Wednesday, 20 September 2017

ஜமுனா:18

ஜமுனா:18
டப்பென்று கர்ண கடூரமாகப் பெட்டி மூடிய மாதிரி ஓர் ஓசை. உடனே ணிங்ங்ங் கென்று ஒரு ஸ்பிரிங் விரிந்து அதிர்ந்த ஒலி. அதைத் தொடர்ந்து பரபரவென்று பிறாண்டியவாறு ஒரு ஜந்துவின் பதைப்பு.
மோனிகா மில்லர் கொடுத்த கடிதத்தை வாசித்துக் கொண்டிருந்த ரங்கையர் நிறுத்தி விட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தார்.
டப்பென்ற ஓசையைக் கேட்டதும் திடுக்கிட்டுத் துள்ளி விழுந்த குழந்தை யோகி, அந்த அசாதாரண ஓசையால் பயந்து போய் வீறிட்டு அழத் தொடங்கி விட்டான். நின்று கொண்டிருந்த மோனிகா மில்லர் குனிந்து குழந்தையைத் தூக்கினாள். அதிர்ச்சியில் ஓரிரு நொடிக்குள் அவன் கீழே போட்டிருந்த சுத்தமான வெள்ளைத் துணியை நனைத்து விட்டிருப்பது தெரிந்தது. குழந்தைக்குப் போட்டிருந்த ஜட்டியும் நனைந்து விட்டது.
“கீலே போய் துணி மாத்தி கொண்டு வர்றேன்” என்று சொன்னான் மோனிகா.
ராகவன் அவளைத் தமிழில் பேச வைக்கிற முயற்சியில் சுமாராக வெற்றி பெற்றிருந்தான். அமெரிக்க உச்சரிப்பின் விரைவைத் தவிர்த்து அவள் பேசும் போது யோசித்து, பேச வேண்டியதை மனசிற்குள் ஒருமுறை சொல்லிக் கொள்வது போல் தென்பட்டது.
யோகியைத் துணியோடு தூக்கிக் கொண்டு மோனிகா வெளியேறினாள்.
அவள் வெளியேறியதும் பிறாண்டும் ஓசை பலத்தது. பதைப்புடன் கூரிய நகங்கள் இரும்புத் தகடுகளைக் கீறுவது போல் ணிணிங் ணிங்கென்று ஓசை சுத்தமாகக் கேட்டது.
ரங்கையர் கடிதத்தோடு எழுந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தார். கட்டிலின் கீழே எலிப்பொறி.
பின் பக்கம் திரும்பியிருந்த எலிப் பொறி ஒன்றின் மேலே அடித்திருந்த தகரச் சட்டங்களில் மூக்கை நுழைத்துக் கொண்டு மூக்கின் சதை விரியத் துடிக்கும் எலியின் முகம் தெரிந்தது. ரங்கையர் குனிந்து உட்கார்ந்து முழந்தாளிட்டவாறே தோள் வரை கையை உள்ளே நீட்டி அந்த எலிப்பொறியை இழுத்தார். எலி பெட்டிக்குள் இருந்தாலும் அது கையைப் பிறாண்டி விடுமோ என்ற அச்ச உணர்வு குறுகுறுத்தது.
விளக்கு வெளிச்சத்தில் எலியின் கண்கள் மின்னின. பெரிய எலி.. தனது அஜாக்கிரதையை நொந்து கொள்வது போல பீதியோடு கூரிய நகங்களால் தகரச் சட்டத்தைப் பற்றிக் கொண்டு அது தவித்தது. சட்டத்தின் இடைவெளி வழியே அவரையே இமை கொட்டாமல் வெறித்துப் பார்த்தது.
ரங்கையரின் கண்களில் நீர் கொப்புளித்துக் கொண்டு மாலை மாலையாக வழியலாயிற்று.
ஹைஸ்கூலில் படிக்கும் போது ராகவன், வீட்டில் எலித் தொந்தரவு பொறுக்க மாட்டாமல் ஓர் எலிப்பொறி வாங்கி வந்தான். அரை மணி நேரத்துக்கு ஓர் எலி என்று பட்பட்டென்று ஐந்தாறு எலிகள் பொறியில் விழுந்தன. ஒவ்வொரு முறையும் எலியை அடித்துக் கொல்லவோ, பூனைக்கு எதிரில் விடவோ மனசில்லாமல் இரண்டு பர்லாங் தூரம் நடந்து போய் ஏரிக்கரை ஓரமாக எலியை விட்டுவிட்டு வந்தான்.
“கெடந்துட்டு போறது விட்டுடுடா, காலமே பார்த்துக்கலாம்” என்று ஒரு நடையின்போது ரங்கையர் குறுக்கிட்டார்.
“சும்மாப் பிறாண்டிட்டு மனசைக் கெடுத்துண்டிருக்கேப்பா” என்று ஒரு நடைச் சோர்வு பார்க்காமல் தூக்கிக் கொண்டு கோனான் ராகவன்.
ரங்கையருக்கு அந்த ஞாபகம் வந்து விட்டது. கன்னத்தில் வழிந்த கண்ணீர் அவரது பரிதாபமான எதிர்காலத்தை அவருக்கே ஞாபகமூட்டிற்று. இனிமேல் அவருக்குக் கொடுத்து வைத்திருப்பதெல்லாம் கண்ணீர் தான். ஊற்று ஊற்றாய்ப் புறப்பட்டு, எந்த நதிமூலம் உற்பத்தி செய்கிறதோ அதுகூட வற்றி ஒருநாள் காய்ந்து போகும் கண்ணீர்தான்.
‘என்ன மாயமாக மனிதனின் மமதை அடிபட்டுப் போகிறது... காற்றில் புகையாக நூல் போல் பிசிறுவிட்டுப் பிரிந்து கரைந்து என்ன மந்திரமாக அவனது நம்பிக்கைகளும் பந்தயங்களும் சூன்யமாகி விடுகின்றன. திடீரென்று நாடகத்தில் திரை விழுந்த மாதிரி எல்லாம் எப்படி மூடி இருள் சூழ்ந்து விடுகிறது!’
ரங்கையரின் புத்திர சோகம் அவரது விம்மும் மார்பினுள் வயிற்றில் எரியும் அக்னியின் நாக்கு தீண்டியது போலச் சுட்டது. அநாதி காலமாக மார்பின் மீது கட்டிய கையோடு எல்லாவற்றையும் பார்த்து வரும் அந்தர்யாமி ஒருவனின் சித்திரம் அவர் மனசில் தெரிந்தது.
நான் என்ன கொடுமை பண்ணினேன்? எனக்கு ஏன் இந்தத் தண்டனை? என்று அவர் மனம் புழுவாய்த் துடித்தது.
மௌனம், மௌனம் மனிதர்களின் துயர்களும் துயரில் பிறக்கும் ஞானங்களும் தொட முடியாத தொலைவில் ஒரு மௌனம். என் துயரம்... என் துக்கம் என்று கூவும் கூக்குரல்களையே பதில்களாக்கி எதிரொலியாய்த் திருப்பி அனுப்பும் மௌனம்.
நாலரை மணி வரை நம்பிக்கை வேராக ஊன்றியிருந்த ஒருவன். ஒரே பிள்ளை, சாம்பலாய்ப் போய் ஒரு வாரமாகி விட்டது என்று ஐந்து மணிக்குத் தெரியும் போது கம்பீரம் குலையாத ஒரு மௌனம்.
ரங்கையருக்கு யாவும் ஒரு முடிவினை நெருங்கி விட்டால் தோன்றும் அச்சம் தோன்றியது.
பொறியினுள் சிக்கிய எலி, விரல் நகங்களால் கீறி அந்தத் தகரச் சட்டத்தைப் பிய்த்து விடுவது போல் முயற்சித்தது. பிறகு தன் முயற்சியின் வியர்த்தம் தனக்கே உறைத்தது போல் சட்டத்தின் வழியே பொருள் விளங்காத ஒரு பார்வையோடு பரிதாபமாக அவரைப் பார்த்தது.
ஸ்ருதியில் அவர் மனதை ஈர்த்த அந்த சுலோகம் மௌனத்தின் கதவிடுக்கு வழியே நழுவி வந்த ஓசை போல்அவருக்கு ஞாபகம் வந்தது.
பயாதஸ்யா க்னிஸ்தபம் பயாத்தபதி சூர்ய:
பயாத்திந்திரஸ்ச வாயுஸ்ச மிருத்யுர் தாவதி பஞ்சம:
‘இதன் அச்சத்தினால் நெருப்பு எரிகிறது. சூரியன் வெப்பத்தைத் தருகிறான். இந்திரனும் வாயுவும் தத்தம் தொழிலைச் செய்கின்றனர். மரணம் உலகத்திலே உலாவுகின்றது.’
ரங்கையர் மேல் துண்டால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கடிதத்தைப் பார்த்தார்.
மனிதனுக்கு சாத்தியமானது அது மட்டுமே. வழியும் கண்ணீரைத் துடைத்து கொள்வது.. அவர் கடிதத்தைப் படிக்கத்தொடங்கினார்.
அது ராகவனின் கடிதம். தவும் சியும் நியும் கொம்புகளும் சுழிகளும் முதிர்ந்த தெளிவுக்கு வந்த மனசின் அமைவைத் தெரிவித்தன.
“தேவரீர் தகப்பனார் அவர்களுக்கு,
மிக்க வினயத்துடன் நமஸ்கரித்து ராகவன் எழுதிக் கொள்ளும் கடிதம். க்ஷேமம்.
முந்தாநாள் எங்கள் கப்பலின் மாஸ்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த என்ஜினீயரிங் க்ரூவைச் சேர்ந்த வினாயக் மாச்வே என்ற மராத்திய இளைஞன் ஒருவன் கால் சறுக்கிக் கீழே விழுந்து ஸ்தலத்திலேயே காலமாகி விட்டான்.
இப்படி மரணம் திடீர் திடீரென்று தலைகாட்டும் போதெல்லாம் எனக்கு இப்போது பயம் ஏற்படுவதில்லை. எல்லாவற்றையும் எதிர்பார்த்துக் கொண்டு, எதற்கும் சித்தமாகக் காத்திருப்பதில் ஒரு நிம்மதி புலப்பட்டு அவ்விதமே இருந்து வருகிறேன்.
எனினும் கடந்த இரண்டு வருஷங்களாகத் தங்களிடம் மறைத்து வைத்திருக்கும் விஷயத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று இந்த இரண்டு தினங்களாக என் மனம் துடிக்கிறது.
இது தங்கள் பார்வையில் பட்டவுடனே தாங்கள் எவ்வளவு துடிப்பீர்கள் என்ற சங்கதியும், தங்கள் பாசத்திலிருந்து நான் எவ்வளவு விலகி விடுவேன் என்ற விஷயமும் என்னை இவ்வளவு நாள் இதைத் தெரிவிக்காமல் மறைத்து வைக்கத் தூண்டின.
இப்போது இதற்கு நாள் வந்துவிட்டது.
அப்பா, எனக்குக் கல்யாணமாகி ஓர் ஆண் குழந்தைக்கு நான் தந்தையும் ஆகிவிட்டேன்.
என்னுடன் பணிபுரிந்த சிநேகிதன் பெர்னார்ட் மில்லர் என்ற அமெரிக்கனின் சகோதரியான மோனிகா மில்லர் என்றபெண்ணை நான் விவாகம் செய்து கொள்ள வேண்டிய விதிவசம் நேரிட்டு விட்டது.
அந்தக் குடும்பம் சான்பிரான்ஸிஸ் கோவில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் மார்த்தா மில்லர் என்ற அபூர்வமான அம்மையாரின் கண்காணிப்பில் வளர்ந்த உத்தமமான குடும்பம். தேசம் தேசமாகச் சுற்றுகின்ற இந்தத் தொழிலில் எல்லா இடங்களிலும் எல்லா வகைப்பட்ட ஜனங்களும் இருப்பதை நான் கண்டேன். லௌகீகமும் ஆத்மீகமும் இந்தியாவைப் போலவே எங்குமிருப்பதை நான் கண்டேன்.
மார்த்தா மில்லரின் பாட்டனாரும் பாட்டியுமான பார்பரா கோக்லீயும் அப்ரஹாம் கோக்லீயும் சுவாமி விவேகானந்தர் சான் பிரான்ஸிஸ்கோவில் திருமடம் அமைக்கச் செய்த முயற்சிகளுக்குத் துணை இருந்தவர்கள்.
என் நண்பன் பெர்னார்ட் மில்லருடன் எங்கள் கப்பலில் அமெரிக்கா செல்லும் போதெல்லாம் நான் அவர்கள் வீட்டிற்குப் போய் வந்திருக்கிறேன்.
சம்பிரதாயங்களும் ஆசாரங்களும் வித்தியாசப்பட்டிருப்பினும், சுவாமிஜி அமைத்த மடத்திற்கு இன்னும் போய் வந்து கொண்டு, லௌகீக வாழ்க்கைக்கு மேற்பட்ட தூய வாழ்க்கை ஒன்றை அவர்கள் நடத்தி வருவதை நான் பார்த்தேன்.
ஹார்வர்டு சர்வகலா சாலையில் மூன்றாம் வருஷம் வரை கீழ் நாட்டுத் தத்துவம் படித்துக் கொண்டிருந்தாள் மோனிகா மில்லர். எனது சந்திப்புகளில் எவ்வித விகல்பமும் இல்லை. என் மனசில் களங்கமும் ஏற்பட்டதில்லை.
திடீரென்று ஒருநாள் பாய்லர் வெடித்து பெர்னார்ட் மில்லர் காலமானான். அடுத்த தடவை அமெரிக்கா போனபோது துக்கம் விசாரிக்க நான் சான்பிரான்ஸிகோ போனேன். அங்கே மகனை இழந்த துயர் தாங்காமல் மார்த்தா மில்லர் மாரடைப்பினால் காலமாகி, சவ அடக்கம் முடிந்து மோனிகா வீட்டிற்குத் திரும்பி வந்திருந்தாள்.
எனக்கும் பெர்னாடிற்கும் இடையே இருந்த நட்பை மோனிகா நன்கு அறிவாள். தாய் இழந்த துக்கமும் தமையன் போன துயரமும் ஒரு சேரத் தாக்கி விடவே அவன் என் முன் மனமுடைந்து கதறினாள். அமெரிக்க வாழ்க்கை முறையில் பந்தபாசங்கள் மிகவும் குறைவு. ஒரு குடும்பம் முறிந்து போனால் அதில் அநாதையாக மிஞ்சுகிறவர்களை இந்திய சமூகம் அனுதாபத்தோடு ஏற்று தம் குடும்பத்தவர் ஆக்கிக் கொள்ளும் தன்மை அங்கே கிடையாது.
நான் ஒரு வாரம் சான்பிரான்ஸிஸ்கோவில் அவள் குடியிருந்த வீட்டில் தங்கியிருந்தேன். மார்த்தா மில்லரின் கடன்களுக்காக வீட்டைக் காலி செய்ய அதிகாரிகள் வந்தார்கள். அவள் அநாதையானாள்.
அந்த நிலையில் அவளை அங்கே விட்டு விட்டு வர எனக்கு மனம் சம்மதிக்கவில்லை. திடீரென்று தன் வாழ்வில் விழுந்த இடியைத் தாங்குமளவு மோனிகாவிற்கும் மனோதிடமில்லை.
தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுமாறு கண்ணீர் வழிய அவள் கேட்டுக் கொண்டாள். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அநேக தயக்கத்திற்குப் பிறகு அவளை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.
அப்பா, ஒரு வேளை பெர்னாடிற்கும் வினாயக் மாச்வேக்கம் நேரிட்டது எனக்கும் நேரிடலாம். அப்போது எவ்வளவு நீசன் இவன் என்று என்னை திரஸ்கரித்த போதிலும் ஒன்றைத் தாங்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இது நாள் வரை தங்கள் புத்திரன் என்ற கௌரவத்திற்கு ஹானி நேரும்படியான எந்தக் காரியத்தையும் நான் செய்யவில்லை.
மோனிகா மில்லரை நான் வைதீக முறைப்படி விவாகம் செய்து கொண்டேன். அவளது ரத்தத்தில் பூர்வீக வாசனையாக மகோன்னத ஹிந்துவான சுவாமிஜியின் வாக்கும் ஆசிகளும் கலந்திருக்கின்றன.
மோனிகாவை என் புத்திக்கும் முயற்சிகளுக்கும் எட்டிய விதத்தில் நான் ஹிந்துப் பெண்ணாக்கி இருக்கிறேன். சிரத்தையும் நம்பிக்கையும் அவளைப் புனிதவதியாக்கியுள்ளன.
இது தர்மத்திற்கும் சாஸ்திரத்திற்கும் விரோதமானது அல்ல என்பதைத் தங்கள் பாதங்களில் பணிந்து வினயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனுதர்ம சாஸ்திரம், ஓடிச் சென்று அடையும் கடலின் இயல்பை எய்தும் ஆற்றைப் போல் தனது கணவனின் இயல்பினையே அவன்பால் இணையும் மாதும் அடைகின்றனள். சான்றாக வசிஷ்டரை மணந்த அக்ஷமாலையும் மந்தபால முனியின் மனைவியான சாரங்கியும் தாழ்குலப் பெண்களாக இருந்த போதிலும் தங்கள் கணவரான அம்முனிவர்களின் மேன்மையான தன்மையை அவர்களும் பெற்றுப் போற்றத்தக்கவர் ஆயினர் என்று கூறுவதைத் தாங்கள் அறிவீர்கள்.
அவர்களையொத்த மகானுபாவர்களின் பாத தூசிக்கும் நான் சமமானவன் அல்ல. எனினும் தங்கள் குமாரன்.இந்த நினைப்புடன் நான் செய்த காரியத்திற்கு தங்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பிப் பணிந்து வேண்டுகிறேன்.
ஜமுனாவின் விவாகம் முடிந்த பின் இதைத் தெரிவிக்க எண்ணியிருந்தேன். ஆயினும் இப்போது வேளை வந்திருப்பதால் எழுத நேரிடுகிறது. நான் எவ்விதக் குற்றம் செய்திருந்தாலும் என்னை மன்னித்துத் தங்கள் புத்திரனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் பிரிய குமாரன்,
ஆர். ராகவன்
அந்தக் கடிதத்தின் மூலம் ராகவனுடைய பணிவும் மனத் தூய்மையும் ரங்கையருக்கு ஞாபகம் வந்து அவருடைய கண்களில் மீண்டும் ஓர் ஊற்று கிளம்பிற்று.
இரவு ஒன்பதரை மணி வரை ரங்கையர் மோனிகா மில்லருடன் பேசிக் கொண்டிருந்தார். இந்திய சமூகத்தில் விதவை என்பவன் சாஸ்திர விதிப்படி எப்படி இருக்க வேண்டுமென்று சொல்லிப் பார்த்தார். இங்கேயே விதவைத் திருமணம் என்பது சமூகம் இப்போது ஏற்றுக் கொண்ட மாற்றமாகி விட்டதைச் சுட்டிக் காட்டினார்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டாள். மோனிகா மில்லர். அவள் விரும்பும் பட்சத்தில் அமெரிக்காவுக்கே ஜான்ஸனின உதவியோடு திரும்பி அனுப்புவதாகவும் ரங்கையர் கூறியதை அவள் மௌனமாகக் கேட்டுக் கொண்டாள்.
தீர்க்கமாக யோசித்து ஒரு முடிவுக்கு வரும்படி மோனிகாவிடம் அவர் சொன்னபோது தான் அவள் வாய் திறந்தாள்.
“அவருக்கு அப்ரம் வேர் ஒருத்ஙதர் கிட்டே நான் வால மாட்டேன். ஐப்ரஃபர் டு டை ஆஸ் ஹிஸ் விடோ (அவரது விதவையாகச் சாவதையே நான் மேலாகக் கருதுகிறேன்.)”
அந்த வார்த்தைகளை அவள் சொல்லும்போதுமோனிகாவின் முகத்தில் அபூர்வமான சாந்தி நிலவியது. அசையாத தீர்மானம் தெரிந்தது. ரங்கையரின் உடல் புல்லரித்தது.
“இன்னும் இரண்டு நாட்கள் யோசித்துத் தீர்மானம் செய். அதுவரை ஜான்ஸனின் பாதுகாப்பில் நீ இருப்பது தான் நல்லது” என்று கூறி விட்டு அவர் வீட்டிற்குப் புறப்பட்டார்.
பொறில் அகப்பட்ட எலியை ஒரு கோணியில் போட்டு அறைந்து கொன்று விட ஒரு மாணவன் பொறியைக் கோணிக்குள் திறந்து விட்டான்.
“அதை என்ன செய்யப்போகிறாய்?” என்று அவள் கேட்டாள்.
மாணவன் சொன்னான்.
“நோ... நோ... டோண்ட் கில் இட்... லீவ் இட் சம் வேர். (வேண்டாம் அதைக் கொல்லாதே. எங்காவது விட்டுவிடு)” என்றாள் மோனிகா.
ரங்கையருக்கு ராகவன் ஞாபகம் மறுபடியும் வந்தது.[தொடரும்]

No comments:

Post a Comment