ஜமுனா :23
அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர்!
பள்ளிவாசல் மைக்கில் பாங்கு ஒலி தொழுகைக்கு வருமாறு முஸ்லிம் பெருமக்களை அழைக்கத் தொடங்கிற்று.
பூ வாளியில் ரோஜாப் பதியன்களுக்கும் சிறு தொட்டிகளில் வைத்திருந்த மரஞ்செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த ஜமுனா வேலையை நிறுத்திக் கவனித்தாள்.
“அஷ்ஷ்ஷ் ஹதன்ன்ன லாஆ ஆ இலாஹ இல்லல்லாஹ்”
இதய முரசம் அதிர்கிறது. அர்த்த மற்றவைகளின் மத்தியில் ஓர் அர்த்தம். புன்மைக்கும் பூசலுக்கும் அப்பால் எஜமான் ஒருவன் இருக்கிறான் என்ற பிரகடனம். என்ன கம்பீர த்வனி!
இந்த நியூ டவுன் வாசம் ஜமுனாவுக்குப் பெரிய ஆறுதல் தந்தது.
தேரோடும் வீதி போன்ற அகன்ற தெருக்கள். தூங்குமூஞ்சி மரங்கள், அசோக மரங்கள், காற்று குலவும் போதெல்லாம் அவை சலசலக்கின்றன. சற்றுத் தொலைவில் வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷன், நாளெல்லாம் விட்டு விட்டுக் கேட்கும் ரயில் ஓசை.
முடிவற்றதொரு நீண்ட பிரயாணத்தை நினைவூட்டியவாறு அவற்றின் கடாகடா குடுகுடு என்று துயரப் பொதி சுமந்து செல்வது போன்ற ஓசைத் தொடர், காலையிலும் மாலையிலும் இஸ்லாமியா கல்லூரி மாணவர்கள் செல்லும் கலகலப்பு, அருகாமையில் இருந்த பேக்கரி ஒன்றில் கம்மென்ற வரும் ரொட்டி சுடும் மணம். எப்போதாவது வீறிடும் எஞ்சின் ஓசை. வண்டியில் சரக்கு தள்ளி வருவோர் போடும் வியாபாரக் கூக்குரல். இந்த நந்தவனம் நர்ஸரி இளஞ்சிவப்பு வெள்ளை யூனிஃபார்மில் வரும் குழந்தைகள் குதூகலம் தவிர வேறொன்று தெரியாத அவற்றின் முக மலர்ச்சி.
எல்லாவற்றுக்கும் மேலாக அவளுக்குப் புகலிடம் அளித்திருந்த கிருஷ்ணராவ் தம்பதி. மாத்வ ராவ்கள் எல்லோரிடமுமே இப்படி ஒரு தன்மை உண்டோ? பந்தமும் மனசின் காயங்களுக்கு ஒத்தடமாகிப் பிறர் வாடப் பொறுக்காது பெய்யும் கருணையாகி... களகளவென்று அவை செழிக்கப் பூசிக்கும் தன்மையாகி...
தன் மனம் எப்படிஇருக்கும் என்று ஊகித்து அறிந்தவர்கள் போல் ஒரு வார்த்தை கூட அவர்கள் எதைப் பற்றியும் கேட்கவில்லையே...
ஜமுனா நந்தவனம் போன்று விரிந்து பரந்திருந்த வீட்டின் முன் முற்றத்திலிருந்து திரும்பிப் பின்னால் பார்த்தாள். சமையல் அறையில் விளக்கெரிந்தது. கிருஷ்ணா ராவ், தன் மனைவி ருக்மிணி பாய்க்குச் சமையல் ஒத்தாசை செய்வது ஜன்னல் வழியாகத் தெரிந்தது.
அந்த வீடே ஒரு விசித்திரமான அமைப்பு. வீட்டின் கதவைத் திறந்தால் தெருப் பக்கமாய் இரண்டு எதிர் எதிர் அறைகள். ஊடே ஓடிய நடையைத் தாண்டியதும் தோட்டம், நாலைந்து தென்னை மரங்கள், ஒரு பலாமரம், இரண்டு மாமரங்கள், ரோஜாச் செடி, மல்லிகை, கனகாம்பரம், கிருஷ்ணராவின் மனசில் தாவரங்களின் பால் இருந்த கொள்ளைப் பிரியம், தோட்டத்தில் தெற்கேயும் வடக்கேயும் பார்த்தவாறு இரண்டு நீண்ட மஞ்சம்புல் போர்த்திய ஷெட், அவை சந்திக்கும் இடத்தில் வீடு தொடங்கிற்று.
ஐந்து வகுப்புகள் வரை அங்கேதான் நர்ஸரி ஸ்கூல். அந்தக் குளுமையான சூழ்நிலையில் சின்னஞ்சிறு செடிகளும், உலகமாகிய நந்தவனத்தில் பூத்த புஷ்பங்கள் போன்ற அந்தக் குழந்தைகளும் ஒன்றாக வளர்கின்ற அந்தக் காட்சியைக் காணும் போதே மனம் என்னமாய் நிரம்பி விடுகிறது.
அஷ்ஹத் அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்
பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அழைப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.
ஐந்து தொழுகை நேரங்களிலும் அந்தக் குரல் நியூ டவுன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் ஒன்றை ஞாபக மூட்டியவாறே கூவும், அதில் ஜமுனாவுக்கு ஒரு தனி ஆறுதல்.
ஜமுனா பூவாளியில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் கிணற்றடிக்குப் போனாள் பக்கெட்டைக் கிணற்றில் இறக்கி ராட்டினம் சுழன்ற ஓசையைக் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த கிருஷ்ணராவ், “ஜம்னா... போதும்மா...”என்றார்.
“சாயந்திரமாயிடுத்து. காலமே ஊத்திக்கலாம்” என்று அவளைப் பார்த்துச் சொன்னார்.
ஜன்னல் கம்பி வழியே மொழுமொழு வென்று வழுக்கைத் தலையும், இரண்டு காதுகளுக்கும் மேலே பிடியளவு நரை முடியும். வட்ட முகத்தில் கறுப்பு ஃபிரேம் போட்ட மூக்குக் ண்ணாடியின் ஊடே கனிவாகப் பார்க்கும் கண்களுமாக அவர் முகத் தோற்றம் தென்பட்டது.
“இன்னும் கொஞ்சம் தான் இருக்கு மாமா... ஒரே பக்கெட்...”
அவர் முகம் ஜன்னலிலிருந்து அகன்றது.
ஜமுனா அங்கே வந்து பத்துநாள் ஆகப் போகிறது. ஒரு முன்னிரவில் தூக்கக் கலக்கத்தோடு ஆனந்தராவ் அழுத்திய காலிங் பெல்லைக் கேட்டு விட்டு, கதவைத் திறந்தபோது ஜமுனாவை எப்படிப் பார்த்தாரோ, அந்த விதமாகத்தான் இப்போது இருந்தது அவர் பார்வை. விருந்தாளி உபசாரம் என்ற பிரயத்தனம் ஏதும் இல்லாமல், சகஜமான வீட்டு மனுஷியை ஏற்றுக் கொண்டது போல் அதே அன்பு... அதே பிரியம்.
கிருஷ்ணாராவுக்கும் ருக்மிணிபாய்க்கும் வயது ஐம்பதைத் தாண்டிவிட்டது.
“ஸ்கூல்லே ஒர்க் பண்ணிண்டிருந்தா இந்நேரம் நான் ரிடையராய் இருப்பேன். நாலு வருஷம் கழிச்சு ருக்மிணி ரிடையராவாள். இப்ப தப்பிச்சுண்டோம்.”
எவ்வளவு அன்யோன்யமா தம்பதி இவர்கள். இந்த நெருக்கமும் இசைவும் இல்லாமல் இருந்தால் இப்படி ஒரு நர்ஸரி ஸ்கூலையும் நர்ஸரி தோட்டத்தையும் வாணியம்பாடியே விரும்பிப் போற்றுகிற மாதிரி நடத்த முடிந்திருக்காது என்று நினைத்தாள் ஜமுனா.
பக்கெட்டை இழுத்து தண்ணீரைப் பூவாளிக்குள் ஊற்றினாள். பூவாளி நிரம்பவில்லை. இன்னொரு பக்கெட் தேவைப்பட்டது. மீண்டும் கிணற்றுக்குள் பக்கெட்டை இறக்கினாள்.
ஹய்ய...அலஸ்...ஸலாத்...
ஹய்ய அலஸ் ஸலாத்
தொழுகைக்கு அழைப்பு அலையலையாகத் திசை திசையாக விரிந்தது.
ஒரு வேளை இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்திருந்தால் இந்த நர்ஸரி உற்சாகமும் அன்னியோனியமும் இல்லாமற் போயிருக்கமோ? யார் கண்டது? எதற்கு எது பிணை என்று எப்படிச் சொல்ல முடியும். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாக் குறை உண்டு என்று நம்ப முடியவில்லையே... மரஞ்செடிகளையும் நர்ஸரிக் குழந்தைகளையும் இவ்வளவு வாத்ஸல்யத்தோடு நேசிக்கும் இந்த மனங்களுக்கு குழந்தைகள் இருந்திருந்தால் கூட குறுகிப் போக சாத்தியப் படாது. ஜீவ நதியை எந்த வாய்க்கால் வெட்டித் திருப்பினாலும் அது நூறு வாய்க்காலுக்கும் வழிந்தும் ஓடிக்கொண்டு தான் இருக்கும்.
பக்கெட்டை வெளியே இழுத்துத் தண்ணீரைப் பூவாளியில் நிரப்பினாள் ஜமுனா. தளும்பத் தளும்பப் பூவாளியை எடுத்துக் கொண்டு அதன் பளுவுக்கு எதிர்விசை மாதிரி கழுத்தை எதிர்ப்பக்கமாகச் சாய்த்துச் சேலையை இறுகச் சுற்றக் கொண்டு சளற்றித் தூக்கியவளாக நடந்தாள்.
ஏதோ பாத்திரத்தை அலம்பி ஊற்ற வெளியே வந்த ருக்மிணிபாய் ஜமுனாவின் சிரமத்தைப் பார்த்தாள்.
“நாகோஜிகிட்டே சொல்லியிருக்காரு கொழந்தே. மோட்டார் எல்லாம் நேத்தே லாரியிலே வந்துடுத்தாம். ரெண்டு மூணு நாள்ளே கொண்டாந்து ஃபிட் அப் பண்ணிட்றேன்னாள். பம்ப் வந்துடுத்துன்னா ஸ்ரமம் இல்லே பட்டனைத் தட்டிவிட்டா வந்து தண்ணி கொட்டும்.”
செடித் தொட்டிக்கு அருகே போன ஜமுனா, பூவாளியை வைத்து விட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
“இருக்கட்டுமே மாமி... இதிலென்ன ஸ்ரமம் இருக்கு. இப்பத்தான் கரண்ட் அடிக்கடி ஆஃப் ஆயிப் போறதே. அப்ப கயித்தை நம்பித்தானே ஆகணும்.”
ருக்மிணிபாய் வாஞ்சையோடு புன்னகை செய்தாள். நல்ல உயரம். திடகாத்திரமான உடம்பு. கண்களில் கடுமை கலந்து இருப்பது போல் முதல் தோற்றம். அதற்குக் கண்ணாடி ஒரு காரணமாகவும் இருக்கலாம். நடக்கும் போதும் நிற்கும்போதும் அந்தத் தோற்றத்தைப் பார்த்தால் மரியாதை செய் என்று ஒரு நினைவு வரும்.
ருக்மிணிபாய் உள்ளே போய் விட்டாள்.
அவன் தான் அந்த நர்ஸரியின் ஹெட் மிஸ்ட்ரஸ். கிருஷ்ணராவ் அவளுக்கு அஸிஸ்டென்ட் தான். கரஸ்பாண்டெண்ட் ஆக இருந்தும், அஸிஸ்டெண்ட் பதவியே போதுமென்று அவர் விட்டுக் கொடுப்பதில்லையே அவர்கள் அன்னியோன்னியம் வெளியாயிற்று. அந்த தம்பதியின் ஆங்கில உச்சரிப்பைக் கேட்டு ஜமுனா வியந்து போனாள். அவள் மேரி இம்மாகுலேட் காண்வென்ட்டில் படிக்கும்போது ஜோலார்ப் பேட்டையிலிருந்து இரண்டு ஆங்கிலோ இந்தியப் பெண்கள் எல்.கே.ஜி.க்கும் யூ.கே.ஜிக்கும் சொல்லித் தர வந்து போவார்கள். அவர்கள் உச்சரிப்பை விட கிருஷ்ணராவ் தம்பதியின் ஆங்கில உச்சரிப்பு இன்னும் ஸ்பஷ்டமாக இருந்தது.
லா... இலாஹ... இல்லல்லாஹ்
தொழுகை அழைப்பு வானவெளியில் மிதந்தது. ஜமுனாவிற்கு திருப்பத்தூர் ஞாபகம் வந்தது.
‘எனக்கு ஓர் அமெரிக்க மன்னி வந்து இருக்கிறாளாமே! அண்ணா ராகவன். தன் குழந்தைக்கு என்னமாய்ப் பெயர் வைத்திருக்கிறாள். யோகி! குழந்தை எப்படி இருப்பான்? அண்ணா மாதிரியா, மன்னி எப்படி இருப்பாள்? அண்ணா... அண்ணா என் வாழ்க்கை இப்படிக் கைதவறிய பாண்டம் போல் உடைந்து நொறுங்கி விட்டதையெல்லாம் கேட்டு வருந்தாமல் நீ போய்ச் சேர்ந்து விட்டாய். அப்பா, நான் எந்த நாளில் நான் வீட்டை விட்டுப் புறப்பட்டு வந்தேனோ, அதே தினத்தில் தானா அந்த இடி உங்கள் தலையில் விழ வேண்டும்?'
ஜமுனா செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தி வாளியைக் கீழே வைத்து விட்டு எதிரில் தெரிந்த தென்னை மரத்தையே அர்த்தமின்றி வெறித்துப் பார்த்தாள். ஓர் அணில் வளைந்து சுழன்று அவசரத்தோடு பாதி மரம் ஏறியது. கீழே இறங்கி விருட்டென்று ஓடி மறைந்தது.
முந்தாநாள் ராஜாமணி வந்து போன நினைவு அவளைப் பின்னி இழுத்தது.
‘ஆனந்தராவுக்கு ஹார்ட் அட்டக்காம். ஹோட்டலுக்கே வரக்கூடாது என்று டாக்டர் சொல்லி விட்டாராம் அப்பாதான் இப்போது ஆனந்த பவனின் எல்லா நிர்வாகத்தையும் கவனித்து வருகிறாராம்! எல்லாக் கதையையும் சொல்லிவிட்டு ராஜாமணி தயங்கித் தயங்கி வந்த விஷயத்தை வெளியிட்ட தோற்றம் அப்படியே அவள் மனசில் சித்திரம் போல் பதிந்திருந்தது.
ராஜாமணி பாய் மீது உட்கார்ந்திருந்தான். ஜமுனாவையும் அவனையும் தவிர வெளியறையில் யாரும் இல்லை. ராஜாமணிக்கு டிபன் தயாரிக்க ருக்மிணிபாய் சமையல் அறைக்குப் போயிருந்தாள். அந்த நர்ஸரியில் வாங்கிய மல்கோவா மாங்கன்று மரமாகி, முதல் ஈற்றில் காய்த்த பழங்களை எடுத்துக் கொண்டு யாரோ வந்திருந்தார்கள். அவர்களோடு பேசுவதற்காக கிருஷ்ணராவ் உள்ளே போனார்.
ராஜாமணி தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.பாயில் வர்ணங்கள் பூசிய கோரை இழைகளைப் பெரு விரல் நகத்தால் டர்ர்ரக்... டர்ர்கை என்று ஓசையெழ வருடிக் கொண்டே கனமான குரலில் மெதுவாகச் சொன்னான்:
“ஜம்னா... உன் மன்னியைப் பார்க்கணும்னு ஒனக்குத் தோணலியா?"'
“தோணறது.”
“திருப்பத்தூருக்கு வந்துடு. எத்தனை நாளைக்கு இங்கே இருப்பே?”
“அது முடியாது ராஜாமணி.”
“ஏன்?”
“ம்ஹ் ம்ஹ்ம்” என்று விரக்தியாக வாய்க்குள் சிரித்தாள் ஜமுனா.
அசட்டுத்தனமான கேள்வி கேட்டு விட்டோமே என்று அவனுக்கு உறுத்திற்று.
சற்று மௌனம். ராஜாமணியின் விரல் நகம் பாயை வருடும் ஒலி. அவன் தலை குனிந்திருந்தான். அவள் சுவரில் மாட்டியிருந்த ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தான் மறுபடியும் பேசினான்.
“இந்த வயசிலே ரங்கையர் உன் மன்னியையும் கொழந்தையையும் எப்படிக் காப்பாத்துவார்? நம்ம தெருவிலே ஒரு அமெரிக்கப் பொண்ணு, விதவையாய் துணையில்லாமே எப்படி இருப்பா?”
ஜமுனா பெருமூச்செறிந்தாள்.
“நீ வந்துதான் தீரணும் ஜம்னா... இப்படியே எத்தனை நாளைக்கு நீயும் இருக்க முடியும்?”
ஜமுனா அவன் மீது பார்வையை ஓட்டினாள். ராஜாமணி எதற்கு வந்திருக்கிறான்?
அவன் தலை குனிந்தவாறே தொடர்ந்தான்.
“இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்திலே... ஹூம்... உம்...பேச எனக்கு வருத்தமா இருக்கு. ஜம்னா... என்னை ஒனக்குப் புரியலியா?”
அவன் பார்வையம் அவள் பார்வையும் சந்தித்தன.
ராஜாமணியின் கண்களில் அவனது இளமை மிடுக்கும் துடிப்பும் இல்லை. எருது கட்டில் கொம்புகளைப் பிடித்து நிறுத்தி விட்ட காளை போல் ஒரு படிமானம். ஓட்டப் பந்தயத்தில் தோற்று விட்டுக் கடைசியாக ஓடி வருபவன் போல் ஓர் அவமானம்.
அவளது ஊடுருவும் பார்வையைத் தாங்கச் சக்தியற்றவன் போல் அவன் மீண்டும் குனிந்து கொண்டான். ஜமுனாவின் மனசில் ஒரு பரிதாபம் தலை தூக்கிற்று.
‘பாவம், ராஜாமணி! இப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்ததற்கு உண்மையிலேயே வருந்துகிறான். என்ன பேதை மனசு! கை வழுக்கி விட்டதென்று இந்தக் கிளையை விட்டு அந்தக் கிளையைப் பிடித்துக் கொள்வேன் என்று நம்புகிறான். பிடித்துக் கொள் என்று விண்ணப்பிக்கிறான்.’
“வேற ஏதாவது விஷயம் இருந்தா பேசலாமே.”
விருட்டென்று அவன் பார்வை அவளைச் சந்தித்தது.
ஜமுனா அமைதியாக தீர்க்கமாக, நிலையூன்றி நின்ற பார்வையோடு ராஜாமணியைப் பார்த்தாள்.
“ஜம்னா... நீ என் ஜம்னாவா ஆக மாட்டியா...?”
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” அவள் மெதுவாக அந்த வார்த்தைகள் வெளிவந்ததன் நாசூக்குக் குறைவை உணர்த்துவது போலவும், திடமான தன் தீர்மானம் போலவும் கண்களை மூடிக் கொண்டு உதட்டின் வழியே ஓசையால் பேசினாள்.
“மன்னியையும் குழந்தையையும் ஒரு தடவை இங்கே அனுப்பி வைங்கோ. இவாளுக்கும் அவளைப் பார்க்க ரொம்ப ஆசையா இருக்குன்னு சொல்றா.”
“சரி!” அவன் விடைபெற்றுச் சென்ற பின் தான் எத்தனை பெரிய மனிதன் அவன் என்று அவளுக்கு உறைத்தது.
எவனோடோ ஓடிப்போக இருந்த ஒருத்தி என்று மட்டும் தான் அவன் தன்னை அறிவான். அதை அறிந்தும் தன்னை ஏற்றுக் கொள்ள முன் வந்தானே என்று நினைத்தாள் ஜமுனா.[தொடரும்]
No comments:
Post a Comment