Monday, 25 September 2017

ஜமுனா :22

ஜமுனா :22
வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தான் ராஜாமணி. டி.எஃப்.ஓ. சோமையாவின் கடிதத்திற்கு அப்பாவின் உடல்நிலை விவரத்தை குறிப்பிட்டு வர இயலவில்லை என்று எழுதியிருந்த கடிதத்தையும் போஸ்ட் செய்வதற்காக அவன் தபாலாபீஸுக்குப் போனான்.
எத்தனை பேர் அப்பா உடல்நிலை சரியில்லை என்றதும் ஓடோடி வருகிறார்கள்! சாப்பிட ஆரம்பித்து முடிப்பதற்குள் மூன்று நாலு பேர் செருப்பை வாசலில் கழற்றிவிடும் ஓசையும் ஆனந்தராவ் எங்கே இருக்காரும்மா என்ற குரல்களும் கேட்டு விட்டன.
அம்மா பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர் வெறும் ஹோட்டல்காரராக இருந்திருந்தால் இது எப்படி சாத்தியம்? சொந்தம் போல் அல்லவா கரிசனமும் கவலையும் அந்தக் குரல்களில் குழைந்தன. அவருக்கு இவ்வளவு செல்வாக்கு உண்டா? திடீரென்று ஏன் இப்படி நேர்ந்தது? இனி என்ன ஆகப் போகிறது? அம்மா பரிமாறுகையில் என்னைச் சுமங்கலியாக கொண்டு போயிடு பகவானே என்று கண்ணைத் துடைத்துக் கொண்டாளே... அம்மா எதற்குப் பயப்படுகிறாளோ அது நடந்து விடுமா? அப்புறம் என்ன..?
லெச்சரர் ராமபத்ரன் சொன்னாரே, இந்திய இளைஞனுக்கு குடும்பம் ஒரு தளை என்று. அதே மாதிரி நானும் குடும்பத்தில் விழ வேண்டியது தானா... என் தலைவிதி அவ்வளவு தானா? பிள்ளை இறந்து பெண் ஓடிப் போனாள் என்ற சங்கதியில் இடிந்து போயிருந்த ரங்கையர் கூட உடம்பு சரியில்லை என்றதும் தன் துயரத்தை மூட்டை கட்டி விட்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டு விட்டாரே! என்ன இருக்கிறது அந்த ஆனந்தபவனில்... அது ஏன் இப்படி இவர்களை சக்கர வளையம் போட்டு மாட்டி இழுக்கிறது?
ஏதேதோ நினைத்துக் கொண்டே அவன் கலெக்டர் ஆபீஸ் கட்டத்தைத் தாண்டியிருப்பான்.
“பாக்காமேயே போறாப்பலே இருக்கு?”
தெரிந்த குரல், அவன் திரும்பினான். அவள், கம்பி ஜன்னல் வீட்டுக்காரி, மழைக்கு ஒதுங்கியவனின் மாமிசத்தை ருசித்தவள். அவனுக்குத் திக்கென்றது, யாராவது பார்க்கிறார்களோ என்று முதலில் திகில் தான் உறைத்தது. அவள் கலெக்டர் ஆபீஸ் போர்ட்டிகோவினுள் நின்றிருந்தாள் போலிருக்கிறது.
ராஜாமணிக்கு ரத்தம் குடிக்கும் பிசாசைப் பார்ப்பது போல் உதறல், நேரே சைக்கிளை விட்டுக் கொண்டு போய் விடலாமே என்று தோன்றிற்று, மறுபடியும் பின்னாலிருந்து கூப்பிட்டாளானால்... கைதட்டிக் கூப்பிடுவாளோ...
சட்டென்று தைரியம் வந்தது.
நான் ஏன் இவனிடம் பயந்து ஓடவேண்டும்? இன்னும் என்னிடம் பலவீனமும் பயங்கொள்ளித்தனமும் இருக்கிறது என்று காட்டிக் கொள்ளவா? இவள் என்ன செய்து விடுவாள்.
அவன், சைக்கிளை நிறுத்தினான்.
அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“மறுபடியும் வருவேன்னு பார்த்தேன், வரவே இல்லியே?”
“எதுக்கு... மறுபடியும் சாக்கடையிலே தள்ளிக் குளிப்பாட்டவா?”
அவள், அவனைப் புண்பட்டது போல் ஏக்கத்தோடு பார்த்தாள்.
“என் ராஜாவுக்கு எம்மேலே கோவம் போலிருக்கு.”
அவள் ராஜா என்றதும் நடுவீதியில் சைக்கிளில் அங்குமிங்கும் சஞ்சரிப்போர் மத்தியில் சரசம் பேசுவதும் அவனுக்கு அடக்க முடியாத கோபம் வந்து ஓர் எச்சரிக்கை கிளப்பின.
“நீ ஒண்ணும் ராஜா கூஜா ன்னு என்னைக் கொஞ்ச வேண்டாம். என் தலையெழுத்தோ பீடையோ அன்னிக்கு வந்து ஒங்கிட்டே மாட்டிண்டேன்.”
அவள் புன்னகை செய்தாள்.
“நீ என்ன வேணும்னாலும் நெனச்சுக்கோ. நீ எனக்கு ராஜாதான். ஒன்னைப் பாத்தவுடனே எனக்குப் பிரியம் ஏற்பட்டுப் போச்சு. நானே தான் ஒன்னை சீரழிச்சேன்னு வச்சுக்கோ... எனக்கு அது தொழில் இல்லே, சத்யமா சொல்றேன். ஒன்னைப் பாழ்பண்ணனும்னு நெனச்சு நான் செய்யலே, உம்மேலே ஏற்பட்ட பிரியம் அந்த நேரத்திலே பூரப் பூரா நான் ஒனக்கே சொந்தம்னு பண்ணிடுச்சு” அவள் மன்றாடினாள்.
“சரி!” அவன் குரலில் கண்டிப்பு.
“மறுபடியும் எப்போ வர்றே?”
“வரமாட்டேன். எப்பவும் வரமாட்டேன்.”
உன்மத்தம் பிடித்தவள் போல் அவனை அவள் பார்த்தாள்.
“என் மேலே உனக்கு நெஜம்மா பிரியம் இருந்தா நடுத் தெருவிலே இப்படி என்னை நிக்க வச்சுப் பேசாதே.”
“ராஜா... ஒரு தடவையாவது வீட்டுக்கு வாயேன்.”
“என்னிக்கு உங்கிட்டே நான் நாசமானேனோ அன்னிக்கே என்னை சனியன் பிடிச்சுடுத்து.” - அவன் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான்.
அவள், அவனைத் தன் அந்தஸ்தையும் சகல மரியாதைகளையும் இழந்து பிச்சைக்காரி போல் பார்த்தாள். அவள் சொன்னது முழுவதும் உண்மை என்று தனக்குள் ஏதோ அசைவதை ராஜாமணி உணர்ந்தான்.
அவன் மீது அவளுக்கு ஏற்பட்ட பிரியத்தை அவள் வீட்டில் கழித்த ஒவ்வொரு நிமிஷத்திலும் ராஜாமணி ஏற்கெனவே உணர்ந்திருந்தான். சுயவெறுப்பிலும் அவமானத்திலும் அன்று அவன் மனம் எதையும் கவனிக்க முடியாதவாறு கைத்திருந்தது. இன்று அவன் மீது அவள் கொண்டிருக்கும் பிரியம், சில வார்த்தைகளில் ஓரிரு பார்வையில் குரல் குழைந்த குழைவில் அவள் நிற்கும் தோற்றத்தில் சதுர்வியூகம் வகுத்துக் கொண்டு நின்றது.
‘பிரியமே, நீ நிஜமாயினும் நான் உனக்கு இரையாக முடியாது. நீ ஒரு போதை. நான் எதற்கும் இரை பொருள் அல்ல. உன் போதை உட்பட, உன் பிரியத்தின் நிஜம் உட்பட எதற்கும் இனி நான் மசிய மாட்டேன்.’
அவன் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான். அவனுக்கு ஏனோ திரும்பிய பார்க்கத் தோன்றிற்று.
அவள் இன்னும் அவனையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். ராஜாமணி முகத்தைத் திருப்பிக் கொண்டு சைக்கிளை மிதித்தான்.[தொடரும்]

No comments:

Post a Comment