ஜமுனா :24
கிர்ரென்று அலாரம் அடித்தது. வெந்நீர் பாய்லருக்குப் போடச் சிறிய வாளியில் கரியை எடுத்துக் கொண்டு போன ராஜாமணி. பக்கெட்டை அங்கேயே வைத்து விடு நடுக் கூடத்திற்குப் போய் அலாரத்தை நிறுத்தினான். காலை மணி ஐந்தரை.
அவன் தான் விடியற்காலையில் எழுந்திருக்க அலாரம் வைத்திருந்தான். அது அடிப்பதற்கு முன்பே அவன் எழுந்து விட்டான். இப்போதெல்லாம் தூக்கம் சரியாக வருவதில்லை. கவலையோ பயமோ இல்லை. ஆரம்பத்தில் தான் அப்படி இருந்தது. ஆனந்தராவ் சற்றுத் திரும்பிப் படுத்தால் கூட மனம் துணுக்குறும். படுக்கையை விட்டு எழுந்து வந்து அவர், உறக்கத்தைக் கலைக்க மனமின்றி கதவருகில் நின்று ஒட்டுக் கேட்பான்.
வலியில் முனகுகிற ஓசை ஏதாவது வருகிறதா என்று மனம் பதைபதை என்று பதைக்கும். பிறகு மறுபடியுவு போய்ப் படுத்துக் கொள்வான். தனக்கு இருக்கிற பயத்தை கங்காபாயிடம் சொல்வதற்குக் கூடக் கஷ்டமாயிருந்தது.
ஓட்டலில் சைக்கிளில் போகும் போது, தெருவில் உறங்கும்போது சட்டென்று வரும் விழிப்பில், அந்தக் கொடிய அச்சம் சிறிது கூட நிம்மதியாக இருக்க விடாது. அவனைக் கொஞ்ச நாட்கள் எப்படி வேட்டையாடியது! சேது வந்தான். இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்தான். அடிக்கடி கோயம்பத்தூர் ஓட்டலைச் சொல்லி என்ன ஆயிற்றோ என்ன ஆயிற்றோ என்று அரற்றிக் கொண்டிருந்தான். பிறகு டானிக் மருந்து என்று வாங்கிக் கொடுத்து விட்டு வீட்டுக்கும் அப்பாவுக்குமாக ஆயிரம் ரூபாய்க்கு எதை எதையோ வாங்கி இறைத்து விட்டுப் புறப்பட்டு விட்டான்.
அவனைக் குறை சொல்லிப் பயனில்லை என்று ராஜாமணி நினைத்தான். ஆனந்தராவை ஆனந்தபவன் பிடித்துக் கொண்ட மாதிரி அவனை கோயம்பத்தூர் ஓட்டல் பிடித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் புலப்பட்டது.
அவன் கரி பக்கெட்டை எடுத்துக் கொண்டு புழக் கடைக்குப் போகும்போது கங்காபாய் புரண்டு கொடுத்தாள். இப்போதெல்லாம் கங்காபாய் தன்னை மறந்து நெடுநேரம் தூங்கி விடுகிறாள். நாளெல்லாம் ஆனந்தராவ் கூட இருக்கும் களைப்பும் அயர்ச்சியும் அவனைச் சீக்கிரத்தில் எழ விடுவதில்லை.
‘பாவம் அம்மா! அவளுக்கும் வயசாகி விட்டது’ என்று நினைத்தான் ராஜாமணி.
அதுமட்டும் தானா? தான் ஓட்டலுக்குப் போய் வந்து கொண்டு வீட்டுக் காரியங்களையும் அப்பாவையும் பொறுப்பாகக் கவனித்துக் கொள்வதில் அவளுக்கு நிம்மதியே ஏற்பட்டிருப்பது புலப்படுகிறது.
பாய்லரில் மீதமிருந்து கரியைப் போட்டுப் பற்ற வைத்தது மூண்டிருந்தது. கீழே இருந்த தகட்டை அசைத்து அசைத்துச் சாம்பல் தூளைப் பறக்க வைத்து விட்டுக் கரியைப் போட்டுக் கொஞ்ச நேரம் விசிறினான்.
தான் பயம் பயமாகப் பதைத்தபோது அம்மா எப்படி நம்பிக்கையோடு இருந்தாள் என்று நினைத்துப் பார்த்தான். தன்னை ஆண்டவன் அப்படி மூனியாக்கிப் பிறர் அனுதாபத்துக்கு ஆளாக்கும்படி விட்டு விடமாட்டான் என்று அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ராஜாமணி பயப்படுவதையும் அவள் மனசு புரிந்து கொண்டு விட்டது.
“ராஜா... நமக்கு ஒண்ணும் நடந்துடாது... பகவான் நரசிம்மர் அப்படியெல்லாம் சோதிக்க மாட்டார். இந்த வருஷம் உத்ஸவத்துக்கு சோளிங்கர் போய்ட்டு வர்றதா நான் நேந்துகிட்டிருக்கேன். நீ நிம்மதியா இரு.”
அம்மாவைப் பார்த்து ராஜாமணி நம்பிக்கையைக் கற்றுக் கொண்டான். தைரியத்தைக் கற்றுக் கொண்டான். தானே கரி போட்டு அடுப்பு மூட்டி வெந்நீர் போட்டுக் கொள்ளவும் அவள் தான் குரு.
பாய்லரின் சூடு ஏறிவிட்டது. நெருப்பு தணதண வென்ற செங்கண் விட்டு ஜொலித்தது.
மளிகைக் கடைக்கு இன்று எண்ணூற்றுச் சொச்சம் கொடுத்தாக வேண்டும். மரியதாஸ் பெண்ணுக்குச் சர்ச்சில் நாளைக்குக் கல்யாணமாம். பத்து மணிக்கு எல்லாரையும் அழைத்துக் கொண்டு ஓட்டல் வியாபாரத்தை விட்டுப் போய் வர வேண்டியது தான். புதியதாக டேபிள் சேருக்கு கொடுத்திருந்த ஆர்டரை இன்றைக்கு நாளைக்கு என்று இழுத்துக் கொண்டிருந்த ராமசாமியிடம் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். பில் புஸ்தகம் தீர்ந்து விட்டது என்று ரங்கையர் சொன்னார். பிரஸ் சச்சிதானந்தத்திடம் சொல்ல வேண்டும். கல்யாண கலாட்டா என்று நாள் தள்ளுவாரோ... மாட்டார்... ஆனந்த பவன் வேலைக்கு அவர்கள் கெடு வைப்பதேயில்லை. நாளைக்குக் கல்யாணத்திற்குக் கடையை மூடும்போது கலாய்க்கார சாயபுவை பூசச் சொல்லி விடலாம். பாபா கல்யாணத்திற்கு வரமாட்டான். இங்கேயே இருந்து கவனித்துக் கொள்வான்.
அவன் மனம் ஆனந்தபவனின் காரியங்களில் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று விலகித் தன்னை நினைத்துப் பார்த்தால் ராஜாமணி அவனுக்கு வியப்பாக இருந்தது.
என்ன இருக்கிறது அந்த ஆனந்தபவனில் என்று அவன் கேட்டுக் கொண்ட கேள்வியை நினைத்தான். சேதுவுக்கும் ஆனந்தராவுக்கும் அவரவர் ஓட்டல்களில் எந்தச் சாவி அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறதோ அந்த சாவி அவனையும் முடுக்குவது அவனுக்குப் புரிந்தது.
பிறரை மகிழ்விப்பதற்காகச் சுயமாக ஒரு தொழில். அதில் அதிகார பீடங்களிலோ விளையாட்டு மைதானங்களிலோ கிடைக்காத ஓர் ஆனந்தம். இன்னது என்று விளங்காமல் எதையோ தேடி ஓடுகின்ற மனசின் கைவசத்தில் அதன் காலடியில் தான் அது தேடும் பொருள் இருக்கிறது.
மேலே மேலே என்று அனுபவ வேட்டை ஆடிக்கொண்டு போவதெல்லாம் வீண் அலைச்சல் தான். தேடித் தேடி ஓட ஓட அது தும்பி மாதிரி இங்குமங்கும் ஓடித் திரிகிறது. வெறும் திரிசலிலேயே கடைசிப் பொழுது போய் விடுகிறது.
பாஸந்தி விற்கும் சோடேலால் ஓட்டல் நடத்தி நொடித்த பிறகும் வண்டி தள்ளி வாழும் வாழ்க்கை இப்போது அவனுக்குப் புரிந்தது. வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறிச் சந்தித்தாலும் தளராது இயங்கும் அந்தச் சிறு நகரத்தின் நாடித் துடிப்பு இப்போது புரிந்தது. அது தேக்கமல்ல. தவம், தவம் கூட ஒரு தேக்கம் மாதிரித் தோற்றமளித்து விடுவதுண்டு.
ராஜாமணி வெந்நீர் காய்ந்து பாய்லர் உறுமுவதைக் கவனித்தான். பெரிய பக்கெட்டை எடுத்துக் குழாயருகே வைத்து விட்டுக் குழாயைத் திருப்பினான். குழாய் சுட்டது. சட்டென்று கையை எடுத்துக் கொண்டான்.
எவ்வளவு சீக்கிரத்தில் இந்த பாய்லர் காய்ந்து விடுகிறது? பழங்காலத்து சாமான்.
பக்கத்திலிருந்த கந்தல் துணியை எடுத்தான். அது அவனுடைய கிழிந்த சட்டை, மூன்றாம் வருஷம் தீபாவளிக்கு எடுத்தது. அதனுடைய ஸைகடெலிக் டிஸைனுக்காக எடுத்திருந்தான். சீக்கிரம் கிழித்து விட்டது. அடிக்கடி போட்டதில் அந்தக் கதி அதற்கு.
அதைக் குழாயின் மேல் வைத்து சூடு தாங்கப் பிடித்தவாறே குழாயைத் திருப்பினான். கபகபவென்று ஆவி பறக்க வெந்நீர் கொட்டிற்று.
முதல் தடவையாக லெக்சரர். ராமபத்ரனுடன் தர்க்கம் செய்து கொண்டான் ராஜாமணி.
‘குடும்பம் ஒரு தளை அல்ல! நாகரிகம் தன் உச்சத்திற்குச் சென்று கண்டெடுத்த ஓர் ஏற்பாடு. அந்த ஏற்பாட்டை யார் குலைத்து வெளியில் பறந்து சென்றாலும் அதன் தேவையையும் முக்கியத்துவத்தையும் கருதி அவன் திரும்பி வர வேண்டியது தானே.’
பக்கெட் நிரம்புகிறவரை ஏதேதோ யோசித்து விட்டு, நிரம்பியதும் எடுத்து வைத்துக் குளிக்கத் தொடங்கினான்.
சோப்பை எடுத்துப் பூசிக் கொள்ளும்போது, “ராஜா!” என்று வெளியே தெருக் கதவின் கைப்பிடியை ஆட்டி ரங்கையர் கூப்பிடுவது கேட்டது. இந்நேரம் அவர் குளித்து பூஜை முடித்து விட்டிருப்பார்.
குளியல் அறையிலிருந்தே குரல் கொடுத்தான்.
‘திண்ணையிலேயே உட்காருங்கோ... குளிச்சிண்டிருக்கேன்” அதற்குள் அம்மா குரல் கேட்டது.
“யாரது, ரங்கையரா?”
“நான் தான் மன்னி.”
“ஸ்ஸ்... அப்பா... பகவானே!” என்று ஆயாசத்தோடு அவன் எழுந்து நடப்பதும், நடைக்குப் போய்க் கதவைத் திறப்பதும் காதில் விழுந்தன.
ராஜாமணி கண்ணில் சோப்பு நிறைந்திருக்க வெந்நீர் மொண்ட மக்கை எங்கே வைத்தோம் என்று குருடன் போல் கைகளால் தடவத் தொடங்கினான். அந்த சிறிது நேர குருட்டுத் தனம் அவனுக்கே வேடிக்கையாக இருந்தது சிறிய முயற்சியிலேயே மக் தட்டுப்பட்டு விட்டது.
வெந்நீரை மொண்டு ஊற்றிக் கொள்ளும்போது, சோப்பு வாசனையும் வெந்நீர் இதமும் சேர்ந்து மனம் உல்லாசமாக இருந்தது.
ரங்கையர் குரல் அம்மாவுடன் பேசுவது கேட்டது.
ரங்கையர் எப்படிப்பட்ட வைராக்கியவான். அடிமேல் அடி என்று விழுந்தும் எத்தனை தீரத்துடன் அதைச் சமாளித்து விட்டார். பாவம், ஒண்டிக்கட்டை என்று யாரும் அனுதாபப்படுவதற்கு இடமின்றி அல்லவா சக்கரமாகி இருக்கிறார்.
மோனிகா மில்லரும் குழந்தை யோகியும், வாணியம்பாடி நந்தவனம் நர்ஸரிக்கே ஜமுனாவோடு போய்ச் சேர்ந்து கொண்டதில் ஒருவகையில் பளு குறைந்த மாதிரி தான். குழந்தையில்லாத கிருஷ்ணராவ் தம்பதிக்கு யோகி மாதிரி குழந்தை கிடைத்த திருப்தி. நர்ஸரிக்கு இங்கிலீஷ் சொல்லித் தர மோனிகா மில்லர் போன்ற அமெரிக்கப் பெண் கிடைத்திருப்பது தனிப் பெருமையாக இருக்கும். ஜமுனாவிற்கு அந்த நர்ஸரியிலும் நர்ஸரித் தேட்டத்திலும் ஏதோ பெரிய அடையாளம் கிடைத்திருக்கிறது. ஆனந்தபவனில் தனக்குக் கிடைத்திருக்கிற மாதிரி.
குளித்து முடிந்து ராஜாமணி சுத்தமாகத் துவைத்து தும்பைப் பூ போல் வெளுத்திருந்த டர்க்கி டவலை எடுத்து அதில் துடைக்கும் சுகத்தை அனுபவித்தவாறே உடம்பைத் துவட்டினான்.
நீராக ஓடியிருந்த சோப்பின் வாசனையில் கும்மென்று அந்தக் குளியல் அறையில் கமழ்ந்தது. அவன் மீண்டும் ஜமுனாவைப் பற்றி நினைத்தான்.
அவள் திருமணம் புரிந்து நாலுபேரைப் போல் இல்லத்தரசியாக வாழும் நபரல்ல. அவள் வேறு ஜாதி வேறு இனம். வேறு எதையோ சாதிக்க நியமிக்கப்பட்டவள் அதனால் தான் அவளது ரயில், பிளாட்பாரத்திலேயே அவளை நிறுத்திவிட்டுப் புறப்பட்டு விட்டது.
இப்படியே ஒரு பெண் விவாகமின்றி வாழ முடியுமா என்று நினைத்தான். அவனுக்கு மதர் தெரஸாவும், திருமணமான துறவியாக வாழ்ந்த அன்னை சாரதாவும் ஞாபகம் வந்தார்கள்.
இப்படி ஒருவரா... எத்தனை பேர்? எது சாத்தியம் எது அசாத்தியம் என்பதை மூன்றாம் மனிதனாக இருந்து தர்க்கித்துத் தீர்ப்பிடத் தான் யார்? என்று கேட்டுக் கொண்டான் ராஜாமணி.
குளித்த புத்துணர்ச்சியோடு வெளிவந்த ராஜாமணியைப் பார்த்து ரங்கையர் புன்னகை செய்தார். அவர் முகத்தில் பட்டையாக விபூதி துலங்கிற்று.
“நேரமாயிடுத்து ராஜா... அப்பாவுக்கு நானே இன்னிக்கு ஜூஸ் பிழிஞ்சு கொடுத்துடறேன். நீ சீக்கிரமா டிரஸ் பண்ணிரண்டு கிளம்பு...” என்று அவனை ஒரு பொறுப்பிலிருந்து விடுவித்தாள் கங்காபாய்.
ராஜாமணி அவசரம் அவசரமாய்ச் சட்டையையும் வேட்டியையும் அணிந்து தலை வாரிக் கொண்டாள். கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது தலைமுடியும் கிருதாவும் சற்று அதிகமாக வளர்ந்து விட்டிருப்பது தெரிந்தது.
இரண்டையும் குறைத்து விட வேண்டியதுதான். கல்லாவில் உட்காருவதற்கு இது அவ்வளவு பொருத்தமாய் இல்லை என்று ரங்கையர் வேறு ஜாடையாகச் சொல்லிக் காண்பித்து விட்டார்.
“அப்பா, போயிட்டு வர்றேன்...”
“சரி... செய்... நானும் இன்னிக்கு ஓட்டலுக்கு வரலாமான்னு பார்க்கறேன்...” என்று படுத்தவாறே பதிலளித்தார் ஆனந்தராவ்.
“நீங்க எதுக்கப்பா?”
“இல்லேடா... பொழுது போக மாட்டேங்குது, ஓட்டலுக்கு வந்து இன்னியோட ஒரு மாசமாகப் போறதே இருப்புக் கொள்ளலே.”
அவனுக்கு அவர் ஆதங்கம் புரிந்தது.
“சரி... நடந்து வரவேண்டாம். ஆட்டோ ரிக்ஷா அனுப்பி வைக்கறேன். எட்டிப் பார்த்துக் கொஞ்ச நாழி இருந்துட்டு வந்துடுங்கோ...”
அவன் வெளியேறினான்.
ஆனந்தபவனின் விடியற்காலைச் சுறுசுறுப்பு பரவியிருந்தது.
ராஜாமணியின் தலையைப் பார்த்த ஐயாசாமி குரல் கொடுத்தான். “ராஜா... இன்னிக்கு ரேடியோவிலே மெட்ராஸ் ஸ்டேஷன்லே சினிமா உண்டு.”
“அதை மறந்துடப் போறே... சினிமாவைக் கேக்கலேன்னா உனக்கு எப்படிப் பொழுது போகும்? என்று வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டே வந்தான் சாரங்கன்.
“வைத்தா, மாப்பிள்ளை வந்து விட்டான். ஒரு ஸ்பெஷல் காப்பி போடு!” என்று அவனை வாரினார் சுப்பண்ணா.
‘ஒமக்கு மாப்பிள்ளையானா இப்படி ஓட்டல் காப்பி தான் வாங்கிக் கொடுப்பீர்” என்று பதில் தந்தான் சாரங்கன்.
ஆனந்தபவன் வேடிக்கை ,தமாஷ் இவற்றினூடே தன் மறுநாள் இயக்கத்தை ஆரம்பித்தது. கணபதியின் கை ஓட்டம் பிளஷ் அவுட் தடுப்பில் கேட்டது. பாபா பக்கெட்டில் அலம்பிய பாத்திரங்களை எடுத்து வந்து வைத்தான். குக் ராமையா சோம்பல் முறித்து விட்டு வெந்நீர் அண்டாவை எட்டிப் பார்த்தார்.
ராஜாமணி கல்லாவில் போய் உட்கார்ந்தான். ரங்கையர் மெனு போர்டை எழுதத் தொடங்கினார். பொழுது போல் லென்று வெளுத்து விட்டது. காலை ஆகி விட்டது என்பதன் அடையாளம் போல் வக்கீல் வாசுதேவாச்சார் வாக்கிங் ஸ்டிக்கும் கையுமாகப் போனவர், சாலையில் நின்று கேட்டார்.
“என்ன ராஜாமணி அப்பா எப்படி இருக்கா?”
“நல்லா இருக்கார். உள்ளே தான் வாங்களேன்... இன்னிக்கு ஓட்டலுக்கு வருவார்.”
வாசுதேவாச்சார் படியேறி வந்தார். ஒவ்வொருவராகக் காலையில் காப்பி சாப்பிடுவோர் வரத் தொடங்கினர்.[முற்றும்]
*** *** ***