ஜமுனா: 17
“ஜமுனாம்மா... கயனித் தண்ணி இருக்குதா?”
தோல் பெட்டிக்குள் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த ஜமுனா, பெட்டியை மூடி விட்டு வெளியே வந்தாள்.
சின்னம்மா இடுப்பில் பானையோடு நின்றிருந்தாள். ஒல்லியான, உயரமான உருவம், நாற்பதை எட்டும் வயது என்பதை அந்த முகத்தில் இன்னம் இருந்த கவர்ச்சியைக் கொண்டு தீர்மானிக்க முடியாது. சாயம் போன சேலை, மலிவான ஜாக்கெட், கையிலும் கழுத்திலும் ஏன், நெற்றியிலும் கூட ஒன்றுமில்லை. எனினும் அந்தக் கண்களும் உதடுமே போதும், தெருவில் போகிறவர்கள் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள்.
“இருக்கு சின்னம்மா. மழை கொட்டறச்சே ஒன் ஞாபகம் வந்தது. சாணிக்கையைப் போட்டு மூடி ஓரமாக நகர்த்தி வச்சிருக்கேன்.”
“எல்லா வூட்டிலேயும் மழையிலே பானையைத் தொறந்து வுட்டுட்டாங்க அம்மா. இன்னிக்கு உன் தயவிலே தான் மாடுங்க குளுத்தி குடிக்கணும். இந்த மழைலே என் மாடுங்க ஞாபகம் ஒனக்கு இருந்துதே.”
ஜமுனாவுக்குக் கூச்சமாக இருந்தது.
“அதென்னமோம்மா... குளுத்தி குடிச்சிப் பளக்கப்பட்ட மாடுங்க வெய்யிலானாலும் மழையானாலும் அது இல்லேன்னா முளிச்சிக்கினு நிக்கிறது.”
“நாம்ப காப்பிக்கு பழக்கப்பட்டுட்டா மாதிரி அதுங்க.”
சின்னம்மா பானையிலிருந்த கழனித் தண்ணீரை தன் பானைக்கு மாற்றிக் கொண்டாள். அவள் குனிந்த போது இன்னும் நரைக்காத கேசம், தேங்காய்ப் பருமனுக்கு திண்டாக முடிந்திருந்ததை ஜமுனா கவனித்தாள். பின்னங்கழுத்தின் குறுகுறுவென்று ரோமக் கால்கள் ஓடியிருந்தன. முடிந்த கூந்தலின் கீழே அது ஓர் அழகாக ஈர்த்தது.
சின்னம்மாவுக்கு டீச்சர் டிரெய்னிங் படித்த பெண் இருக்கிறாள் என்பதையே நம்ப முடியவில்லை.
“காஞ்சனாவுக்கு இன்டர்வ்யூ என்னிக்கு”
“நாளன்னிக்கு.”
“வேலை கெடைச்சிருமா?”
“என்னமோ... பண்ற முயற்சியைப் பண்ணியிருக்கேம்மா. சேர்மன் கவுண்டர்கிட்டே நேர்லே போய்ச் சொல்லிட்டு வந்தேன். பார்க்கலாம்மான்னு சொல்லி இருக்காரு, அதுக்கப்பறம் தெய்வ சங்கல்பம். எவ்வளவோ பாடுபட்டு மானத்தோடே, காப்பாத்திட்டேன்! வேலை கெடைச்சுட்டா யாராவது ஒருத்தர் வந்து, காஞ்சனாவை கட்டிக்கினு போயிடுவாங்க. எனக்குப் பளு கொறஞ்சுடும்.”
சின்னம்மா வழக்கமாகக் கழுநீர் கொண்டு போவாள். வீடு மெழுகச் சாணம் கொணர்ந்து தருவாள். இந்தத் தொடர்பில் ஓர் உறவு வந்துவிட்டது. கஷ்ட நஷ்டங்களை மனம் விட்டு ஜமுனாவிடம் பரிமாறிக் கொள்வாள்.
நாளைக்கு அவள் கழுநீர் எடுக்க வரும்போது தான் இருக்க மாட்டோம் என்ற உணர்வு, அவளோடு இன்னும் சற்று நேரம் பேசும் ஆவலை ஜமுனாவிடம் தூண்டிற்று.
கணவன் போன பின்பு இரண்டு பசு மாடுகளை வைத்துக் கொண்டு சின்னம்மா வாழ்க்கையோடு போராடிய கதையை ஜமுனா நினைத்தாள். அந்த அழகு எத்தனை பேரைத் திசை தப்பி அவளிடம் மோத வைத்திருக்கிறது. ஆனால் கைம்பெண் ஆனாலும் தீக்குளிக்காமல் லட்சியங்களுக்காக வாழ்கிற ராஜபுதனத்து ராணி மாதிரி, கம்பீரமாக நடந்து கொண்டாள் சின்னம்மா.
ஒர்க் ஷாப் ராஜு, கவுன்சிலர் தாமு, தாசில்தார் ஹரிஹரன்... எத்தனை பேர் அவளிடம் தோற்றவர்கள்? அந்தரங்க சிநேகிதியாக ஜமுனாவைக் கருதி அவள் சொன்ன கதைகள் கல்வெட்டுகள் போல் ஜமுனா மனசில் பதிவாகியிருந்தன. அழகு, காவல் இல்லாத சரீரக் கவர்ச்சி, எந்த வீட்டுக் கதவு எப்போது திறந்திருக்குமோ என்று எத்தனை மனங்களில் நாய்கள் இரைத்துக் கொண்டிருக்கின்றன. உலகத்தில் ஏன் இப்படி ஒரு மாமிசப் பசி! தின்று அடங்குகின்ற பசியா அது? தெருத் தெருவாய், வீடு வீடாய் தடியடியும் தூஷணையும் வாங்கிக் கொண்டாவது அலைந்து கொண்டே திரியும் அடங்காப் பசி.
ஜமுனா குடிநீருக்காக ஆரிய வைசிய சங்கக் குழாய்க்குப் போவாள். வழியில் பல் போய், வெம்பிய பழமாக திண்ணையில் ஒரு கிழம் உட்கார்ந்திருக்கும், பாம்புக் கண். நாய்ப் பார்வை. அந்தக் கிழவன் கூட சின்னம்மா பாலூற்றப் போன போது கையைப் பிடிக்க வநதானாம். ‘உடம்பு வெம்பிக் கொண்டு இருக்கும்போது கூட அடங்காத பசி என்று அடங்கும்? மண்ணிலா? சாம்பலாய்க் காற்றில் பறந்த பின்னாலா? அப்போதும் அடங்காமல் ஆவியாய் அலையுமோ!’
சின்னம்மா இந்த ஈனப் பசிகளின் கங்காளித் தனத்தை நிறையப் பார்த்து விட்டாள்.
“நாலு மனுசன் பார்வையிலே நல்ல எண்ணம் வருமான்னு நான் யோக்யமா பொளைக்கிறவ ஜமுனா. இந்தப் பாளாப் போன மூஞ்சியைப் பார்த்ததும், நல்ல மனுசன்கூட தடுமாறிப் போறான். நமக்கு சாணி அடிச்ச மாதிரி ஆயிடுது. எனக்கு இது ஒரு சாபம்?”
பலமுறை சின்னம்மா தன் அழகைக் குறித்து வருந்தி முறையிட்டிருக்கிறாள்.
“அது சாபமில்லை. சோதனை” என்ற ஜமுனா பதில் சொல்வாள். நல்லதும் கெட்டதுமாகப் பெண்கள் கூடும் இடங்களில் எல்லாம் அவள் காதில் எத்தனையோ சேதிகள் விழுந்திருக்கின்றன. பெண் மனம் சாக்கடைச் சேறானதையும், மாற்றுக் குறைந்து மலிவானதையும் அவள் கேட்டிருக்கிறாள்.
பெண் எப்படி சீரழிந்து விட்டாள் என்பதற்கு ஆயிரம் கதைகளைத் தெருவும் சினிமாவும் பத்திரிகையும் திருப்பித் திருப்பி வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னும் சின்னம்மா உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாளே! எது மெய்? எது பொய்?
“நான் வர்றேன் ஜம்னாம்மா...” - அவள் தன் பானையைத் தூக்கி, முழங்காலின் மீது வைத்து ஒரு சாதுர்யத்தோடு, சடக்கென்று சும்மாடு கொல்லி வைத்த தலையில் ஏற்றிக் கொண்டு தெருவில் படியிறங்கும்போது, சற்றுக் குனிந்து வாசற்படி இடிக்காமல் வெளியேறினாள்.
“நாளைக்கு அவள் கழுநீருக்கு வரும்போது என்ன நினைப்பாள்?”
‘ஓடுகாலி என்றா...? ஆசார அனுஷ்டானம் தவறாத ரங்கையரின் வயிற்றிலும் மானத்திலும் நெருப்பை அள்ளிப் போட்டவள் என்றா...?’
ஜமுனா தன்னை மறந்து திறந்த தெருக்கதவையே பார்த்துக் கொண்டு நின்றாள். கடைசியாக ஒரு முறை கணக்கைச் சரி பார்ப்பது போல் அவள் மனசில் பல எண்ணங்கள்... ஞாபகங்கள்... அவளை அறிந்த ஒரு சமூகத்தின் பிரதிபலிப்புகள் என்று ஏடுகள் புரண்டன.
அவளது நடத்தையைப் பற்றி உலகம் வழங்கப் போகும் தீர்ப்புகள். தினுசு தினுசாக அவரவர் மனத்துக் கேற்றபடி அமையப் போவதை அவள் யூகித்தாள். எதுவுமே முழு உண்மையாகாது எல்லாமே ஒரு தப்பபிப்ராயமாகத் தான் இருக்கப் போகிறது.
‘மோகன்! உன்னோடு நான் ஓடி வராவிட்டால் தந்தையும் தாயுமின்றி அநாதை விடுதியிலே வளர்ந்து, அன்பு காட்ட ஓர் இதயமில்லாமற் போன பாவத்துக்காக எத்திப் பிழைத்து, ஏமாற்றிப் பொய் சொல்லி வாழ்க்கைச் சுழலில் சருகு மாதிரி பறக்கும் நீ என்ன ஆவாய்?’
ஜமுனா முகத்திற்கெதிரில் ஒரு குளவி பறந்து வந்ததை ஆடாமல் அசையாமல் கவனித்தாள். அது ஒரு செங்குளவி. நீளவாக்கு. துளைக் கொம்புகள் இரண்டு அசைந்து கொண்டு வர வார்னிஷ் டப்பாவில் விழுந்து, எழுந்து வந்தது போல் அது பளபளத்தது.
‘விஸ்ஸ்’ என்று முகத்தருகில் பறக்கும்போது அதன் சிறகுகள் வீசிய காற்று கொஞ்சம் அச்சத்தைத் தந்தது. அசைந்தால் தான் குளவி கொட்டும் என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறாள். இரைந்து கொண்டே குளவி அவள் முகத்தை விட்டு அப்பால் நகர்ந்தது.
அதற்கு ஏமாற்றமாக இருந்திருக்குமோ என்று நினைத்தாள் ஜமுனா.
எதிர்த்திருந்தால் அஞ்சி ஓடியிருக்கும். அல்லது கொட்டியிருக்கும்.
‘மோகன், உன்னையும் ஒரு விஷக் குளவி என்று தான் சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. எத்தனையோ வாழ்க்கைகளை நீ துளைத்து விட்டாய் என்று புகார் சொல்கிறது. என்னிடம் நீ எதையும் மறைக்கவில்லையே...’
அன்னொரு நாள் மோகன் டைபாய்டில் அவதிப்பட்டுக் கொண்டு தனியாக மாடியில் படுத்திருந்தான். எதிர் வீட்டுக்காரர்கள் மாட்னிக்குப் போயிருந்தார்கள். அரை நிஜார் சுந்தரத்தின் மூலம் கேள்விப்பட்டுத் தைரியமாக ஜமுனா அவனைச் சென்று பார்த்தாள்.
அவனைப் பார்த்ததும் அவன் கண்களில் ஓர் அநாதையின் கண்ணீர் வழிந்தது. குடும்பம் இல்லாதவன், துணை அற்றவன், பணம் இல்லாதவன். இப்படி ஒரு ஜீவன் இந்த விசாலமான உலகில் வழிகாட்ட ஒரு துணை இல்லாமல் விதியின் பிரவாகத்தில் துரும்பு மாதிரி மிதப்பதை யார் பொருட்படுத்தினார்கள்? என்று அவள் நினைத்தாள்.
எந்தக் கண்ணீர் அப்படி ஓர் இதயத்திற்காகச் செலவழிந்தது? அப்பா... அம்மா... அண்ணன். தம்பி... மகன்... மகள் என எதிர்காலப் பாதுகாப்பிற்காக மனிதர்கள் எதைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்?
ஓர் அங்கஹீனனுக்குப் பரிதாபப்படுவது போல் ஜமுனா அவனிடம் முதலில் பரிவு காட்டினாள். ஊனங்ஙகள் மனத்தில் இருந்தால் கூட அவை பரிவுக்குரியவை தான்.
மோகனின் கண்ணீர் ஜமுனாவின் மனசில் வித்தாக விழுந்தது.
பெண்ணை எவ்வளவு நவீன மயமாக்கினாலும் அவளுக்குள் உறங்கும் தாய்மையை எதுவும் செய்ய முடியாது. அது அவளிடம் அது கருணையாக விளைந்தது.
பிறந்து இருபத்தைந்து ஆண்டுகளாக, கற்பாறைகளிலும் இரக்கமற்ற சுயநலக் குகைகளிலும் விலங்குகளால் வேட்டையாடப்பட்டு உயிர் பிழைப்பதற்கு எது செய்வதும் பொருத்தமானதே என்று அவனுக்குள் அலைந்து திரிந்த ஓர் ஆதி மனிதன் அந்தக் கருணையின் குரலைக் கேட்டுத் தன் வசமிழந்து நின்றான்.
அதன் புதுமை அவனை அதிரச் செய்தது.
அவன் கருணையைக் கதைகளில் தான் கேட்டிருக்கிறான். அது ஒரு பித்தலாட்டம் என்று சிரித்திருக்கிறான்.
இப்போது அவனது வீழ்ச்சிக்காக இரக்கமுற்று அந்தக் கருணையைப் பெறுவதற்கு, அவனுக்குள்ள தகுதியை நினைவூட்டி மோகனை ஜமுனா கௌரவப்படுத்தினாள். அவன் அவள் அடிமையானான்.
ஜமுனாவின் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட முதல் ஆண் அவன்தான். அவன் அவளை வழிபடத் தொடங்கினான்.
பெண், சீக்கிரம் தெய்வமாகிறாள். விரைவாக ஒரு ஜீவனின் முறையீடு பெண்ணின் செவிகளில் விழுகிறது. உலகத்தின் இகழ்ச்சிகளை ஒதுக்கிவிட்டு உண்மையின் ஒளியை அவளால் ஏற்க முடிகிறது.
அவ்விதம் ஜமுனா அவனை ஏற்றுக் கொண்டாள். அந்த ஆரம்பம் பிரியம் ஆயிற்று. நாளடைவில் நேசமாயிற்று. போகப் போக அவனிடம் மிஞ்சியிருந்த தூய்மையைப் பிரித்தெடுத்துப் போற்றிக் காக்க வேண்டிய பொறுப்பாயிற்று. அவள் மோகனை மனிதனாக்கி வந்தாள். அவனோ அந்தச் சோதனையில் அடிக்கடி தவறு செய்தான். எனினும் அவளிடம் நம்பிக்கை இருந்தது. அபாரமான பொறுமையோடு அந்த நம்பிக்கை அவளிடம் வளர்ந்தது.
‘மோகன், உன்னோடு நான் ஓடிவரப் போகிறேன்... உலகத்தின் வாய் என்னை எப்படியெல்லாம் தூற்றும் என்று தெரிந்ததும் ஓடிவரப் போகிறேன்.’
பெருமூச்செறிந்து விட்டு உள்ளே போனாள்.
சில துணிமணிகள் அவள் அப்பா கொடுத்ததில் செட்டாகச் செலவழித்துச் சேமித்துச் சேமித்து வைத்திருந்த தொளாயிரத்து முப்பது ரூபாய் ரொக்கம். ஒரு பகவத் கீதை. அம்மா உயிரோடிருந்த காலத்தில் குடும்பத்தோடு அப்பா எடுத்துக் கொண்ட ஒரு போட்டோ ப்ளஸ்டூ சர்டிபிகேட்... சமீபத்தில் நியூசிலாந்தில் மாலுமி உடையில் அண்ணா ராகவன் எடுத்துக் கொண்ட போட்டோ... இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துத் தோல் பெட்டிக்குள் அடுக்கினாள்.
அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதி வைக்கலாமா என்று யோசித்தாள்.
தன் சமாதானத்துக்குத் தான் அது உதவும். அவர் மனசில் தன் நியாயங்களைப் புரிய வைக்க முடியாது என்று உணர்ந்தாள். பின்னால் எப்போதாவது அவர் மனம் ஆறித் தெளிவு பெற்ற நிலையில் எழுதினால் அப்படி ஒரு கடிதத்துக்குப் பயன் உண்டு என்று முடிவு கட்டிவிட்டு சமையல் அறைக்குப் போனாள்.
அப்பாவுக்காக இரவு உணவிற்கு உப்புமா கிண்டி வைக்க ஏற்பாடுகளைத் தொடங்கினாள் அவள் மனசு துறவுக்கோ, மரணத்துக்கோ சித்தமாகி விட்ட பரிபக்குவத்திற்கு வந்திருந்தது.
சமையல் வேலை முடிந்ததும் அவள் வீட்டை ஒரு தரம் சுத்தமாகப் பெருக்கிக் கூட்டினாள். புழக்கடையில் இருந்த சாமான்களை கழுவித் தண்ணீரை வற்ற வடித்து விட்டு ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து சமையல் அறையில் கவிழ்த்தினாள்.
பால்காரி, காய்காரி, சலவைக் கணக்கு இவற்றையெல்லாம் ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி ரங்கையர் பார்வையில் படும்படி எதிரே வைத்தாள். வீட்டை ஒரு தரம் நன்றாகச் சுற்றிப் பார்த்துக் கொண்ட பின்பு கண்ணாடி அருகில் நின்று அவள் தலைவாரத் தொடங்கியபோது அந்த ஜப்பான் கடிகாரம் ஏழு அடித்தது.
அப்பா எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவாரோ? மழை விட்டு விட்டால் அநேகமாக ஓட்டலுக்குப் போய் வழக்கப்படி இரவு பத்து மணிக்குத் தான் வருவாரா என்று தனக்குள் சொல்லியவாறே தலைவாரி முடித்தாள்.
எட்டே முக்கால் மணிக்கு திறந்திருந்த கதவின் வழியாக ஒரு கூலி உள்ளே வந்து நின்றான்.
“என்னம்மா... பொட்டி இருக்குதாமே... ஐயா கொண்டாரச் சொன்னாரு...”
“அவரு எங்கே?”
“தோ, கோவுலாண்டே கார்லே ஒக்காந்துனுகீறாரு. வண்டி சந்துக்குள்ளே வராது. அதுக்குத் தான் பொட்டியை வாங்கிக்கினு உங்களை ஜல்தி வரச் சொன்னாரு...”
ஜமுனா பெட்டியை எடுத்துக் கூலி ஆளிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டு அவன் தெருவில் இறங்கினான். அவன் போகும் வரை காத்திருந்து எல்லா விளக்குகளையும் அணைத்தாள். பின்பு ஏதோ ஞாபகம் வந்தது. பூஜை அறை விளக்கைப் போட்டு உள்ளே போனாள்.
அங்கேயிருந்த படங்களைக் குனிந்து நமஸ்கரித்தான்.
ரங்கையரின் படுக்கையைத் தொட்டு நமஸ்கரித்து விட்டு வெளியே வந்தாள். மழையின் காரணமாக அவர் விட்டு விட்டுச் சென்றிருந்த செருப்பு தென்பட்டது. பூஜை அறையின் மங்கலான வெளிச்சத்தில் அவற்றை ஒரு தரம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள். பிறகு, பூஜை அறை விளக்கை அணைத்து அறைக் கதவை இழுத்துத் தாளிட்டாள்.
பூட்டும் சாவியும் நடை ஓரத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்து தெருக்கதவை இழுத்துப் பூட்டினாள். வெளியே வந்து அடுத்த வீட்டு சுந்தரத்தைக் கூப்பிட்டாள்.
அரை நிஜார் சுந்தரம் பதில் தரவில்லை.
“சுந்தா... அக்கா கூப்பிடறா... போய்க் கேளு” என்று உள்ளேயிருந்து குரல் வந்தது.
அரை நிஜார் சுந்தரம் வெளியே வந்தான். முகத்தில் தூக்கக் கலக்கம்.
“என்னக்கா?”
“ஒண்ணுமில்லேடா... தாத்தா வந்தா இந்த சாவியைக் கொடுத்துடு. நான் கோவிலுக்குப் போயிட்டு வர்றேன்.”
“சரிக்கா...”
அவன் சாவியை வாங்கிக் கொண்டான். திரும்பினான்.
“இந்தாடா...”
அவள், அவன் கையில் ஒரு ரூபாய் நாணயத்தை அழுத்தினாள்.
“எதுக்குக்கா ?”
“வச்சுக்கோடா...?”
அவனுக்கு விளங்கவில்லை. ஆனால் வாங்கிக் கொண்டான். அவனது கன்னத்தை ஒருமுறை வருடி விட்டு ஜமுனா போவதை அவன் சற்று நேரம் விசித்திரமாகக் கவனித்தான்.
ஜமுனாவின் உருவம் தெருத் திருப்பத்தில் மறைந்தது.[தொடரும்]
No comments:
Post a Comment