Tuesday, 19 September 2017

ஜமுனா;16

ஜமுனா;16
மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை. ஆனந்தராவ் ஊஞ்சலில் புறங்கையைப் பின்னால் கொடுத்துக் கொக்கி தொங்கிய விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்தார். கங்காபாய் மூலையில் உட்கார்ந்து அரிசியில் கல் பொறுக்கினாள்.
வீட்டில் ஒரு திரஸ்கார மௌனம் நிலவிற்று. யாரும் பேசவில்லை. அது ராஜாமணியின் மனசைத் தின்றது. அவன் ஊட்டிக்குப் போவதையோ, ஐ.எஃப்.எஸ்ஸுக்கு எழுதிப் போடுவதையோ குறித்து இவ்வளவு பலத்த ஆட்சேபம் இருக்கும் என்று அவன் எண்ணிப் பார்க்கவில்லை.
எல்லாம் போகப் போகச் சரியாய் விடும் என்று அவன் மனம் சமாதானப்படுத்திற்று. காரை பெயர்ந்த சுவரைச் சுண்ணாம்பு பூசி மறைப்பது போல் உறுத்தல். பெற்றோர் அதிருப்தி என்ற பிளவை எப்படிச் சரிக்கட்டுவாய் என்று ஓர் உறுமல்.
தண்ணீர் குடிப்பது மாதிரி, ஷர்ட்டைத் தேடுவது மாதிரி, குடையைப் பார்ப்பது மாதிரி அவன் தன் அறைக்கும் கூடத்துக்கும் நாலைந்து முறை நடந்து பார்த்தான். கங்காபாயும் ஆனந்தராவும் அசைந்து கொடுக்கவில்லை. ராஜாமணிக்கு ஆத்திரம் வந்தது. முதலில் அவர்கள் மீது அடுத்து தன் மீது ஒரு வாரத்தில் அவனுக்கு இரண்டு புறக்கணிப்புகள். ஜம்னா, இது.
இவர்கள் என்ன விரும்புகிறார்கள்? இவர்களைப் போலவே நானும் ஒரு சிற்றூரில் சிறிய வட்டத்தில் அடங்கி விட வேண்டுமென்றா? எனக்கு எதற்கு படிப்பு? ஏன் ஒரு பறக்கும் மனம்? முயற்சிகளின் இறக்கை ஒடிந்து ஒரு பாதுகாப்பான கூண்டில் கம்பிகளை எண்ணிக் கொண்டு உட்கார்ந்திருக்கவா?
மனிதன் எதையாவது சாதிக்க வேண்டாமா? சாப்பிட்டுத் தூங்கி சம்சாரம் நடத்தி நாலோடு நாராயணா என்று தன் பந்தோபஸ்துக் குறையாமல் பிழைத்திருந்தால் மட்டும் போதுமா? உலகம் இவர்களுடைய சிறிய எல்லைக்கப்புறம் எவ்வளவு பரந்திருக்கிறது என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை...? பெற்று வளர்த்ததற்குரிய கடனைத் தீர்க்காமல் சேதுவைப் போல் மனச்சாட்சியை சீல் வைத்து மூடி விட்டு ஓடி விடுவேன் என்றா நினைக்கிறார்கள்?
ராஜாமணிக்கு எண்ணம் கொந்தளித்தது. ஸாக்சை மாட்டிக் கொண்டு, ரெயின் ஷýவைப் போட்டவாறு குடையை எடுத்தான்.
“எங்கேடா போறே? என்றான் கங்காபாய்.”
“ஹோட்டலுக்கு...”
“மழை கொட்டறதே!”
“குடை இருக்கே!”
“விட்டப்புறமா போ”
“இல்லே... போய்ட்டு வந்துடறேன். போரடிக்குது.”
அம்மா இரண்டு வார்த்தைகளாகப் பேசினாள். அப்பாவுக்கு ஒரு வார்த்தை கூட அகப்படவில்லையோ?
‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரிடையராகிவிட்ட கேசவலு நாயுடு மனம் உடைந்தாரே. அந்த மாதிரியோ உயர்ந்து வாழ்ந்து சட்டென்று சரிந்து போன சோடேலால் மாதிரியோ இந்தச் சிறிய அரங்கத்தில் ஓடியாடி அடங்கினால் இவர்களுக்குப் போதும். என் அவா பிடரியைப் பிடித்து அடிக்கிறதே... நான் என்ன செய்யட்டும்? என்னைப் புரிந்து கொள்ளுங்கள்!’
ராஜாமணி நினைத்துக் கொண்டே நடந்தான்.
சோமையாவின் கடிதத்தைக் கொண்டாடிக் களிக்க வேண்டிய மனம் நொண்டியாய்க் கெந்துவது சகிக்கவில்லை.
கொட்டும் மழையில் நடப்பது என்பது எதையோ பழிவாங்குவது மாதிரி. லட்சியம் செய்யாதது மாதிரி மனக் கடுப்புக்கு இசைவாக இருந்தது.
நேரே ஆனந்தபவனுக்கு நடந்தான். ஹர்த்தாலை முழுக்க ஸ்தம்பிக்க வைத்து விட்ட மழையைச் சபித்துக் கொண்டு அங்கங்கே கூட்டம் நின்றது.
ஆனந்தபவனுக்குள் நுழைந்தான். கலாய்கார சுபான் பீடியைக் குடித்துக் கொண்டு மூலையில் உட்கார்ந்திருந்தான். அவன் அடுப்புப் போட வேண்டிய முற்றத்தில் வெள்ளம் நாலுகாலாக ஓடிற்று. வைத்தா சினிமாப் பத்திரிக்கை படித்தான். சுப்பண்ணா இரண்டு டேபிளை சேர்த்துப் போட்டுத் தூங்கினார்.
உமாசங்கர், ஐயாசாமி, மாதவன், மணி நாலு பேரும் சமையல் அடுப்புக்குக் கீழே வட்டமாக உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். கணப்பு அடுப்பில் வெந்நீர் அண்டா காய்ந்தது. சூட்டை அனுபவித்துக் கொண்டு சுவாரஸ்யமான ஆட்டம். ராஜாமணி போனதும் சீட்டை மறைத்துக் கொண்டு எல்லோரும் எழுந்து நின்றார்கள். டேபிள் துடைக்கும் துணியில் இறைந்திருந்த சில்லறையை எடுக்க மறந்து எப்படி மறைப்பது என்று எல்லோரும் விழிப்பது தெரிந்தது.
ராஜாமணி கண்டு கொள்ளாதது போல் “சுபான் அடுப்பு போடலியா? சரி, நான் வர்றேன்!” என்று வெளியே கிளம்பினான். மேஜை மீது கவிழ்ந்து நாலு கால்களையும் மேலே நீட்டியவாறு படுத்திருந்த நாற்காலிகள், மூடிய ஸ்வீட் ஸ்டால். காஷ் கவுண்டர்.
வளைய வளைய இதையே சுற்றிக் கொண்டு என் வாழ்க்கையைக் கழித்து விட வேண்டுமா? - முடியாது - எந்த காரணத்தை முன்னிட்டும் முடியாது. ராஜாமணிக்கு உரத்த குரலில் சபதம் கூற வேண்டும் போலிருந்தது.
வெறிச்சிட்டிருந்த ஆனந்தபவனில் கொட்டு கொட்டென்று விழித்தவாறு மழை பெய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை.
எங்கே போவது?
வீடு ஒரு மௌனச் சிறை.
நண்பர்கள் ஒவ்வொருவரையாக நினைத்தான். எக்ஸ்டென்ஷனில் சங்கர் இருப்பான். அவனுக்கு சோமையாவின் கடிதத்தைச் சொன்னால் ஆனந்தத்தால் துள்ளிக் குதிப்பான். எத்தனையோ அந்தரங்கங்களை அவனிடம் தான் ராஜாமணி பரிமாறிக் கொள்வான்.
கொட்டும் மழையை லட்சியம் செய்யாமல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் நடந்தான். கிரிக்கெட் விளையாடும் ஈத்கா மைதானத்தைப் பார்க்க வேண்டுமென்று ஆவல் முளைத்தது. தாலுக்கா ஆபீஸ் வழியாகப் போவதைத் தவிர்த்து வேண்டுமென்றே அதிகமாக நடக்கிற தூரத்தைத் தேர்ந்தெடுத்தான்.
ஈத்கா மைதானம் மழைப் பந்தலில் கசகசத்துக் கொண்டிருந்தது.
சம்பந்தமின்றி ஜமுனா நினைவு வந்தது.
இந்நேரம் அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்? சமையல் முடிந்து பத்திரிக்கை படிப்பாளா? ரங்கையர் வீட்டில் இருப்பார். இல்லையென்றால் மனப் புழுக்கத்தையெல்லாம் அவளிடம் போய்க் கொட்டலாம்.
‘கேட்டுக் கொள்ள மாட்டாளோ... இதையெல்லாம் அவளிடம் சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லை என்று முகத்தில் அடித்துச் சொல்வாளோ?’
முழங்காலுக்குக் கீழே பாண்ட் நன்றாக நனைந்து விட்டது. சங்கர் வீட்டுக்குப் போய் பாண்டைக் கழற்றிப் போட்டு விட்டு லுங்கிக் கட்டிக் கொள்ளலாமென்று நினைத்தவாறு நடந்தான். அவன் வீடு வந்தது. வெளியே மூடியிருந்த இறக்கைக் கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
அவனுடைய அம்மா மட்டும் கட்டிலில் இருமிக் கொண்டு படுத்திருந்தாள்.
“சங்கர் இல்லியேப்பா... மழைக்கு முன்னாடியே பொறப்பட்டான். எங்கே போனானோ?”
“சரி... நான் வர்றேன்.”
ஏமாற்றம் தாங்காமல் திரும்பினான்.
“மழையா இருக்கே? நின்னப்பறம் போயேன்.”
“இல்லேம்மா நான் அவசரமாப் போகணும்.”
விச்ராந்தியாக வெறிச்சோடியிருந்த எக்ஸ்டென்ஷன் தெருக்களில் மழை வெள்ளம் ஓடிற்று.
எல்லா கதவுகளும் அடைந்து விட்ட மாதிரி அவனை எல்லோரும் புறக்கணித்துத் தெருவில் நிறுத்தியது போல ஒரு முறிவு. எங்கே போவது?
குடையின் மீது படபடவென்று கற்கள் விழுவது போல் சப்தம், தெருவில் ஆலங்கட்டிகள் இறைந்து அவன் முழங்காலின் மீது தெறித்தன. ஒன்று பலமாக விழுந்தது. அப்பாடா, என்ன வலி!
ராஜாமணி ஏதோ ஒரு வீட்டு ஓரமாக ஒதுங்கினான். படியேறி நிலைத் திண்ணைகள் தெரிந்த பகுதியில் நின்றான். அது யார் வீடு எங்கே நிற்கிறோம் என்ற பிரக்ஞை கூட இல்லை.
ஆலங்கட்டிகள் புளியம்பழம் போல் உதிர்வதை ரசிக்க முடியாமல் அரைச் சலிப்போடும் அரைச் சோர்வோடும் ஜடமாகி நின்றான்.
“உள்ளே வந்து நிக்கறது தானே!” - பின்னால் ஒரு பெண் குரல், திடுக்கிட்டுத் திரும்பினான். நிலைத் திண்ணைக்கப் பின்னால் நெடிய கம்பி அடைப்புக்கு அப்புறம் மழமழவென்ற சிவப்புக் காரையில் விசாலமான திண்ணையைத் தாண்டி ஜன்னல் அருகில் ஒரு சிரிப்போடு அவள் நின்று கொண்டிருந்தாள்.
ராஜாமணிக்கு முதலில் தெரிந்தது அவள் நெற்றியிலிருந்து வட்டமான குங்குமப் பொட்டுதான். மை தீட்டிய பெரிய கண்கள். கண்ணைச் சிரிக்க வைத்து, மனசில் எதையோ சிதைக்கிற மாதிரி ஒரு பார்வை. தாம்பூலத்தால் ரத்தமாகச் சிவந்திருந்த பெரிய உதடுகளில் பிரியம் என்ற வலையில் இழைகளாய் நீண்ட சிலந்திப் புன்னகை.
‘இந்த வீட்டின் பக்கமா ஒதுங்கி விட்டோம் என்று அவனுக்கு திக்கென்றது. இருக்கட்டும் பரவால்லே” என்ற அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“அட மழையிலே நனையாமே திண்ணையிலே கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போறது.”
ராஜாமணிக்கு இறங்கி நடந்து விடலாமா என்ற அச்சம் வந்தது. வெகு தூரத்துக்கு வீடுகள் இல்லை.
‘நான் ஏன் பயப்பட வேண்டும், என்னை மீறி இவள் என்ன செய்து விடப் போகிறான்?’ என்று அவன் திடப்படுத்திக் கொண்டான்.
இப்போது அவள் ஜன்னலை விட்டு அகன்று நிலைக் கதவைத் திறந்து கொண்டு நெடுங்கம்பிகள் அடைத்த கதவையும் திறந்தவாறு வெளியே அவன் அருகில் வந்து நின்றாள். ராஜாமணி அவளைப் பார்க்கக் கூடாது என்று வேறுபுறம் திரும்பி நின்றான்.
பட்டுப் புடவையும் சென்ட்டும் தாம்பூலமும் மல்லிகையும் ஒன்று மாற்றி ஒன்று மணத்து அவன் மனோபலத்தைப் பரீட்சை செய்தன.
“ஆலங்கட்டி மழை இல்லே, இப்படிப் பேஞ்சி ரொம்ப நாளாச்சு. அப்பப்பா! என்ன ஜிலுஜிலுன்னுது!”
அவள் பேச்சுக் கொடுத்தாள். அந்தக் குரலில் ஓர் இனிமை. உயிர் கவ்வும் மோகன இனிமை.
“ஆமாம்” அவன் திரும்பாமல் பதில் சொன்னான்.
“ஏன் பிடிவாதமா இங்கே நிக்கறீங்க? உள்ளே வந்து கொங்ச நேரம் உட்கார்றது... நான் என்ன ஒங்களை முழுங்கிடவா போறேன்?”
அஸ்திரங்களைப் பிரயோகிப்பதில் அவள் சாமர்த்தியசாலி போலிருக்கிறது.
“எதுக்கு சிரமம்” என்றபடி அவள் பக்கம் ராஜாமணி திரும்பினான்.
‘அப்பா! அது என்ன மதமதவென்று மஞ்சள் எலுமிச்சை நிறமாய் நெடு வடிவில் கடைந்து வைத்த மேனி. அவள் மேல் திரும்பிய பார்வையை உடனே எடுக்கத் தவறி விட்டான் ராஜாமணி. வயது முப்பதோ கூடவோ... பருமன் அதிகம் தான். ஆனால் பூதாகாரமாக இல்லை. அந்த உயரத்திற்கு இசைவாய் இருந்தது. நீராவி மாதிரி தெரிந்த கறுப்பு ஃபுல்வாயில் ஜாக்கெட்டில் ஜாக்கெட் பிடிப்புக்குக் கீழே பிதுங்கிய சதை, பொற் பூக்கள் இறைத்த முந்தானையின் நழுவல் வேண்டுமென்று தானா!
‘தெய்வமே! எனக்கு என்ன நேரப் போகிறது?’
திறந்த வயிற்றிலும் இடைச் சரிவிலும் அந்தக் கறுப்பு ஜாக்கெட்டில் ஊடாடிய ப்ராவின் பட்டையிலும் அவன் பார்வை இடறி இடறி விழுவதை அவனால் தடுக்க முடியவில்லை.
மழை திசையை மாற்றிக் கொண்டு அவன் நிற்பதற்கு நேர்முகமாயிற்று.
“ஐயயோ! நனைஞ்சுட்டீங்களே! ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கணும்? உள்ளார வந்து நிக்கப்படாதா?” அவள் வாஞ்சை குழைய அழைத்தாள்.
மனமுறிவுக்கு அப்பேர்ப்பட்ட ஒரு கரிசனம் அப்போது இதமாக இருந்தது.
ராஜாமணி படியேறி உள்ளே போய், சிவப்புக்காரை போட்டத் திண்ணையில் உட்கார்ந்தான். மடித்து வைத்த குடையை எங்கே வைப்பது என்று தெரியாமல் அவன் திகைத்தபோது, “இப்படிக் கொடுங்க!” என்ற அவன் கையை உரசியவாறு அவள் வாங்கினாள். மெத்தென்ற அந்த ஸ்பரிசம் பட்டதும் ராஜாமணியின் உடம்பில் ஒரு ஜுர நடுக்கம் உண்டாயிற்று.
“ஒடம்பெல்லாம் நனைஞ்சு போச்சே! இருங்க, துண்டு கொண்டு வர்றேன்” என்று அவள் உள்ளே போய் ஒரு டர்க்கிடவலை எடுத்து வந்து நீட்டினாள். கும்மென்றுஅந்த டவல் மணத்தது. அவன் வாங்கி முழங்கைகளையும் தலையையும் துடைத்துக் கொண்டான்.
“இந்த மழையிலே அப்படி என்ன வேலையோ...?” அவன் உரிமையும் செல்லமும் கலந்து கோபித்துக் கொண்டாள்.
“ஒரு ஃபிரண்டைப் பார்க்க வந்தேன்” - அவன் மிடறு வியங்கியவாறு பதில் சொன்னான்.
“அடடே பேண்ட் எல்லாம் நனைஞ்சு போயிருக்க. சட்டையும் தொப்ப கட்டையாகி இருக்கு. உள்ளே லுங்கி வச்சிருக்கேன். வாங்க கொஞ்ச நேரம் கழட்டிக் காயப் போடுங்க.”
அவன் மனத்தோடு பலப்பரீட்சை செய்தான்.
“ஏன் இப்படிக் கூச்சப்படறீங்க? வீட்டிலே யாரும் இல்லே. நான் ஒண்ணும் ஒங்களை மென்னு முழுங்கிடமாட்டேன்.”
முறியடிக்கப்பட்டவன் போல் அலைக் கழிந்தான். ராஜாமணி, அவனால் மேலும் பலப்பரீட்சை செய்ய முடியவில்லை. அவள் கை சுவாதீனமாக அவன் புஜத்தைத் தொட்டது.
... ... ... ...
எவ்வளவு குழைவாக, சுபாவமாக, சகஜமாக, நளினமாக அவள் அவனை மென்று விழுங்கி விட்டாள்!
எதிரில் பிளாஸ்டிக் கயிற்றில் அவன் பேண்ட்டும் சட்டையும் அவன் இரையானதன் சாட்சியங்களாகத் தொங்கின. இரை தின்ற மலைப் பாம்பு போல் கட்டிலில் அவன் மார்பின் மீது அவள் நெளிந்தாள் கட்டிலின் விளிம்புக் கட்டை மீது அவளது பட்டுப்புடவை குப்பையாக விழுந்திருந்தது.
“பார்க்க ரொம்பக் கூச்சமான பிள்ளை மாதிரி இருந்தது அடேயப்பா!”
அவள் வார்த்தைகள் ஈயமாக அவன் காதில் விழுந்தன. அவளது செருகிய விழிகளும் முகமெல்லாம் தீற்றிய மாதிரி கலைந்த பொட்டும் படுக்கையில் சிதறிய மல்லிகையும் அவனுக்குக் குமட்டின.
‘ஜமுனா... ஜமுனா... நீ என் என்னைக் கைவிட்டாய்?’
சாக்கடையில் ஒரு புழு மாதிரி நெளிவதாக ராஜாமணி உணர்ந்தான்.
எந்த முகத்தோடு வீட்டுக்குப் போவது? அந்த வீட்டு வாசலை மிதிக்க எந்தத் தகுதி இன்னம் மிச்சமிருக்கிறது?
ராஜாமணி அவளை உதறிக் கொண்டு எழுந்தான். வெளியே மழை நின்றிருந்தது.
‘விதியே, எந்த அதலபாதாளத்திற்கு என்னைத் தயார் செய்கிறாய்? இது ஏன் நடந்தது? ஏன்? என்னால் ஏன் அவள் என் முதுகைத் தடவிய போது உதறிக் கொண்டு ஓடிப் போக முடியவில்லை?’
நான் நிராதரவாக இருப்பதை எவ்வளவு சுலபத்தில் இவள் யூகித்து விட்டாள்.
‘என் லட்சியங்கள்... ஜமுனா... எல்லாம் இவ்வளவு தானா? நான் சகதியில் மிதிபடத்தான் பிறந்திருக்கிறேனா வெறும் உடம்பின் சதைச் சூட்டில் கருகி விடும் சாம்பல் பிராணி தானா நான்?’
ராஜாமணி ஈட்டியால் தன்னை மானசீகமாகக் குத்திக் கொண்டான். கத்திகளால் கிழித்துக் கொண்டான்.
‘இவள் எதற்கு என்னை மயக்கினாள்? காசுக்கா...?’
சட்டை அணிந்து கொண்டு பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு அவன் மணிபர்ஸை எடுத்தான். இழவுச் சாப்பாடாக இருந்தும் பில் கொடுக்கும் நோக்கத்தில், நாலைந்து நோட்டுகளை நீட்டினான்.
“ப்பூ! பணமா? ஒனக்கு வேணும்னா சொல்லு. நான் தர்றேன்!”
அவள் வெட்கமின்றி அலட்சியமாகச் சிரித்தவாறே இன்னும் கட்டிலில் படுத்திருந்தாள். ரத்தப் பசி கொண்ட பிசாசைப் பார்ப்பது போல் அவளைப் பார்த்துப் பயந்தான்.
“அடிக்கடி வந்து போய்ட்டிரு. எப்ப வந்தாலும் ராத்திரி ஒன்பது மணிக்கு மேலே வா...” அவள் எழுந்து வந்து சட்டையணிந்த அவன் மார்பின் மீது மீண்டும் விழுந்தாள்.
“சீ” என்று உதறிவிட்டுக் குடையை எடுத்துக் கொண்டு அவன் தலை குனிந்தவாறே திரும்பிப் பார்க்காமல் வெளியேறினான்.
முற்றிலும் நம்ப முடியாத கேவலமாக எல்லாம் தோன்றிற்று. அந்த உடம்பிற்கு எத்தனை பசி. அந்தப் பசியைத் தணிக்க மீண்டும் மீண்டும் தணிக்க ஒரு கருவியாகத் தான் இழிந்து போனதை நினைக்க, துக்கம் ராஜாமணியின் தொண்டையை அடைத்தது.
‘ஜமுனா.. ஜமுனா! உன்னை நினைப்பதற்குக் கூட எனக்கு யோக்யதை போய்விட்டது.’
மழை நீர் வடிந்த சாலையில் பிரவேசித்தபோது அவன் சற்றுத் தெளிவுற்றான்.
பறந்து போகத் துடிக்கும் மனசிற்கும், உதைத்து எழுந்து நட்சத்திரமாகச் சீறிக் கொண்டு போக விரும்பும் பாதைக்கும் கன்னத்தில் அடி விழுந்தது போல் ஒரு பாடம்.
காவல் இல்லாத வாழ்வை, காக்கையும் நரிகளும் கொத்தித் தின்றுவிடும் என்று ஓர் எண்ணம் எழுந்தது. அவன் உடம்பு மெல்ல நடுங்கிற்று.[தொடரும்]


No comments:

Post a Comment