ஜமுனா-7
கரகரவென்ற தேங்காய்த் துருவியின் கைப்பிடி சுழன்றது. பரப்பி வைத்திருந்த வாழை இலையில் லேஸ் லேஸாக தும்பைப் பூவாய்த் துருவல் உதிர்ந்தது. மணைமேல் உட்கார்ந்து கைப்பிடியைச் சுற்றிய ஜமுனா சற்று நிறுத்தி, மூடியைத் திருப்பி விட்டுக் கொண்டாள்.
அந்தச் சின்னக் கூடத்து ஓரமாக ஒரு காலை மடக்கியவாறு உட்கார்ந்து வெங்கடேச புராணம் படித்துக் கொண்டிருந்தாள் ஆனந்தலட்சுமி. அந்தி வெளிச்சம் மங்கிக் கூடம் இருண்டு விடவே மழமழவென்று தும்பு தூசு இல்லாமல் துப்புரவாய் இருந்த வாசலுக்கு எழுந்து வந்தாள்.
ஆனந்தலட்சுமி நகர்ந்ததைப் பார்த்த ஜமுனா, சட்டென்ற எழுந்து “இருங்கோ மாமி, லைட்டைப் போட்டுடறேன்” என்று ஸ்விட்சைப் போட்டாள்.
புத்தகத்தை கவிழ்த்து வைத்து விட்டு ஆனந்தலட்சுமி கையெடுத்து வெளிச்சத்தைக் கும்பிட்டாள்.
பாலாகத் துடைத்து வைத்திருந்த விளக்கு ஷேடும் பல்பும் விளக்கின் வெளிச்சத்திற்குத் தடையாய் நின்றது அழுக்கு ஸ்டூலைப் போட்டுக் கொண்டு மெனக்கெட்டு அதை ஜமுனா சுத்தப்படுத்தியதை ஆனந்தலட்சுமி மத்தியானம் கவனித்தாள். அவள் வந்து இது இரண்டாவது நாள். எத்தனை தான் அவள் கவனிப்பாள்?
பளபளவென்று முகம் பார்க்கிற மாதிரி துலக்கிய பாத்திரங்கள். ஏதோ ஓர் எக்ஸிபிஷனுக்கு அடுக்கிய மாதிரி பெரிய டப்பா, சின்ன டப்பா என்று கிரமப்படி அடுக்கிய சமையலறை ஷெல்ஃப், துளித் தண்ணீர், ஒரு கறை, சிறிது அழுக்கு? ஊஹூம்... சமையல் அறையில் பூஜை செய்யலாம். அத்தனை நறுவிசு.
பேசிக் கொண்டே சிரித்துக் கொண்டே ரத்தத்தில் ஊறிவிட்டது போன்ற லகுவோடு இயல்பாக ஜமுனா காரியம் ஆற்றும் பதவிசும், வீட்டை ஒரு கோயில் மாதிரி கட்டிக் காக்கின்ற நேர்த்தியும் ஆனந்தலட்சுமிக்கு அங்கலாய்ப்பை ஏற்படுத்தின.
‘தனக்கு ஒரு மகன் இல்லையே!’
ஆனந்தலட்சுமி வாசலிலேயே நிற்பதை உணர்ந்த ஜமுனா, நிமிர்ந்து பார்த்தாள்.
அங்குமிங்குமான தலை நரையில், முகத்தின் கோடுகளும் சுருக்கங்களும் தீட்டிய முதுமையில் ஆனந்தலட்சுமியின் அழகு மறைந்து விடவில்லை. வெள்ளை நிறம், புன்சிரிப்போடு சற்றுப் பிரிந்த உதடுகளின் வழியே தெற்றுப் பல் எட்டிப் பார்த்தது. சிற்பக் கச்சிதத்தில் தான் அந்த மூக்கு அமையும். கண்களில் இன்னம் ஒரு காந்தம் இருந்தது. பிரியத்தையும் வாத்சல்யத்தையும் கவருகின்ற காந்தம். இளமையில் இவளைப் பார்க்கின்ற அதிர்ஷ்டம் வாய்க்கவில்லையே என்று ஜமுனா ஆதங்கப்பட்டாள்.
“என்ன மாமி?” என்று தன்னையே பார்த்துக் கொண்டு நின்ற ஆனந்தலட்சுமியைச் சற்று வெட்கத்தோடு கேட்டாள்.
“எனக்கு ஒரு பிள்ளை இல்லாமேப் போச்சேன்னு அங்கலாய்க்கிறேண்டி அம்மா!” என்ற பெருமூச்செறிந்தாள் ஆனந்தலட்சுமி.
ஜமுனாவுக்குப் புரிந்தது. பெருமிதத்தை ஒரு புன்னகையால் மறைத்துக் கொண்டு சொன்னாள்:
“யாரையாவது தத்து எடுத்துக்கோங்க.”
“உன் மாதிரி பொண்டாட்டி கிடைக்கிறாள்னா நூறு பேர் ஸ்வீகாரம் வரக் காத்திருப்பாங்க. ஒனக்குச் சமதையா ஒருத்தனைப் பொறுக்கறது சிரமம்.”
கலீரென்று சிரித்தாள் ஜமுனா.
“எதுக்கு வேலை மெனக்கெட்டு தேங்காயைத் துருவிண்டிருக்கே?”
“ஒரு தேங்காய் சும்மா இருந்தது. அழுகி வீணாகிடப் போறதேன்னு துருவறேன்.”
சாத்தியிருந்த கதவுக்கு வெளியே சைக்கிள் மணி அடித்தது. ஜமுனா எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். மோகன் வெளியே நின்றான். சைக்கிள் ஹாண்டிலில் மாட்டியிருந்த கைப்பையைக் கழற்றி அவளிடம் நீட்டியவாறே அவளைப் பார்த்துச் சிரித்தான்.
அந்தச் சிரிப்போடு அவனுடைய பார்வையில் பல அர்த்தங்கள் புரண்டன. தெருவில் விளக்குப் போட்டு விட்டார்கள். அந்த வெளிச்சத்தில் முகம் கழுவி அழகாக மை தீட்டி லேசாகப் பவுடர் பூசிப் பொட்டிட்டிருந்த ஜமுனாவின் அழகு, அவனை அவள் முன்பு எப்படி மண்டியிட வைத்திருக்கிறது என்று ஓர் அர்த்தமும் தொனித்தது.
‘உஸ்ஸ்’ என்று வாயைக் குவித்து, வெகு மெதுவாக ஓர் உஸ் போட்டாள் ஜமுனா. அவளது கண்கள் ஒதுங்கி, திறந்த கதவுக்குப் பின்னால் ஆனந்தலட்சுமி இருக்கிறாள் என்ற இரு தரம் புரண்டு எச்சரித்தன.
“ரொம்ப தாங்க்ஸ்” என்று அவள் வாய், உபசாரமாகச் சொல்லிற்று.
“வெறும் தாங்க்ஸ் மட்டும்தானா?” - அவளுடைய எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மோகன் துணிந்து கேட்டான்.
“சில்லறை ஏதாவது வேணும்னா மீந்திருக்குமே, அதை வச்சுக்கங்க.”
மோகன் முகம் சுண்டிற்று. ஞாபகப்படுத்துகிறாளோ என்று எண்ணியவாறே ஜேபியில் கையை விட்டு எடுத்து நீட்டினான்.
அவனுக்கு மட்டும் தெரியும்படியாக நாக்கைத் துருத்தி அவள் பரிகாசம் செய்தாள்.
வாங்கிக் கொண்டு அவள் இன்னொரு முறை “தாங்க்ஸ்” சொன்னாள்.
மோகன் முகம் குளிர்ந்துவிட்டது. சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அவன் நகர்ந்தான். கதவை லேசாக ஒருக்களித்து விட்டுப் பையோடு திரும்பிய ஜமுனா, ஆனந்தலட்சுமியைக் கவனித்தாள்.
அவள் முகத்தில் லேசாக நிழல் படிந்திருப்பது ஜமுனாவுக்குள் எச்சரிக்கை ஏற்படுத்தியது.
“யார் ஜமுனா... இந்தப் பிள்ளையாண்டான்?”
“எதிர்த்த சாரி வீட்டில் இருக்கிறார். என்னமோ மெடிகல் ரெப்ரசண்டேடிவாம்.”
“பிரம்மச்சாரியா?”
“தெரியலே... அப்பாகிட்டே எப்பவாவது வந்து வேதங்கள், ஆசார அனுஷ்டானங்கள் பத்திப் பேசிண்டிருப்பார். இருட்டினப்புறம் கடை கண்ணிக்குப் போக எனக்கு இஷ்டமிருக்கிறதில்லே. எப்பவாவது அனுப்புவேன். அவரும் பிரியமா வாங்கிண்டு வருவார்.”
ஆனந்தலட்சுமிக்கு மனசு சமாதானம் ஆகவில்லை.
“நீ ஜாக்கிரதையாவே இரு கொழந்தே, நீ கல்மிஷம் இல்லாமே பழகினாலும் உலகம் அப்படியே இருக்கணும்னு நிர்ப்பந்தம் இல்லே.”
“நான் என்ன அவ்வளவு பச்சைக் குழந்தையா மாமீ? ஒரு வரம்பு வச்சிருக்கேன். கொஞ்சம் தாண்டினா பளிச்சுணு ஒரு வார்த்தை விட்டா, பெரம்படி மாதிரி விழும்.”
இப்போது ஒரு மாதிரி அவள் சமாதானமாகிவிட்டாள்.
“ரங்கையர் பெரிய ஆசார சீலர். எங்க சித்தி அவரை வாய் ஓயாம புகழ்ந்திண்டிருப்பா. அவருடைய வைதீகத்துக்கும் அனுஷ்டானத்துக்கும் எவ்வளவு மதிப்பு உண்டுன்னு ஒனக்குத் தெரியாது.”
முகத்தின் குளிர்ச்சி மாறாமல் புன்முறுவலோடு ஜமுனா அதைக் கேட்டுக் கொண்டு வந்தாள்.
“இப்படி ரெண்டே ரெண்டு வேளை மட்டும் ஆசார சுத்தியா ஸ்நானம் பண்ணி பூஜைக்கு அப்புறம் ஆகாரம் எடுத்துக்கறது. விடிகாலையிலே எழுந்து கெணத்து ஜலத்தை இறைச்சு ஸ்நானம் பண்ணி, அரைமணி நேரம் வேத அத்யயனம் பண்றது. இந்தப் பூமியிலே பொறந்துட்ட தோஷத்துக்காக ஒரு கர்மாவைப் பண்றாப்பிலே சப்ளையரா இருக்கிறது. அதிலே ஒரு அந்தரங்க சுத்தி, செய்யற காரியத்திலே மனசை லயிக்க விட்டு ஈஸ்வரார்ப்பணமா காரியம் பண்றது, இதெல்லாம் சாமான்யம்னு நெனைக்கிறியா ஜமுனா? எல்லாம் ஒரு தபஸ் மாதிரி, என்னமோ நாலுலே ஒருத்தர் ஒங்க அப்பான்னு நெனச்சுண்டுடாதே. மஹாகனவான். இல்லாட்டி தங்க விக்கிரகமாட்டம் ஒன்னைப் பெத்திருக்க முடியாது.”
ஆனந்தலட்சுமி எங்கே சுற்றி வளைக்கிறாள் என்று ஜமுனாவுக்குப் புரிந்தது. குறுக்கிடுவதால் பிரயோசனம் இல்லை என்று விட்டு விட்டாள்.
“எதுக்குச் சொல்றேன்னா, அவர் பொண்ணு நீங்கற நெனப்பு சதா ஒன்னைக் காவல் காக்கணும்.” - மேலும் ஏதோ சொல்லப் போன ஆனந்தலட்சுமி சட்டென்று நிறுத்திக் கொண்டாள்.
அவளது கண்களில் கரகரவென்று கண்ணீர் சுரந்து, மூக்குக் கண்ணாடியில் திவலைகள் தெறித்தன.
கண்ணாடியைக் கழற்றி, சேலைத் தலைப்பால் ஆனந்தலட்சுமி கண்களைத் துடைத்துக் கொண்டாள். கைப்பையை ஆணியில் மாட்டிவிட்டு, சரேலென்று திரும்பிய ஜமுனா, ஆனந்தலட்சுமிக்கு ஆதரவாகப் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.
“என்ன மாமீ...?” - அவள் குரல் வாஞ்சை ஆனந்தலட்சுமியின் திடீர்த் துயரத்தைப் புரிந்து கொண்டது போல் அதற்கு அரவணைப்பான கனிவோடு ஒலித்தது.
சட்டென்று கண்ணாடியைத் துடைத்து மாட்டிக் கொண்டே ஆனந்தலட்சுமி, “ஒண்ணுமில்லேடி கொழந்தே! என்னமோ ஞாபகம் வந்துடுத்து” என்று அருகில் உட்கார்ந்திருந்த ஜமுனாவின் முதுகை நீவினாள்.
“என்ன வாங்கிண்டு வரச் சொன்னே?”
“மைதா மாவு தீர்ந்து போயிடுத்து.”
“இப்ப மைதாவுக்கென்ன அவசியம் வந்துடுத்து?”
ஜமுனா பதில் தரவில்லை.
“தேங்காய் ஏன் துருவறேன்னா அழுகிடும்கிறே. மைதா மாவு ஆயிட்டது வாங்கி வரச் சொன்னேங்கிற. ஒண்ணுமறியாக் கள்ளியாட்டம் பலகாரம் பட்சணம் செஞ்சுவச்சேன்னா நான் சாப்பிட மாட்டேன், பாத்துக்கோ!”
“எனக்குப் பால்போளி சாப்பிட ஆசை வந்துட்டுது மாமி.”
ஜமுனாவின் சாமர்த்தியத்தைக் கண்டு ஆனந்த லட்சுமிக்கு வருத்தமதான் வந்தது.
“எனக்குப் பால் போலி பிடிக்கும்னு ரங்கையர் சொன்னாரா?”
“இல்லையே!”
கண்ணாடியை மறுபடியும் கழற்றினாள் ஆனந்தலட்சுமி, அவளது சேலைத் தலைப்பு மீண்டும் கண்களைத் துடைத்தது.
“மாமீ... மாமீ...”
“பலகார பட்சணம் சாப்பிடவா வந்தேன். இந்தப் பாழும் மனசிலே பந்தம் இன்னும் போகல்லே. கடைசித் தடவையா பார்த்துடுடணும்னு தோணித்து.”
“............”
“ஒனக்குப் புத்தி சொல்ற யோக்யதை எனக்கில்லேடீ கொழந்தே! நீ கள்ளம் இல்லாத பால் மாதிரி இருக்கே. நான் திரிஞ்சு போய் தெருவிலே கொட்ட வேண்டிய பால்.”
ஜமுனா சட்டென்று எழுந்து உள்ளே போனாள். கூடத்தை ஒட்டிக் கிழக்கும் மேற்குமாக இருந்த இரண்டு அறைகளில் மேற்கு அறையில் நுழைந்து சிறிய பீரோவைத் திறந்து உள்ளங்கை அகலத்துக்கு, கையடக்கமாக இருந்த டிரான்ஸிஸ்டர் ஒன்றை எடுத்தாள். அறை விளக்கைப் போட்டு ஸ்டேஷன் தேடி மறையைத் திருகினாள். சென்னை வானொலியில் உபந்யாசப் பிரவசனம் ஒன்று வெண்கலக் குரலில் கேட்டது. விளக்கை அணைத்து விட்டு வெளியே வந்தாள்.
“மாமீ, இந்தப் பிரவசனத்தைக் கேளுங்கோ, மனசு நிம்மதியா இருக்கும்.”
ஆனந்தலட்சுமி டிரான்ஸிஸ்டரை வாங்கினாள்.
“இதேதுடீ அம்மா... ரொம்ப நன்னா இருக்கே!”
“அண்ணா ராகவன் ஜப்பான் போயிருந்தப்போ வாங்கிண்டு வந்தான் மாமி.”
ஆனந்தலட்சுமி பிரவசனத்தில் மூழ்கினாள். ஜமுனா தேங்காய் துருவ எழுந்தாள். நாலைந்து சுற்றிலேயே மூடி தீர்ந்துவிட்டது. இரண்டு மூடிகளையும் சமையல் அறைக்கு எடுத்துப் போனாள். உள்ளே விளக்குப் போடும் ஓசை கேட்டது.
எவர்சில்வர் தட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்த ஜமுனா, துருவல் கொட்டியிருந்த வாழை இலையை வாகாகத் தூக்கித் தட்டில் வைத்துக் கொண்டாள். தேங்காய்த் துருவியைச் சாய்த்துப் பிடித்து ஊதினாள். தட்டின் குறுக்கே துருவியை வைத்தபின், ஆணியில் மாட்டியிருந்த பையை எடுத்துக் கொண்டே மீண்டும் சமையலறைக்குப் போனாள்.
ஒருக்களித்தவாறு திறந்திருந்த தெருக்கதவின் வழியே உடம்பை நெளித்துக் கொண்டு சுவாதீனமாக ஒரு நாய் உள்ளே நுழைந்தது. தெரு நாய், கறுப்பு நிறம், கதவு லேசாக ஓசைப்பட்டதைக் கவனித்து ஆனந்தலட்சுமி திரும்பினாள்.
திருட்டுத்தனத்தோடு அவளைப் பார்த்து லேசாக வாலை ஆட்டிற்கு அது.
“ஜம்னா, நாய் வந்திருக்கு” என்று சமையல் அறையை நோக்கிச் சொன்னாள்.
“வந்துட்டேன் மாமி.”
தெரு நாய் ஆனந்தலட்சுமியை கண்ணோட்டம் விடுவதுபோல் ஒருமுறை பார்த்துவிட்டு ஆட்சேபகரமாக எதுவும் காணாததால் சுவாதீனமாகப் படுத்துக் கொண்டது.
“இந்தத் தெரு நாயை எல்லாம் உள்ளே சேத்தறது எனக்குப் பிடிக்கலே அம்மா, அது மொகத்தைப் பார்த்தியோ, ஒரு திருட்டுத்தனம் தெரியறது. ஆமா.. கோயிலுக்குப் போகலியா?”
“சுவாமியை நாம தரிசிக்கப் போனா, நம்மைத் தரிசிக்க நாலு பேர் வந்துடறா.”
“அதான் லோகம். நானும் சின்ன வயசிலே அப்படி அனுபவப்பட்டிருக்கேண்டியம்மா” - அவள் பிரவசனத்தின் வால்யூமைக் குறைக்கத் தவறான மறையைத் திருகினாள்.
“ரூப் தேரா மஸ்தானா... ப்யாருமேரா தீவானா” என்று ஸ்டேஷன் மாறி டிரான்ஸிஸிடர் இயங்கிற்று.
“இதை அணைச்சுவிடுடீ கொழந்தே, என் கதையை ஒங்கிட்டே கட்டாயமாக சொல்லிடணும்னு என் மனசு துடிக்கிறது.”
டிரான்ஸிஸ்டரை வாங்கி நிறுத்தினாள் ஜமுனா.
“சமையல் உள்ளுக்கு வந்துடுங்கோ மாமி. நீங்க பேசறச்சே நான் வேலையை செஞ்சுக்கறேன்.”
வெங்கடேச புராணத்தில் காகித மூலையை மடித்து விட்டு எழுந்தாள் ஆனந்தலட்சுமி.
“இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டுப் போனேள்னா எனக்கும் உங்க கதையைக் கேட்ட மாதிரியும் இருக்கும். திருப்தியும் கெடைக்கும்.
ஆனந்தலட்சுமி வேதனையோடு சிரித்தாள்.
“இப்ப நான் தங்கி இருக்கிறதே, அதிகப்படி கொழந்தே! ரங்கையர் மாதிரி ஆசாரசீலர் ஆத்திலே தங்க துளி யோக்யதை கூட எனக்குக் கிடையாது. இந்தக் கட்டையாலே நாலு பேருக்கு ஏதோ உபகாரம் செய்யணுமனு கர்மா இருந்தது. சித்தி போனதும் அதுவும் போயிடுத்து. பாவ மூட்டை பளு அதிகமாயிட்டது கொழந்தே. நாலு க்ஷேத்திரங்களைத் தரிசனம் பண்ணி எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு கொறைச்சுண்டு காசிக்குப் போகப் போறேன். பகவான்சீட்டை அனுப்பற வரைக்கும் காத்துண்டு இருப்பேன். கங்கா நதியிலே இந்தக் கட்டை கரைஞ்சுடுத்துன்னா போறும்.”
முறத்தில் மைதா மாவுப் பொட்டலத்தை அவிழ்த்துக் கொட்டிய ஜமுனா, எதிரில் வந்து உட்கார்ந்த ஆனந்த லட்சுமியை ஏறிட்டுப் பார்த்தாள்.
கங்கையின் பிரவாகம் அவள் மனக் கண்ணில் தோன்றி மறைந்தது. போன முறை லீவில் வந்தபோது, ராகவன் அவளையும் வட தேச யாத்திரைக்குக் கூட்டிச் சென்றான்.
பண்டாக்களின் களேபரம்... யாத்திரிகர்களின் சந்தடி... ஆயிரம் கவலைகள்... இன்ப துன்பங்கள்... எதையும் பொருட்படுத்தாமல் பாவ புண்ணியங்களைத் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டு செல்லும் கங்கா நதியின் கம்பீர ஓசை அவள் மனச் செவியில் விழுந்தது.[தொடரும்]
No comments:
Post a Comment