Wednesday, 30 January 2013

ஜமுனா-10



10
கிறீச் கிறீச் சென்று ராட்டினம் இரையும் ஓசை வந்தது. தெருக்கதவு ஒந்திரித்தது போல் லேசாகத் திறந்திருந்தது ராஜாமணி வாசற்படியிலேயே நின்றான். கூப்பிடலாமா என்று யோசித்தான். காலை மணி பத்து. ரங்கையர் ஓட்டலில் இருந்தார். அதைத் தெரிந்து கொண்டே அவர் பெயரைக் கூப்பிடுவது நாடகம் மாதிரிப்பட்டது. ஜமுனாவைப் பெயர் சொல்லி அழைக்கும் உரிமை தனக்கு வரவில்லை என்று அவன் உள்ளூர உணர்ந்தான்.
ஆனந்தலட்சுமி ஊருக்குப் போய்விட்டது. அவனுக்குத் தெரியாது. அவளும் கூட இருப்பாள்! 
அதனால்  கதவைச் சுவாதீனமாகத் திறந்து கொண்டு உள்ளே போக முடியவில்லை.
அது மட்டும்தானா காரணம் என்று அவன் தன்னைக் கேட்டுக் கொண்டான். மனசின் அடிவாரத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஒரு தெரு நாய் மாதிரி படுத்திருந்து பல்லைக் காட்டியது.
ஜமுனாவை நினைக்கும்போதெல்லாம் அது உறுமிற்று. அவளது சுறுசுறுப்பு, ராணி மாதிரி ஓர் அநாயாச கம்பீரம், இமையை நிமிர்த்தி அவள் பார்க்கும் பார்வை, அந்த அழகான புன்னகையின் அதிகாரம். அவன் படிப்பு, அந்தஸ்து எல்லாம் அந்த அழகின் முன்னால் சாமான்யப்பட்டுபோய்த் தோன்றும் தாழ்வு மனப்பான்மையைத்தான் ராஜாமணி அனுபவித்தான். விதியின் சீட்டாட்டத்தில் சீட்டுக்கள் கை மாறிவிட்ட மாதிரி அவன் உணர்ந்தான். அவள் உள்ளவாறு ராணியாக இருக்க வேண்டியவள். தான் அவளுக்கு சேவகனாக இருக்க வேண்டியவன்.
குமாரசாமி கோயிலில் அவளைச் சந்தித்த பிறகு தினசரி அப்படி ஒரு சந்திப்புக்கு ஏங்கி அவன் கோயிலுக்கு வரத் தொடங்கினான். அடுத்த நாளில் இருந்து அவள் வருவதையே நிறுத்திவிட்டது அவனுக்கு உறைத்தது. அவள் எவ்வளவு கண்டிப்பானவள் என்பதும் தான் எவ்வளவு சராசரி என்றும் உறுத்திற்று.
உள்ளே ராட்டின ஓசை நின்று பக்கெட்டைக் கிணற்றுச் சுவர் மேல் வைப்பதும், பிறகு ஏதோ பாத்திரத்தில் அந்தத் தண்ணீரை ஊற்றவதும் தெளிவாய்க் காதில் விழுந்தன.
“போஸ்ட்” என்று எதிர்ச் சாரியில் சைக்கிளைத் தள்ளிக் கொண்டே வந்த போஸ்ட்மேன் கேசவலு நாயுடு, வீட்டெதிரில் நின்றார். ராஜாமணிக்கும் ஆனந்தபவனுக்கும் அவர் மிகவும் பரிச்சயமானவர்.
இந்நேரத்தில் ஜமுனா வீட்டெதிரில் நிற்பதைப் பார்த்தால் ரிடையராகப் போகும் கேசவலு நாயுடு சட்டென்று மோப்பம் பிடித்து விடுவார். ஆனது ஆகட்டுமென்று தைரியமாகக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தான்.
கரகரவென்று ராட்டின ஓசை கயிறு கிணற்றின் உள்ளே இறங்கிக் கொண்டிருப்பதைத் தெரிவித்தது. செருப்புச் சத்தம் கேட்டு ஜமுனா திரும்பிப் பார்த்தாள்.
கூந்தலில் ஒரு கற்றைச் சுருள் பிரிந்து நெற்றியில் விழுந்திருந்தது. முகத்தில் குறு வியர்வை. கொசுவத்தை இரண்டாக மடித்து இடீப்பில் செருகியிருந்ததால் செக்கச் சிவந்த முழங்கால்கள் வெளித் தெரிந்தன. அப்படியும் கொசுவம் நனைந்திருந்தது.
தெரு வாசற்படியை அடுத்து ஒரு சிறிய நடை, அதைத் தாண்டியதும் வால் மாதிரி நீண்ட வாசலில் கண்ணைப் பறிப்பது போல் வெள்ளை வெளேரென்று ஜமுனாவின் புடவை, ரவிக்கை, ப்ரா எல்லாம் வரிசையாக ஒரு கொடியில் காய்ந்தன. வெய்யிலில் உடைகளின் வெண்மை கண்ணைப் பறித்தது. அப்போது தான் உலர்த்திய சேலையிலிருந்து நீர் சொட்டிற்று.
“ரங்கையர் இருக்காரா?” - ஒரு பொய்யில் ஆரம்பித்தான் ராஜாமணி.
பக்கெட் தண்ணீர் விளிம்பைத் தொட்டுக் கிணற்றுக்குள் சப்தித்தது. ஒரு கையால் கயிற்றைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் முகத்தில் வியந்திருந்த கூந்தலை ஒதுக்கி விட்டவாறு அவனைப் பார்த்தாள். வளையல்கள் கலகலத்தன.
வெய்யிலில் நெற்றியைச் சுளித்துக் கொண்டு அவன் பார்த்ததும் ராஜாமணிக்குத் தன் துணிச்சல் ஆவியாவதை உணர்ந்தான்.
“அப்பா ஓட்டல்லேதானே இருப்பார்.”
அதற்கு மேல் அங்கே நின்று கொண்டிருப்பதற்குத் தனக்கு ஆதாரமில்லாதது புலப்பட்டது. அவனை வெளியே கிளம்ப விடாமல் ஏறுவெய்யிலில் புடத்தில் வைத்த தங்கம் போல் ஒளிரும் அவளது அழகு அவனைத் தடுத்தது.
ஜமுனா அவன் இன்னும் தாமதிப்பதைப் பார்த்து ஏதோ புரிந்து கொண்டாள். முகத்தைத் திருப்பிக் கொண்டு பக்கெட் இன்னும் நிரம்பக் கயிற்றைத் தளர்த்தி விட்டாள். நிரம்பிய பக்கெட் கயிற்றைச் சுண்டி இழுத்தது.
கிறீச் கிறீச் சென்ற பக்கெட்டை இயக்கும்போது ராட்டினம் இரையத் தொடங்கிற்று. ராஜாமணி வேலையின்றி வெட்டியாக நிற்பது போல் மோசமாக உணர்ந்தான். தண்ணீரை எடுத்துச் சுவரோரமாக வைத்திருந்த பக்கெட்டில் நிரம்பினாள். இரண்டு கைகளையும் ஈரம் போக அவள் உதறிவிட்டபோது, வளையல்கள் துள்ளிச் சிரித்தன. ஒரு விரலால் நெற்றியில் படிந்த குறுவியர்வையை வழித்துச் சுண்டினாள்.
வயிற்றில் செருகியிருந்த கொசுவத்தை அவிழ்த்து விட்டுக் கொண்டு அவன் அருகில் வந்தாள். என்ன பேசுவது என்று புரியாமல் மழுங்கி நின்ற ராஜாமணிக்கு. அவள் சமீபம் ஜிவ்வென்று ரத்தத்தைப் பொங்க வைத்தது.
துணி சோப்புவு அவள் உடம்பின் மணமும் கலந்த ஒரு வாசனை, ராஜாமணியை மேலும் தடுமாற வைத்தது. துணிகளை எல்லாம் துவைத்து முடித்த திருப்தியும் ஒரு தூய்மையும் அவள் முகத்தில் அயர்ச்சியாகப் படிந்திருந்தன.
கரைந்தது போக லேசாக மிஞ்சியிருந்த குங்குமத்தின் சுவடும், மேலுதட்டின் மேல் இழிகளாகப் பூத்திருந்த வியர்வையும், கைகளிலும் கால்களிலும் காணப்பட்ட ஈரமும், அவளதுஅழகில் ஒரு அயர்ச்சிக் களையைச் சேர்த்திருந்தன. செஞ்சந்தன நிறத்தில் மிளிர்ந்த அவளது வயிற்றுப் பாகமும், திரண்ட தோள்களின் வசீகரமும் ராஜாமணியின் இளமையை விழிக்கச் செய்தன.
அந்த சமீபத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் துணிச்சல் தனக்கு இல்லையே என்று அவன் வருந்தினான். ஜமுனா சாவதானமாக, சேலையின் பக்கத்தில் காயப் போட்டிருந்த டவலை எடுத்து கைகளைத் துடைத்துக் கொண்டாள்.
அப்புறம்? என்ற கேட்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் தன்னைச் சபலத்தின் தரை மட்டத்தில் தாழ்த்தி விட்டு விட்டு மீண்டும் ராணியானதை உணர்ந்தான் ராஜாமணி. அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.
“இங்கே ஆனந்தலட்சுமின்னு ஒருத்தர் வந்தாங்களே... அவங்க...?”
“காத்தாலே நாலரை மணிக்கு கேரளா எக்ஸ்பிரஸ்லே போயிட்டாங்க” என்ற அவள் பளிச்சென்று பதில் அளித்தாள்.
“எங்கே?”
“காசிக்கு...”
“அவங்க யாரு?”
“எனக்குத் தெரியாது...”
“நிஜம்மா...?!”
வாசலில் காயப் போட்டிருந்த வடகத்தை விட்டு வெய்யில் நகர்ந்து விட்டதைக் கவனித்த ஜமுனா, வெய்யிலுக்கு நேராக அதை மீண்டும் இழுத்து விட்டுக் கொண்டே அவனைக் கோபமாகத் திரும்பிப் பார்த்தாள்.
“சாரி... நிச்சயமாகவான்னு கேட்க நெனைச்சேன்” என்று தடுமாறினான்.
அவனது தடுமாற்றத்தைப் பார்த்ததும் ஜமுனாவுக்குப் புன்னகை வந்தது. சிரமத்தோடு அடக்கினாள்.
“எனக்குத் தெரிஞ்சவரை அதுதான் நிஜம். அதுதான் நிச்சயம்...”
“ரங்கையருக்கு அவங்க ஒறவா?”
அவள் நாரத்தங்காய் ஊறிய ஜாடியை வெய்யிலுக்கு நகர்த்தினாள்.
“அதான் சொன்னேனே... எனக்குத் தெரியாது...”
அவள் மறைக்கிறாள் என்று ராஜாமணிக்குத் தோன்றிற்று. பதில்கள் இப்படிக் கத்தியில் செதுக்குவது போல் ஒன்றிரண்டு வார்த்தைகளாய் நறுக் நறுக்கென்று வராமல் இருக்கலாமே என்று அவன் மனசு ஏங்கிற்று.
அவன் படிப்பு, புத்தகங்கள், அனுபவம் எதுவுமே அந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்வது என்று உதவாமல் போனது. அவனுக்கு இன்னும் அவமானத்தை உண்டாக்கிற்று.
“நீ ஏன் இப்பல்லாம் கோவிலுக்கு வர்றதில்லே?”
“கோவிலைச் சுத்த நான் போனா என்னைச் சுத்தறவா அதிகமாயிட்டா.”
பேசுவதற்கு அவனுக்கு ஒரு பிடி கிடைத்தது.
“சாரி ஜமுனா... எனக்கு அது நோக்கமில்லே.”
“உங்க நோக்கம் என்னவோ... எனக்கென்ன வந்தது? இப்ப வேறென்ன கேட்கப் போறேள்?”
“நீ ரொம்ப கோவிச்சுக்கறே. நீயும் நானும் புதுசாவா பார்த்துண்டிருக்கோம். பன்னெண்டு வருஷத்துக்கு முந்தி நாம் எவ்வளவு ஒத்துமையாப் பழகி இருக்கோம்.”
“...........”
“எதையோ பார்த்துப் பயந்துட்டேன்னு ரயில்வே ஸ்டேஷன்லே மணி ஐயர் கிட்டே மந்திரிச்சண்டு வர நீயும் நானும் ஒண்ணாப் போவோமே... ஆஸ்பத்திரிக்கு எதிரிலே காங்கிரஸ் மைதானத்திலே கல்பெஞ்சிலே உட்கார்ந்துண்டு கொடுக்காப்புளி வாங்கிச் சாப்பிடுவோமே...”
திடீரென்று ராஜாமணிக்கு நினைவுகள் ஒரு தைரியத்தை வழங்கின. அவன் அவற்றில் தோய்ந்து மூச்சு விடாமல் பேசத் தொடங்கினான்.
“நெய் வாங்கிவர அருணாசல ஐயர் கடைக்குப் போவோம். அப்போ புதுசா பிரஸ் வச்சிருந்தாங்க. அது லொடக் 
லொடக்குனு அடிக்கிற சத்தத்தைக் கேட்டு எவ்வளவு ஆச்சரியமா நீ பார்த்திருக்கே... ஒரு ஈய ஒரு ரூபாயை மஹாலட்சுமி சோடா பாக்டரிலே கொடுத்து சில்லுனு தண்ணீத் தொட்டியிலே அமிழ்ந்திருந்த கலர் ரெண்டு வாங்கிக் குடிச்சுட்டு வெளியே வர்றப்ப என்னை மடக்கிண்டானே... நீ போய்த்தானே நம்ம சர்வர் ஒருத்தனைக் கூட்டி வந்தே?”
ஜமுனா அவனது ஞாபக சக்தியில் கட்டுண்டு நின்றாள் அவளது கனிந்து சிவந்த உதடுகளில் பழைய காலம் ஒரு புன்னகையாய்ப் பாதரசம் போல் மினுமினுத்தது.
“நீ கான்வென்ட்டுக்குப் போனதும் திடீர்னு மாறிட்டே.”
“டொமினிக் சேவியோவுக்குப் போனதும் நீயும்தான்” என்று ஒருமையில் வந்த விளியை நறுக்கென்று நாக்கைக் கடித்து நிறுத்தினாள்.
பின்பு “நீங்களும்தான் மாறிட்டேள்” என்றாள்.
“பார்த்தா கோவப்படற அளவுக்கு நான் ஒண்ணும் மாறல்லே.”
“பார்வை விகல்பமானா கோபம் தன்னாலே வரும்.”
ராஜாமணிக்கு அவள் வேலியிடுவது துல்லியமாக உறைத்தது.
“நாம பார்க்காம போன அஞ்சு வருஷததிலே உன் அழகு அற்புதமா பூரிச்சிருக்கு.”
ஜமுனாவின் முகம் குப்பென்று சிவந்தது.
“அதனாலேதான் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை மொறைச்சுப் பார்க்கிற மாதிரி நான் பார்க்கிறேன். அது ஒனக்கு விகல்பமாப் படறது.”
அவள், நீர் சொட்டிக் கொண்டிருந்த சேலையை ஒன்றாய்ச் சேர்த்து, இன்னொரு தரம் முறுக்கிப் பிழிந்து விட்டாள்.
“இப்போ ராகவன் எங்கே இருக்கான்?”
“ஷெவ்ரான் டாங்கர்ஸ்... எண்ணெய்க் கப்பல். ஃபாகோஃபா கோன்னு அமெரிக்காவிலே ஒரு தீவாம். அங்கேயிருந்து எண்ணெய் எடுத்துண்டு தேசம் தேசமா சுத்தறது...”
“லீவிலே வருவானோ?”
“ரெண்டு மாசத்திலே வரணும்.”
“அதுக்குள்ளே நான் போயிடுவேன்.”
“எங்கே?”
“ஐ, எஃப்.எஸ்.டெஸ்ட் எழுதப் போவேன். செலக்ஷன் கெடைச்சடும். கெடைச்சுட்டா அஸிஸ்டெண்ட் கன்ஸர்வேட்டர் டிரெய்னிங்... டேராடூன்லே.”
அவள் ராட்டினத்தைக் கழற்றி எண்ணெய் போடுவதற்காக எடுத்து வந்தாள். நடந்து கொண்டே பேச்சுக் கொடுத்தாள்.
“ஆனந்தபவனை யார் பார்த்துப்பா?”
“ரங்கையர்... சுப்பண்ணா... எங்க அப்பா!”
அவளது அழகின் சிம்மாசனத்துக்கு இணையாக தான் உயர்ந்து வருவதுபோல் அவனுக்குப் பிரமை தட்டிற்று. ஜமுனா அவனை விசித்திரமாகப் பார்த்தாள்.
“ஏன் வெளியே போகணும்? சொந்தத் தொழிலும் ஊரும் இருக்கறச்சே யார்கிட்டேயோ கை கட்டி ஏன் உத்தியோகம் பார்க்கணும்?” ராட்டின உருளையை ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தாள்.
“காப்பி கிளப் போய் ஒரு உத்தியோகமா... இல்லே தொழிலா...? பி.எஸ்.ஸி முடிச்சட்டு இந்தக் குட்டையையே வளைய வளைய வர்றத்துக்கு என்ன பிடிப்பு இருக்கு?”
ஜமுனா ராட்டினத்தைக் கிணற்றின் மீது மாட்டினாள்.
“சொந்த பந்தம் எல்லாம் ஒரு பிடிப்பில்லையா...? எல்லா ஆபீசரும் ஆனந்தபவன் காப்பியை சாப்பிட்டாத்தான். அக்கடான்னு வேலை செய்யறதா அப்பா சொல்றாரே.
“ஆனந்தபவன் காப்பி இருக்கட்டும். இப்ப நீ எனக்கு ஒரு காப்பி தரமாட்டியா?”
ஜமுனா தைரியமாக அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“மாட்டேன்.”
“மாட்டியா?”
காப்பி தரமாட்டேன் என்று சொல்லிவிட்டு ஜமுனா உள்ளே போனாள். அவள் வெளியே வரும்போது தோலைச் செதுக்கி அழகாக அரிந்த முலாம்பழத் துண்டங்களின் மீது சர்க்கரையைத் தூவி ஒரு பிளாஸ்டிக் தட்டில் எடுத்துக் கொண்டு வந்தாள்.
“தட்டு அழகாயிருக்கே!” என்று சிலாகித்தான் ராஜா.
“அண்ணா ஹாங்காங்கிலே வாங்கி வந்தான்.”
“ராகவன்பாடு ஜாலி... ஹாங்காங், சிங்கப்பூர் எல்லாம் அவனுக்கு வாணியம்பாடி, ஆம்பூர் மாதிரி இருக்கு.”
“எல்லாம் இக்கரைக்கு அக்கரைதான்” என்று சூள் கொட்டினாள் ஜமுனா.
“ஏன் அப்படிச் சொல்றே?”
“நான் சொல்லலே. அவன் சொல்றான். வருஷம் பூரா தண்ணீலே மெதந்துண்டு நாடோடி மாதிரி அலையறேன்னு வருத்தப்படறான். சொந்த ஊர்ப் பாசம் அவனை அரிச்சண்டிருக்கு. பொழுது தப்பினா ஒரு விபத்து. நித்திய கண்டம் பூர்ணாயுசு.”
“சொந்த ஊரை விட்டு வெளியே போனாத்தான் அந்தப் பாசம் வரும்.”
“அதுக்காகத்தான் நீங்களும் போகப் போறேளா?
ஒரு விள்ளலை வாயில் போட்டுக் கொண்ட ராஜாமணி. நிமிர்ந்து பார்த்தான். எதையோ விழுங்கியதைப் போல் அவளது தொண்டை விம்மித் தணிந்தது. அந்தக் கழுத்தில் உண்டான அசைவு அதை முத்தமிட வேண்டும் போல் ஒரு கிளர்ச்சியைத் தோற்றுவித்தது. ராஜாமணி அவளையே பார்த்தான். அணு அணுவாக அவளது கண்கள் உதடு என்று ஒவ்வோர் அங்கத்திலும் முலாம்பழத்துச் சர்க்கரை மாதிரி அவன் கரைந்தான்.
“சாப்பிடுங்கோ” என்று நறுக்கென்று சொன்னாள்.
“ஜமுனா” அடிக்கடி வரம்புகளை ஞாபகப்படுத்தியது ராஜாமணியின் மனசில் அவள் மீது இருந்த மரியாதையை அதிகப்படுத்திற்று.
“இங்கே எனக்குண்ணு யார் இருக்கா?” என்று அவன் குரல் ஏங்கிற்று.
“இன்னும் யார் வேணும்?”
“நீ” என்று பளிச்சென்று கிடைத்த சந்தர்ப்பத்தைத் துணிச்சலோடு பயன்படுத்திக் கொண்டான் ராஜாமணி.
“அசட்டுப் பிசட்டென்று பேசாதேங்கோ. நாம ரெண்டு பேரும் பால்ய சிநேகிதம்கிற ஒறவு ஒண்ணைத் தவிர வேறு மாதிரி எதுவும் கற்பனை பண்ணிக்க வேண்டாம்.”
“ஜமுனா” என்று மெதுவாகக் கூப்பிட்டான் ராஜாமணி. அவள் பார்வை வாசற் கூடத்தில் உட்கார்ந்திருந்த அவனைச் சந்தித்தது. ராஜாமணியின் முகம் சிறுத்து விட்டது. கூம்பிச் சுண்டியிருந்த அந்த முகத்தோற்றம் பரிதாபமாக இருந்தது.
“நீங்க மாத்வ ராயர். நான் ஸ்மார்த்த ஐயர் ஆத்துப் பொண்ணு நடக்கிற கதை ஏதாவது இருந்தாப் பாருங்கோ.”
ராஜாமணி நிலைகுலைந்தான்.
“இந்த வித்தியாசம் இல்லேன்னா. இல்லேன்னா?”
“வேற ஏதாவது...”
ராஜாமணிக்கு அவள் சொன்னதில் ஏதோ நுட்பமான அர்த்தம் இருப்பதுபோல் பட்டது அது என்ன என்ற அவன் மனம் குடைந்தது. மிகுந்த ஏமாற்றத்தோடும் விவரிக்க முடியாத மனப் பளுவோடும் அவன் வெளியேறினான். ஒந்திரித்திருந்த கதவைத் திறந்து கொண்ட அவன் வெளியேறியபோது அந்த வீட்டுக்கு எதிர் மாடியில் கிராதியைப் பிடித்தவாறே, மோகன் அவளைப் பார்த்துச் சிரித்ததையும் ஜமுனா பொய்க் கோபத்தோடு உதடுகள் துறுதுறுக்க அவனுக்கு அழகு காட்டியதையும் ராஜாமணி கவனிக்கவில்லை.

No comments:

Post a Comment