரிய பித்தளைத் தூக்குடன் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.
“சாம்பார் இல்லேம்மா... தினம் ஒன்னோட இதே தொந்தரவாப் போச்சு” என்று சாரங்கன் சள்ளென்று சீறி விழுந்தான்.
பேச்சை நிறுத்திவிட்டு சாரங்கனையும் அந்தப் பெண்ணையும் ஒரு பார்வை பார்த்த ஆனந்தராவ் விஷயத்தைப் புரிந்து கொண்டார்.
“என்னடா சாரங்கா... இவாளும் ஒருவகை கஸ்டமர் தாண்டா... நம்ம ஓட்டல் சாம்பார் ருஜிக்காகவோ, வேற ஏதோ கொறைக்காகவோ சாம்பார் கேட்க வர்றா. இருக்கறதை ஊத்தி அனுப்பு. பாப்பா, காசைக் கொண்டாம்மா” என்று வாங்கிப் போட்டுக் கொண்டு அந்தச் சிறுமியை உள்ளே அனுப்பினார் ஆனந்தராவ்.
“ஆச்சா... நான் ஒண்ணும் பெரிய தியாகி இல்லே நானும் மனஷன் தான். ஆனா விபரீதமான காசு எனக்கு வேண்டாம். வெலைவாசி ஏறிப் போய்ண்டேதான் இருக்கும். என்னாலே சமாளிக்க முடியறவரை இந்த விலையைத்தான் வைக்கப் போறேன். தலையும் முழுகிண்டு போற லெவல் வந்தா நானும் வெலையை ஏத்தியாகணும். ஆச்சா... மொதலாளிகள் சங்கத்திலே இருந்து எனக்கு கெட்டவுட். இப்ப நீங்க என்னடான்னா தொழிலாளிகள் சங்கத்திலேயும் என்னைச் சேத்துக்க மாட்டேங்கறேள்... அப்ப எனக்குச் சங்கமே கெடையாதா?” என்று கேட்டார் ஆனந்தராவ்.
நீலகண்டன் சிரித்தார்.
“நீங்க ஒரு தனிப் பிரகிருதி ராயரே” என்று ஆரம்பித்தார் கண்ணப்பன்.
“என்னைத் தனின்னு ஒதுக்கிடாதீங்கோ... ஆனந்த பவன்லேயும் தொழிற்சங்கம் ஆரம்பியுங்கோ. நான் வேண்டாங்கல்லே. நானும் அதிலே ஒரு மெம்பர் ஆகணும்... எல்லோருக்குமா நானே சந்தா கட்டறேன்.”
“தொழிற்சங்க சட்டம் இடம் தராது ராயரே.”
“அதாவது வேஜஸ், போனஸ், டூட்டி அவர் இதையெல்லாம் கண்டிஷன் பண்ணத்தானே...”
“மாதவா” என்று மணியைத் தட்டினார் ஆனந்தராவ் அவன்தான் வந்தான்.
“அவர்கிட்டே உன் சம்பளம் என்னன்னு சொல்லுடா.”
மாதவன் தயங்கினான்.
“உண்மையைச் சொல்லுடா... நீ ஸ்டாம்பு மேலே எவ்வளவுக்கு கையெழுத்து போடறே... என்ன வாங்கறே...”
“ரெண்டும் ஒணுதானே அண்ணா.”
“அதுதான் எவ்வளவு?”
“முந்நூறு ரூபா... கம்பெனி சாப்பாட்டோட.”
“போனஸ்?”
“மூணு மாச போனஸ்.”
“எத்தனை அவர் வேலை செய்யறே?”
“ஷிஃப்ட் ஸிஸ்டம். எட்டு மணி நேரம்.”
ஆனந்தராவ் கண்ணப்பன் முகத்தைப் பார்த்தார்.
“மத்த ஓட்டல்லே ஸீனியர் சர்வருக்கு இருநூறு. போனஸ் ரெண்டு மாசம்தான். புகாரா சொல்ல வரல்லே. இதான் நெலமை. எனக்கும் தொழிலாளிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கறதா நெனைக்கிறேளா...?”
கண்ணப்பன் விரல் நகத்தால் உதட்டைக் கீறிக் கொண்டார்.
“என் மொதல் இங்கே சொல்பம் தான். எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட அம்மா ஒருத்தி இந்த ஓட்டல் நொடிக்கிற நெலமை வந்தப்ப. கழுத்திலேயும் கையிலேயும் போட்டிணடிருந்த நகையெல்லாம் கழட்டிக் கொடுத்தா. ஐம்பத்தேழு சவரன், அதை விக்கலே. பாங்கிலே வைக்கறது. மூட்டுக்கறது மறுபடியும் ஒரு கஷ்டம் வந்தா வைக்கறது இப்படியேதான் மொதலை ரொடேட் பண்ணிண்டு வர்றேன்.”
திடீரென்று தன் அந்தரங்க விஷயம் ஒன்றை ஆனந்தராவ் பகிரங்கப்படுத்தியதால் ஒரு கூச்சம் கண்ணப்பனைத் தாக்கிற்று.
“இன்னம் நான் வாடகை வீட்டிலே தான் குடியிருக்கிறேன். என் பையனை பி.எஸ்ஸி., படிக்க வச்சேன். அதே மாதிரி எங்க சரக்கு மாஸ்டர் சுப்பண்ணாவோட தம்பியையும் பி.ஏ., படிக்க வச்சோம். ரங்கையர் பையன் பி.யூ.ஸி. படிச்சு நின்னுட்டான். அவர் பொண்ணு எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணினா. எல்லாம் ஓட்டல் செலவிலே தான். ஓட்டல் என்னோடதுன்னு நான் எப்பவும் நெனைக்கறதில்லே. மானேஜ்மெண்ட் பாத்துக்கறேன். ரஷ்யாவிலே தொழிலாளி சம்பளத்தை விட தொழிற்சாலை டைரக்டர் சம்பளம் அதிகம்னு சொல்றாளே... அதே மாதிரி நானும் மாசா மாசம் என் குடும்ப செலவுக்கு அதிகமா எடுத்துண்டுறேன். இப்ப சொல்லுங்கோ, என்னை ஏன் தொழிற் சங்கத்திலே சேத்துக்கப்படாது?”
கண்ணப்பன் மௌனமாக யோசித்தார்.
“நான் செஞ்சதையெல்லாம் சொல்லிக் காட்டவரல்லே. என் கை எவ்வளவு கிளீனா இருக்கன்னு காட்டத்தான் சொல்றேன். குக் சுப்பையாவுக்கு ஓட்டல் கல்யாணம் பண்ணி வச்சது. காப்பி மாஸ்டர் வைத்தாவுக்கும், சர்வர் சுப்புணிக்கும் பெண் பார்த்துண்டிருக்கோம். அதுக்கும் ஓட்டல்தான் கல்யாணம் பண்ணி வைக்கும்.”
கண்ணப்பன் கனைத்துக் கொண்டே ஆரம்பித்தார்.
“நீங்க ஒரு எக்செப்ஷன் ராயரே... ஒம்ம மாதிரியே இருந்துட்டா... எங்களுக்கு வேலை இல்லே.”
“மத்தவா எப்படி இருக்காளோ தெரியாது. ஆனந்த பவனைப் பொறுத்தவரைக்கும் எல்லாரும் ஒரு யூனிட்டாத்தான் இருக்கோம். நீங்க தனித் தனியா தொழிலாளிகளை விசாரியுங்கோ... சங்கம்னு வெறுமனே சந்தா வாங்கி ஆரம்பிச்சா மட்டும் போறாது... எங்க சுப்புணி ரேஸுக்குப் போயிண்டிருக்கான். வைத்தாவுக்கு சினிமாப் பைத்தியம். எங்க பாபாவுக்கு படிக்க ஆசை. இந்தக் கொறைகளுக்கெல்லாம் உள்ளபடியே உங்க சங்கம் ஒரு சிகிச்சை பண்ணணும்.”
“நான் அப்புறமா வர்றேன் ராயரே” என்று கண்ணப்பன் எழுந்திருக்கப் போனார்.
‘2இருங்கோ, உட்காருங்கோ” என்று அவரைக் கையமர்த்தினார் ஆனந்தராவ், ரங்கையர் நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.
“நான் கவர்ன்மெண்டை ஏமாத்தறதில்லே. ஒழுங்கா டாக்ஸ் கட்டிண்டு வர்றேன். கலப்படம், பழசை புதுசாக்கிப் போடறது அதெல்லாம் நம்ம ஓட்டல்லே கெடையாது. சானிட்டரி இன்ஸ்பெக்டர் வந்தா சாப்பிட்டு பில் கொடுத்துட்டுப் போறார். பெரிசா பில்டிங் கட்டலேன்னாலும் லாபம் வந்துண்டுதான் இருக்கு. லாபத்தை எல்லாம் ஓட்டல்லேயே இன்வெஸ்ட் பண்ணிண்டு வர்றேன்.”
“இந்த ஓட்டலுக்கு புரொப்ரைட்டர் நீங்கதானே?” என்று மடக்கினார் கண்ணப்பன்.
“அப்படி ஒரு காலம் போட்டு இருக்கு. லைசென்ஸ்லே. அதுக்கே நேரா என் பேரை எழுதிண்டு போறாங்க. அவ்வளவுதான்.”
ஏழரைக்கு மேல் மின்சாரப் பற்றாக் குறையால் சட்டென்று விளக்கு அணைந்தது.
“மறுபடியும் லைன் கொடுப்பாங்க! பத்து நிமிஷமாறதோ அரை மணி ஆறதோ” என்றார் ஆனந்தராவ்.
ரங்கையர் மெழுகுவர்த்தி எடுத்து வர ஸ்டோர் ரூமுக்குப் போனார். போகப் போகவே “சாரங்கா, ஸ்டால்லே நேத்து ஆறு மெழுகுவர்த்திகளையும் அணைச்ச எடுத்து வச்சிருக்கேன். கொளுத்தி டேபிள் மேலே வை!” என்று உள்ளே குரல் கொடுத்தார்.
இருட்டில் எதிரே உட்கார்ந்திருந்த கண்ணப்பனைப் பார்த்து ஆனந்தராவ் பேசினார்.
“இந்த ரங்கையர் இருக்கிறாரே... இவருக்கு லேபர் ஆக்ட் என்னன்னு சொன்னாலும் கேக்க மாட்டார். விடிகாத்தாலே அஞ்சு மணிக்கு ஓட்டலுக்கு வந்துட்டு, ராத்திரி பத்து மணிக்கு நான் கல்லா கட்டற வரைக்கும் கூட இருந்துட்டுக் கடையைச் சாத்திண்டு சாவி எடுத்துண்டு வருவார். நான் எவ்வளவோ சொல்லிப் பாத்தாச்சு. லீவுன்னும் ஷிஃப்டும் விட்டாக்கூட இவர் ஓட்டலுக்கு வந்துடறார். என்னிக்காவது அந்த பனியனைக் கழட்டிட்டு இஸ்திரி போட்ட சொக்கா போட்டுண்டு வந்தா அன்னிக்குத்தான் ரங்கையர் லீவ் எடுத்துண்டார்னு அர்த்தம். அது வருஷத்துக்கு ஒரு நாள் கூட இருக்காது.”
ரங்கையர் மெழுகுவத்தியைக் கொளுத்திக் கொண்டு அது அணையாதவாறு உள்ளங்கையால் தடுத்தவாறு மெதுவாக வந்தார். மெழுகுவர்த்தியின் வெளிச்சம் அவர் முகத்தில் வீசிற்று. ஆனந்தராவ் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
கல்லா மேஜையின் மீது எரியும் மெழுகுவர்த்தியைச் சாய்த்து உருகின மெழுகைச் சொட்டவிட்டு மெழுகுவர்த்தியை அதன்மீது நிறுத்தினார். கையோடு கொண்டு வந்த இன்னொரு மெழுகுவர்த்தியை அந்தச் சுடரில் காட்டிப் பற்ற வைத்துக் கொண்டு போய் அவர்கள் உட்கார்ந்திருந்த மேஜையில் மெழுகைச் சாய்த்து ஒட்ட வைத்தார்.
நீலகண்டன் “சரி ராயரே... அப்ப ஒரு மேஜர் மெஷினுக்கு ஆர்டர் எழுதிக்கட்டுமா? என்று கேட்டார்.”
“நீலகண்டன் சார்... கோவிச்சக்கப்படாது. ஒமக்கு ஆர்டர் குடுத்து மேஜர் சைஸிலே மாவாட்டற மிஷின் கொண்டாந்து எறக்கிட்டீர்னா... நம்ம ஓட்டல்லே மாவட்டறதுக்குன்னே பிறவி எடுத்திருக்கான் ஒரு பய, கணபதின்னு பேரு. மலங்க மலங்க முழிச்சண்டு தேமேன்னு நிப்பான். அவனைக் கொடுக்க நம்ம ஓட்டல்லே வேறே வேலை கெடையாது. அநாதியா அவனை வீட்டுக்குத்தான் அனுப்ப வேண்டியிருக்கும். மிஷினை விட மனுஷாள் முக்கியம். இல்லையா... நீங்களே சொல்லுங்கோ.”
நீலகண்டனுக்கு இவ்வளவு நேரம் காத்திருந்தது ஒரு வியர்த்தமாகப்பட்டது.
“நீங்களே சொல்லுங்கோ. மெஷினை வாங்கிண்டு கணேசனை ஆட்குறைப்புச் செஞ்சா நீங்க போராட்டம் மறியல்னு அமர்க்களப்படுத்திட மாட்டேளா?”
“ஒம்ம ஓட்டல்லே அது நடவாது ராயரே. நான் வர்றேன். இவ்வளவு நேரம் காத்திருந்தது ஒரு வேஸ்டு” என்று எழுந்தார் நீலகண்டன்.
“லைட் வரட்டுமே... ரோடெல்லாம் இருண்டு கெடக்கப் போறது. அப்புறமாந்தான் போவேள்... ஒக்காருங்கோ” என்று அவர் ஏமாற்றத்தோடு புறப்படுவதை ரசிக்க முடியாமல் சொன்னார் ஆனந்தராவ்.
விளக்கு வந்தபின் அவர்கள் எழுந்து போனார்கள். இரண்டு தினங்களாக ஆனந்தராவ் முகத்தில் ஓர் ஆயாசத்தையும் இனங்காண முடியாத ஒரு வெறுமையைக் கவனித்து வந்த ரங்கையருக்கு சற்றுத் தெம்பு ஏற்பட்டது. பழைய நிலைக்கு ஆனந்தராவ் மீண்டுவிட்ட தெம்பு. அவரிடம் சொல்லக்கூடாது என்று மறைத்து வைத்திருந்த ஒரு விஷயத்தைக் கொஞ்சம் தெம்பாக இருக்கிற இந்த நேரத்தில் சொல்வானேன் என்று தயங்கினார்.
சொல்லாவிட்டால் நாளைக்கு ரொம்ப அலங்கலாய்த்துக் கொள்வார் என்ற கவலை ஏற்படவே, மெதுவாக கல்லா மேடை அருகே வந்து நின்றார்.
“என்ன ரங்கா?” என்று நிமிர்ந்தார் ஆனந்தராவ்.
“நாளைக்குக் காலம்பற எக்ஸ்பிரஸ்லே பொறப்படறாளாம்.”
ஆனந்தராவுக்கு யார் என்று புரிந்தது. அவர் முகம் இருண்டது.
“நீ சொல்லிப் பார்த்தியோ!”
“நீங்க சொல்லியே கேக்கலியே அண்ணா.”
ஆனந்தராவின் மேலுதடும் நெற்றிச் சதையும் நடுங்கின. அவர் கண்களை மூடிக்கொண்டார். ஓரிரு விநாடிகள் கனத்து நகர்ந்தன.
ம்ம்ம் என்று பெருமூச்சு ஹூங்காரமாக வெளிவந்தது. அவர் கண்ணைத் திறந்தார்.
“வண்டி எத்தனை மணிக்கு?”
“இங்கே நாலு அம்பதுக்கு வர்றது”
“நாலு மணிக்கெல்லாம் குதிரைவண்டி ஒண்ணை வீட்டுக்கு வரச் சொல்லிடு. நான் காலம்பற நாலே காலுக்கு வீட்டண்டை வர்றேன்.”
ஆனந்தராவ் சற்று நிறுத்தினார். பின்பு காலையில் நிகழும் வாகன சஞ்சாரத்தை அர்த்தமின்றி வெறித்துப் பார்த்தார்.
“ஸ்டேஷனுக்கு நீயும் நானும் போய் வருவோம்” என்றவர், சட்டென்று கல்லாவிலிருந்து எழுந்தார்.
“ரங்கா, கொஞ்ச நாழி கல்லாவைப் பார்த்துக்கோ... எனக்கு ரொம்ப ஆயாசமா இருக்கு. சித்தே சாயறேன்” என்று ஸ்டோர் ரூமை நோக்கி நடந்தார்.

Friday, 25 January 2013

ஜமுனா-7


ஜமுனா-7
கரகரவென்ற தேங்காய்த் துருவியின் கைப்பிடி சுழன்றது. பரப்பி வைத்திருந்த வாழை இலையில் லேஸ் லேஸாக தும்பைப் பூவாய்த் துருவல் உதிர்ந்தது. மணைமேல் உட்கார்ந்து கைப்பிடியைச் சுற்றிய ஜமுனா சற்று நிறுத்தி, மூடியைத் திருப்பி விட்டுக் கொண்டாள்.
அந்தச் சின்னக் கூடத்து ஓரமாக ஒரு காலை மடக்கியவாறு உட்கார்ந்து வெங்கடேச புராணம் படித்துக் கொண்டிருந்தாள் ஆனந்தலட்சுமி. அந்தி வெளிச்சம் மங்கிக் கூடம் இருண்டு விடவே மழமழவென்று தும்பு தூசு இல்லாமல் துப்புரவாய் இருந்த வாசலுக்கு எழுந்து வந்தாள்.
ஆனந்தலட்சுமி நகர்ந்ததைப் பார்த்த ஜமுனா, சட்டென்ற எழுந்து “இருங்கோ மாமி, லைட்டைப் போட்டுடறேன்” என்று ஸ்விட்சைப் போட்டாள்.
புத்தகத்தை கவிழ்த்து வைத்து விட்டு ஆனந்தலட்சுமி கையெடுத்து வெளிச்சத்தைக் கும்பிட்டாள்.
பாலாகத் துடைத்து வைத்திருந்த விளக்கு ஷேடும் பல்பும் விளக்கின் வெளிச்சத்திற்குத் தடையாய் நின்றது அழுக்கு ஸ்டூலைப் போட்டுக் கொண்டு மெனக்கெட்டு அதை ஜமுனா சுத்தப்படுத்தியதை ஆனந்தலட்சுமி மத்தியானம் கவனித்தாள். அவள் வந்து இது இரண்டாவது நாள். எத்தனை தான் அவள் கவனிப்பாள்?
பளபளவென்று முகம் பார்க்கிற மாதிரி துலக்கிய பாத்திரங்கள். ஏதோ ஓர் எக்ஸிபிஷனுக்கு அடுக்கிய மாதிரி பெரிய டப்பா, சின்ன டப்பா என்று கிரமப்படி அடுக்கிய சமையலறை ஷெல்ஃப், துளித் தண்ணீர், ஒரு கறை, சிறிது அழுக்கு? ஊஹூம்... சமையல் அறையில் பூஜை செய்யலாம். அத்தனை நறுவிசு.
பேசிக் கொண்டே சிரித்துக் கொண்டே ரத்தத்தில் ஊறிவிட்டது போன்ற லகுவோடு இயல்பாக ஜமுனா காரியம் ஆற்றும் பதவிசும், வீட்டை ஒரு கோயில் மாதிரி கட்டிக் காக்கின்ற நேர்த்தியும் ஆனந்தலட்சுமிக்கு அங்கலாய்ப்பை ஏற்படுத்தின.
‘தனக்கு ஒரு மகன் இல்லையே!’
ஆனந்தலட்சுமி வாசலிலேயே நிற்பதை உணர்ந்த ஜமுனா, நிமிர்ந்து பார்த்தாள்.
அங்குமிங்குமான தலை நரையில், முகத்தின் கோடுகளும் சுருக்கங்களும் தீட்டிய முதுமையில் ஆனந்தலட்சுமியின் அழகு மறைந்து விடவில்லை. வெள்ளை நிறம், புன்சிரிப்போடு சற்றுப் பிரிந்த உதடுகளின் வழியே தெற்றுப் பல் எட்டிப் பார்த்தது. சிற்பக் கச்சிதத்தில் தான் அந்த மூக்கு அமையும். கண்களில் இன்னம் ஒரு காந்தம் இருந்தது. பிரியத்தையும் வாத்சல்யத்தையும் கவருகின்ற காந்தம். இளமையில் இவளைப் பார்க்கின்ற அதிர்ஷ்டம் வாய்க்கவில்லையே என்று ஜமுனா ஆதங்கப்பட்டாள்.
“என்ன மாமி?” என்று தன்னையே பார்த்துக் கொண்டு நின்ற ஆனந்தலட்சுமியைச் சற்று வெட்கத்தோடு கேட்டாள்.
“எனக்கு ஒரு பிள்ளை இல்லாமேப் போச்சேன்னு அங்கலாய்க்கிறேண்டி அம்மா!” என்ற பெருமூச்செறிந்தாள் ஆனந்தலட்சுமி.
ஜமுனாவுக்குப் புரிந்தது. பெருமிதத்தை ஒரு புன்னகையால் மறைத்துக் கொண்டு சொன்னாள்:
“யாரையாவது தத்து எடுத்துக்கோங்க.”
“உன் மாதிரி பொண்டாட்டி கிடைக்கிறாள்னா நூறு பேர் ஸ்வீகாரம் வரக் காத்திருப்பாங்க. ஒனக்குச் சமதையா ஒருத்தனைப் பொறுக்கறது சிரமம்.”
கலீரென்று சிரித்தாள் ஜமுனா.
“எதுக்கு வேலை மெனக்கெட்டு தேங்காயைத் துருவிண்டிருக்கே?”
“ஒரு தேங்காய் சும்மா இருந்தது. அழுகி வீணாகிடப் போறதேன்னு துருவறேன்.”
சாத்தியிருந்த கதவுக்கு வெளியே சைக்கிள் மணி அடித்தது. ஜமுனா எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். மோகன் வெளியே நின்றான். சைக்கிள் ஹாண்டிலில் மாட்டியிருந்த கைப்பையைக் கழற்றி அவளிடம் நீட்டியவாறே அவளைப் பார்த்துச் சிரித்தான்.
அந்தச் சிரிப்போடு அவனுடைய பார்வையில் பல அர்த்தங்கள் புரண்டன. தெருவில் விளக்குப் போட்டு விட்டார்கள். அந்த வெளிச்சத்தில் முகம் கழுவி அழகாக மை தீட்டி லேசாகப் பவுடர் பூசிப் பொட்டிட்டிருந்த ஜமுனாவின் அழகு, அவனை அவள் முன்பு எப்படி மண்டியிட வைத்திருக்கிறது என்று ஓர் அர்த்தமும் தொனித்தது.
‘உஸ்ஸ்’ என்று வாயைக் குவித்து, வெகு மெதுவாக ஓர் உஸ் போட்டாள் ஜமுனா. அவளது கண்கள் ஒதுங்கி, திறந்த கதவுக்குப் பின்னால் ஆனந்தலட்சுமி இருக்கிறாள் என்ற இரு தரம் புரண்டு எச்சரித்தன.
“ரொம்ப தாங்க்ஸ்” என்று அவள் வாய், உபசாரமாகச் சொல்லிற்று.
“வெறும் தாங்க்ஸ் மட்டும்தானா?” - அவளுடைய எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மோகன் துணிந்து கேட்டான்.
“சில்லறை ஏதாவது வேணும்னா மீந்திருக்குமே, அதை வச்சுக்கங்க.”
மோகன் முகம் சுண்டிற்று. ஞாபகப்படுத்துகிறாளோ என்று எண்ணியவாறே ஜேபியில் கையை விட்டு எடுத்து நீட்டினான்.
 அவனுக்கு மட்டும் தெரியும்படியாக நாக்கைத் துருத்தி அவள் பரிகாசம் செய்தாள்.
வாங்கிக் கொண்டு அவள் இன்னொரு முறை “தாங்க்ஸ்” சொன்னாள்.
மோகன் முகம் குளிர்ந்துவிட்டது. சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அவன் நகர்ந்தான். கதவை லேசாக ஒருக்களித்து விட்டுப் பையோடு திரும்பிய ஜமுனா, ஆனந்தலட்சுமியைக் கவனித்தாள்.
அவள் முகத்தில் லேசாக நிழல் படிந்திருப்பது ஜமுனாவுக்குள் எச்சரிக்கை ஏற்படுத்தியது.
“யார் ஜமுனா... இந்தப் பிள்ளையாண்டான்?”
“எதிர்த்த சாரி வீட்டில் இருக்கிறார். என்னமோ மெடிகல் ரெப்ரசண்டேடிவாம்.”
“பிரம்மச்சாரியா?”
“தெரியலே... அப்பாகிட்டே எப்பவாவது வந்து வேதங்கள், ஆசார அனுஷ்டானங்கள் பத்திப் பேசிண்டிருப்பார். இருட்டினப்புறம் கடை கண்ணிக்குப் போக எனக்கு இஷ்டமிருக்கிறதில்லே. எப்பவாவது அனுப்புவேன். அவரும் பிரியமா வாங்கிண்டு வருவார்.”
ஆனந்தலட்சுமிக்கு மனசு சமாதானம் ஆகவில்லை.
“நீ ஜாக்கிரதையாவே இரு கொழந்தே, நீ கல்மிஷம் இல்லாமே பழகினாலும் உலகம் அப்படியே இருக்கணும்னு நிர்ப்பந்தம் இல்லே.”
“நான் என்ன அவ்வளவு பச்சைக் குழந்தையா மாமீ? ஒரு வரம்பு வச்சிருக்கேன். கொஞ்சம் தாண்டினா பளிச்சுணு ஒரு வார்த்தை விட்டா, பெரம்படி மாதிரி விழும்.”
இப்போது ஒரு மாதிரி அவள் சமாதானமாகிவிட்டாள்.
“ரங்கையர் பெரிய ஆசார சீலர். எங்க சித்தி அவரை வாய் ஓயாம புகழ்ந்திண்டிருப்பா. அவருடைய வைதீகத்துக்கும் அனுஷ்டானத்துக்கும் எவ்வளவு மதிப்பு உண்டுன்னு ஒனக்குத் தெரியாது.”
முகத்தின் குளிர்ச்சி மாறாமல் புன்முறுவலோடு ஜமுனா அதைக் கேட்டுக் கொண்டு வந்தாள்.
“இப்படி ரெண்டே ரெண்டு வேளை மட்டும் ஆசார சுத்தியா ஸ்நானம் பண்ணி பூஜைக்கு அப்புறம் ஆகாரம் எடுத்துக்கறது. விடிகாலையிலே எழுந்து கெணத்து ஜலத்தை இறைச்சு ஸ்நானம் பண்ணி, அரைமணி நேரம் வேத அத்யயனம் பண்றது. இந்தப் பூமியிலே பொறந்துட்ட தோஷத்துக்காக ஒரு கர்மாவைப் பண்றாப்பிலே சப்ளையரா இருக்கிறது. அதிலே ஒரு அந்தரங்க சுத்தி, செய்யற காரியத்திலே மனசை லயிக்க விட்டு ஈஸ்வரார்ப்பணமா காரியம் பண்றது, இதெல்லாம் சாமான்யம்னு நெனைக்கிறியா ஜமுனா? எல்லாம் ஒரு தபஸ் மாதிரி, என்னமோ நாலுலே ஒருத்தர் ஒங்க அப்பான்னு நெனச்சுண்டுடாதே. மஹாகனவான். இல்லாட்டி தங்க விக்கிரகமாட்டம் ஒன்னைப் பெத்திருக்க முடியாது.”
ஆனந்தலட்சுமி எங்கே சுற்றி வளைக்கிறாள் என்று ஜமுனாவுக்குப் புரிந்தது. குறுக்கிடுவதால் பிரயோசனம் இல்லை என்று விட்டு விட்டாள்.
“எதுக்குச் சொல்றேன்னா, அவர் பொண்ணு நீங்கற நெனப்பு சதா ஒன்னைக் காவல் காக்கணும்.” - மேலும் ஏதோ சொல்லப் போன ஆனந்தலட்சுமி சட்டென்று நிறுத்திக் கொண்டாள்.
அவளது கண்களில் கரகரவென்று கண்ணீர் சுரந்து, மூக்குக் கண்ணாடியில் திவலைகள் தெறித்தன.
கண்ணாடியைக் கழற்றி, சேலைத் தலைப்பால் ஆனந்தலட்சுமி கண்களைத் துடைத்துக் கொண்டாள். கைப்பையை ஆணியில் மாட்டிவிட்டு, சரேலென்று திரும்பிய ஜமுனா, ஆனந்தலட்சுமிக்கு ஆதரவாகப் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.
“என்ன மாமீ...?” - அவள் குரல் வாஞ்சை ஆனந்தலட்சுமியின் திடீர்த் துயரத்தைப் புரிந்து கொண்டது போல் அதற்கு அரவணைப்பான கனிவோடு ஒலித்தது.
சட்டென்று கண்ணாடியைத் துடைத்து மாட்டிக் கொண்டே ஆனந்தலட்சுமி, “ஒண்ணுமில்லேடி கொழந்தே! என்னமோ ஞாபகம் வந்துடுத்து” என்று அருகில் உட்கார்ந்திருந்த ஜமுனாவின் முதுகை நீவினாள்.
“என்ன வாங்கிண்டு வரச் சொன்னே?”
“மைதா மாவு தீர்ந்து போயிடுத்து.”
“இப்ப மைதாவுக்கென்ன அவசியம் வந்துடுத்து?”
ஜமுனா பதில் தரவில்லை.
“தேங்காய் ஏன் துருவறேன்னா அழுகிடும்கிறே. மைதா மாவு ஆயிட்டது வாங்கி வரச் சொன்னேங்கிற. ஒண்ணுமறியாக் கள்ளியாட்டம் பலகாரம் பட்சணம் செஞ்சுவச்சேன்னா நான் சாப்பிட மாட்டேன், பாத்துக்கோ!”
“எனக்குப் பால்போளி சாப்பிட ஆசை வந்துட்டுது மாமி.”
ஜமுனாவின் சாமர்த்தியத்தைக் கண்டு ஆனந்த லட்சுமிக்கு வருத்தமதான் வந்தது.
“எனக்குப் பால் போலி பிடிக்கும்னு ரங்கையர் சொன்னாரா?”
“இல்லையே!”
கண்ணாடியை மறுபடியும் கழற்றினாள் ஆனந்தலட்சுமி, அவளது சேலைத் தலைப்பு மீண்டும் கண்களைத் துடைத்தது.
“மாமீ... மாமீ...”
“பலகார பட்சணம் சாப்பிடவா வந்தேன். இந்தப் பாழும் மனசிலே பந்தம் இன்னும் போகல்லே. கடைசித் தடவையா பார்த்துடுடணும்னு தோணித்து.”
“............”
“ஒனக்குப் புத்தி சொல்ற யோக்யதை எனக்கில்லேடீ கொழந்தே! நீ கள்ளம் இல்லாத பால் மாதிரி இருக்கே. நான் திரிஞ்சு போய் தெருவிலே கொட்ட வேண்டிய பால்.”
ஜமுனா சட்டென்று எழுந்து உள்ளே போனாள். கூடத்தை ஒட்டிக் கிழக்கும் மேற்குமாக இருந்த இரண்டு அறைகளில் மேற்கு அறையில் நுழைந்து சிறிய பீரோவைத் திறந்து உள்ளங்கை அகலத்துக்கு, கையடக்கமாக இருந்த டிரான்ஸிஸ்டர் ஒன்றை எடுத்தாள். அறை விளக்கைப் போட்டு ஸ்டேஷன் தேடி மறையைத் திருகினாள். சென்னை வானொலியில் உபந்யாசப் பிரவசனம் ஒன்று வெண்கலக் குரலில் கேட்டது. விளக்கை அணைத்து விட்டு வெளியே வந்தாள்.
“மாமீ, இந்தப் பிரவசனத்தைக் கேளுங்கோ, மனசு நிம்மதியா இருக்கும்.”
ஆனந்தலட்சுமி டிரான்ஸிஸ்டரை வாங்கினாள்.
“இதேதுடீ அம்மா... ரொம்ப நன்னா இருக்கே!”
“அண்ணா ராகவன் ஜப்பான் போயிருந்தப்போ வாங்கிண்டு வந்தான் மாமி.”
ஆனந்தலட்சுமி பிரவசனத்தில் மூழ்கினாள். ஜமுனா தேங்காய் துருவ எழுந்தாள். நாலைந்து சுற்றிலேயே மூடி தீர்ந்துவிட்டது. இரண்டு மூடிகளையும் சமையல் அறைக்கு எடுத்துப் போனாள். உள்ளே விளக்குப் போடும் ஓசை கேட்டது.
எவர்சில்வர் தட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்த ஜமுனா, துருவல் கொட்டியிருந்த வாழை இலையை வாகாகத் தூக்கித் தட்டில் வைத்துக் கொண்டாள். தேங்காய்த் துருவியைச் சாய்த்துப் பிடித்து ஊதினாள். தட்டின் குறுக்கே துருவியை வைத்தபின், ஆணியில் மாட்டியிருந்த பையை எடுத்துக் கொண்டே மீண்டும் சமையலறைக்குப் போனாள்.
ஒருக்களித்தவாறு திறந்திருந்த தெருக்கதவின் வழியே உடம்பை நெளித்துக் கொண்டு சுவாதீனமாக ஒரு நாய் உள்ளே நுழைந்தது. தெரு நாய், கறுப்பு நிறம், கதவு லேசாக ஓசைப்பட்டதைக் கவனித்து ஆனந்தலட்சுமி திரும்பினாள்.
திருட்டுத்தனத்தோடு அவளைப் பார்த்து லேசாக வாலை ஆட்டிற்கு அது.
“ஜம்னா, நாய் வந்திருக்கு” என்று சமையல் அறையை நோக்கிச் சொன்னாள்.
“வந்துட்டேன் மாமி.”
தெரு நாய் ஆனந்தலட்சுமியை கண்ணோட்டம் விடுவதுபோல்  ஒருமுறை பார்த்துவிட்டு ஆட்சேபகரமாக எதுவும் காணாததால் சுவாதீனமாகப் படுத்துக் கொண்டது.
“இந்தத் தெரு நாயை எல்லாம் உள்ளே சேத்தறது எனக்குப் பிடிக்கலே அம்மா, அது மொகத்தைப் பார்த்தியோ, ஒரு திருட்டுத்தனம் தெரியறது. ஆமா.. கோயிலுக்குப் போகலியா?”
“சுவாமியை நாம தரிசிக்கப் போனா, நம்மைத் தரிசிக்க நாலு பேர் வந்துடறா.”
“அதான் லோகம். நானும் சின்ன வயசிலே அப்படி அனுபவப்பட்டிருக்கேண்டியம்மா” - அவள் பிரவசனத்தின் வால்யூமைக் குறைக்கத் தவறான மறையைத் திருகினாள்.
“ரூப் தேரா மஸ்தானா... ப்யாருமேரா தீவானா” என்று ஸ்டேஷன் மாறி டிரான்ஸிஸிடர் இயங்கிற்று.
“இதை அணைச்சுவிடுடீ கொழந்தே, என் கதையை ஒங்கிட்டே கட்டாயமாக சொல்லிடணும்னு என் மனசு துடிக்கிறது.”
டிரான்ஸிஸ்டரை வாங்கி நிறுத்தினாள் ஜமுனா.
“சமையல் உள்ளுக்கு வந்துடுங்கோ மாமி. நீங்க பேசறச்சே நான் வேலையை செஞ்சுக்கறேன்.”
வெங்கடேச புராணத்தில் காகித மூலையை மடித்து விட்டு எழுந்தாள் ஆனந்தலட்சுமி.
“இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டுப் போனேள்னா எனக்கும் உங்க கதையைக் கேட்ட மாதிரியும் இருக்கும். திருப்தியும் கெடைக்கும்.
ஆனந்தலட்சுமி வேதனையோடு சிரித்தாள்.
“இப்ப நான் தங்கி இருக்கிறதே, அதிகப்படி கொழந்தே! ரங்கையர் மாதிரி ஆசாரசீலர் ஆத்திலே தங்க துளி யோக்யதை கூட எனக்குக் கிடையாது. இந்தக் கட்டையாலே நாலு பேருக்கு ஏதோ உபகாரம் செய்யணுமனு கர்மா இருந்தது. சித்தி போனதும் அதுவும் போயிடுத்து. பாவ மூட்டை பளு அதிகமாயிட்டது கொழந்தே. நாலு க்ஷேத்திரங்களைத் தரிசனம் பண்ணி எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு கொறைச்சுண்டு காசிக்குப் போகப் போறேன். பகவான்சீட்டை அனுப்பற வரைக்கும் காத்துண்டு இருப்பேன். கங்கா நதியிலே இந்தக் கட்டை கரைஞ்சுடுத்துன்னா போறும்.”
முறத்தில் மைதா மாவுப் பொட்டலத்தை அவிழ்த்துக் கொட்டிய ஜமுனா, எதிரில் வந்து உட்கார்ந்த ஆனந்த லட்சுமியை ஏறிட்டுப் பார்த்தாள்.
கங்கையின் பிரவாகம் அவள் மனக் கண்ணில் தோன்றி மறைந்தது. போன முறை லீவில் வந்தபோது, ராகவன் அவளையும் வட தேச யாத்திரைக்குக் கூட்டிச் சென்றான்.
பண்டாக்களின் களேபரம்... யாத்திரிகர்களின் சந்தடி... ஆயிரம் கவலைகள்... இன்ப துன்பங்கள்... எதையும் பொருட்படுத்தாமல் பாவ புண்ணியங்களைத் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டு செல்லும் கங்கா நதியின் கம்பீர ஓசை அவள் மனச் செவியில் விழுந்தது.[தொடரும்]