Tuesday, 29 January 2013

ஜமுனா-9



9
“மணி நாலரை ஆச்சே... இன்னும் ரங்கையரைக் காணோமே” என்று தமது பழைய வெஸ்ட் எண்ட் வாட்ச்சின் 
பழுப்பேறிய டயலைப் பார்த்துவிட்டுப் பதைத்தார் ஆனந்தராவ்.
திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாலைச் சுறுசுறுப்போடு காணப்பட்டது. அங்கே நாலைந்து வண்டிகள்தான் நிற்கும் அவற்றில் பாம்பே கேரளா எக்ஸ்பிரஸும் ஒன்று. பெட்டிப் படுக்கைகள், தூக்குப் புட்டிகள், முகமன்கள், வைரப் புன்னகைகள், பட்டுப் புடவைகள்.
“வந்துடுவார் அண்ணா... ரங்கையர் சங்கதி தெரியாதா? கரெக்ட் டயத்துக்கு வந்து நின்னுடுவார்” என்ற பதற்றம் இல்லாமல் பதிலளித்துவிட்டு பிளாட்பார விளிம்பிற்குப் போய் எட்டி வெற்றிலைத் தாம்பூலத்தைத் துப்பிவிட்டு வந்தார் சுப்பண்ணா.
“காலையிலே நீ பல் துலக்கினியோ” என்று முகத்தைச் சளித்துக் கொண்டு கேட்டார் ஆனந்தராவ்.
“ஆச்சுண்ணா, உமாசங்கர் விடிகாலை மூணு மணிக்கு எழுப்பி ஒரு டிகிரி காப்பி கொடுத்தான்.”
“காப்பியை யார் கேட்டது... பல்...?”
“தொலக்கிண்டுதாண்ணா சாப்பிட்டேன்.”
“ஒடனே வெற்றிலை புகையிலை ஆசமனம் பண்ண ஆரம்பிச்சாச்சா?”
“ஹிஹ்ஹிஹ்ஹி” என்று அசட்டு இளிப்போடு தலை குனிந்தார் சுப்பண்ணா.
வேலூர் கோட்டையில் ஆனந்தராவ் தண்ணீர்ப் பந்தல் வைத்திருந்த காலத்திலிருந்து சுப்பண்ணாவின் வாய் இப்படி கவுளி கவுளியாக வெற்றிலையை மென்று துப்பிக் கொண்டிருக்கிறது. இதில் என்ன சுகமோ என்று நினைத்தார்.
“வண்டி நாலே முக்காலுக்கு இல்லே?”
“இன்னிக்குப் பத்து நிமிஷம் லேட். ஒங்களுக்கு ஏன் கவலை? ஒரு பொடிநடை வெளியே போய்ப் பார்த்துவிட்டு வர்றேன்.” - சுப்பண்ணாவுக்குப் புகையிலை தீர்ந்துவிட்ட ஞாபகம் பளீரென்று வந்தது.
“ரொம்ப தூரம் போயிட வேண்டாம். ஒன்னைத் தேடறதுக்கு ஒரு ஆள் அனுப்ப முடியாது.”
“நாற்சந்தி வரைக்கும் போறேன்.”
தூக்கக்கலக்கம் இன்னம் நீங்காத முகங்கள். சிலவற்றில் கவலைகள். பிரயாணக் கிளர்ச்சி தெரியும் முகங்கள். வெள்ளை வெளேரென்ற ஒரு குழந்தை சாக்ஸும் ஷýவுமாக பிளாட்பாரத்தை ஒரு விளையாட்டு மைதானமாகக் கருதி கலகலவென்று சிரித்துக் கொண்டு இங்குமங்கும் ஓடிற்று.
இவர்கள் எல்லாம் எங்கே எந்தக் காரணங்களுக்காகப் போகிறார்கள்? இந்தப் பிரயாணம் சந்தோஷமா.. துக்கமா.. எதை இன்னோர் ஊரில் அவர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கிறது?
ஆனந்தலட்சுமியும் புறப்படப் போகிறாள்.
நூல் தொய்ந்த காற்றாடியைச் சுண்டி மீண்டும் அது பறந்த பழைய வானத்திற்கு இழுத்தது போல் ஒரு விசை நினைவுகள்... நினைவுகள்.
வேலூர்க் கோட்டையில் ஜில்லா கோர்ட்டுக்கு அருகாமையில் சுப்பண்ணாவும் ரங்கையரும் மட்டும் உதவியாகக் கொண்டு அவர் தண்ணீர்ப் பந்தல் நடத்தினார். ஆனந்தலட்சுமி ஒரு வழக்கு சம்பந்தமாக அங்கே வருவாள். கோர்ட்டு பியூன் கூப்பிடுகிறவரை நாலுபேர் கண்களில் படக்கூடாது என்று தண்ணீர்ப் பந்தலில் காத்திருப்பாள்.
மணமான மறுவருஷமே ஆனந்தலட்சுமி விதவையானவள். புருஷன் வீட்டுச் சொத்தில் அவளுக்குப் பங்கில்லை என்ற பலாத்காரமாக அவள் கணவனின் பங்காளிகள் அதை அபகரித்துக் கொண்டார்கள். இதை விடுவதாவது என்று அவள் வீட்டார் அவளிடம் கையெழுத்து வாங்கி வழக்கு நடத்தினார்கள்.
அவள் அழகு அகால வைதவ்யத்தால் அபூர்வமாகச் சுடர்விட்டது. ஆனந்தராவுக்கும் எந்தக் கவலையும் இல்லாமல் மனம் செழிப்பாக இருந்த நேரம். ஆனந்தலட்சுமியின் பார்வையும் புன்னகையும் ஏதோ ஒரு பிறவியில் அவர்களுக்கிடையே இருந்த ஏதோ ஒரு சொந்தத்தை ஞாபகப்படுத்துவது போலத் தாக்கின.
ஆனந்தராவின் பாந்தமான முகத்திலும் கனிவான பேச்சிலும் அவளும் ஒரு புகலிடத்தை உணர்ந்தாள். வீட்டுக்குரியவள் பூட்டைத் திறந்து சுவாதீனமாக உள்ளே பிரவேசித்தது போல அவர் மனசில் அவள் நுழைந்தாள்.
அவருக்கும் கங்காபாய்க்கும் கல்யாணமாகி ஐந்து வருஷம் ஆகியிருந்தது. நீச்சு நிலையின்றி ஓடிய இளமை வேகம் அடங்கி மோகம் தீர்ந்து மிதப்பு நிலைக்கு வந்துவிட்ட பருவம்தான். எந்தக் குறைகளும் அவர்களிடையே இல்லை. எனினும் ஏதோ ஒரு வெற்றிடம். ஆனந்தலட்சுமியால் நிரப்பப்படவென்றே காத்திருந்தது.
ஆனந்தராவ் எதையும் மனைவியிடம் மறைப்பவர் அல்ல. சொன்னார். அதைச் செய்வதைத் தவிர வழி ஏதும் தெரியாதவர் போல் நடந்ததை எல்லாம் அவளிடம் சொன்னார். கங்காபாய் பதில் பேசவில்லை. கண்டிக்கவில்லை. ஒப்பாரி வைக்கவில்லை. வாழ்க்கையே பறிபோனது போல் ஓலமிடவில்லை. மௌனமானாள்.
அவர்களிடையே ஒரு கதவு சாத்தப்பட்டு விட்டது என்று ஆனந்தாவுக்கு ஸ்பஷ்டமாகப் புரிந்தது.
பாவமோ புண்ணியமோ, துரோகமோ என்று அவர் மனத்தில் மெல்லிய கூக்குரல்கள் எழுந்தன. ஆனந்தலட்சுமியின் புன்னகையிலும் அன்பிலும் அவை அடங்கிப் போயின.
கேஸ் அவள் பக்கம் தீர்ப்பான பின்னும் ஒரு வருஷம். ஜட்ஜ்மெண்ட் காப்பி. சொத்து சுவாதீனம், எத்தனையோ சந்தர்ப்பங்கள், வளர்ந்தவை. வளர்த்துக் கொண்டவை. திருப்பத்தூரில் ஓட்டல் வைக்க ஆனந்தராவைச் சிலர் வற்புறுத்தினர்.
அவர் திருப்பத்தூரில் ஓட்டல் திறந்தபோது ஆனந்த லட்சுமிக்கு அங்கே வர முகாந்திரம் குறைந்தது. எனினும் அவள் வந்தாள். இரண்டாவது பயணத்தில் அவள் வீடு திரும்பும் வேளையில் தடிக் கம்புகளுடன் ஏழெட்டுப் பேர் ஓட்டல் மாடியேறி வந்து விட்டனர். அவள் வீட்டு ஆட்கள்.
அவர்களிடம் ‘என் இஷ்டம்’ என்று ஒரே வார்த்தையில் ஆனந்தராவ் மேல் பாய்ந்த அவர்கள் கோபத்தைத் தடுத்தாள் அவள்.
“உன் இஷ்டமா... தொலைஞ்சு போ... வீட்டு வாசல் படி ஏறினா கொலை விழும்” என்று ஒருவன் கத்தினான். அவர்கள் வாய்க்கு வந்ததுபோல் திட்டிவிட்டு வெளியேறினார்கள்.
ஒரு வார்த்தையில் சகல உறவுகளையும் தன் பொருட்டு அவள் அறுத்துக் கொண்டது. ஆனந்தராவுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பாயிற்று. கச்சேரித் தெருவில் ஒரு வீடு பார்த்து அவளைக் குடி வைத்தார்.
உலகத்தின் பார்வையில் ஒரு படி தான் கீழிறங்கி விட்டதை அவர் அந்தராத்மா உணர்ந்தது. கங்காபாயின் மனமாகிய மௌனக் கோட்டையின் கதவுகள் மூடிவிட்டதும் பளிச்சென்று தெரிந்தது.
எனினும் நம்பி வந்தவள் என்ற கடமை உணர்ச்சியை அவர் பெரிதாகக் கருதினார்.
அவள் வரும்போது 57 சவரன் நகைகளோடு வந்திருந்தாள் சுக துக்கம் லாப நஷ்டம் என்று ஓடிய கால ஓட்டத்தில் அவரது ஓட்டல் வியாபாரத்துக்கும் ஒரு விபத்து வந்தது. கடையை மூட வேண்டிய நிர்ப்பந்தம். முதல் போதவில்லை. வியாபாரம் படுத்துவிட்டது. கடன் தலையை மிதித்தது.
நகைகளை மூட்டை கட்டி வந்து நீட்டினாள் ஆனந்தலட்சுமி.
“உன்கிட்டே இருந்துகூட நான் வாங்கிக்கணுமா?”
“ஏன், என்னண்டே வாங்கப்படாதா?”
“இதை வாங்கிக்கிறதை விட மறுபடியும் தண்ணீர்ப் பந்தல் வச்சுடலாம்.”
ஆனந்தலட்சுமியின் முகம் சுண்டி மார்பு விம்மிற்ற.
“மெய்தான். நான் என்ன ஒங்களண்டே தாலி கட்டிண்டவளா என்ன? உங்க கஷ்ட நஷ்டத்திலே எனக்கு என்ன பாத்தியத்தை இருக்கு?”
அவள் தாபம் அவரைத் தகித்தது.
“கொடு, லட்சுமி” என்று அவர் வாங்கிக் கொண்டார்.
“இதோ, இன்னியிலே இருந்து ஓட்டல் உன்னிது. ஏன்னா உன் மூலதனத்திலேதான் இனிமே அது மூச்சு விடணும். நான் அந்த ஓட்டலுக்கு இனிமே வெறும் மானேஜர் தான். ஓட்டல் விலாசத்தைக் கூட மாத்திப்பிடறேன்.”
வாக்களித்தவாறே செய்தார். ஓட்டல் விலாசம் மாறிற்று. நியூபாரத் கபே ஆனந்தபவனாயிற்ற. வியாபாரம் ஓங்கி ஊருக்குப் பிரியமான பொதுச் சொத்தாக அது வளர்ந்தது. ஆனந்தலட்சுமியின் ராசி என்று அவர் நினைத்தார்.
லாபம் வந்து நகைகளை மீட்டுக் கொண்டு வந்தார். அவள் வாங்க மறுத்து விட்டாள்.
“ஓட்டல்லே எனக்கிருக்கிற சொந்தத்தைப் பறிக்க நினைக்கிறேளா?” என்று கேட்டாள்.
வாய் பேசாமல் நகைகளை எடுத்துக் கொண்டு போய் இரும்புப் பெட்டியில் வைத்து மூடினார் ஆனந்தராவ்.
கட்டில், பீரோ, ரேடியோ, ஃபேன் என்று ஆனந்த லட்சுமியின் வீட்டில் ஓட்டல் லாபம் தளும்பிக் 
கொண்டிருப்பதைப் பொறுக்காதவர்கள் கங்காபாயைத் தூண்டி விட்டார்கள்.
விட்டுக் கொடுத்த எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து கங்காபாய் போராடத் தொடங்கினாள். கங்காபாய்க்கும் அவருக்குமிடையே பிளவு ஏற்படாமல் தான் ஒரு பாலமாக இருக்கவே ஆனந்தலட்சுமி விரும்பினாள்.
ஆனந்தராவின் நிம்மதி குலைந்ததும் குடும்பத்தில் விரிசல் விழுந்ததை அவள் உணர்ந்தாள். அதற்குத் தானே பொறுப்பு என்று ஊர் வாய் சொல்வது அவளை உறுத்தத் தொடங்கிற்று. கங்காபாய் போராட்டத்தின் முற்றுப்புள்ளி போல் பிறந்த வீட்டிற்குப் போனாள்.
அவளை விரட்டி அடித்துவிட்டு மாதிரி ஒரு விகாரத் தோற்றத்திற்குத் தான் ஆளானதை ஆனந்தலட்சுமி உணர்ந்தாள். எல்லா பந்தங்களுக்கும் ஒரு முடிவு உண்டு என்ற நினைவு அவளைக் கவிந்தது.
திடீரென்று ஒரு நாள் தனக்கு ஒரே துணையாக இருந்த சித்தியை அழைத்துக் கொண்டு ஆனந்தலட்சுமி எங்கேயோ புறப்பட்டாள். ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷன் முத்திரையோடு ஆனந்தராவுக்கு ஒரு கடிதம் வந்தது. அப்புறம் பல வருஷங்கள் தாண்டிச் சென்றன. ஆயிரம் அனுபவங்களுக்கு மத்தியிலும் நம்பி வந்தவளைக் காப்பாற்ற முடியாமற் போன வடு ஆனந்தராவை உறுத்திக் கொண்டே இருந்தது.
கூலியாள் பின்தொடர ரங்கையர் வந்தார். ஸ்தூல சரீரத்துடன் சாய்ந்து சாய்ந்து நடந்தவாறே ஆனந்தலட்சுமி பின்னால் வந்தாள்.
பெட்டி படுக்கைகளை வெளியே வைத்துவிட்டு ரங்கையர் நகர்ந்தார். வெயிட்டிங் ரூம் காலியாக இருந்தது. யாரோ உட்கார்ந்து விட்டுப் போனதன் அறிகுறியாக மின் விசிறி சுற்றிக் கொண்டிருந்தது.
“உக்காரு.”
ஆனந்தலட்சுமி நின்று கொண்டேயிருந்தாள். அவர் உட்கார்ந்தார். அவளும் உட்கார்ந்தாள்.
மின் விசிறி கடூரமாகக் கரகரத்தது. முகட்டில் தொங்கிய ஓட்டடை அந்தக் காற்றில் படபடத்தது. அவர் பெருமூச்சு விட்டார். அவள், ஆனந்தராவை ஆறுதலூட்டுவது போல் பார்த்தாள்.
“லட்சுமி... இருவத்தி அஞ்சு வருஷம் மனசிலே சொமந்த பளுவை எறக்க விடமாட்டேங்கிறே.”
இப்போது அவள் பெருமூச்சு விட்டாள்.
“நான் திரும்பி வந்தது தப்பு. பாழும் மனசு கேக்கல...”
“இன்னிக்கும் ஓட்டல் உன்னிது தான். இந்த வயசுலே குடும்பத்தை நீ குலைக்க முடியாது. கங்காபாய் கூட ஒப்புத் துண்டுட்டா. கச்சேரித் தெருவிலே அதுக்குப் பக்கத்து வீடு காலியா இருக்கு.
ஸ்டேஷனுக்குள் சுவாதீனமாக உலவும் ஒரு பெரிய கறுப்புப் பூனை உள்ளே நுழைந்தது. பளபள வென்று அதன் கண்கள் ஜ்வலித்தன. மெதுவாக அது கத்திற்று.
“மறுபடியும் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். நான் பிராயச்சித்தத்துக்காக காசிக்குப் போறேன். யார் யார் பொழப்பிலே எல்லாம் நொழைஞ்ச பாவத்தை கங்காதேவி மடியிலே விடப்போறேன். மறுபடியும் ஏன் பாரத்தை அதிகப்படுத்தறேள்?”
“லட்சுமி... ஓட்டல் உன்னிது.”
“என்னிது எதுவுமே இல்லே. எல்லாம் ஒங்களோடது. பகவானோடது. என்னிதெல்லாம் பாபங்கள் தான். மாங்கல்யம் போனதும் மனசை அடக்க முடியாத பாபம், போட்டியா வந்து சொந்தக்காரியை வயிறெரியச் செய்த பாபம்...”
அவர் இடைமறித்தார்.
“என்னைச் சந்திச்ச பாவம். என்னோட கொஞ்ச நாள் வாழ்ந்த பாவம்...” - ஆனந்தராவ் அடுக்கினார்.
தன்னைத்தானே குத்திக் கொள்ளும் அந்த சுய வதை அவள் வாயை அடைத்தது. அவள் மௌனம் அவர் வயிற்றிலிருந்து ஒரு நீண்ட பெருமூச்சை வரவழைத்தது.
“சரி... இந்தா...” - அவர் மடியிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தார்.
“இது என்ன?”
“உன் நகைகள், கொஞ்ச பணம்.”
‘எனக்கெதுக்கு? என்னண்டே மெஸ் நடத்திச் சேர்த்த பணமே நெறைய இருக்கு.”
“இருந்தா இருக்கட்டும். இதையும் வாங்கி வை.”
“என்கிட்டே கொடுத்தா கழுத்து நெறையக் கங்கையின் பிரவாகத்திலே சேர்ப்பேன்... ஏன் எங்கிட்டே 
கொடுக்கிறேள்? கடனைக் கழிக்கவா...?”
“பந்தமில்லாமே போனப்பறம் பாக்கி எதுக்கு?”
“மனசுக்குள்ளற கூட ஒரு பந்தம் வேண்டாங்கிறேளா... கேவலம், என் நகைக்குக் கூடவா ஒங்களோட இருக்கிற சொந்தமில்லே...?”
அவர் மனசில் அம்பு தைத்தது.
“இதை வச்சுண்டு நான் என்ன செய்யப் போறேன்?”
“என் மருமகள் கழுத்திலே மாட்டுங்கோ. நடுவிலே வந்த ஓடுகாலியின் நகை உங்களுக்குப் பிரியமில்லேன்னா ரங்கையன் பெண் ஜமுனா கழுத்திலே மாட்டுங்கோ.”
அவர் முகத்தில் வழி தெரிந்த மாதிரி ஒரு வெளிச்சம் பிறந்தது.
“சொல்ல மறந்துட்டேன். ரங்கையன் எங்கே?”
“வெளியே நிக்கறான்.”
ஆனந்தலட்சுமி வெளியே எழுந்து போய்க் கவனித்தாள். ரங்கையர் டிக்கெட் கொடுக்கும் அறைக்கு எதிரில் நின்று யாரோடோ பேசிக் கொண்டிருந்தார். அவள் திரும்பி வந்தாள்.
“ஜமுனாவுக்கு ரங்கையன் எப்போ கல்யாணம் பண்ணப் போறான்?”
“அவளோடே அண்ணன் ராகவன் ஏதோ மெர்ச்சண்ட் நேவியிலே வேலை செய்யறான். ஹாலண்டு கப்பல் கம்பெனி. முக்கால்வாசி ஒலகத்தைச் சத்திட்டான். இந்த லீவிலே திரும்பி வரப் போறானாம். அப்பதான் ஏற்பாடு செய்வான்.”
“எவ்வளவு நாளாகும்?”
“நாலஞ்சு மாசமாகும்... ஏன்?”
“இல்லே, அவ்வளவு நாள் தாமதிக்கப்படாது. அந்தப் பெண் யாரோ எதிர் வீட்டிலே ஒரு பையனோட சிநேகிதமா இருக்காப் போலிருக்கு. அவனை என்னாலே நம்ப முடியல்லே. ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்துடறதுக்கு முன்னாடி அவளோட கல்யாணத்தை முடிச்சுடறது நல்லது.”
ஆனந்தராவுக்கு இடி விழுந்த மாதிரி இருந்தது?
“ஜமுனாவா?”
“அவள்தான்.”
“நீ எப்படித் தெரிஞ்சுகிட்டே?”
“பொம்மனாட்டிகளுக்கு இந்த மாதிரி விஷயத்திலே மோப்ப சக்தி அதிகம்.”
ஜமுனாவா... ஜமுனாவா... அவர் மனத்திற்குள் அந்தக் கேள்வி மடியவில்லை. ஒவ்வொரு முறை ஒரு புதிய தொனியோடு புதிய திகிலோடு எழுந்து எழுந்து அடங்கிற்று. பரமவைதீகமான ரங்கையர் வாழ்வில் அவருடைய ஆசார சீலத்திற்கு என்னென்ன சோதனை!
மெர்ச்செண்ட் நேவியில் காப்ஸ்யூல் சூப் சாப்பிட்டுக் கொண்டு விஸ்கியும் ஃபீஃபுமாக உலகம் சுற்றும் ராகவன். காதலிக்கும் ஜமுனா.
முதல் மணி அடித்தது. ரங்கையர் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு போய் பிளாட்பார ஓரத்தில் வைத்தார்.
இரண்டாவது மணிக்குப் பின் வண்டி வந்து நின்றதும் இடம் தேடி சுப்பண்ணாவும் ரங்கையரும் ஆளுக்கொரு மூலைக்கு ஓடினார்கள். வண்டி குறைந்த நேரம் தான் நிற்கும்... பலர் அந்த ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டார்கள். கடைசியில் இடம் கிடைத்தது. அவள் பெட்டியில் ஏறினாள்.
ஆனந்தலட்சுமி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். காசியின் சத்திரங்களும், கங்கையின் பிரவாகமும், நாம ரூபம் அழிந்த அநாதை போல் அவள் உயிர் விளக்கு அவியப்போகும் காலமும் அவர் மார்பைச் சுருட்டி இழுத்தன.
திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆனந்தலட்சுமியின் கண்ணீர் சிதறுவதற்கு முன்பு வண்டி புறப்பட்டு விட்டது.

No comments:

Post a Comment