Monday, 25 September 2017

ஜமுனா :24

ஜமுனா :24
கிர்ரென்று அலாரம் அடித்தது. வெந்நீர் பாய்லருக்குப் போடச் சிறிய வாளியில் கரியை எடுத்துக் கொண்டு போன ராஜாமணி. பக்கெட்டை அங்கேயே வைத்து விடு நடுக் கூடத்திற்குப் போய் அலாரத்தை நிறுத்தினான். காலை மணி ஐந்தரை.
அவன் தான் விடியற்காலையில் எழுந்திருக்க அலாரம் வைத்திருந்தான். அது அடிப்பதற்கு முன்பே அவன் எழுந்து விட்டான். இப்போதெல்லாம் தூக்கம் சரியாக வருவதில்லை. கவலையோ பயமோ இல்லை. ஆரம்பத்தில் தான் அப்படி இருந்தது. ஆனந்தராவ் சற்றுத் திரும்பிப் படுத்தால் கூட மனம் துணுக்குறும். படுக்கையை விட்டு எழுந்து வந்து அவர், உறக்கத்தைக் கலைக்க மனமின்றி கதவருகில் நின்று ஒட்டுக் கேட்பான்.
வலியில் முனகுகிற ஓசை ஏதாவது வருகிறதா என்று மனம் பதைபதை என்று பதைக்கும். பிறகு மறுபடியுவு போய்ப் படுத்துக் கொள்வான். தனக்கு இருக்கிற பயத்தை கங்காபாயிடம் சொல்வதற்குக் கூடக் கஷ்டமாயிருந்தது.
ஓட்டலில் சைக்கிளில் போகும் போது, தெருவில் உறங்கும்போது சட்டென்று வரும் விழிப்பில், அந்தக் கொடிய அச்சம் சிறிது கூட நிம்மதியாக இருக்க விடாது. அவனைக் கொஞ்ச நாட்கள் எப்படி வேட்டையாடியது! சேது வந்தான். இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்தான். அடிக்கடி கோயம்பத்தூர் ஓட்டலைச் சொல்லி என்ன ஆயிற்றோ என்ன ஆயிற்றோ என்று அரற்றிக் கொண்டிருந்தான். பிறகு டானிக் மருந்து என்று வாங்கிக் கொடுத்து விட்டு வீட்டுக்கும் அப்பாவுக்குமாக ஆயிரம் ரூபாய்க்கு எதை எதையோ வாங்கி இறைத்து விட்டுப் புறப்பட்டு விட்டான்.
அவனைக் குறை சொல்லிப் பயனில்லை என்று ராஜாமணி நினைத்தான். ஆனந்தராவை ஆனந்தபவன் பிடித்துக் கொண்ட மாதிரி அவனை கோயம்பத்தூர் ஓட்டல் பிடித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் புலப்பட்டது.
அவன் கரி பக்கெட்டை எடுத்துக் கொண்டு புழக் கடைக்குப் போகும்போது கங்காபாய் புரண்டு கொடுத்தாள். இப்போதெல்லாம் கங்காபாய் தன்னை மறந்து நெடுநேரம் தூங்கி விடுகிறாள். நாளெல்லாம் ஆனந்தராவ் கூட இருக்கும் களைப்பும் அயர்ச்சியும் அவனைச் சீக்கிரத்தில் எழ விடுவதில்லை.
‘பாவம் அம்மா! அவளுக்கும் வயசாகி விட்டது’ என்று நினைத்தான் ராஜாமணி.
அதுமட்டும் தானா? தான் ஓட்டலுக்குப் போய் வந்து கொண்டு வீட்டுக் காரியங்களையும் அப்பாவையும் பொறுப்பாகக் கவனித்துக் கொள்வதில் அவளுக்கு நிம்மதியே ஏற்பட்டிருப்பது புலப்படுகிறது.
பாய்லரில் மீதமிருந்து கரியைப் போட்டுப் பற்ற வைத்தது மூண்டிருந்தது. கீழே இருந்த தகட்டை அசைத்து அசைத்துச் சாம்பல் தூளைப் பறக்க வைத்து விட்டுக் கரியைப் போட்டுக் கொஞ்ச நேரம் விசிறினான்.
தான் பயம் பயமாகப் பதைத்தபோது அம்மா எப்படி நம்பிக்கையோடு இருந்தாள் என்று நினைத்துப் பார்த்தான். தன்னை ஆண்டவன் அப்படி மூனியாக்கிப் பிறர் அனுதாபத்துக்கு ஆளாக்கும்படி விட்டு விடமாட்டான் என்று அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ராஜாமணி பயப்படுவதையும் அவள் மனசு புரிந்து கொண்டு விட்டது.
“ராஜா... நமக்கு ஒண்ணும் நடந்துடாது... பகவான் நரசிம்மர் அப்படியெல்லாம் சோதிக்க மாட்டார். இந்த வருஷம் உத்ஸவத்துக்கு சோளிங்கர் போய்ட்டு வர்றதா நான் நேந்துகிட்டிருக்கேன். நீ நிம்மதியா இரு.”
அம்மாவைப் பார்த்து ராஜாமணி நம்பிக்கையைக் கற்றுக் கொண்டான். தைரியத்தைக் கற்றுக் கொண்டான். தானே கரி போட்டு அடுப்பு மூட்டி வெந்நீர் போட்டுக் கொள்ளவும் அவள் தான் குரு.
பாய்லரின் சூடு ஏறிவிட்டது. நெருப்பு தணதண வென்ற செங்கண் விட்டு ஜொலித்தது.
மளிகைக் கடைக்கு இன்று எண்ணூற்றுச் சொச்சம் கொடுத்தாக வேண்டும். மரியதாஸ் பெண்ணுக்குச் சர்ச்சில் நாளைக்குக் கல்யாணமாம். பத்து மணிக்கு எல்லாரையும் அழைத்துக் கொண்டு ஓட்டல் வியாபாரத்தை விட்டுப் போய் வர வேண்டியது தான். புதியதாக டேபிள் சேருக்கு கொடுத்திருந்த ஆர்டரை இன்றைக்கு நாளைக்கு என்று இழுத்துக் கொண்டிருந்த ராமசாமியிடம் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். பில் புஸ்தகம் தீர்ந்து விட்டது என்று ரங்கையர் சொன்னார். பிரஸ் சச்சிதானந்தத்திடம் சொல்ல வேண்டும். கல்யாண கலாட்டா என்று நாள் தள்ளுவாரோ... மாட்டார்... ஆனந்த பவன் வேலைக்கு அவர்கள் கெடு வைப்பதேயில்லை. நாளைக்குக் கல்யாணத்திற்குக் கடையை மூடும்போது கலாய்க்கார சாயபுவை பூசச் சொல்லி விடலாம். பாபா கல்யாணத்திற்கு வரமாட்டான். இங்கேயே இருந்து கவனித்துக் கொள்வான்.
அவன் மனம் ஆனந்தபவனின் காரியங்களில் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று விலகித் தன்னை நினைத்துப் பார்த்தால் ராஜாமணி அவனுக்கு வியப்பாக இருந்தது.
என்ன இருக்கிறது அந்த ஆனந்தபவனில் என்று அவன் கேட்டுக் கொண்ட கேள்வியை நினைத்தான். சேதுவுக்கும் ஆனந்தராவுக்கும் அவரவர் ஓட்டல்களில் எந்தச் சாவி அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறதோ அந்த சாவி அவனையும் முடுக்குவது அவனுக்குப் புரிந்தது.
பிறரை மகிழ்விப்பதற்காகச் சுயமாக ஒரு தொழில். அதில் அதிகார பீடங்களிலோ விளையாட்டு மைதானங்களிலோ கிடைக்காத ஓர் ஆனந்தம். இன்னது என்று விளங்காமல் எதையோ தேடி ஓடுகின்ற மனசின் கைவசத்தில் அதன் காலடியில் தான் அது தேடும் பொருள் இருக்கிறது.
மேலே மேலே என்று அனுபவ வேட்டை ஆடிக்கொண்டு போவதெல்லாம் வீண் அலைச்சல் தான். தேடித் தேடி ஓட ஓட அது தும்பி மாதிரி இங்குமங்கும் ஓடித் திரிகிறது. வெறும் திரிசலிலேயே கடைசிப் பொழுது போய் விடுகிறது.
பாஸந்தி விற்கும் சோடேலால் ஓட்டல் நடத்தி நொடித்த பிறகும் வண்டி தள்ளி வாழும் வாழ்க்கை இப்போது அவனுக்குப் புரிந்தது. வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறிச் சந்தித்தாலும் தளராது இயங்கும் அந்தச் சிறு நகரத்தின் நாடித் துடிப்பு இப்போது புரிந்தது. அது தேக்கமல்ல. தவம், தவம் கூட ஒரு தேக்கம் மாதிரித் தோற்றமளித்து விடுவதுண்டு.
ராஜாமணி வெந்நீர் காய்ந்து பாய்லர் உறுமுவதைக் கவனித்தான். பெரிய பக்கெட்டை எடுத்துக் குழாயருகே வைத்து விட்டுக் குழாயைத் திருப்பினான். குழாய் சுட்டது. சட்டென்று கையை எடுத்துக் கொண்டான்.
எவ்வளவு சீக்கிரத்தில் இந்த பாய்லர் காய்ந்து விடுகிறது? பழங்காலத்து சாமான்.
பக்கத்திலிருந்த கந்தல் துணியை எடுத்தான். அது அவனுடைய கிழிந்த சட்டை, மூன்றாம் வருஷம் தீபாவளிக்கு எடுத்தது. அதனுடைய ஸைகடெலிக் டிஸைனுக்காக எடுத்திருந்தான். சீக்கிரம் கிழித்து விட்டது. அடிக்கடி போட்டதில் அந்தக் கதி அதற்கு.
அதைக் குழாயின் மேல் வைத்து சூடு தாங்கப் பிடித்தவாறே குழாயைத் திருப்பினான். கபகபவென்று ஆவி பறக்க வெந்நீர் கொட்டிற்று.
முதல் தடவையாக லெக்சரர். ராமபத்ரனுடன் தர்க்கம் செய்து கொண்டான் ராஜாமணி.
‘குடும்பம் ஒரு தளை அல்ல! நாகரிகம் தன் உச்சத்திற்குச் சென்று கண்டெடுத்த ஓர் ஏற்பாடு. அந்த ஏற்பாட்டை யார் குலைத்து வெளியில் பறந்து சென்றாலும் அதன் தேவையையும் முக்கியத்துவத்தையும் கருதி அவன் திரும்பி வர வேண்டியது தானே.’
பக்கெட் நிரம்புகிறவரை ஏதேதோ யோசித்து விட்டு, நிரம்பியதும் எடுத்து வைத்துக் குளிக்கத் தொடங்கினான்.
சோப்பை எடுத்துப் பூசிக் கொள்ளும்போது, “ராஜா!” என்று வெளியே தெருக் கதவின் கைப்பிடியை ஆட்டி ரங்கையர் கூப்பிடுவது கேட்டது. இந்நேரம் அவர் குளித்து பூஜை முடித்து விட்டிருப்பார்.
குளியல் அறையிலிருந்தே குரல் கொடுத்தான்.
‘திண்ணையிலேயே உட்காருங்கோ... குளிச்சிண்டிருக்கேன்” அதற்குள் அம்மா குரல் கேட்டது.
“யாரது, ரங்கையரா?”
“நான் தான் மன்னி.”
“ஸ்ஸ்... அப்பா... பகவானே!” என்று ஆயாசத்தோடு அவன் எழுந்து நடப்பதும், நடைக்குப் போய்க் கதவைத் திறப்பதும் காதில் விழுந்தன.
ராஜாமணி கண்ணில் சோப்பு நிறைந்திருக்க வெந்நீர் மொண்ட மக்கை எங்கே வைத்தோம் என்று குருடன் போல் கைகளால் தடவத் தொடங்கினான். அந்த சிறிது நேர குருட்டுத் தனம் அவனுக்கே வேடிக்கையாக இருந்தது சிறிய முயற்சியிலேயே மக் தட்டுப்பட்டு விட்டது.
வெந்நீரை மொண்டு ஊற்றிக் கொள்ளும்போது, சோப்பு வாசனையும் வெந்நீர் இதமும் சேர்ந்து மனம் உல்லாசமாக இருந்தது.
ரங்கையர் குரல் அம்மாவுடன் பேசுவது கேட்டது.
ரங்கையர் எப்படிப்பட்ட வைராக்கியவான். அடிமேல் அடி என்று விழுந்தும் எத்தனை தீரத்துடன் அதைச் சமாளித்து விட்டார். பாவம், ஒண்டிக்கட்டை என்று யாரும் அனுதாபப்படுவதற்கு இடமின்றி அல்லவா சக்கரமாகி இருக்கிறார்.
மோனிகா மில்லரும் குழந்தை யோகியும், வாணியம்பாடி நந்தவனம் நர்ஸரிக்கே ஜமுனாவோடு போய்ச் சேர்ந்து கொண்டதில் ஒருவகையில் பளு குறைந்த மாதிரி தான். குழந்தையில்லாத கிருஷ்ணராவ் தம்பதிக்கு யோகி மாதிரி குழந்தை கிடைத்த திருப்தி. நர்ஸரிக்கு இங்கிலீஷ் சொல்லித் தர மோனிகா மில்லர் போன்ற அமெரிக்கப் பெண் கிடைத்திருப்பது தனிப் பெருமையாக இருக்கும். ஜமுனாவிற்கு அந்த நர்ஸரியிலும் நர்ஸரித் தேட்டத்திலும் ஏதோ பெரிய அடையாளம் கிடைத்திருக்கிறது. ஆனந்தபவனில் தனக்குக் கிடைத்திருக்கிற மாதிரி.
குளித்து முடிந்து ராஜாமணி சுத்தமாகத் துவைத்து தும்பைப் பூ போல் வெளுத்திருந்த டர்க்கி டவலை எடுத்து அதில் துடைக்கும் சுகத்தை அனுபவித்தவாறே உடம்பைத் துவட்டினான்.
நீராக ஓடியிருந்த சோப்பின் வாசனையில் கும்மென்று அந்தக் குளியல் அறையில் கமழ்ந்தது. அவன் மீண்டும் ஜமுனாவைப் பற்றி நினைத்தான்.
அவள் திருமணம் புரிந்து நாலுபேரைப் போல் இல்லத்தரசியாக வாழும் நபரல்ல. அவள் வேறு ஜாதி வேறு இனம். வேறு எதையோ சாதிக்க நியமிக்கப்பட்டவள் அதனால் தான் அவளது ரயில், பிளாட்பாரத்திலேயே அவளை நிறுத்திவிட்டுப் புறப்பட்டு விட்டது.
இப்படியே ஒரு பெண் விவாகமின்றி வாழ முடியுமா என்று நினைத்தான். அவனுக்கு மதர் தெரஸாவும், திருமணமான துறவியாக வாழ்ந்த அன்னை சாரதாவும் ஞாபகம் வந்தார்கள்.
இப்படி ஒருவரா... எத்தனை பேர்? எது சாத்தியம் எது அசாத்தியம் என்பதை மூன்றாம் மனிதனாக இருந்து தர்க்கித்துத் தீர்ப்பிடத் தான் யார்? என்று கேட்டுக் கொண்டான் ராஜாமணி.
குளித்த புத்துணர்ச்சியோடு வெளிவந்த ராஜாமணியைப் பார்த்து ரங்கையர் புன்னகை செய்தார். அவர் முகத்தில் பட்டையாக விபூதி துலங்கிற்று.
“நேரமாயிடுத்து ராஜா... அப்பாவுக்கு நானே இன்னிக்கு ஜூஸ் பிழிஞ்சு கொடுத்துடறேன். நீ சீக்கிரமா டிரஸ் பண்ணிரண்டு கிளம்பு...” என்று அவனை ஒரு பொறுப்பிலிருந்து விடுவித்தாள் கங்காபாய்.
ராஜாமணி அவசரம் அவசரமாய்ச் சட்டையையும் வேட்டியையும் அணிந்து தலை வாரிக் கொண்டாள். கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது தலைமுடியும் கிருதாவும் சற்று அதிகமாக வளர்ந்து விட்டிருப்பது தெரிந்தது.
இரண்டையும் குறைத்து விட வேண்டியதுதான். கல்லாவில் உட்காருவதற்கு இது அவ்வளவு பொருத்தமாய் இல்லை என்று ரங்கையர் வேறு ஜாடையாகச் சொல்லிக் காண்பித்து விட்டார்.
“அப்பா, போயிட்டு வர்றேன்...”
“சரி... செய்... நானும் இன்னிக்கு ஓட்டலுக்கு வரலாமான்னு பார்க்கறேன்...” என்று படுத்தவாறே பதிலளித்தார் ஆனந்தராவ்.
“நீங்க எதுக்கப்பா?”
“இல்லேடா... பொழுது போக மாட்டேங்குது, ஓட்டலுக்கு வந்து இன்னியோட ஒரு மாசமாகப் போறதே இருப்புக் கொள்ளலே.”
அவனுக்கு அவர் ஆதங்கம் புரிந்தது.
“சரி... நடந்து வரவேண்டாம். ஆட்டோ ரிக்ஷா அனுப்பி வைக்கறேன். எட்டிப் பார்த்துக் கொஞ்ச நாழி இருந்துட்டு வந்துடுங்கோ...”
அவன் வெளியேறினான்.
ஆனந்தபவனின் விடியற்காலைச் சுறுசுறுப்பு பரவியிருந்தது.
ராஜாமணியின் தலையைப் பார்த்த ஐயாசாமி குரல் கொடுத்தான். “ராஜா... இன்னிக்கு ரேடியோவிலே மெட்ராஸ் ஸ்டேஷன்லே சினிமா உண்டு.”
“அதை மறந்துடப் போறே... சினிமாவைக் கேக்கலேன்னா உனக்கு எப்படிப் பொழுது போகும்? என்று வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டே வந்தான் சாரங்கன்.
“வைத்தா, மாப்பிள்ளை வந்து விட்டான். ஒரு ஸ்பெஷல் காப்பி போடு!” என்று அவனை வாரினார் சுப்பண்ணா.
‘ஒமக்கு மாப்பிள்ளையானா இப்படி ஓட்டல் காப்பி தான் வாங்கிக் கொடுப்பீர்” என்று பதில் தந்தான் சாரங்கன்.
ஆனந்தபவன் வேடிக்கை ,தமாஷ் இவற்றினூடே தன் மறுநாள் இயக்கத்தை ஆரம்பித்தது. கணபதியின் கை ஓட்டம் பிளஷ் அவுட் தடுப்பில் கேட்டது. பாபா பக்கெட்டில் அலம்பிய பாத்திரங்களை எடுத்து வந்து வைத்தான். குக் ராமையா சோம்பல் முறித்து விட்டு வெந்நீர் அண்டாவை எட்டிப் பார்த்தார்.
ராஜாமணி கல்லாவில் போய் உட்கார்ந்தான். ரங்கையர் மெனு போர்டை எழுதத் தொடங்கினார். பொழுது போல் லென்று வெளுத்து விட்டது. காலை ஆகி விட்டது என்பதன் அடையாளம் போல் வக்கீல் வாசுதேவாச்சார் வாக்கிங் ஸ்டிக்கும் கையுமாகப் போனவர், சாலையில் நின்று கேட்டார்.
“என்ன ராஜாமணி அப்பா எப்படி இருக்கா?”
“நல்லா இருக்கார். உள்ளே தான் வாங்களேன்... இன்னிக்கு ஓட்டலுக்கு வருவார்.”
வாசுதேவாச்சார் படியேறி வந்தார். ஒவ்வொருவராகக் காலையில் காப்பி சாப்பிடுவோர் வரத் தொடங்கினர்.[முற்றும்]
*** *** ***

ஜமுனா :23

ஜமுனா :23
அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர்!
பள்ளிவாசல் மைக்கில் பாங்கு ஒலி தொழுகைக்கு வருமாறு முஸ்லிம் பெருமக்களை அழைக்கத் தொடங்கிற்று.
பூ வாளியில் ரோஜாப் பதியன்களுக்கும் சிறு தொட்டிகளில் வைத்திருந்த மரஞ்செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த ஜமுனா வேலையை நிறுத்திக் கவனித்தாள்.
“அஷ்ஷ்ஷ் ஹதன்ன்ன லாஆ ஆ இலாஹ இல்லல்லாஹ்”
இதய முரசம் அதிர்கிறது. அர்த்த மற்றவைகளின் மத்தியில் ஓர் அர்த்தம். புன்மைக்கும் பூசலுக்கும் அப்பால் எஜமான் ஒருவன் இருக்கிறான் என்ற பிரகடனம். என்ன கம்பீர த்வனி!
இந்த நியூ டவுன் வாசம் ஜமுனாவுக்குப் பெரிய ஆறுதல் தந்தது.
தேரோடும் வீதி போன்ற அகன்ற தெருக்கள். தூங்குமூஞ்சி மரங்கள், அசோக மரங்கள், காற்று குலவும் போதெல்லாம் அவை சலசலக்கின்றன. சற்றுத் தொலைவில் வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷன், நாளெல்லாம் விட்டு விட்டுக் கேட்கும் ரயில் ஓசை.
முடிவற்றதொரு நீண்ட பிரயாணத்தை நினைவூட்டியவாறு அவற்றின் கடாகடா குடுகுடு என்று துயரப் பொதி சுமந்து செல்வது போன்ற ஓசைத் தொடர், காலையிலும் மாலையிலும் இஸ்லாமியா கல்லூரி மாணவர்கள் செல்லும் கலகலப்பு, அருகாமையில் இருந்த பேக்கரி ஒன்றில் கம்மென்ற வரும் ரொட்டி சுடும் மணம். எப்போதாவது வீறிடும் எஞ்சின் ஓசை. வண்டியில் சரக்கு தள்ளி வருவோர் போடும் வியாபாரக் கூக்குரல். இந்த நந்தவனம் நர்ஸரி இளஞ்சிவப்பு வெள்ளை யூனிஃபார்மில் வரும் குழந்தைகள் குதூகலம் தவிர வேறொன்று தெரியாத அவற்றின் முக மலர்ச்சி.
எல்லாவற்றுக்கும் மேலாக அவளுக்குப் புகலிடம் அளித்திருந்த கிருஷ்ணராவ் தம்பதி. மாத்வ ராவ்கள் எல்லோரிடமுமே இப்படி ஒரு தன்மை உண்டோ? பந்தமும் மனசின் காயங்களுக்கு ஒத்தடமாகிப் பிறர் வாடப் பொறுக்காது பெய்யும் கருணையாகி... களகளவென்று அவை செழிக்கப் பூசிக்கும் தன்மையாகி...
தன் மனம் எப்படிஇருக்கும் என்று ஊகித்து அறிந்தவர்கள் போல் ஒரு வார்த்தை கூட அவர்கள் எதைப் பற்றியும் கேட்கவில்லையே...
ஜமுனா நந்தவனம் போன்று விரிந்து பரந்திருந்த வீட்டின் முன் முற்றத்திலிருந்து திரும்பிப் பின்னால் பார்த்தாள். சமையல் அறையில் விளக்கெரிந்தது. கிருஷ்ணா ராவ், தன் மனைவி ருக்மிணி பாய்க்குச் சமையல் ஒத்தாசை செய்வது ஜன்னல் வழியாகத் தெரிந்தது.
அந்த வீடே ஒரு விசித்திரமான அமைப்பு. வீட்டின் கதவைத் திறந்தால் தெருப் பக்கமாய் இரண்டு எதிர் எதிர் அறைகள். ஊடே ஓடிய நடையைத் தாண்டியதும் தோட்டம், நாலைந்து தென்னை மரங்கள், ஒரு பலாமரம், இரண்டு மாமரங்கள், ரோஜாச் செடி, மல்லிகை, கனகாம்பரம், கிருஷ்ணராவின் மனசில் தாவரங்களின் பால் இருந்த கொள்ளைப் பிரியம், தோட்டத்தில் தெற்கேயும் வடக்கேயும் பார்த்தவாறு இரண்டு நீண்ட மஞ்சம்புல் போர்த்திய ஷெட், அவை சந்திக்கும் இடத்தில் வீடு தொடங்கிற்று.
ஐந்து வகுப்புகள் வரை அங்கேதான் நர்ஸரி ஸ்கூல். அந்தக் குளுமையான சூழ்நிலையில் சின்னஞ்சிறு செடிகளும், உலகமாகிய நந்தவனத்தில் பூத்த புஷ்பங்கள் போன்ற அந்தக் குழந்தைகளும் ஒன்றாக வளர்கின்ற அந்தக் காட்சியைக் காணும் போதே மனம் என்னமாய் நிரம்பி விடுகிறது.
அஷ்ஹத் அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்
பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அழைப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.
ஐந்து தொழுகை நேரங்களிலும் அந்தக் குரல் நியூ டவுன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் ஒன்றை ஞாபக மூட்டியவாறே கூவும், அதில் ஜமுனாவுக்கு ஒரு தனி ஆறுதல்.
ஜமுனா பூவாளியில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் கிணற்றடிக்குப் போனாள் பக்கெட்டைக் கிணற்றில் இறக்கி ராட்டினம் சுழன்ற ஓசையைக் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த கிருஷ்ணராவ், “ஜம்னா... போதும்மா...என்றார்.
“சாயந்திரமாயிடுத்து. காலமே ஊத்திக்கலாம்” என்று அவளைப் பார்த்துச் சொன்னார்.
ஜன்னல் கம்பி வழியே மொழுமொழு வென்று வழுக்கைத் தலையும், இரண்டு காதுகளுக்கும் மேலே பிடியளவு நரை முடியும். வட்ட முகத்தில் கறுப்பு ஃபிரேம் போட்ட மூக்குக் ண்ணாடியின் ஊடே கனிவாகப் பார்க்கும் கண்களுமாக அவர் முகத் தோற்றம் தென்பட்டது.
“இன்னும் கொஞ்சம் தான் இருக்கு மாமா... ஒரே பக்கெட்...”
அவர் முகம் ஜன்னலிலிருந்து அகன்றது.
ஜமுனா அங்கே வந்து பத்துநாள் ஆகப் போகிறது. ஒரு முன்னிரவில் தூக்கக் கலக்கத்தோடு ஆனந்தராவ் அழுத்திய காலிங் பெல்லைக் கேட்டு விட்டு, கதவைத் திறந்தபோது ஜமுனாவை எப்படிப் பார்த்தாரோ, அந்த விதமாகத்தான் இப்போது இருந்தது அவர் பார்வை. விருந்தாளி உபசாரம் என்ற பிரயத்தனம் ஏதும் இல்லாமல், சகஜமான வீட்டு மனுஷியை ஏற்றுக் கொண்டது போல் அதே அன்பு... அதே பிரியம்.
கிருஷ்ணாராவுக்கும் ருக்மிணிபாய்க்கும் வயது ஐம்பதைத் தாண்டிவிட்டது.
“ஸ்கூல்லே ஒர்க் பண்ணிண்டிருந்தா இந்நேரம் நான் ரிடையராய் இருப்பேன். நாலு வருஷம் கழிச்சு ருக்மிணி ரிடையராவாள். இப்ப தப்பிச்சுண்டோம்.”
எவ்வளவு அன்யோன்யமா தம்பதி இவர்கள். இந்த நெருக்கமும் இசைவும் இல்லாமல் இருந்தால் இப்படி ஒரு நர்ஸரி ஸ்கூலையும் நர்ஸரி தோட்டத்தையும் வாணியம்பாடியே விரும்பிப் போற்றுகிற மாதிரி நடத்த முடிந்திருக்காது என்று நினைத்தாள் ஜமுனா.
பக்கெட்டை இழுத்து தண்ணீரைப் பூவாளிக்குள் ஊற்றினாள். பூவாளி நிரம்பவில்லை. இன்னொரு பக்கெட் தேவைப்பட்டது. மீண்டும் கிணற்றுக்குள் பக்கெட்டை இறக்கினாள்.
ஹய்ய...அலஸ்...ஸலாத்...
ஹய்ய அலஸ் ஸலாத்
தொழுகைக்கு அழைப்பு அலையலையாகத் திசை திசையாக விரிந்தது.
ஒரு வேளை இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்திருந்தால் இந்த நர்ஸரி உற்சாகமும் அன்னியோனியமும் இல்லாமற் போயிருக்கமோ? யார் கண்டது? எதற்கு எது பிணை என்று எப்படிச் சொல்ல முடியும். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாக் குறை உண்டு என்று நம்ப முடியவில்லையே... மரஞ்செடிகளையும் நர்ஸரிக் குழந்தைகளையும் இவ்வளவு வாத்ஸல்யத்தோடு நேசிக்கும் இந்த மனங்களுக்கு குழந்தைகள் இருந்திருந்தால் கூட குறுகிப் போக சாத்தியப் படாது. ஜீவ நதியை எந்த வாய்க்கால் வெட்டித் திருப்பினாலும் அது நூறு வாய்க்காலுக்கும் வழிந்தும் ஓடிக்கொண்டு தான் இருக்கும்.
பக்கெட்டை வெளியே இழுத்துத் தண்ணீரைப் பூவாளியில் நிரப்பினாள் ஜமுனா. தளும்பத் தளும்பப் பூவாளியை எடுத்துக் கொண்டு அதன் பளுவுக்கு எதிர்விசை மாதிரி கழுத்தை எதிர்ப்பக்கமாகச் சாய்த்துச் சேலையை இறுகச் சுற்றக் கொண்டு சளற்றித் தூக்கியவளாக நடந்தாள்.
ஏதோ பாத்திரத்தை அலம்பி ஊற்ற வெளியே வந்த ருக்மிணிபாய் ஜமுனாவின் சிரமத்தைப் பார்த்தாள்.
“நாகோஜிகிட்டே சொல்லியிருக்காரு கொழந்தே. மோட்டார் எல்லாம் நேத்தே லாரியிலே வந்துடுத்தாம். ரெண்டு மூணு நாள்ளே கொண்டாந்து ஃபிட் அப் பண்ணிட்றேன்னாள். பம்ப் வந்துடுத்துன்னா ஸ்ரமம் இல்லே பட்டனைத் தட்டிவிட்டா வந்து தண்ணி கொட்டும்.”
செடித் தொட்டிக்கு அருகே போன ஜமுனா, பூவாளியை வைத்து விட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
“இருக்கட்டுமே மாமி... இதிலென்ன ஸ்ரமம் இருக்கு. இப்பத்தான் கரண்ட் அடிக்கடி ஆஃப் ஆயிப் போறதே. அப்ப கயித்தை நம்பித்தானே ஆகணும்.”
ருக்மிணிபாய் வாஞ்சையோடு புன்னகை செய்தாள். நல்ல உயரம். திடகாத்திரமான உடம்பு. கண்களில் கடுமை கலந்து இருப்பது போல் முதல் தோற்றம். அதற்குக் கண்ணாடி ஒரு காரணமாகவும் இருக்கலாம். நடக்கும் போதும் நிற்கும்போதும் அந்தத் தோற்றத்தைப் பார்த்தால் மரியாதை செய் என்று ஒரு நினைவு வரும்.
ருக்மிணிபாய் உள்ளே போய் விட்டாள்.
அவன் தான் அந்த நர்ஸரியின் ஹெட் மிஸ்ட்ரஸ். கிருஷ்ணராவ் அவளுக்கு அஸிஸ்டென்ட் தான். கரஸ்பாண்டெண்ட் ஆக இருந்தும், அஸிஸ்டெண்ட் பதவியே போதுமென்று அவர் விட்டுக் கொடுப்பதில்லையே அவர்கள் அன்னியோன்னியம் வெளியாயிற்று. அந்த தம்பதியின் ஆங்கில உச்சரிப்பைக் கேட்டு ஜமுனா வியந்து போனாள். அவள் மேரி இம்மாகுலேட் காண்வென்ட்டில் படிக்கும்போது ஜோலார்ப் பேட்டையிலிருந்து இரண்டு ஆங்கிலோ இந்தியப் பெண்கள் எல்.கே.ஜி.க்கும் யூ.கே.ஜிக்கும் சொல்லித் தர வந்து போவார்கள். அவர்கள் உச்சரிப்பை விட கிருஷ்ணராவ் தம்பதியின் ஆங்கில உச்சரிப்பு இன்னும் ஸ்பஷ்டமாக இருந்தது.
லா... இலாஹ... இல்லல்லாஹ்
தொழுகை அழைப்பு வானவெளியில் மிதந்தது. ஜமுனாவிற்கு திருப்பத்தூர் ஞாபகம் வந்தது.
‘எனக்கு ஓர் அமெரிக்க மன்னி வந்து இருக்கிறாளாமே! அண்ணா ராகவன். தன் குழந்தைக்கு என்னமாய்ப் பெயர் வைத்திருக்கிறாள். யோகி! குழந்தை எப்படி இருப்பான்? அண்ணா மாதிரியா, மன்னி எப்படி இருப்பாள்? அண்ணா... அண்ணா என் வாழ்க்கை இப்படிக் கைதவறிய பாண்டம் போல் உடைந்து நொறுங்கி விட்டதையெல்லாம் கேட்டு வருந்தாமல் நீ போய்ச் சேர்ந்து விட்டாய். அப்பா, நான் எந்த நாளில் நான் வீட்டை விட்டுப் புறப்பட்டு வந்தேனோ, அதே தினத்தில் தானா அந்த இடி உங்கள் தலையில் விழ வேண்டும்?'
ஜமுனா செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தி வாளியைக் கீழே வைத்து விட்டு எதிரில் தெரிந்த தென்னை மரத்தையே அர்த்தமின்றி வெறித்துப் பார்த்தாள். ஓர் அணில் வளைந்து சுழன்று அவசரத்தோடு பாதி மரம் ஏறியது. கீழே இறங்கி விருட்டென்று ஓடி மறைந்தது.
முந்தாநாள் ராஜாமணி வந்து போன நினைவு அவளைப் பின்னி இழுத்தது.
‘ஆனந்தராவுக்கு ஹார்ட் அட்டக்காம். ஹோட்டலுக்கே வரக்கூடாது என்று டாக்டர் சொல்லி விட்டாராம் அப்பாதான் இப்போது ஆனந்த பவனின் எல்லா நிர்வாகத்தையும் கவனித்து வருகிறாராம்! எல்லாக் கதையையும் சொல்லிவிட்டு ராஜாமணி தயங்கித் தயங்கி வந்த விஷயத்தை வெளியிட்ட தோற்றம் அப்படியே அவள் மனசில் சித்திரம் போல் பதிந்திருந்தது.
ராஜாமணி பாய் மீது உட்கார்ந்திருந்தான். ஜமுனாவையும் அவனையும் தவிர வெளியறையில் யாரும் இல்லை. ராஜாமணிக்கு டிபன் தயாரிக்க ருக்மிணிபாய் சமையல் அறைக்குப் போயிருந்தாள். அந்த நர்ஸரியில் வாங்கிய மல்கோவா மாங்கன்று மரமாகி, முதல் ஈற்றில் காய்த்த பழங்களை எடுத்துக் கொண்டு யாரோ வந்திருந்தார்கள். அவர்களோடு பேசுவதற்காக கிருஷ்ணராவ் உள்ளே போனார்.
ராஜாமணி தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.பாயில் வர்ணங்கள் பூசிய கோரை இழைகளைப் பெரு விரல் நகத்தால் டர்ர்ரக்... டர்ர்கை என்று ஓசையெழ வருடிக் கொண்டே கனமான குரலில் மெதுவாகச் சொன்னான்:
“ஜம்னா... உன் மன்னியைப் பார்க்கணும்னு ஒனக்குத் தோணலியா?"'
“தோணறது.”
“திருப்பத்தூருக்கு வந்துடு. எத்தனை நாளைக்கு இங்கே இருப்பே?”
“அது முடியாது ராஜாமணி.”
“ஏன்?”
“ம்ஹ் ம்ஹ்ம்” என்று விரக்தியாக வாய்க்குள் சிரித்தாள் ஜமுனா.
அசட்டுத்தனமான கேள்வி கேட்டு விட்டோமே என்று அவனுக்கு உறுத்திற்று.
சற்று மௌனம். ராஜாமணியின் விரல் நகம் பாயை வருடும் ஒலி. அவன் தலை குனிந்திருந்தான். அவள் சுவரில் மாட்டியிருந்த ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தான் மறுபடியும் பேசினான்.
“இந்த வயசிலே ரங்கையர் உன் மன்னியையும் கொழந்தையையும் எப்படிக் காப்பாத்துவார்? நம்ம தெருவிலே ஒரு அமெரிக்கப் பொண்ணு, விதவையாய் துணையில்லாமே எப்படி இருப்பா?”
ஜமுனா பெருமூச்செறிந்தாள்.
“நீ வந்துதான் தீரணும் ஜம்னா... இப்படியே எத்தனை நாளைக்கு நீயும் இருக்க முடியும்?”
ஜமுனா அவன் மீது பார்வையை ஓட்டினாள். ராஜாமணி எதற்கு வந்திருக்கிறான்?
அவன் தலை குனிந்தவாறே தொடர்ந்தான்.
“இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்திலே... ஹூம்... உம்...பேச எனக்கு வருத்தமா இருக்கு. ஜம்னா... என்னை ஒனக்குப் புரியலியா?”
அவன் பார்வையம் அவள் பார்வையும் சந்தித்தன.
ராஜாமணியின் கண்களில் அவனது இளமை மிடுக்கும் துடிப்பும் இல்லை. எருது கட்டில் கொம்புகளைப் பிடித்து நிறுத்தி விட்ட காளை போல் ஒரு படிமானம். ஓட்டப் பந்தயத்தில் தோற்று விட்டுக் கடைசியாக ஓடி வருபவன் போல் ஓர் அவமானம்.
அவளது ஊடுருவும் பார்வையைத் தாங்கச் சக்தியற்றவன் போல் அவன் மீண்டும் குனிந்து கொண்டான். ஜமுனாவின் மனசில் ஒரு பரிதாபம் தலை தூக்கிற்று.
‘பாவம், ராஜாமணி! இப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்ததற்கு உண்மையிலேயே வருந்துகிறான். என்ன பேதை மனசு! கை வழுக்கி விட்டதென்று இந்தக் கிளையை விட்டு அந்தக் கிளையைப் பிடித்துக் கொள்வேன் என்று நம்புகிறான். பிடித்துக் கொள் என்று விண்ணப்பிக்கிறான்.’
“வேற ஏதாவது விஷயம் இருந்தா பேசலாமே.”
விருட்டென்று அவன் பார்வை அவளைச் சந்தித்தது.
ஜமுனா அமைதியாக தீர்க்கமாக, நிலையூன்றி நின்ற பார்வையோடு ராஜாமணியைப் பார்த்தாள்.
“ஜம்னா... நீ என் ஜம்னாவா ஆக மாட்டியா...?”
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” அவள் மெதுவாக அந்த வார்த்தைகள் வெளிவந்ததன் நாசூக்குக் குறைவை உணர்த்துவது போலவும், திடமான தன் தீர்மானம் போலவும் கண்களை மூடிக் கொண்டு உதட்டின் வழியே ஓசையால் பேசினாள்.
“மன்னியையும் குழந்தையையும் ஒரு தடவை இங்கே அனுப்பி வைங்கோ. இவாளுக்கும் அவளைப் பார்க்க ரொம்ப ஆசையா இருக்குன்னு சொல்றா.”
“சரி!” அவன் விடைபெற்றுச் சென்ற பின் தான் எத்தனை பெரிய மனிதன் அவன் என்று அவளுக்கு உறைத்தது.
எவனோடோ ஓடிப்போக இருந்த ஒருத்தி என்று மட்டும் தான் அவன் தன்னை அறிவான். அதை அறிந்தும் தன்னை ஏற்றுக் கொள்ள முன் வந்தானே என்று நினைத்தாள் ஜமுனா.[தொடரும்]

ஜமுனா :22

ஜமுனா :22
வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தான் ராஜாமணி. டி.எஃப்.ஓ. சோமையாவின் கடிதத்திற்கு அப்பாவின் உடல்நிலை விவரத்தை குறிப்பிட்டு வர இயலவில்லை என்று எழுதியிருந்த கடிதத்தையும் போஸ்ட் செய்வதற்காக அவன் தபாலாபீஸுக்குப் போனான்.
எத்தனை பேர் அப்பா உடல்நிலை சரியில்லை என்றதும் ஓடோடி வருகிறார்கள்! சாப்பிட ஆரம்பித்து முடிப்பதற்குள் மூன்று நாலு பேர் செருப்பை வாசலில் கழற்றிவிடும் ஓசையும் ஆனந்தராவ் எங்கே இருக்காரும்மா என்ற குரல்களும் கேட்டு விட்டன.
அம்மா பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர் வெறும் ஹோட்டல்காரராக இருந்திருந்தால் இது எப்படி சாத்தியம்? சொந்தம் போல் அல்லவா கரிசனமும் கவலையும் அந்தக் குரல்களில் குழைந்தன. அவருக்கு இவ்வளவு செல்வாக்கு உண்டா? திடீரென்று ஏன் இப்படி நேர்ந்தது? இனி என்ன ஆகப் போகிறது? அம்மா பரிமாறுகையில் என்னைச் சுமங்கலியாக கொண்டு போயிடு பகவானே என்று கண்ணைத் துடைத்துக் கொண்டாளே... அம்மா எதற்குப் பயப்படுகிறாளோ அது நடந்து விடுமா? அப்புறம் என்ன..?
லெச்சரர் ராமபத்ரன் சொன்னாரே, இந்திய இளைஞனுக்கு குடும்பம் ஒரு தளை என்று. அதே மாதிரி நானும் குடும்பத்தில் விழ வேண்டியது தானா... என் தலைவிதி அவ்வளவு தானா? பிள்ளை இறந்து பெண் ஓடிப் போனாள் என்ற சங்கதியில் இடிந்து போயிருந்த ரங்கையர் கூட உடம்பு சரியில்லை என்றதும் தன் துயரத்தை மூட்டை கட்டி விட்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டு விட்டாரே! என்ன இருக்கிறது அந்த ஆனந்தபவனில்... அது ஏன் இப்படி இவர்களை சக்கர வளையம் போட்டு மாட்டி இழுக்கிறது?
ஏதேதோ நினைத்துக் கொண்டே அவன் கலெக்டர் ஆபீஸ் கட்டத்தைத் தாண்டியிருப்பான்.
“பாக்காமேயே போறாப்பலே இருக்கு?”
தெரிந்த குரல், அவன் திரும்பினான். அவள், கம்பி ஜன்னல் வீட்டுக்காரி, மழைக்கு ஒதுங்கியவனின் மாமிசத்தை ருசித்தவள். அவனுக்குத் திக்கென்றது, யாராவது பார்க்கிறார்களோ என்று முதலில் திகில் தான் உறைத்தது. அவள் கலெக்டர் ஆபீஸ் போர்ட்டிகோவினுள் நின்றிருந்தாள் போலிருக்கிறது.
ராஜாமணிக்கு ரத்தம் குடிக்கும் பிசாசைப் பார்ப்பது போல் உதறல், நேரே சைக்கிளை விட்டுக் கொண்டு போய் விடலாமே என்று தோன்றிற்று, மறுபடியும் பின்னாலிருந்து கூப்பிட்டாளானால்... கைதட்டிக் கூப்பிடுவாளோ...
சட்டென்று தைரியம் வந்தது.
நான் ஏன் இவனிடம் பயந்து ஓடவேண்டும்? இன்னும் என்னிடம் பலவீனமும் பயங்கொள்ளித்தனமும் இருக்கிறது என்று காட்டிக் கொள்ளவா? இவள் என்ன செய்து விடுவாள்.
அவன், சைக்கிளை நிறுத்தினான்.
அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“மறுபடியும் வருவேன்னு பார்த்தேன், வரவே இல்லியே?”
“எதுக்கு... மறுபடியும் சாக்கடையிலே தள்ளிக் குளிப்பாட்டவா?”
அவள், அவனைப் புண்பட்டது போல் ஏக்கத்தோடு பார்த்தாள்.
“என் ராஜாவுக்கு எம்மேலே கோவம் போலிருக்கு.”
அவள் ராஜா என்றதும் நடுவீதியில் சைக்கிளில் அங்குமிங்கும் சஞ்சரிப்போர் மத்தியில் சரசம் பேசுவதும் அவனுக்கு அடக்க முடியாத கோபம் வந்து ஓர் எச்சரிக்கை கிளப்பின.
“நீ ஒண்ணும் ராஜா கூஜா ன்னு என்னைக் கொஞ்ச வேண்டாம். என் தலையெழுத்தோ பீடையோ அன்னிக்கு வந்து ஒங்கிட்டே மாட்டிண்டேன்.”
அவள் புன்னகை செய்தாள்.
“நீ என்ன வேணும்னாலும் நெனச்சுக்கோ. நீ எனக்கு ராஜாதான். ஒன்னைப் பாத்தவுடனே எனக்குப் பிரியம் ஏற்பட்டுப் போச்சு. நானே தான் ஒன்னை சீரழிச்சேன்னு வச்சுக்கோ... எனக்கு அது தொழில் இல்லே, சத்யமா சொல்றேன். ஒன்னைப் பாழ்பண்ணனும்னு நெனச்சு நான் செய்யலே, உம்மேலே ஏற்பட்ட பிரியம் அந்த நேரத்திலே பூரப் பூரா நான் ஒனக்கே சொந்தம்னு பண்ணிடுச்சு” அவள் மன்றாடினாள்.
“சரி!” அவன் குரலில் கண்டிப்பு.
“மறுபடியும் எப்போ வர்றே?”
“வரமாட்டேன். எப்பவும் வரமாட்டேன்.”
உன்மத்தம் பிடித்தவள் போல் அவனை அவள் பார்த்தாள்.
“என் மேலே உனக்கு நெஜம்மா பிரியம் இருந்தா நடுத் தெருவிலே இப்படி என்னை நிக்க வச்சுப் பேசாதே.”
“ராஜா... ஒரு தடவையாவது வீட்டுக்கு வாயேன்.”
“என்னிக்கு உங்கிட்டே நான் நாசமானேனோ அன்னிக்கே என்னை சனியன் பிடிச்சுடுத்து.” - அவன் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான்.
அவள், அவனைத் தன் அந்தஸ்தையும் சகல மரியாதைகளையும் இழந்து பிச்சைக்காரி போல் பார்த்தாள். அவள் சொன்னது முழுவதும் உண்மை என்று தனக்குள் ஏதோ அசைவதை ராஜாமணி உணர்ந்தான்.
அவன் மீது அவளுக்கு ஏற்பட்ட பிரியத்தை அவள் வீட்டில் கழித்த ஒவ்வொரு நிமிஷத்திலும் ராஜாமணி ஏற்கெனவே உணர்ந்திருந்தான். சுயவெறுப்பிலும் அவமானத்திலும் அன்று அவன் மனம் எதையும் கவனிக்க முடியாதவாறு கைத்திருந்தது. இன்று அவன் மீது அவள் கொண்டிருக்கும் பிரியம், சில வார்த்தைகளில் ஓரிரு பார்வையில் குரல் குழைந்த குழைவில் அவள் நிற்கும் தோற்றத்தில் சதுர்வியூகம் வகுத்துக் கொண்டு நின்றது.
‘பிரியமே, நீ நிஜமாயினும் நான் உனக்கு இரையாக முடியாது. நீ ஒரு போதை. நான் எதற்கும் இரை பொருள் அல்ல. உன் போதை உட்பட, உன் பிரியத்தின் நிஜம் உட்பட எதற்கும் இனி நான் மசிய மாட்டேன்.’
அவன் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான். அவனுக்கு ஏனோ திரும்பிய பார்க்கத் தோன்றிற்று.
அவள் இன்னும் அவனையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். ராஜாமணி முகத்தைத் திருப்பிக் கொண்டு சைக்கிளை மிதித்தான்.[தொடரும்]

Saturday, 23 September 2017

ஜமுனா :21

ஜமுனா :21
போர்டை யாரு எழுதினது? மாதவன் கையெழுத்துப் போல இருக்கே! நன்னா பளிச்சினு தெரியறாப்பிலே எழுதுவாளா, இப்படி வளையம் வளையமா மாவட்டை சுருட்டிண்டு இருக்காப்பிலே எழுதுவாளா...?” என்று கேட்டுக் கொண்டே படியேறி ஹோட்டலில் நுழைந்தார் ரங்கையர்.
கல்லாவில் உட்கார்ந்திருந்த ராஜாமணி எழுந்து நின்றான்.
“என்ன ராஜா... மன்னி கிட்டே பெரியண்ணாவுக்கு வேளை தவறாமே மருந்து கொடுக்கச் சொல்லி விட்டு வந்திகுக்கேன். மூணு மணிக்கு ஒரு தரம். நீ போய் கவனப்படுத்திட்டுவா. கம்ப்ளீட் ரெஸ்ட் தெவைன்னாராமே டாக்டர்... அண்ணா ஹோட்டல், ஹோட்டல்னு அடிச்சுண்டார். நான் இருக்கேனே அண்ணான்னு தைரியப்படுத்தி இருக்கேன்.”
ராஜாமணியிடம், ரங்கையர் பேசிக் கொண்டு நின்றார். முகம் வாடி டைபாய்டில் விழுந்து எழுந்த மாதிரி தேஜஸ் குன்றியிருந்தது.
அதற்குள் சமையலறைக்கும் டேபிள்களுக்கும் செய்தி போய்விட்டது. நடை வாசலில் சுப்பண்ணா வந்து நின்றார்.
வைத்தா அழுக்குத் துண்டால் மார்பில் ஓடிய வியர்வையைத் துடைத்தவாறு நின்றான். சர்வர் மணி சுப்புணி - ராமையா - ஐயாசாமி அரவை கணபதி. ஒவ்வொருவராய் வெளியே வந்து விட்டார்கள்.
“என்னத்துக்கு கூட்டமா நிக்கறேள்? டேபிளைக் கவனியுங்கோ. முனிசிபாலிடியிலே டீபார்ட்டிக்கு ஆர்டர் கொடுத்திருந்தாளே, என்ன ஸ்வீட் போட்டீர்?
“பாதாம் பர்ஃபி...”
“கவனிச்சுக்குங்கோ... யாரோ மந்திரி வர்றாராம். முனிசிபல் வரவேற்பு. காரத்திற்கு பாம்பே மிக்ஸர் போட்டுடுங்கோ... என்ன ராமையா, மத்தியானம் என்ன சாம்பார்...
“கருணைக் கிழங்கு தான் அண்ணா...”
“காலமே பொங்கல் போடலியா சுப்பண்ணா...?”
“காய்கறி இல்லேண்ணா... பொங்கல் போட்டா கொத்ஸு போடணும்...”
“காய்கறி இல்லியா... மரியதாஸ் எங்கே?”
“கண்ணப்பனை வாங்கி வரச் சொல்லிவிட்டு அவர் சப்ரிஜிஸ்திரர் ஆபீசிலே ஏதோ பத்திரம் ரிஜிஸ்டர் பண்ணப் போயிருக்கார். இவன் வேடிக்கை பார்த்துண்டு நின்னுட்டான். எங்கியோ கல்யாண கிராக்கின்னு மொத்தமா வாங்கிண்டு போயிட்டா.”
தேரோட்டம் நேர்ப்பட்டு விட்டது. ரங்கையர் வந்து விட்டார். சாரதியும் அவரது கணக்குப் பிசகாத ஆக்ஞையும் வந்து விட்டன. ஆள் ஆளுக்கு ஏறியிருந்த இன்னதென்று விளங்க முடியாத பளு சரேலென்று இறங்கி ஓடி விட்டது.
எல்லோரும் அங்கங்கே நின்றிருந்தார்கள். ரங்கையர் ஒவ்வொரு முகத்தையும் திருப்பிப் பார்த்தார். அவருக்கு விதி நேர்ப்பித்தக் கொடுமைகளில் பங்கு பெறுவதற்காக அங்கங்கே ஒவ்வோர் அனுதாபங்கள் தயங்கி நின்றன. அவற்றிற்குப் பேசப் பயம்.
ரங்கண்ணாவின் கறாரிலும் கண்டிப்பிலும் அவை பழகியவை. அது மட்டுமா? அவற்றுக்கு ரங்கண்ணாவிடம் ஆறுதல்களையும் அனுதாபத்தையும் வாங்கி வாங்கித் தான் பழக்கம். அவற்றுக்கு அதைத் திருப்பித் தர வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று நேரும்  என்ற விஷயமே தெரியாது.
அவர் மார்பில் புல்லரித்து, தொண்டையும் முதுகும் தேள் விஷம் எறிய மாதிரி விறுவிறுத்தன. அவர் கூட்டி விழுங்கினார்.
பாபா அதற்குள் பக்கெட்டை எடுத்துக் கொண்டு ஹாலுக்குப் போகப் போனவன், கூட்டம் நிற்பதைப் பார்த்துத் திரும்பினான். அவனது உணர்ச்சி பொங்கும் கண்கள் ரங்கையரைப் பார்த்து ஒரு கணம் நிலைத்து நின்றன. அவன் கன்னச் சதை துடித்தது. உதடு சட்டென்று கோணிற்று.
“ரங்கண்ணா ஆ ஆ ஆ...” என்று வாய்விட்டுக் கதறினான். தயக்கங்களும் துயரும் கனத்த அந்த மௌனத்தைப் பிளந்து எறிந்தவாறு பாபாவின் கனத்த குரல் ஒரு ரிஷபத்தின் ஹூங்காரம் போல் கேட்டது. சுப்பண்ணா குமுறிக் கொண்டு வந்த துக்கத்தைத் துண்டை வாயில் பொத்தி அடைத்துக் கொண்டார்.
கணபதி குழந்தை மாதிரி விசித்து விசித்து அழுதான். உமாசங்கருக்கும் மாதவனுக்கும் தாரை தாரையாக வழிந்து கண் நனைந்தது.
“பாபா... பாபா” என்று பதறிப் போய் அவனை நெருங்கி அவனது பட்டயம் தைத்தது போன்ற அகன்ற மார்பைத் தழுவிக் கொண்டார் ரங்கையர். பேசாத அந்த மௌனியின் பெருந்துக்கம் மலை முகடுகள் சரிவதற்குச் சமானம் என்று பளிச் பளிச் சென்று எல்லார் மனசிலும் ஓடிற்று.
‘இவர்கள் எதற்கு அழுகிறார்கள்? எனக்கு அனுதாபம் சொல்ல முடியாததற்கா? எனக்கு இப்படி முடிந்ததற்கா? என்னைத் தேற்ற வந்து, நான் தேறுதல் சொல்ல நேர்ந்தது போல் இது என்ன வேடிக்கை! எத்தனை குழந்தைகள் இவர்கள். இந்த குழந்தைகளுக்கெல்லாம் ஓர் அம்மா தேவை என்கிற மாதிரி அல்லவா இவர்கள் அழுது வடிந்து நிற்கிறார்கள்! என் துக்கங்கள் துரத்துவதற்காக இவர்களையெல்லாம் விட்டு சந்நியாசியாக ஓடி விடலாம் என்று நினைத்தால் நடக்குமா? இந்த பந்தங்களின் வலை பின் இழுக்கும்போது எத்தனை நாளைக்கு அந்த மர்கட சந்நியாசம் சாத்தியமாகும்? நான் பந்தமா பட்டிருக்கிறேன்? இல்லை. தீட்சை வாங்கி பிட்சா பாத்திரத்தை ஏந்தித் தேசாந்திரம் போனால் தானா சந்நியாசம்? தன்னைத் தியாகம் செய்வதன்றோ சந்நியாசம்? எதற்கோ என்றைக்கோ என்னை நான் தியாகம் செய்து விட்டதாக நினைத்த மமதையின் மேல் ஜகதீஸ்வரி சரியான அடி கொடுத்தாள்! எப்படி புழுவாய்த் துடித்து விட்டேன்... அவள் சோதனையில் நான் தோற்றுப் போனேன்.’
‘அடி வாங்கிக் கொண்டு ஊளையிடுகிற நாய் மாதிரி ஓலமிட்டு விட்டேன்! இதோ இந்தக் குழந்தைகள் எனக்காக அழுகிறார்கள். அழுது என்னைத் தேற்றுகிறார்கள் குழந்தைகளால் தேற்றப்பட வேண்டிய சாமான்யன் நான் என்று சுட்டிக் காட்டி அழுகிறார்கள்.’
‘இந்த பாசம் என்னைப் பந்திக்கிறதோ? இல்லை இல்லை. இவர்களுக்கு நான் பந்தப்பட்டவனல்ல. ராகவனுக்கோ ஜமுனாவுக்கோ அந்தக் குழந்தை யோகிக்கோ பந்தப்பட்டவனல்ல. இந்த ஆனந்தபவன் இந்தக் குழந்தைகள்... ராகவன்... ஜமுனா... போயி... ஆனந்தராவ் எல்லோருமே என் அழுக்கை அலசி விட்டுக் கொண்டு ஓடும் நதியின் பிரவாகங்கள், நானும் ஓட வேண்டியவனே. வயிறு பசித்து வந்த ஜீவன்களுக்கு இலை போட்டுப் பரிமாறி, ஜாடராக்னியைக் குளிர்வித்து ஜீவனம் செய்ய எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. விதியை உதறி விடுதலை பெற, இன்னும் எனக்கு அதிகாரம் வரவில்லை. பெரியண்ணா ஆனந்தராவ் எப்பேர்ப்பட்ட ஞானி! ஹார்ட் அட்டாக் என்று உயிருக்குக் கெடு வைத்து விட்ட போதும் ஹோட்டல்... ஹோட்டல் என்ற கர்மாவைச் செய்ய என்ன துடிக்கிறார். விடுதலையா? இங்கேயே பெற முடியாத விடுதலை இனி எங்க கிடைக்கும்!’
முக்தாபிமானீ முக்தோ ஹி பத்தேச
பத்தாமி மான்யபி
கிம்வதந்தீதி ஸத்யேயம் யாமதி
ஸாகதிர்பவேத்
என்கிறதே சாஸ்திரம், விடுதலை அடைந்தவனாக நினைப்பவனுக்கு விடுதலையே. பந்தமுற்றோனாய் நினைப்போனுக்கு பந்தமே; நினைக்கிற நிலையே சித்திக்கிறது!
ரங்கையரின் நினைவோட்டம் அடங்கியது. சமையல் கட்டிற்குள் நுழைந்தார். ஆனந்தபவனின் அடுக்களையிலிருந்து ஸ்டோர் ரூம் வரை அவருக்குக் காத்திருந்த காரியங்களில் அவர் சீக்கிரம் மூழ்கிப் போனார்.[தொடரும்]



Thursday, 21 September 2017

ஜமுனா :20

ஜமுனா :20
“கெழக்கு மேற்கே போனா, மேற்கு கெழக்கே வருது. எல்லாமே ஒரு சக்கரம் தான். சுத்திண்டே இருக்கற சக்கரம்.”
கிச்சடியைக் கிளறி விட்ட சுப்பண்ணா தம்பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தார். தோசை மாஸ்டர் சாரங்கன் திரும்பிப் பார்த்தான். ஏறத்தள்ளிய விறகிற்கும் கிச்சடிப் பாத்திரத்திற்கும் சுப்பண்ணா உபதேசிப்பது மாதிரி இருந்தது. வைத்தாவின் கை, யந்திரமாக டபரா செட்டுக்குள் சர்க்கரையை வீசிற்று. டிகாக்ஷன் கெட்டிலை வாத்தாக வளைத்து வளைத்து ஆர்டருக்குத் தக்க மாதிரி நிரப்பிற்று. ஒரு பட்டர் மசாலேய்ய் என்று உமாசங்கர் ஹாலிலிருந்து உத்தரவை வீசினான். டபரா செட்டுகள் கிணற்றடியில் கலகலத்தன. குக் ராமையா சாம்பாருக்கு உப்பை அள்ளிப் போட்டார். பிளைவுட் தடுப்பினுள் கடா கடா குடுகுடு என்று அரவை மாஸ்டர் கணபதியின் ஓயாத யக்ஞம் நடைபெற்றது.
முந்தாநாள் மழை பெய்து ரங்கையர் வீட்டில் புயல் வீசியதும் அவருடைய கூடு இற்று விழுந்ததும் அந்த எல்லா இயக்கங்களின் மத்தியிலும் கனத்தன.
வாழ்க்கை ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனந்தபவன் தன் துயர்களைச் செரித்துக் கொள்ள நாள் ஆகுமோ என்னவோ! ஆனால் அன்ன விசாரத்திற்கும் அதன் பாந்தவ்ய நிழலுக்கும் வருகிற கூட்டத்தை அது சாந்தி செய்ய வேண்டுமல்லவா? ஆனந்த பவன் இயங்கிற்று.
ரங்கையர் இரண்டு தினங்களாக ஓட்டலுக்கு வரவில்லை. மெனு-போர்டை மாதவன் எழுதினான். கல்லா மேடையில் சுவாமி படங்களுக்கு உமாசங்கர் தூபம் காட்டினான். பூ மாட்டினான். எவ்வளவு கூட்டத்தை எதிர்பார்த்து எத்தனை லிட்டர் அரிசி போடுவது என்று ராமையா ஆலோசனை கேட்டார்.
சுப்பண்ணாவுக்கு மாலையில் கொத்ஸு போடலாமா சாஹு போடலாமா என்ற கவலை. காய்கறி வாங்கி வரவில்லை என்று கண்ணப்பனைப் பார்த்து அஸிஸ்டெண்ட் குக் ஐயாசாமி கத்தினான். ஸ்டோர் மானேஜர் மரியதாஸுக்கு இரண்டு முக்கியமான பட்டுவாடா அயிட்டம் இன்றைக்குக் கொடுக்கப்பட வேண்டுமே என்ற உதைப்பு. லேடீஸ் ரூம் சர்விங்கில் குறுக்கிடுகிறான் என்று மணி மீது உமாசங்கர் சீறி விழுந்தான். பாபாவின் நெடிய உருவம் மட்டும் ஹாலின் குறுக்கிலும் நெடுகிலும் பக்கெட்டை எடுத்துக் கொண்டு எவர் உத்தரவுக்கும் காத்திராமல் மேஜைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது.
ஆனந்தபவனின் தேரோட்டத்தில் குதிரைகள் துள்ளித் திமிறின. ஒரு சந்த லயத்தில் ஓடிய சக்கரங்கள் தூக்கித் தூக்கிப் போட்டன. எல்லாவற்றையுவு பார்த்துக் கொண்டு என்றுமே எவரையும் அதிகாரம் செய்தறியாத ஆனந்தராவ் கல்லாவில் உட்கார்ந்திருந்தார்.
எல்லாமே ரங்கையரின் ஆக்ஞை என்ற சாட்டை தவறிப் போனதை உணர்த்தின. சாரதியின் ஸ்தானம் காலியாகிக் கிடப்பதை நினைவுறுத்தின. இரண்டு நாள், இரண்டே நாள், கல்லாவில் உட்கார்ந்து விட்டு ஆனந்தராவ் பெருமூச்சு விட்டார். இந்த பாரத்தை எத்தனை நாளைக்குச் சுமப்பது என்பது அந்தப் பெருமூச்சு களைப்பையும் சோர்வையும் அறிவித்தது.
எனினும் என்ன.. ஆனந்தபவன் தன் லட்சியமாகிய இருசை விட்டுச் சுழன்று விடாமல் இயங்கிற்று.
“என்ன மாமா... கெழக்கு, மேற்கு என்று கிச்சடிப் பாத்திரத்துக்கிட்டே விடுகதை போட்டுண்டிருக்கீங்க?” என்று வெண்ணெயை வழித்துத் தோசை மீது பூசினான் சாரங்கன்.
“எல்லாம் ரங்கண்ணா கதைதான்.”
எல்லோரும் அறிந்திருந்தார்கள். எவரும் வாய் திறக்க அஞ்சினார்கள். அதுபோலவே சாரங்கனும் மௌனமானான்.
“சுவாமி விவேகானந்தர் தெரியுமா சாரங்கா?” கிச்சடியைக் கிண்டி விட்டார் சுப்பண்ணா.
“தலைப்பா கட்டிண்டு மார் மேலே கையை வச்ச மொறச்சுப் பார்ப்பாரே, அவர் தானே?”
அவரே தான்...
“கேள்விப்பட்டிருக்கேன். நேர்ல பார்த்ததில்லே.”
“த்ஸோ...த்ஸோ... அவர் ஒன்னைப் பார்க்கணும்னு ரொம்ப ஆவலா இருக்காராம். நீ இப்படிச் சொல்லிட்டா எப்படிடா?”
“நமக்கு எங்கே மாமா டயம் கெடக்கறது? ரொம்ப பிஸி.”
“ஆமா... ஆமா... தோசை வார்த்துண்டே இருக்கியோல்லியோ... எவ்வளவு பிஸி... என்ன ஓட்டம்?”
டண் டண் என்ற தோசைப் பலகையைக் கரண்டியால் தட்டினான் சாரங்கன். உமாசங்கர், மாப்பிள்ளை மாதிரி ஸ்டைலாக நடந்து வந்தான்.
“என்னடா உமாசங்கர். மணியோட என்னமோ சத்தம் போட்டியே?”
“அநாவசியமா லேடீஸ் ரூமுக்குள்ளே நொழஞ்சு என் சர்விங்கை மறிக்கிறான்.”
“டூரிஸ்டு பஸ் வந்திருக்கு மாமா... ஜிலு ஜிலுன்னு கலர்ஸ். எல்லாம் பெங்களூர் வாசிங்க...” ஐயாசாமி தூரத்தில் இருந்தே குறுக்கிட்டான்.
“ஃப்யூய்ய்” என்று காப்பி மெஷின் வைத்தாவிடமிருந்து ஒரு விசில் பிறந்தது.
சாரங்கன் ஆரம்பித்தான்.
“எல்லாம் சின்ன வயசா.. நடுத்தரம்... ரிடையர்ட் கேஸ் எல்லாம் சேர்ந்ததா?”
சுப்பண்ணா நமட்டுச் சிரிப்புடன் சேர்ந்து கொண்டார்.
“கோத்திரம் என்ன... ஜாதகம் கைவசம் வச்சிருக்காளாமா? சாரங்கன் ரொம்ப பிஸி, தோசை அடுப்பை விட்டுட்டு வர முடியாது. வரனைப் பாக்கறதா இருந்தா அடுப்படிக்கு வரச் சொல்லு.”
சாரங்கனுக்கு மூக்கு அறுந்தது. செல்ல ரோஷம் பிறந்தது.
“மாமா... நீங்க கிண்டல் பண்ணிக்கிட்டே இருங்கோ... தக்காளிப் பழமாட்டம் ஒரு பொண்ணை இழுத்துண்டு வந்து நிக்கறேன்.”
“சாரங்கா, தக்காளி வேண்டாண்டா?... இப்ப மார்க்கெட்டிலே ரொம்ப சீப், அழுகி வேறே போயிடும்!”
உமாசங்கர் தோசையை எடுத்துக் கொண்டு திரும்பினான்.
“டேய் உமா... அவா மறுபடியும் வர்றாப்பிலே பாருடா. அள்ளி விழுங்கிடாதே” என்று அவனுக்கும் ஓர் அஸ்திரத்தை மறந்து விடாது பிரயோகித்தார் சுப்பண்ணா.
ஐயாசாமி குரல் கொடுத்தான்.
“அவனுக்குச் சொல்லிக் கொடுக்காதீங்கோ மாமா. அவன் எக்ஸ்பர்ட்... லேடீஸ் ரூமுக்குள்ளே நுழைஞ்சதும் அவன் ஏர்-கண்டிஷன் ஆயிடுவான்.”
“என்னடா, ஐயாசாமி... ஒனக்கு சபலமாய் இருக்கா?” - உமாசங்கர் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போனான்.
“இருக்காதா பின்னே. ஏன் ராமையா... ஒன் அஸிஸ்டென்ட் ரூப்தேரா மஸ்தானா பாடிண்டு இந்தி சினிமாவே பார்க்கிறானே! லேடீஸ்ரூம் சர்விங் ஆசை இருக்காதா?” என்று வாய் பேசாது சாம்பாருக்குக் கொதி வந்து விட்டதா என்று பார்த்துக் கொண்டிருந்த ராமையாவையும் ஒரே கொக்கியில் மாட்டினார் சுப்பண்ணா.
“மாமா தன் சபலத்தை இப்படி அவனை இவனை வாரி விட்டுண்டே தீத்துக்கறார்” என்று ஐயாசாமி அவரை வெட்டினான்.
“போடு மக்காணி போடு” என்று தமக்கு வந்த அர்ச்சனையைச் சந்தோஷமாக அனுபவித்தார் சுப்பண்ணா.
“எட்டு பட்டர் மசாலேய்ய்” என்ற உமாசங்கர் அறிவிப்புத் தந்தான். சுர் சுர் ரென்று சாரங்கன் துடைப்பம் எண்ணெய் கலந்த தண்ணீரை வீசிற்று.
“என்ன மாமா... விடுகதையைப் பாதியிலே நிறுத்திட்டேன்?”
“எதுடா?”
“கெழக்கு மேற்கு, சுவாமி விவேகானந்தர்.”
“அவரை மீட் பண்ணத்தான் ஒனக்கு டயம் இல்லேன்னியே!”
“அந்த ஜோக்கை வெட்டித்தான் நீங்க அடுப்பிலே கிடாசிட்டேளே.”
“சரி வா வழிக்கு. உன் தாத்தா பூணல் மாட்டிக்கறதுக்கு முன்னாடி அவர் அமெரிக்கா போனார்!”
“எதுக்கு? ஏதாவது பிஸினஸ் விஷயமா? இல்லே சும்மா டூரா?”
“வழியறது அசடு. அரட்டையில்லாம கேளு.”
“நெஜம்மாவே கேட்டேன் மாமா.”
“சாமியாருக்கு என்னடா பிஸினஸ்? ஆங். ஒரு வகையிலே நீ சொன்னதும் சரிதான். அவர் பிஸினஸ் லோக உத்தாரணம். அதுக்குத் தான் அவரும் போனார். அங்கே போயி, சூறாவளி மாதிரி இந்து தர்மத்தைப் பிரசங்கம் பண்ணினார். வேதாந்த உபன்யாசங்கள் செய்தார். ராமகிருஷ்ணா மடத்துக்கு கிளைகள் ஆரம்பிச்சார் ஆயிரக்கணக்கான வெள்ளைக்காரப் பொண்டுகளும் இடிமுழக்கம் மாதிரி அவர் பேசின பேச்சைக் கேட்டு மயங்கி நின்னாளாம். இப்ப நம்மூருக்கு வந்திருக்காளே... ரங்கையரோடே மருமகள் சோனிகா கில்லரோ மோனிகா டல்ல ரோ!
“மோனிகா மில்லர் மாமா!” சாரங்கன் திருத்தினான்.
“ம்ம்... மோனிகா மில்லரோட பாட்டனாரும் பாட்டியும் சுவாமிஜியோட உபதேசத்திலே சொக்கி மடத்தை ஆரம்பிக்கிற கைங்கர்யத்திலேஈடுபாட்டாளாம். சுவாமிஜியோடே அவா எடுத்துண்டிருக்கிற போட்டோவை, சோனிகாவா... என்னடாது...? மோனிகா மில்லர் எங்கிட்டே காமிச்சா?”
“நீங்க அவனைப் பாத்தேளா மாமா?”
“பார்க்காமே எப்படி கனாவிலே வந்தா காமிப்பா?”
“எப்படி இருக்கா?”
“ஏதோ பெரிய ரிஷி குமாரத்தி மாதிரி செக்கச் செவேன்னு இருக்கா. கண்ணுலேயும் நெத்தியிலேயும் என்னவோ ஒரு சாத்மீகம் விளக்காட்டம் எரியறது. என்ன பவ்யம். என்ன விதரணை தெரியுமோ...”
“ம்...”
“ராகவன் போன துக்கம் அவகிட்டே எப்படி வெளிப்படுது தெரியுமா?”
“ம்...”
“அவ இந்த நாட்டிலே பொறக்க வேண்டிய பொண்ணுடா... அதுக்குத் தான் சொன்னேன். கெழக்கிலேருந்த ஒரு சாமியார் மேற்கே போனார். மேற்கே இருக்கிற மனுஷா ஒவ்வொருத்தரா கெழக்கே வந்துண்டிருக்கா. சும்மா டூருக்கு வல்லே. வெதவையா வாழணும்னு வந்திருக்கா.”
“இது சாத்தியப்படுமா மாமா?”
“ஒனக்கு சாத்தியப்படாது. சந்தேகம்! சபலம் இருக்கறதாலே சபலங்களையே பாத்துப் பாத்துச் சந்தேகம், அவளுக்கு சபலம் போய் ஜன்மா சாபல்யமாகணும்னு சிரத்தை. அது இருந்தா எல்லாம் சாத்தியப்படும்!”
“எது மாமா?”
“சிரத்தை. மனசிலே ஒரே எண்ணம்.”
“ரங்கண்ணா ஒத்துண்டாரா?”
“ரங்கண்ணாவா...?” அவர் கிச்சடிப் பாத்திரத்தை இறக்கிக் கீழே வைத்தவர் ஆவி பறந்த கரித்துணியை மேடை மீது போட்டு விட்டுப் பெருமூச்செறிந்தார்.
நாலு பட்டர் மசாலாக்களை தோசைக் கல்லிருந்து ஒவ்வொன்றாக உரித்துத் தட்டில் அடுக்கிவிட்டுச் சாரங்கன் மறுபடியும் எண்ணெய் கலந்த தண்ணீரைத் துடைப்பத்தில் தொட்டு விசிறினான்.
“அவரைக் கண்ணாலே பாக்க முடியலேடா. கண்ணை வெறிச்சுண்டு பேசாம பாக்கறார். விடு நிசப்தமா இருக்கு. நாளெல்லாம் கொட்டு கொட்டுனு கட்டில்லே படுத்துண்டு அந்த நிசப்தத்தோடே நிசப்தமா ஐக்கியமாய் முழிச்சிண்டிருக்கிறார். அவர் என்ன நெனக்கிறார்னே புரியல்லே. அண்ணா மொகத்தைப் பார்த்தா ஏதோ சந்நியாசியாயிட்ட மாதிரி தோன்றது. ஜம்னா விவகாரம் அவருக்குத் தாங்கலே.”
“ஜமுனா என்ன சொல்கிறாள்... சுப்பண்ணா” என்று வெளியேயிருந்த உமாசங்கர் திடீரென்ற பெருங்குரலில் கத்தினான். வாணலியை அடுப்பில் வைத்த சுப்பண்ணா வேகமாக வெளியே வந்தார். அதற்குள் பக்கெட்டை வைத்து விட்டு பாபாவும் மாதவனும் சுப்புணியும் திடுதிடுவென்று கல்லா மேடையை நோக்கி ஓடினார்கள். அங்கே ஏற்கெனவே ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது.
“வக்கீல் வாசுதேவாச்சார் முகமும், டிரைவர் கோவிந்தனுடைய முகமும் கவலைக்குறியோடு தெரிந்தன. சுப்பண்ணா வேகமாக நடந்தார்.
“மெள்ள... மெள்ள” என்று யாரோ குரல் கொடுத்தார்கள். சுப்பண்ணா போய்ச் சேருவதற்குள் கூட்டம் விலகி, ஆனந்தராவை தலைப்புறமும் கால்புறமுமாக இரண்டு பேர் பிடித்து நடந்தவாறே, ஸ்டோர் ரூமுக்கு நகர்வது தெரிந்தது.
“என்னடா உமா?” என்று வயிறு கலங்கக் கேட்டார் சுப்பண்ணா.
“பெரியண்ணா கல்லா மேலேயே மயங்கி விழுந்துட்டார்.”
“நீ போய் டாக்டரை அழைச்சுண்டு வா. கொஞ்சம் நகருங்கோ... எல்லாரும் ரூமை அடைச்சுக்க வேண்டாம். மாதவா, கல்லாவிலே போய் உட்காரு. பாபா, அங்கக் கூட்டம் போடாதீங்கோ... ஏற்கனவே இது ஸ்டோர் ரூம் சாமான் அடைச்சுண்டிருக்கு.”
சுப்பண்ணா தம்மையும் அறியாது அந்த நிமிஷம் ரங்கையரானார்.
டாக்டர் ரங்கநாதன் தமது ஸ்கூட்டரில் வந்தார்.
“என்ன சுப்பண்ணா? ராவ் எங்கே இருக்கார்?”
“உள்ளே படுத்திட்டிருக்கார்னா... குப்புனு வியர்த்து தலை மார்பெல்லாம் ஜலம் ஜலமா வழிஞ்சு இப்பத்தான் நின்னது!”
“ஸ்ஸ்ஸ்” என்று பற்களைக் கடித்தவாறே மூச்சு விட்டார் டாக்டர்.
“ஸ்கூட்டர் பெட்டியிலே...” என்று இழுத்தவர், “இரு... நானே போய்க்கறேன்” என்று மீண்டும் படியிறங்கி பிளட் பிரஷர் கருவியை எடுத்துக் கொண்டு வந்தார்.
ஆனந்தராவ் ஈஸிசேருக்கு எதிரில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு, அதன் மீது கால் நீட்டிப் படுத்திருந்தார். சட்டை நனைந்திருந்தது.
“என்ன ஆனந்தராவ், எப்படி இருக்கு?”
“கொஞ்ச நாழிக்கு முன்னாடி இருந்தாப்பிலே இருந்து யானை ஏறி மார் மேலே மிதிக்கிறாப்லே இருந்தது. டாக்டர்வாள்... திடீர்னு வியர்த்துக் கொட்டித்து. கண் இருண்டுடுத்து. அப்புறமா எனக்கு ஒண்ணுமே தெரியலே.”
“டாக்டர் பிரஷர் பார்க்கும் பட்டையைத் தோளில் கட்டிக் கொண்டே, காஸ்ட்ரிக் ட்ரபிளோ... என்னமோ? உருளைக்கிழங்கை நீர் விடமாட்டீர். அது உம்மை விடாது” என்ற செல்லமாகக் கோபித்தார். மெதுவாக அவர் கை பம்ப் செய்தது. மீட்டர் முள் தத்தளித்து வெறி பிடித்தது மாதிரி மேலே ஏறிற்று.
வீட்டிலிருந்து வந்திருந்த ராஜாமணியை டாக்டர் வெளியே அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து விட்டு அவன் காதில் மட்டும் விழும்படியாகச் சொன்னார்.
“இது ஹார்ட் அட்டாக். கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும் நர்ஸிங் ஹோமிற்கு வா.. மருந்து கொடுக்கறேன். ஏறி உட்காரு.”[தொடரும்]


Wednesday, 20 September 2017

ஜமுனா: 19

ஜமுனா: 19
ஜோலார்ப்பேட்டை ஜங்ஷனில் வெயிட்டிங் ரூமில் கதவுப் பக்கமாகப் போட்டிருந்த பெஞ்சில் ஜமுனா உட்கார்ந்திருந்தாள். வெளியே ஒரு ரயில் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. காபி, டீ விற்பவர்கள் குரல், “நேத்து மத்தியானமே தந்தி கொடுத்தேனே... கொழாய் எங்கே இருக்கு சார்... சாம்பார் சாதம்... சாம்பார் சாதம்... ஃபைவ் ட்வென்டித்ரீ எக்ஸ்பிரஸ்லே தான் வர்றா... நீங்க டிக்கெட் புக் பண்ணியிருக்கக் கூடாது, எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இங்கே சோறு விக்கக் கூடாதுன்னு...” யாரோ யாரையோ பளாரென்று அறையும் சத்தம், கும்மென்று மாம்பழ வாசனையும், அறை வாசலுக்கு வந்து ஒரு வீசு வீசி விட்டு நகர்ந்தது. குப்பென்று தோல் நாற்றம் அடித்தவாறு சிமெண்ட் தரையில் கடகடத்துக் கொண்டு ட்ராலி ஒன்று உருண்டது.
மழை பெய்திருந்ததால் காற்று குளிர்ந்து சிலுசிலுவென்று அடித்தது. முழங்கைகளிலும் காது மடல்களிலும் ஜில்லென்று காற்று உறைத்தது. போர்த்திக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. அவள் புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
ரயில் வந்தவுடனே தோன்றும் இரைச்சலும் பரபரப்பும் சிறுகச் சிறுக வற்றின. கொடுத்த மரியாதை போதும். ரயிலே புறப்படு என்ற மாதிரி அசட்டையான நிதானம் கூடத் தொடங்கி விட்டது.
வாழைப்பழமும் பத்திரிகையும் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று போன மோகனை இன்னும் காணவில்லை. ஒருவேளை புறப்பட வேண்டியது இந்த ரயிலாக இருக்குமா? இவர் பாட்டுக்குப் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து ரயிலைக் கோட்டை விட்டு விடப் போகிறார்!
ஒரு பர்தாப் பெண்மணி உள்ளே வந்தாள்.
கறுப்பு ஷிபானில் புர்க்கா போட்டு முழுக்க மூடிய முகத்தில் புள்ளி ஜன்னல் மாதிரி சுவாசிக்க மட்டும் துணி தைத்திருக்க விஷ்க்... விஷ்க் என்று ஷிபான் சப்திக்க அவள் அருகில் வந்து உட்கார்ந்தாள். செக்கச் சேவேரென்ற கைகளில் கல் வளையல்களும் மோதிரங்களும் ட்யூப் விளக்கில் டால் வீசின. குப்பென்று செண்ட் வாசனை அடித்தது.
செண்ட் வாசனை என்றால் ஜமுனாவுக்குப் பிடிக்காது. அவள் தள்ளி உட்கார்ந்தாள். காலுக்குக் கீழே மோகனின் பெட்டியும் அவள் பெட்டியும் ஒன்றில் மேல் ஒன்று அடுக்கியிருந்தவை காலை இடித்தன. அதைச் சற்று நகர்த்தி விட்டு உட்கார்ந்தாள்.
அவளுக்குப் பரபரப்போ திகிலோ சற்றும் இல்லை. போனவனை இன்னும் காணோமே என்ற கவலை மட்டும் இருந்தது.
அப்பாவிற்குப் பேரிடியாக இருக்கும் என்று நினைத்தாள். அரை நிஜார் சுந்தரம் வீட்டிலும் ஓடிப் போய் விட்டாள் என்று இளக்காரமாகப் பேசிக் கொள்வார்கள். கங்காபாய் மாமிக்கு மனசு ஆறவே ஆறாது. இப்படிப் பண்ணி விட்டாளே... என்னோட கோயிலுக்கு நவக்கிரகம் சுத்த வர்றப்பல்லாம் இப்படி ஒரு மோசம் பண்ணுவாள்னு எனக்குத் தோணவே இல்லியே என்று புழுங்குவாள். அண்ணா ராகவனுக்கு கடிதம் எழுதுவாரா... ஊஹும்... மாட்டார்... அவனே வரும் போது தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விடுவார்... வந்து தெரிந்து கொண்டானானால் மேஜையின் மீது முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு உட்கார்ந்து விடுவான்.
ராஜாமணிக்கு எப்படி இருக்கும்?
ராஜாமணியை நினைக்கும் போது ஜமுனாவிற்கு மனசு குழைந்தது.
கோயிலுக்கு அவளைச் சந்திக்கிற சாக்கில் அவன் வந்ததும், வீட்டுக்கு வந்த போது நறுக்குத் தெறித்தாற்போல் அவள் பேசிய வார்த்தைகளில் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனதும் ஜமுனாவிற்குப் பரிதாபமாக இருந்தன.
அவன் மீது தனக்கிருந்த பிரியத்தை ராஜாமணி என்னவோவாகக் கற்பனை செய்து கொண்டது அவளுக்கு வருத்தம் தந்தது. எல்லோரும் தன்னைப் பார்த்ததும் ஏன் இப்படி ஒரு மயக்கம் வந்து பிதற்ற ஆரம்பித்து விடுகிறார்கள் என்று நினைத்தாள் ஜமுனா.
அழகு... அது எங்கே இருக்கிறது? தோல் நிறத்திலா? அங்க அமைப்பிலா? எதற்கு இந்தப் பைத்திய இளிப்புகள் அர்ச்சனை புரிகின்றன?
ஓடிப் போய்க் கொண்டிருக்கிறவள் என்ன யோசனையெல்லாம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்? ஓடிப் போகிறவள், அந்தப் பட்டத்தை நினைத்து ஜமுனா மனசுக்குள் ஒரு புன்னகை பூத்துக் கொண்டாள். எதிலிருந்து ஓடுகிறோம்? எங்கே? எதற்கு...? எதைத் தேடி ஓடுகிறோம்? என்று நிதானமாக அவள் கேட்டுப் பார்த்துக் கொண்டாள்.
உளுந்தும் அரிசியும் ஒன்றாகக் கலந்து விட்ட முறத்தில் நிதானமாகத் தெளிவோடு அதைப் பிரித்தெடுப்பது போல் அவளுக்கு ஒரு நிச்சயம் ஏற்பட்டிருந்தது.
மோகனின் அழகில் அவள் மயங்கி விடவில்லை. அவனது நடத்தையில் தாறுமாறாக எத்தனை கோளாறுகள் உண்டு என்பதும் அவளுக்குத் தெரிந்தது தான். குடும்பம், அப்பா, அண்ணா, சமூகம், அந்தஸ்து என்பது ஐந்து மைலுக்கு அப்புறம், அக்கரையில் தான் பிரிந்து வந்த வாழ்க்கையை அவள் ஒரு நிமிஷம் நினைத்தாள். பெருமூச்சு வந்தது. அதில் வருத்தமில்லை. தன்னிரக்கமும் இழிவுணர்ச்சியும் இல்லை. ஒரு துறவு தொனித்தது.
அந்த அக்கரையில் ஒரு நாள் கேட்ட ஓர் அநாதையின் மன ஓலம் மட்டும் அவள் மனசில் கத்திக் குத்து போல் தைத்திருந்தது. அவன் மோகன், அவன் பொய் சொன்னான். பித்தலாட்டம் செய்தான். எத்திப் பிழைத்தான். அந்தப் பெண்களையும் இந்தப் பெண்களையும் இணைத்து அவன் மீது ஏதேதோ கதைகள் சொன்னார்கள்.
அவன் கண்களில், அவன் வார்த்தைகளில் நடத்தையில் அதற்கெல்லாம் வருந்தி இழிவுற்று அவன் தன்னோடு தானே போட்டுக் கொள்ளும் சண்டை தென்பட்டது. ஒரு புகலிடம் தேடியவாறு காடெல்லாம் வேட்டையாடப்பட்ட விலங்கு போல் அவன் தவித்துத் திரியும் தோற்றம் புலப்பட்டது.
குடும்பம் என்ற பாதுகாப்பான கூடுகளில் எல்லோரும் அடங்கி உட்கார்ந்து கொண்டு, காற்றில் உதிர்ந்த இலை போல் மழையில் நனைந்த கரிச்சான் குருவி போல் அலையும் அவனைப் புறக்கணித்தார்கள். அவனை வேட்டையாடி வீழ்த்திவிட எண்ணினார்கள்.
அவனை அரவணைத்துக் கொள்ள, அதுவும் ஒரு மனித ஆத்மா என்று அந்தஸ்து அளித்து ஏற்றுக் கொள்ள ஒருவர் இருந்திருந்தால்...?
ஜமுனாவுக்கு ஆனந்தலட்சுமியின் ஞாபகம் வந்தது பிரியத்தையும் ஆசையையும் கூட சுலபமாகத் தூக்கி எறிகிற தர்மங்கள் கூட அவ்வப்போதே குரல் கொடுப்பது புரிந்தது.
இதே மோகனின் உள்ளத்திற்குள் குழம்பிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை, ஓர் உத்தம மனிதனை மீட்டுக் கொண்டு வந்து அவனை மேன்மையாக்கி விட்டு அதே திருப்பத்தூருக்குப் போகும் போது அவர்கள் புரிந்து கொள்வார்கள். யாருக்குப் புரிகிறதோ இல்லையோ அப்பா புரிந்து கொள்வார்.
ஜமுனா ட்யூப் விளக்கைச் சுற்றிப் பறந்த விட்டில் பூச்சிகளைக் கண்கொட்டாமல் பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்தாள்:
பெண் உருவாக்குபவள், சிவாஜிகளையும் காந்திஜிகளையும் மட்டுமல்ல. அவள், நெப்போலியன்களையும் லிங்கன்களையும் உருவாக்குகிறாள். மோகன்களையும் கூட அவள் உருவாக்குவாள். நிந்தை, திரஸ்காரம், பந்தம் என்ற எல்லாச் சுழல்களையும் அவளது கருணை என்னும் ஸ்பரிசவேதி கடக்கின்றது.
அவள் தாய், அவன் தெய்வம், அவள் வெறும் இல்லாள் அல்ல. பேதைகளின் பலவீனம் என்ற படுக்கையில் புரளும் போக வஸ்துவல்ல. அவள் சத்தியபாமா. அவள் ஜகதாம்பிகை.
விட்டில்கள் விளக்குப் பழத்தில் ணிக் ணிக் என்ற மோதி விழுந்து கொண்டிருந்தன.
வெளியே மரியாதை குறைந்து போன ரயிலின் புறப்பாட்டுக்காக மணி அடித்தது.
முதல் தடவையாக ஜமுனாவிற்குச் சந்தேகம் வந்தது.
‘யாராவது ஊர்க்காரர்கள் பார்த்துப் பிடித்துக் கொண்டிருப்பார்களோ?’
அந்த எண்ணம் வந்ததும் அவள் பக்கத்திலிருந்த முஸ்லிம் பெண்ணைப் பார்த்து, “இந்தப் பெட்டியைக் கொஞ்சம் பார்த்துக்குங்க” என்றாள்.
அந்த முஸ்லிம் பெண் ஷிபான் சப்திக்கத் தலையாட்டினாள்.
வெளியே ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்தது. மெதுவாக சிறுநடையில் நகர்ந்தது. ஜமுனாவின் பார்வையில் தூரத்தில் நகர்ந்து வரும் ஒரு கம்பார்ட்மெண்டிற்குள் விலங்கு பூட்டியிருந்த கைகளோடு, ஸ்டேஷன் கோடி வரை அலசும் பார்வையோடு தடுமாறும் மோகன் தெரிந்தான். இரண்டு கான்ஸ்டபிள்கள் துப்பாக்கி ஏந்திய கையோடு அவனை நெட்டி அந்த கம்பார்ட்மெண்டினுள் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.
ஜமுனாவின் முகத்தைப் பார்த்ததும் அவன் கத்தினான்:
“ஜம்னா... ஜம்னா... என்னை அரஸ்ட் பண்ணிட்டாங்க, மெட்ராஸ் போலீஸ்.”
அதற்குள் மோகனைப் பிடித்து அவர்கள் உள்ளே தள்ளி விட்டார்கள்.
ரயிலின் சிறு நடை துரிதமாயிற்று. ஜன்னலோரத்து முகங்கள் வெள்ளமாகக் கடந்தன. தண்டவாளங்கள், சக்கரங்களும் அவற்றின் மேல் அழுத்தும் பாரங்களும் பொறுக்காமல் ஓலமிட்டன. என்ஜின் ஹூங்காரமிட்டது. பிளாட்பாரத்தில் கடைசியாக ஓடி வருகிற பூட்ஸ்களும் செருப்புகளும் சிமிட்டித் தரையில் மடார்... மடார் என்று அறைந்து கொண்டு ஓடின.
ஜன்னலுக்கு வெளியே தலைநீட்டி “ஜம்னா” என்று அவன் கத்தினான். அந்தக் குரல் தூரத்தில் மங்கலாகக் கேட்டாலும் அவன் பரிதவிப்பும் அநாதையும் அதில் தெரிந்தன. வாக்கைக் காப்பாற்ற முடியாத தவிப்பும் அவளுக்கு அதில் புலப்பட்டது.
‘என்ன நேர்ந்தது... என்ன நேர்ந்தது?”
அந்தக் கேள்வி எழும்போது, பிளாட்பாரத்தில் நின்ற ஜமுனாவின் கண்கள் இருளத் தொடங்கின. திடீரென்று விரிவடைந்த பேரிருளில் ஜங்ஷனின் ஆரவாரமும், வெளிச்சமும் மூழ்கி விட்டன. அவள் மயங்கி விழுந்தாள்.
*** ***
ஜமுனாவின் முகத்தில் சில்லென்று மழைச்சாரல் அடித்தது போலிருந்தது. அவன் முகத்தைச் சுளித்தாள்.
“அவனை மெட்ராஸ் போலீஸ் ஏதோ டப்ளிங் கேசுக்காக ரொம்ப நாளாத் தேடிட்டு இருந்ததாம். இன்னிக்கு வசமாக கெடைச்சுட்டான்.”
“ஜம்னா...”
“ஜம்னா...”
இரண்டு மூன்று குரல்கள்.
இருள் சிறுகச் சிறுக வெளி வாங்கிற்று. ணிக் ணிக் கென்று ட்யூப் விளக்குகள் பழுத்திருப்பதைத் தேடும் விட்டில்கள்.
அவள் கண் விழித்தாள். சுற்றிலும் பார்த்தாள். ஆனந்தராவ் குனிந்து அவளையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவளுக்குத் திக்கென்றது. திரும்பினாள். சுப்பண்ணா. பக்கத்தில் ராஜாமணி.
அவள் விருட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்.
“மெள்ள மெள்ள” என்று ஆனந்தராவ் மெதுவான குரலில் சொன்னார்.
‘ஓ... இவர்கள் தேடிக்கொண்டு வந்து விட்டார்கள். எப்படி... எங்கே? ஜமுனாவிற்கு கிழித்தெறிந்து விடு என்று மோகன் எழுதிய கடிதம்தான் சட்டென்று ஞாபகம் வந்தது. அது அந்தப் புத்தகத்தில்... கீழே தரையில்... அதைக் கிழிக்கவில்லையே!’
அவளுக்கு எல்லாம் விளங்கிவிட்டது.
“என்ன சார். முழிச்சிட்டாங்களா?” என்று ஒரு போலீஸ் பூட்ஸ் கனத்த லாடங்களோடும் தோல் முறுக்கோடும் கேட்டுக் கொண்டே வந்து நின்றது.
ஜமுனா சுற்றிலும் பார்த்தாள். ஒரு சிறு கூட்டம்.
“ஓ...அவள் மானம் சந்திக்கு வந்து, சிரிப்புக்களாய் விட்டதா?”
அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
“என்னம்மா.. ஏதாவது கம்ப்ளெயிண்ட் கொடுக்கறீங்களா?”
“ஒண்ணுமில்லே...”
“போகலாமா?” என்று கேட்டான் ராஜாமணி.
ஜமுனா அவனை நிமிர்ந்து பார்த்தாள். ராஜாமணியின் கண்கள் தாழ்ந்தன.
“இந்தப் பெட்டி உன்னோடது தானே?”
பெரிய பெட்டி கீழே இருந்தது. மோகனின் பெடடி. ஜமுனா தன் பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டாள். சுப்பண்ணா அதை வாங்கிக் கொள்ளக் கையை நீட்டினார். கொடுத்து விட்டாள். நால்வரும் நடந்தனர்.
பிளாட்பாரத்தில் நடக்கும்போது கால்கள் தள்ளாடின. உடம்பெல்லாம் வலித்தது. குப்பென்று ப்ளூ ஜுரம் வந்து விட்டாற்போல ஒரு பலவீனம். பின்னால் வந்த கூட்டம் ஒவ்வொன்றாக நின்றுவிட்டது. கண்கள்... பார்வைகள்... கண்கள்... பார்வைகள்... போலீஸின் கூட நடக்கும் கைதியைப் பார்ப்பது போல், பிளாட்பாரம் எல்லாம் துளைக்கும் பார்வைகள்.
அவர்கள் படியேறினார்கள். புக்கிங் ஆபீஸ் தாண்டி மேம்பாலத்தின் மீது கந்தையும் அழுக்கும் தாடியும் கம்பளியுமாக முடங்கி இருந்த மனித உருவங்களின் நடுவில் நடந்து வந்தார்கள்.
மேம்பாலத்தின் மீதிருந்தே ஹோட்டல் தெருவின் விளக்குகள் தெரிந்தன.
“திருப்பத்தூருக்கா... சார்... உட்காருங்க!” என்று டாக்ஸிக்காரர்கள் போட்டியிடுவது கீழே இருந்து கேட்டது. ஜமுனா நின்றாள்.
“எங்கே போகிறோம்?” கேட்டாள்.
“வேறே எங்கே... வீட்டுக்குத்தான்...” சுப்பண்ணாவின் குரல் நைந்து ஒலித்தது.
“நான் வரலே.”
“இது ஒரு கெட்ட கனா... மறந்துட்டு தைரியமா நடம்மா. நீ புத்திசாலி. ஒனக்குச் சொல்ல வேண்டாம்.” ஆனந்தராவ் குரல் தழுதழுத்தது.
“நான் வரலே.”
“ஜம்னா” - ராஜாமணி குறுக்கிட்டேன்.
“நான் வீட்டுக்கு வரலே.”
“எங்க போகலாம் சொல்லு...? எங்க வீட்டுக்குப் போவோம்.”
“நான் திருப்பத்தூருக்கே வரலே.”
“ஜம்னா... ரங்கண்ணா...” என்று பதறியவாறே ஆரம்பித்தான் ராஜாமணி.
“உஷ்ஷ்...” என்று அதட்டினார் ஆனந்தராவ்.
அவள் ஆனந்தராவையும் ராஜாமணியையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“ரங்கண்ணா நடைப்பிணம் மாதிரி மாறிட்டாரும்மா வீட்டுக்குப் போவோண்டா ராஜா..” சுப்பண்ணா, பத்து வருஷங்களுக்கு முன்னால் ஜமுனாவை ஓர் ஆண் பிள்ளையை அழைப்பது போல் வாடா ராஜா என்று செல்லம் கொஞ்சி கூப்பிடும் சுப்பண்ணா.
“நான் வரலே... திருப்பத்தூருக்கே வரல்லே. என்னைத் தொந்தரவு பண்ணினா இப்படியே இந்தப் பாலத்து மேலேயிருந்து விழுந்து உசுரை மாய்ச்சுக்குவேன்.”
அவள் குரல் வெறி பிடித்தது போல் கிறீச்சிட்டது. அவள் செய்வாள் என்ற நிச்சயத்தோடு அந்தக் கண்கள் நிலைத்து வெறித்திருந்தன. ஆனந்தராவுக்கு ஏதோ புரிந்தது.
“ம்... சரி.. வாணியம்பாடிக்குப் போவோமா?”
அவள் மௌனமாய் இருந்தாள்.
“நியூ டவுன்லே எங்க சொந்தக்காரர் வீடு ஒண்ணு இருக்கு. ரொம்ப நல்ல குடும்பம். அவர் ஒரு நர்ஸரி ஸ்கூல் நடத்திண்டிருக்கார். நல்ல ஆத்மா, அங்கே போவோமே!”
ஜமுனா மௌனமாக இருந்தாள்.
படியிறங்கி அவர்கள் டாக்ஸியில் ஏறினார்கள்.
“திருப்பத்தூர் தானே சாமி...?” டிரைவர் தெரிந்தவன்
“இல்லேப்பா, வாணியம்பாடிக்கு... ஸ்பெஷல். வேற யாரையும் ஏத்தக் கூடாது.”
“சரி, சாமி.”
டாக்ஸி டிரைவர் கதவுகளை அடித்துச் சாத்தினான்.[தொடரும்]

ஜமுனா:18

ஜமுனா:18
டப்பென்று கர்ண கடூரமாகப் பெட்டி மூடிய மாதிரி ஓர் ஓசை. உடனே ணிங்ங்ங் கென்று ஒரு ஸ்பிரிங் விரிந்து அதிர்ந்த ஒலி. அதைத் தொடர்ந்து பரபரவென்று பிறாண்டியவாறு ஒரு ஜந்துவின் பதைப்பு.
மோனிகா மில்லர் கொடுத்த கடிதத்தை வாசித்துக் கொண்டிருந்த ரங்கையர் நிறுத்தி விட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தார்.
டப்பென்ற ஓசையைக் கேட்டதும் திடுக்கிட்டுத் துள்ளி விழுந்த குழந்தை யோகி, அந்த அசாதாரண ஓசையால் பயந்து போய் வீறிட்டு அழத் தொடங்கி விட்டான். நின்று கொண்டிருந்த மோனிகா மில்லர் குனிந்து குழந்தையைத் தூக்கினாள். அதிர்ச்சியில் ஓரிரு நொடிக்குள் அவன் கீழே போட்டிருந்த சுத்தமான வெள்ளைத் துணியை நனைத்து விட்டிருப்பது தெரிந்தது. குழந்தைக்குப் போட்டிருந்த ஜட்டியும் நனைந்து விட்டது.
“கீலே போய் துணி மாத்தி கொண்டு வர்றேன்” என்று சொன்னான் மோனிகா.
ராகவன் அவளைத் தமிழில் பேச வைக்கிற முயற்சியில் சுமாராக வெற்றி பெற்றிருந்தான். அமெரிக்க உச்சரிப்பின் விரைவைத் தவிர்த்து அவள் பேசும் போது யோசித்து, பேச வேண்டியதை மனசிற்குள் ஒருமுறை சொல்லிக் கொள்வது போல் தென்பட்டது.
யோகியைத் துணியோடு தூக்கிக் கொண்டு மோனிகா வெளியேறினாள்.
அவள் வெளியேறியதும் பிறாண்டும் ஓசை பலத்தது. பதைப்புடன் கூரிய நகங்கள் இரும்புத் தகடுகளைக் கீறுவது போல் ணிணிங் ணிங்கென்று ஓசை சுத்தமாகக் கேட்டது.
ரங்கையர் கடிதத்தோடு எழுந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தார். கட்டிலின் கீழே எலிப்பொறி.
பின் பக்கம் திரும்பியிருந்த எலிப் பொறி ஒன்றின் மேலே அடித்திருந்த தகரச் சட்டங்களில் மூக்கை நுழைத்துக் கொண்டு மூக்கின் சதை விரியத் துடிக்கும் எலியின் முகம் தெரிந்தது. ரங்கையர் குனிந்து உட்கார்ந்து முழந்தாளிட்டவாறே தோள் வரை கையை உள்ளே நீட்டி அந்த எலிப்பொறியை இழுத்தார். எலி பெட்டிக்குள் இருந்தாலும் அது கையைப் பிறாண்டி விடுமோ என்ற அச்ச உணர்வு குறுகுறுத்தது.
விளக்கு வெளிச்சத்தில் எலியின் கண்கள் மின்னின. பெரிய எலி.. தனது அஜாக்கிரதையை நொந்து கொள்வது போல பீதியோடு கூரிய நகங்களால் தகரச் சட்டத்தைப் பற்றிக் கொண்டு அது தவித்தது. சட்டத்தின் இடைவெளி வழியே அவரையே இமை கொட்டாமல் வெறித்துப் பார்த்தது.
ரங்கையரின் கண்களில் நீர் கொப்புளித்துக் கொண்டு மாலை மாலையாக வழியலாயிற்று.
ஹைஸ்கூலில் படிக்கும் போது ராகவன், வீட்டில் எலித் தொந்தரவு பொறுக்க மாட்டாமல் ஓர் எலிப்பொறி வாங்கி வந்தான். அரை மணி நேரத்துக்கு ஓர் எலி என்று பட்பட்டென்று ஐந்தாறு எலிகள் பொறியில் விழுந்தன. ஒவ்வொரு முறையும் எலியை அடித்துக் கொல்லவோ, பூனைக்கு எதிரில் விடவோ மனசில்லாமல் இரண்டு பர்லாங் தூரம் நடந்து போய் ஏரிக்கரை ஓரமாக எலியை விட்டுவிட்டு வந்தான்.
“கெடந்துட்டு போறது விட்டுடுடா, காலமே பார்த்துக்கலாம்” என்று ஒரு நடையின்போது ரங்கையர் குறுக்கிட்டார்.
“சும்மாப் பிறாண்டிட்டு மனசைக் கெடுத்துண்டிருக்கேப்பா” என்று ஒரு நடைச் சோர்வு பார்க்காமல் தூக்கிக் கொண்டு கோனான் ராகவன்.
ரங்கையருக்கு அந்த ஞாபகம் வந்து விட்டது. கன்னத்தில் வழிந்த கண்ணீர் அவரது பரிதாபமான எதிர்காலத்தை அவருக்கே ஞாபகமூட்டிற்று. இனிமேல் அவருக்குக் கொடுத்து வைத்திருப்பதெல்லாம் கண்ணீர் தான். ஊற்று ஊற்றாய்ப் புறப்பட்டு, எந்த நதிமூலம் உற்பத்தி செய்கிறதோ அதுகூட வற்றி ஒருநாள் காய்ந்து போகும் கண்ணீர்தான்.
‘என்ன மாயமாக மனிதனின் மமதை அடிபட்டுப் போகிறது... காற்றில் புகையாக நூல் போல் பிசிறுவிட்டுப் பிரிந்து கரைந்து என்ன மந்திரமாக அவனது நம்பிக்கைகளும் பந்தயங்களும் சூன்யமாகி விடுகின்றன. திடீரென்று நாடகத்தில் திரை விழுந்த மாதிரி எல்லாம் எப்படி மூடி இருள் சூழ்ந்து விடுகிறது!’
ரங்கையரின் புத்திர சோகம் அவரது விம்மும் மார்பினுள் வயிற்றில் எரியும் அக்னியின் நாக்கு தீண்டியது போலச் சுட்டது. அநாதி காலமாக மார்பின் மீது கட்டிய கையோடு எல்லாவற்றையும் பார்த்து வரும் அந்தர்யாமி ஒருவனின் சித்திரம் அவர் மனசில் தெரிந்தது.
நான் என்ன கொடுமை பண்ணினேன்? எனக்கு ஏன் இந்தத் தண்டனை? என்று அவர் மனம் புழுவாய்த் துடித்தது.
மௌனம், மௌனம் மனிதர்களின் துயர்களும் துயரில் பிறக்கும் ஞானங்களும் தொட முடியாத தொலைவில் ஒரு மௌனம். என் துயரம்... என் துக்கம் என்று கூவும் கூக்குரல்களையே பதில்களாக்கி எதிரொலியாய்த் திருப்பி அனுப்பும் மௌனம்.
நாலரை மணி வரை நம்பிக்கை வேராக ஊன்றியிருந்த ஒருவன். ஒரே பிள்ளை, சாம்பலாய்ப் போய் ஒரு வாரமாகி விட்டது என்று ஐந்து மணிக்குத் தெரியும் போது கம்பீரம் குலையாத ஒரு மௌனம்.
ரங்கையருக்கு யாவும் ஒரு முடிவினை நெருங்கி விட்டால் தோன்றும் அச்சம் தோன்றியது.
பொறியினுள் சிக்கிய எலி, விரல் நகங்களால் கீறி அந்தத் தகரச் சட்டத்தைப் பிய்த்து விடுவது போல் முயற்சித்தது. பிறகு தன் முயற்சியின் வியர்த்தம் தனக்கே உறைத்தது போல் சட்டத்தின் வழியே பொருள் விளங்காத ஒரு பார்வையோடு பரிதாபமாக அவரைப் பார்த்தது.
ஸ்ருதியில் அவர் மனதை ஈர்த்த அந்த சுலோகம் மௌனத்தின் கதவிடுக்கு வழியே நழுவி வந்த ஓசை போல்அவருக்கு ஞாபகம் வந்தது.
பயாதஸ்யா க்னிஸ்தபம் பயாத்தபதி சூர்ய:
பயாத்திந்திரஸ்ச வாயுஸ்ச மிருத்யுர் தாவதி பஞ்சம:
‘இதன் அச்சத்தினால் நெருப்பு எரிகிறது. சூரியன் வெப்பத்தைத் தருகிறான். இந்திரனும் வாயுவும் தத்தம் தொழிலைச் செய்கின்றனர். மரணம் உலகத்திலே உலாவுகின்றது.’
ரங்கையர் மேல் துண்டால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கடிதத்தைப் பார்த்தார்.
மனிதனுக்கு சாத்தியமானது அது மட்டுமே. வழியும் கண்ணீரைத் துடைத்து கொள்வது.. அவர் கடிதத்தைப் படிக்கத்தொடங்கினார்.
அது ராகவனின் கடிதம். தவும் சியும் நியும் கொம்புகளும் சுழிகளும் முதிர்ந்த தெளிவுக்கு வந்த மனசின் அமைவைத் தெரிவித்தன.
“தேவரீர் தகப்பனார் அவர்களுக்கு,
மிக்க வினயத்துடன் நமஸ்கரித்து ராகவன் எழுதிக் கொள்ளும் கடிதம். க்ஷேமம்.
முந்தாநாள் எங்கள் கப்பலின் மாஸ்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த என்ஜினீயரிங் க்ரூவைச் சேர்ந்த வினாயக் மாச்வே என்ற மராத்திய இளைஞன் ஒருவன் கால் சறுக்கிக் கீழே விழுந்து ஸ்தலத்திலேயே காலமாகி விட்டான்.
இப்படி மரணம் திடீர் திடீரென்று தலைகாட்டும் போதெல்லாம் எனக்கு இப்போது பயம் ஏற்படுவதில்லை. எல்லாவற்றையும் எதிர்பார்த்துக் கொண்டு, எதற்கும் சித்தமாகக் காத்திருப்பதில் ஒரு நிம்மதி புலப்பட்டு அவ்விதமே இருந்து வருகிறேன்.
எனினும் கடந்த இரண்டு வருஷங்களாகத் தங்களிடம் மறைத்து வைத்திருக்கும் விஷயத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று இந்த இரண்டு தினங்களாக என் மனம் துடிக்கிறது.
இது தங்கள் பார்வையில் பட்டவுடனே தாங்கள் எவ்வளவு துடிப்பீர்கள் என்ற சங்கதியும், தங்கள் பாசத்திலிருந்து நான் எவ்வளவு விலகி விடுவேன் என்ற விஷயமும் என்னை இவ்வளவு நாள் இதைத் தெரிவிக்காமல் மறைத்து வைக்கத் தூண்டின.
இப்போது இதற்கு நாள் வந்துவிட்டது.
அப்பா, எனக்குக் கல்யாணமாகி ஓர் ஆண் குழந்தைக்கு நான் தந்தையும் ஆகிவிட்டேன்.
என்னுடன் பணிபுரிந்த சிநேகிதன் பெர்னார்ட் மில்லர் என்ற அமெரிக்கனின் சகோதரியான மோனிகா மில்லர் என்றபெண்ணை நான் விவாகம் செய்து கொள்ள வேண்டிய விதிவசம் நேரிட்டு விட்டது.
அந்தக் குடும்பம் சான்பிரான்ஸிஸ் கோவில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் மார்த்தா மில்லர் என்ற அபூர்வமான அம்மையாரின் கண்காணிப்பில் வளர்ந்த உத்தமமான குடும்பம். தேசம் தேசமாகச் சுற்றுகின்ற இந்தத் தொழிலில் எல்லா இடங்களிலும் எல்லா வகைப்பட்ட ஜனங்களும் இருப்பதை நான் கண்டேன். லௌகீகமும் ஆத்மீகமும் இந்தியாவைப் போலவே எங்குமிருப்பதை நான் கண்டேன்.
மார்த்தா மில்லரின் பாட்டனாரும் பாட்டியுமான பார்பரா கோக்லீயும் அப்ரஹாம் கோக்லீயும் சுவாமி விவேகானந்தர் சான் பிரான்ஸிஸ்கோவில் திருமடம் அமைக்கச் செய்த முயற்சிகளுக்குத் துணை இருந்தவர்கள்.
என் நண்பன் பெர்னார்ட் மில்லருடன் எங்கள் கப்பலில் அமெரிக்கா செல்லும் போதெல்லாம் நான் அவர்கள் வீட்டிற்குப் போய் வந்திருக்கிறேன்.
சம்பிரதாயங்களும் ஆசாரங்களும் வித்தியாசப்பட்டிருப்பினும், சுவாமிஜி அமைத்த மடத்திற்கு இன்னும் போய் வந்து கொண்டு, லௌகீக வாழ்க்கைக்கு மேற்பட்ட தூய வாழ்க்கை ஒன்றை அவர்கள் நடத்தி வருவதை நான் பார்த்தேன்.
ஹார்வர்டு சர்வகலா சாலையில் மூன்றாம் வருஷம் வரை கீழ் நாட்டுத் தத்துவம் படித்துக் கொண்டிருந்தாள் மோனிகா மில்லர். எனது சந்திப்புகளில் எவ்வித விகல்பமும் இல்லை. என் மனசில் களங்கமும் ஏற்பட்டதில்லை.
திடீரென்று ஒருநாள் பாய்லர் வெடித்து பெர்னார்ட் மில்லர் காலமானான். அடுத்த தடவை அமெரிக்கா போனபோது துக்கம் விசாரிக்க நான் சான்பிரான்ஸிகோ போனேன். அங்கே மகனை இழந்த துயர் தாங்காமல் மார்த்தா மில்லர் மாரடைப்பினால் காலமாகி, சவ அடக்கம் முடிந்து மோனிகா வீட்டிற்குத் திரும்பி வந்திருந்தாள்.
எனக்கும் பெர்னாடிற்கும் இடையே இருந்த நட்பை மோனிகா நன்கு அறிவாள். தாய் இழந்த துக்கமும் தமையன் போன துயரமும் ஒரு சேரத் தாக்கி விடவே அவன் என் முன் மனமுடைந்து கதறினாள். அமெரிக்க வாழ்க்கை முறையில் பந்தபாசங்கள் மிகவும் குறைவு. ஒரு குடும்பம் முறிந்து போனால் அதில் அநாதையாக மிஞ்சுகிறவர்களை இந்திய சமூகம் அனுதாபத்தோடு ஏற்று தம் குடும்பத்தவர் ஆக்கிக் கொள்ளும் தன்மை அங்கே கிடையாது.
நான் ஒரு வாரம் சான்பிரான்ஸிஸ்கோவில் அவள் குடியிருந்த வீட்டில் தங்கியிருந்தேன். மார்த்தா மில்லரின் கடன்களுக்காக வீட்டைக் காலி செய்ய அதிகாரிகள் வந்தார்கள். அவள் அநாதையானாள்.
அந்த நிலையில் அவளை அங்கே விட்டு விட்டு வர எனக்கு மனம் சம்மதிக்கவில்லை. திடீரென்று தன் வாழ்வில் விழுந்த இடியைத் தாங்குமளவு மோனிகாவிற்கும் மனோதிடமில்லை.
தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுமாறு கண்ணீர் வழிய அவள் கேட்டுக் கொண்டாள். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அநேக தயக்கத்திற்குப் பிறகு அவளை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.
அப்பா, ஒரு வேளை பெர்னாடிற்கும் வினாயக் மாச்வேக்கம் நேரிட்டது எனக்கும் நேரிடலாம். அப்போது எவ்வளவு நீசன் இவன் என்று என்னை திரஸ்கரித்த போதிலும் ஒன்றைத் தாங்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இது நாள் வரை தங்கள் புத்திரன் என்ற கௌரவத்திற்கு ஹானி நேரும்படியான எந்தக் காரியத்தையும் நான் செய்யவில்லை.
மோனிகா மில்லரை நான் வைதீக முறைப்படி விவாகம் செய்து கொண்டேன். அவளது ரத்தத்தில் பூர்வீக வாசனையாக மகோன்னத ஹிந்துவான சுவாமிஜியின் வாக்கும் ஆசிகளும் கலந்திருக்கின்றன.
மோனிகாவை என் புத்திக்கும் முயற்சிகளுக்கும் எட்டிய விதத்தில் நான் ஹிந்துப் பெண்ணாக்கி இருக்கிறேன். சிரத்தையும் நம்பிக்கையும் அவளைப் புனிதவதியாக்கியுள்ளன.
இது தர்மத்திற்கும் சாஸ்திரத்திற்கும் விரோதமானது அல்ல என்பதைத் தங்கள் பாதங்களில் பணிந்து வினயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனுதர்ம சாஸ்திரம், ஓடிச் சென்று அடையும் கடலின் இயல்பை எய்தும் ஆற்றைப் போல் தனது கணவனின் இயல்பினையே அவன்பால் இணையும் மாதும் அடைகின்றனள். சான்றாக வசிஷ்டரை மணந்த அக்ஷமாலையும் மந்தபால முனியின் மனைவியான சாரங்கியும் தாழ்குலப் பெண்களாக இருந்த போதிலும் தங்கள் கணவரான அம்முனிவர்களின் மேன்மையான தன்மையை அவர்களும் பெற்றுப் போற்றத்தக்கவர் ஆயினர் என்று கூறுவதைத் தாங்கள் அறிவீர்கள்.
அவர்களையொத்த மகானுபாவர்களின் பாத தூசிக்கும் நான் சமமானவன் அல்ல. எனினும் தங்கள் குமாரன்.இந்த நினைப்புடன் நான் செய்த காரியத்திற்கு தங்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பிப் பணிந்து வேண்டுகிறேன்.
ஜமுனாவின் விவாகம் முடிந்த பின் இதைத் தெரிவிக்க எண்ணியிருந்தேன். ஆயினும் இப்போது வேளை வந்திருப்பதால் எழுத நேரிடுகிறது. நான் எவ்விதக் குற்றம் செய்திருந்தாலும் என்னை மன்னித்துத் தங்கள் புத்திரனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் பிரிய குமாரன்,
ஆர். ராகவன்
அந்தக் கடிதத்தின் மூலம் ராகவனுடைய பணிவும் மனத் தூய்மையும் ரங்கையருக்கு ஞாபகம் வந்து அவருடைய கண்களில் மீண்டும் ஓர் ஊற்று கிளம்பிற்று.
இரவு ஒன்பதரை மணி வரை ரங்கையர் மோனிகா மில்லருடன் பேசிக் கொண்டிருந்தார். இந்திய சமூகத்தில் விதவை என்பவன் சாஸ்திர விதிப்படி எப்படி இருக்க வேண்டுமென்று சொல்லிப் பார்த்தார். இங்கேயே விதவைத் திருமணம் என்பது சமூகம் இப்போது ஏற்றுக் கொண்ட மாற்றமாகி விட்டதைச் சுட்டிக் காட்டினார்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டாள். மோனிகா மில்லர். அவள் விரும்பும் பட்சத்தில் அமெரிக்காவுக்கே ஜான்ஸனின உதவியோடு திரும்பி அனுப்புவதாகவும் ரங்கையர் கூறியதை அவள் மௌனமாகக் கேட்டுக் கொண்டாள்.
தீர்க்கமாக யோசித்து ஒரு முடிவுக்கு வரும்படி மோனிகாவிடம் அவர் சொன்னபோது தான் அவள் வாய் திறந்தாள்.
“அவருக்கு அப்ரம் வேர் ஒருத்ஙதர் கிட்டே நான் வால மாட்டேன். ஐப்ரஃபர் டு டை ஆஸ் ஹிஸ் விடோ (அவரது விதவையாகச் சாவதையே நான் மேலாகக் கருதுகிறேன்.)”
அந்த வார்த்தைகளை அவள் சொல்லும்போதுமோனிகாவின் முகத்தில் அபூர்வமான சாந்தி நிலவியது. அசையாத தீர்மானம் தெரிந்தது. ரங்கையரின் உடல் புல்லரித்தது.
“இன்னும் இரண்டு நாட்கள் யோசித்துத் தீர்மானம் செய். அதுவரை ஜான்ஸனின் பாதுகாப்பில் நீ இருப்பது தான் நல்லது” என்று கூறி விட்டு அவர் வீட்டிற்குப் புறப்பட்டார்.
பொறில் அகப்பட்ட எலியை ஒரு கோணியில் போட்டு அறைந்து கொன்று விட ஒரு மாணவன் பொறியைக் கோணிக்குள் திறந்து விட்டான்.
“அதை என்ன செய்யப்போகிறாய்?” என்று அவள் கேட்டாள்.
மாணவன் சொன்னான்.
“நோ... நோ... டோண்ட் கில் இட்... லீவ் இட் சம் வேர். (வேண்டாம் அதைக் கொல்லாதே. எங்காவது விட்டுவிடு)” என்றாள் மோனிகா.
ரங்கையருக்கு ராகவன் ஞாபகம் மறுபடியும் வந்தது.[தொடரும்]