Monday, 28 January 2013

ஜமுனா -8


8
“ஒங்க தொழிற்சங்கத்திலே என்னையும் சேர்த்துக்கப்படாதா?” என்று கேட்டார் ஆனந்தராவ்.
ஐஸ் பாக்ஸுக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த மேஜையில் உட்கார்ந்திருந்த இருவரும் சிரித்தனர். ஒருவர் ஓட்டல் தொழிலாளிகள் சங்கத்தை ஆரம்பிப்பதற்காகப் பத்து நாட்களாக அலைந்து கொண்டிருக்கும் கண்ணப்பன், இன்னொருவர் கிரைண்டிங் மிஷின் ஏஜெண்டு நீலகண்டன்.
“என்ன சார் சிரிக்கிறீங்க?” என்று கேட்டார் ஆனந்தராவ்.
“இது தொழிலாளிகள் சங்கம். ஒங்களுக்குத்தான் தனியா ஓட்டல் முதலாளிகள் சங்கம் இருக்கே, அதிலே சேர்த்துடுங்கோ.”
“அந்த சங்கத்திலே என்னை சேத்துக்க மாட்டேனுட்டாளே” என்று உதட்டைப் பிதுக்கினார் ஆனந்தராவ்.
சர்வர் ரங்கையர் இருவருக்கும் காப்பி கொண்டு வந்து வைத்தார்.
“ஏன்?”
“சாப்பிடுங்கோ சார்... சொல்றேன்!”
கண்ணப்பன் காப்பி டபராவைத் தொட்டுப் பார்த்தார்.
“சூடாயிருக்கு... அப்புறமா சாப்பிடறேன். விஷயத்தை சொல்லுங்க.
கிரைண்டிங் மிஷின் நீலகண்டன் காப்பியைக் குடிக்கத் தொடங்கினார். சர்வர் ரங்கையர் கண்ணப்பனின் டபராவை எடுத்துக் காப்பியை ஆற்றலானார்.
“சர்க்கரை விலை ஏறிடுத்து. காப்பிக் கொட்டை விலை ஏறிடுத்து...” என்று ஆரம்பித்த ஆனந்தராவ், ஒரு மிடறு காப்பியைப் பருகிய நீலகண்டனைப் பார்த்து, “காப்பி எப்படி சார் இருக்கு?” என்று கேட்டார்.
“ஏ ஒன்!”
“ஒம்ம மாவு அரைக்கிற மிஷினை வாங்கப் போறேன்னு நெனச்சு சொல்லாதீங்கே. ஃபேக்டைச் சொல்லுங்கோ.”
“நீங்க வாங்கலேன்னா என் வியாபாரமே படுத்துடப் போவுதா என்ன...? ஏன் ராயரே, ஒம்ம கடைக்கே எதுக்குப் பத்து வருஷமா காப்பிக்கு வந்துட்டிருக்கிறேன்... சொல்லுங்கோ?”
“பலே பலே...!” என்று நீலகண்டனின் ரோஷத்தைச் சிலாகித்தார் ஆனந்தராவ்.
“காப்பி ஏ ஒன்” என்று ரங்கையர் ஆற்றிய டபராவில் ஒரு மிடறு பருகி விட்டுக் கண்ணப்பன் சொன்னார்.
“விலை என்ன தெரியுமா... நீங்க தர வேண்டாம்... ஸேம ரேட் மூணு ரூபா. மத்த கடையிலே மூணரை ரூபா முன்னே சொன்னேனே வெலைவாசி ஏறிட்டது. காப்பி விலையையும் மசால் தோசை மாதிரி மெயின் அயிட்டங்கள் விலையையும் ஏத்தச் சொன்னாங்க. நான் மாட்டேன்னுட்டேன். நான் முதலாளியா இருக்க லாயக்கில்லேன்னு சங்கத்திலே 
சேர்த்துக்க மாட்டேனுட்டாங்க.”
கண்ணப்பன் மெதுவாகச் சிரித்தார்.
“கிராக்கி பிடிக்கணும்கிற நோக்கமில்லே. கஸ்டமர் கையிலே காசை ஊர் ஒலகமெல்லாம் பிடுங்கிண்டு ஓடறது. நாவார வயிறார சாப்பிடவாவது வரலாம்னு ஓட்டலுக்கு வர்றார் கஸ்டமர். அவர் ஜேப்பிலேயும் வயித்திலேயும் அடிச்சா அனுப்பட்டும்? எனக்கு லாபம் மினிமமா வந்தாப் போறும். கஸ்டமர் வயிறு எரிஞ்சுண்டு ஆனந்தராயன் கூட கெட்டுப்பிட்டான், காசு ஆசை பிடிச்சுண்டுத்துன்னு வையாம போனாப் போறும்.”
கண்ணப்பன் உதட்டை மென்று கொண்டே ஆனந்தராவை உற்றுக் கவனித்தார்.
அந்த நேரத்தில் ஒரு பெரிய பித்தளைத் தூக்குடன் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.
“சாம்பார் இல்லேம்மா... தினம் ஒன்னோட இதே தொந்தரவாப் போச்சு” என்று சாரங்கன் சள்ளென்று சீறி விழுந்தான்.
பேச்சை நிறுத்திவிட்டு சாரங்கனையும் அந்தப் பெண்ணையும் ஒரு பார்வை பார்த்த ஆனந்தராவ் விஷயத்தைப் புரிந்து கொண்டார்.
“என்னடா சாரங்கா... இவாளும் ஒருவகை கஸ்டமர் தாண்டா... நம்ம ஓட்டல் சாம்பார் ருஜிக்காகவோ, வேற ஏதோ கொறைக்காகவோ சாம்பார் கேட்க வர்றா. இருக்கறதை ஊத்தி அனுப்பு. பாப்பா, காசைக் கொண்டாம்மா” என்று வாங்கிப் போட்டுக் கொண்டு அந்தச் சிறுமியை உள்ளே அனுப்பினார் ஆனந்தராவ்.
“ஆச்சா... நான் ஒண்ணும் பெரிய தியாகி இல்லே நானும் மனஷன் தான். ஆனா விபரீதமான காசு எனக்கு வேண்டாம். வெலைவாசி ஏறிப் போய்ண்டேதான் இருக்கும். என்னாலே சமாளிக்க முடியறவரை இந்த விலையைத்தான் வைக்கப் போறேன். தலையும் முழுகிண்டு போற லெவல் வந்தா நானும் வெலையை ஏத்தியாகணும். ஆச்சா... மொதலாளிகள் சங்கத்திலே இருந்து எனக்கு கெட்டவுட். இப்ப நீங்க என்னடான்னா தொழிலாளிகள் சங்கத்திலேயும் என்னைச் சேத்துக்க மாட்டேங்கறேள்... அப்ப எனக்குச் சங்கமே கெடையாதா?” என்று கேட்டார் ஆனந்தராவ்.
நீலகண்டன் சிரித்தார்.
“நீங்க ஒரு தனிப் பிரகிருதி ராயரே” என்று ஆரம்பித்தார் கண்ணப்பன்.
“என்னைத் தனின்னு ஒதுக்கிடாதீங்கோ... ஆனந்த பவன்லேயும் தொழிற்சங்கம் ஆரம்பியுங்கோ. நான் வேண்டாங்கல்லே. நானும் அதிலே ஒரு மெம்பர் ஆகணும்... எல்லோருக்குமா நானே சந்தா கட்டறேன்.”
“தொழிற்சங்க சட்டம் இடம் தராது ராயரே.”
“அதாவது வேஜஸ், போனஸ், டூட்டி அவர் இதையெல்லாம் கண்டிஷன் பண்ணத்தானே...”
“மாதவா” என்று மணியைத் தட்டினார் ஆனந்தராவ் அவன்தான் வந்தான்.
“அவர்கிட்டே உன் சம்பளம் என்னன்னு சொல்லுடா.”
மாதவன் தயங்கினான்.
“உண்மையைச் சொல்லுடா... நீ ஸ்டாம்பு மேலே எவ்வளவுக்கு கையெழுத்து போடறே... என்ன வாங்கறே...”
“ரெண்டும் ஒணுதானே அண்ணா.”
“அதுதான் எவ்வளவு?”
“முந்நூறு ரூபா... கம்பெனி சாப்பாட்டோட.”
“போனஸ்?”
“மூணு மாச போனஸ்.”
“எத்தனை அவர் வேலை செய்யறே?”
“ஷிஃப்ட் ஸிஸ்டம். எட்டு மணி நேரம்.”
ஆனந்தராவ் கண்ணப்பன் முகத்தைப் பார்த்தார்.
“மத்த ஓட்டல்லே ஸீனியர் சர்வருக்கு இருநூறு. போனஸ் ரெண்டு மாசம்தான். புகாரா சொல்ல வரல்லே. இதான் நெலமை. எனக்கும் தொழிலாளிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கறதா நெனைக்கிறேளா...?”
கண்ணப்பன் விரல் நகத்தால் உதட்டைக் கீறிக் கொண்டார்.
“என் மொதல் இங்கே சொல்பம் தான். எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட அம்மா ஒருத்தி இந்த ஓட்டல் நொடிக்கிற நெலமை வந்தப்ப. கழுத்திலேயும் கையிலேயும் போட்டிணடிருந்த நகையெல்லாம் கழட்டிக் கொடுத்தா. ஐம்பத்தேழு சவரன், அதை விக்கலே. பாங்கிலே வைக்கறது. மூட்டுக்கறது மறுபடியும் ஒரு கஷ்டம் வந்தா வைக்கறது இப்படியேதான் மொதலை ரொடேட் பண்ணிண்டு வர்றேன்.”
திடீரென்று தன் அந்தரங்க விஷயம் ஒன்றை ஆனந்தராவ் பகிரங்கப்படுத்தியதால் ஒரு கூச்சம் கண்ணப்பனைத் தாக்கிற்று.
“இன்னம் நான் வாடகை வீட்டிலே தான் குடியிருக்கிறேன். என் பையனை பி.எஸ்ஸி., படிக்க வச்சேன். அதே மாதிரி எங்க சரக்கு மாஸ்டர் சுப்பண்ணாவோட தம்பியையும் பி.ஏ., படிக்க வச்சோம். ரங்கையர் பையன் பி.யூ.ஸி. படிச்சு நின்னுட்டான். அவர் பொண்ணு எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணினா. எல்லாம் ஓட்டல் செலவிலே தான். ஓட்டல் என்னோடதுன்னு நான் எப்பவும் நெனைக்கறதில்லே. மானேஜ்மெண்ட் பாத்துக்கறேன். ரஷ்யாவிலே தொழிலாளி சம்பளத்தை விட தொழிற்சாலை டைரக்டர் சம்பளம் அதிகம்னு சொல்றாளே... அதே மாதிரி நானும் மாசா மாசம் என் குடும்ப செலவுக்கு அதிகமா எடுத்துண்டுறேன். இப்ப சொல்லுங்கோ, என்னை ஏன் தொழிற் சங்கத்திலே சேத்துக்கப்படாது?”
கண்ணப்பன் மௌனமாக யோசித்தார்.
“நான் செஞ்சதையெல்லாம் சொல்லிக் காட்டவரல்லே. என் கை எவ்வளவு கிளீனா இருக்கன்னு காட்டத்தான் சொல்றேன். குக் சுப்பையாவுக்கு ஓட்டல் கல்யாணம் பண்ணி வச்சது. காப்பி மாஸ்டர் வைத்தாவுக்கும், சர்வர் சுப்புணிக்கும் பெண் பார்த்துண்டிருக்கோம். அதுக்கும் ஓட்டல்தான் கல்யாணம் பண்ணி வைக்கும்.”
கண்ணப்பன் கனைத்துக் கொண்டே ஆரம்பித்தார்.
“நீங்க ஒரு எக்செப்ஷன் ராயரே... ஒம்ம மாதிரியே இருந்துட்டா... எங்களுக்கு வேலை இல்லே.”
“மத்தவா எப்படி இருக்காளோ தெரியாது. ஆனந்த பவனைப் பொறுத்தவரைக்கும் எல்லாரும் ஒரு யூனிட்டாத்தான் இருக்கோம். நீங்க தனித் தனியா தொழிலாளிகளை விசாரியுங்கோ... சங்கம்னு வெறுமனே சந்தா வாங்கி ஆரம்பிச்சா மட்டும் போறாது... எங்க சுப்புணி ரேஸுக்குப் போயிண்டிருக்கான். வைத்தாவுக்கு சினிமாப் பைத்தியம். எங்க பாபாவுக்கு படிக்க ஆசை. இந்தக் கொறைகளுக்கெல்லாம் உள்ளபடியே உங்க சங்கம் ஒரு சிகிச்சை பண்ணணும்.”
“நான் அப்புறமா வர்றேன் ராயரே” என்று கண்ணப்பன் எழுந்திருக்கப் போனார்.
‘2இருங்கோ, உட்காருங்கோ” என்று அவரைக் கையமர்த்தினார் ஆனந்தராவ், ரங்கையர் நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.
“நான் கவர்ன்மெண்டை ஏமாத்தறதில்லே. ஒழுங்கா டாக்ஸ் கட்டிண்டு வர்றேன். கலப்படம், பழசை புதுசாக்கிப் போடறது அதெல்லாம் நம்ம ஓட்டல்லே கெடையாது. சானிட்டரி இன்ஸ்பெக்டர் வந்தா சாப்பிட்டு பில் கொடுத்துட்டுப் போறார். பெரிசா பில்டிங் கட்டலேன்னாலும் லாபம் வந்துண்டுதான் இருக்கு. லாபத்தை எல்லாம் ஓட்டல்லேயே இன்வெஸ்ட் பண்ணிண்டு வர்றேன்.”
“இந்த ஓட்டலுக்கு புரொப்ரைட்டர் நீங்கதானே?” என்று மடக்கினார் கண்ணப்பன்.
“அப்படி ஒரு காலம் போட்டு இருக்கு. லைசென்ஸ்லே. அதுக்கே நேரா என் பேரை எழுதிண்டு போறாங்க. அவ்வளவுதான்.”
ஏழரைக்கு மேல் மின்சாரப் பற்றாக் குறையால் சட்டென்று விளக்கு அணைந்தது.
“மறுபடியும் லைன் கொடுப்பாங்க! பத்து நிமிஷமாறதோ அரை மணி ஆறதோ” என்றார் ஆனந்தராவ்.
ரங்கையர் மெழுகுவர்த்தி எடுத்து வர ஸ்டோர் ரூமுக்குப் போனார். போகப் போகவே “சாரங்கா, ஸ்டால்லே நேத்து ஆறு மெழுகுவர்த்திகளையும் அணைச்ச எடுத்து வச்சிருக்கேன். கொளுத்தி டேபிள் மேலே வை!” என்று உள்ளே குரல் கொடுத்தார்.
இருட்டில் எதிரே உட்கார்ந்திருந்த கண்ணப்பனைப் பார்த்து ஆனந்தராவ் பேசினார்.
“இந்த ரங்கையர் இருக்கிறாரே... இவருக்கு லேபர் ஆக்ட் என்னன்னு சொன்னாலும் கேக்க மாட்டார். விடிகாத்தாலே அஞ்சு மணிக்கு ஓட்டலுக்கு வந்துட்டு, ராத்திரி பத்து மணிக்கு நான் கல்லா கட்டற வரைக்கும் கூட இருந்துட்டுக் கடையைச் சாத்திண்டு சாவி எடுத்துண்டு வருவார். நான் எவ்வளவோ சொல்லிப் பாத்தாச்சு. லீவுன்னும் ஷிஃப்டும் விட்டாக்கூட இவர் ஓட்டலுக்கு வந்துடறார். என்னிக்காவது அந்த பனியனைக் கழட்டிட்டு இஸ்திரி போட்ட சொக்கா போட்டுண்டு வந்தா அன்னிக்குத்தான் ரங்கையர் லீவ் எடுத்துண்டார்னு அர்த்தம். அது வருஷத்துக்கு ஒரு நாள் கூட இருக்காது.”
ரங்கையர் மெழுகுவத்தியைக் கொளுத்திக் கொண்டு அது அணையாதவாறு உள்ளங்கையால் தடுத்தவாறு மெதுவாக வந்தார். மெழுகுவர்த்தியின் வெளிச்சம் அவர் முகத்தில் வீசிற்று. ஆனந்தராவ் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
கல்லா மேஜையின் மீது எரியும் மெழுகுவர்த்தியைச் சாய்த்து உருகின மெழுகைச் சொட்டவிட்டு மெழுகுவர்த்தியை அதன்மீது நிறுத்தினார். கையோடு கொண்டு வந்த இன்னொரு மெழுகுவர்த்தியை அந்தச் சுடரில் காட்டிப் பற்ற வைத்துக் கொண்டு போய் அவர்கள் உட்கார்ந்திருந்த மேஜையில் மெழுகைச் சாய்த்து ஒட்ட வைத்தார்.
நீலகண்டன் “சரி ராயரே... அப்ப ஒரு மேஜர் மெஷினுக்கு ஆர்டர் எழுதிக்கட்டுமா? என்று கேட்டார்.”
“நீலகண்டன் சார்... கோவிச்சக்கப்படாது. ஒமக்கு ஆர்டர் குடுத்து மேஜர் சைஸிலே மாவாட்டற மிஷின் கொண்டாந்து எறக்கிட்டீர்னா... நம்ம ஓட்டல்லே மாவட்டறதுக்குன்னே பிறவி எடுத்திருக்கான் ஒரு பய, கணபதின்னு பேரு. மலங்க மலங்க முழிச்சண்டு தேமேன்னு நிப்பான். அவனைக் கொடுக்க நம்ம ஓட்டல்லே வேறே வேலை கெடையாது. அநாதியா அவனை வீட்டுக்குத்தான் அனுப்ப வேண்டியிருக்கும். மிஷினை விட மனுஷாள் முக்கியம். இல்லையா... நீங்களே சொல்லுங்கோ.”
நீலகண்டனுக்கு இவ்வளவு நேரம் காத்திருந்தது ஒரு வியர்த்தமாகப்பட்டது.
“நீங்களே சொல்லுங்கோ. மெஷினை வாங்கிண்டு கணேசனை ஆட்குறைப்புச் செஞ்சா நீங்க போராட்டம் மறியல்னு அமர்க்களப்படுத்திட மாட்டேளா?”
“ஒம்ம ஓட்டல்லே அது நடவாது ராயரே. நான் வர்றேன். இவ்வளவு நேரம் காத்திருந்தது ஒரு வேஸ்டு” என்று எழுந்தார் நீலகண்டன்.
“லைட் வரட்டுமே... ரோடெல்லாம் இருண்டு கெடக்கப் போறது. அப்புறமாந்தான் போவேள்... ஒக்காருங்கோ” என்று அவர் ஏமாற்றத்தோடு புறப்படுவதை ரசிக்க முடியாமல் சொன்னார் ஆனந்தராவ்.
விளக்கு வந்தபின் அவர்கள் எழுந்து போனார்கள். இரண்டு தினங்களாக ஆனந்தராவ் முகத்தில் ஓர் ஆயாசத்தையும் இனங்காண முடியாத ஒரு வெறுமையைக் கவனித்து வந்த ரங்கையருக்கு சற்றுத் தெம்பு ஏற்பட்டது. பழைய நிலைக்கு ஆனந்தராவ் மீண்டுவிட்ட தெம்பு. அவரிடம் சொல்லக்கூடாது என்று மறைத்து வைத்திருந்த ஒரு விஷயத்தைக் கொஞ்சம் தெம்பாக இருக்கிற இந்த நேரத்தில் சொல்வானேன் என்று தயங்கினார்.
சொல்லாவிட்டால் நாளைக்கு ரொம்ப அலங்கலாய்த்துக் கொள்வார் என்ற கவலை ஏற்படவே, மெதுவாக கல்லா மேடை அருகே வந்து நின்றார்.
“என்ன ரங்கா?” என்று நிமிர்ந்தார் ஆனந்தராவ்.
“நாளைக்குக் காலம்பற எக்ஸ்பிரஸ்லே பொறப்படறாளாம்.”
ஆனந்தராவுக்கு யார் என்று புரிந்தது. அவர் முகம் இருண்டது.
“நீ சொல்லிப் பார்த்தியோ!”
“நீங்க சொல்லியே கேக்கலியே அண்ணா.”
ஆனந்தராவின் மேலுதடும் நெற்றிச் சதையும் நடுங்கின. அவர் கண்களை மூடிக்கொண்டார். ஓரிரு விநாடிகள் கனத்து நகர்ந்தன.
ம்ம்ம் என்று பெருமூச்சு ஹூங்காரமாக வெளிவந்தது. அவர் கண்ணைத் திறந்தார்.
“வண்டி எத்தனை மணிக்கு?”
“இங்கே நாலு அம்பதுக்கு வர்றது”
“நாலு மணிக்கெல்லாம் குதிரைவண்டி ஒண்ணை வீட்டுக்கு வரச் சொல்லிடு. நான் காலம்பற நாலே காலுக்கு வீட்டண்டை வர்றேன்.”
ஆனந்தராவ் சற்று நிறுத்தினார். பின்பு காலையில் நிகழும் வாகன சஞ்சாரத்தை அர்த்தமின்றி வெறித்துப் பார்த்தார்.
“ஸ்டேஷனுக்கு நீயும் நானும் போய் வருவோம்” என்றவர், சட்டென்று கல்லாவிலிருந்து எழுந்தார்.
“ரங்கா, கொஞ்ச நாழி கல்லாவைப் பார்த்துக்கோ... எனக்கு ரொம்ப ஆயாசமா இருக்கு. சித்தே சாயறேன்” என்று ஸ்டோர் ரூமை நோக்கி நடந்தார்.

No comments:

Post a Comment