Saturday, 23 September 2017

ஜமுனா :21

ஜமுனா :21
போர்டை யாரு எழுதினது? மாதவன் கையெழுத்துப் போல இருக்கே! நன்னா பளிச்சினு தெரியறாப்பிலே எழுதுவாளா, இப்படி வளையம் வளையமா மாவட்டை சுருட்டிண்டு இருக்காப்பிலே எழுதுவாளா...?” என்று கேட்டுக் கொண்டே படியேறி ஹோட்டலில் நுழைந்தார் ரங்கையர்.
கல்லாவில் உட்கார்ந்திருந்த ராஜாமணி எழுந்து நின்றான்.
“என்ன ராஜா... மன்னி கிட்டே பெரியண்ணாவுக்கு வேளை தவறாமே மருந்து கொடுக்கச் சொல்லி விட்டு வந்திகுக்கேன். மூணு மணிக்கு ஒரு தரம். நீ போய் கவனப்படுத்திட்டுவா. கம்ப்ளீட் ரெஸ்ட் தெவைன்னாராமே டாக்டர்... அண்ணா ஹோட்டல், ஹோட்டல்னு அடிச்சுண்டார். நான் இருக்கேனே அண்ணான்னு தைரியப்படுத்தி இருக்கேன்.”
ராஜாமணியிடம், ரங்கையர் பேசிக் கொண்டு நின்றார். முகம் வாடி டைபாய்டில் விழுந்து எழுந்த மாதிரி தேஜஸ் குன்றியிருந்தது.
அதற்குள் சமையலறைக்கும் டேபிள்களுக்கும் செய்தி போய்விட்டது. நடை வாசலில் சுப்பண்ணா வந்து நின்றார்.
வைத்தா அழுக்குத் துண்டால் மார்பில் ஓடிய வியர்வையைத் துடைத்தவாறு நின்றான். சர்வர் மணி சுப்புணி - ராமையா - ஐயாசாமி அரவை கணபதி. ஒவ்வொருவராய் வெளியே வந்து விட்டார்கள்.
“என்னத்துக்கு கூட்டமா நிக்கறேள்? டேபிளைக் கவனியுங்கோ. முனிசிபாலிடியிலே டீபார்ட்டிக்கு ஆர்டர் கொடுத்திருந்தாளே, என்ன ஸ்வீட் போட்டீர்?
“பாதாம் பர்ஃபி...”
“கவனிச்சுக்குங்கோ... யாரோ மந்திரி வர்றாராம். முனிசிபல் வரவேற்பு. காரத்திற்கு பாம்பே மிக்ஸர் போட்டுடுங்கோ... என்ன ராமையா, மத்தியானம் என்ன சாம்பார்...
“கருணைக் கிழங்கு தான் அண்ணா...”
“காலமே பொங்கல் போடலியா சுப்பண்ணா...?”
“காய்கறி இல்லேண்ணா... பொங்கல் போட்டா கொத்ஸு போடணும்...”
“காய்கறி இல்லியா... மரியதாஸ் எங்கே?”
“கண்ணப்பனை வாங்கி வரச் சொல்லிவிட்டு அவர் சப்ரிஜிஸ்திரர் ஆபீசிலே ஏதோ பத்திரம் ரிஜிஸ்டர் பண்ணப் போயிருக்கார். இவன் வேடிக்கை பார்த்துண்டு நின்னுட்டான். எங்கியோ கல்யாண கிராக்கின்னு மொத்தமா வாங்கிண்டு போயிட்டா.”
தேரோட்டம் நேர்ப்பட்டு விட்டது. ரங்கையர் வந்து விட்டார். சாரதியும் அவரது கணக்குப் பிசகாத ஆக்ஞையும் வந்து விட்டன. ஆள் ஆளுக்கு ஏறியிருந்த இன்னதென்று விளங்க முடியாத பளு சரேலென்று இறங்கி ஓடி விட்டது.
எல்லோரும் அங்கங்கே நின்றிருந்தார்கள். ரங்கையர் ஒவ்வொரு முகத்தையும் திருப்பிப் பார்த்தார். அவருக்கு விதி நேர்ப்பித்தக் கொடுமைகளில் பங்கு பெறுவதற்காக அங்கங்கே ஒவ்வோர் அனுதாபங்கள் தயங்கி நின்றன. அவற்றிற்குப் பேசப் பயம்.
ரங்கண்ணாவின் கறாரிலும் கண்டிப்பிலும் அவை பழகியவை. அது மட்டுமா? அவற்றுக்கு ரங்கண்ணாவிடம் ஆறுதல்களையும் அனுதாபத்தையும் வாங்கி வாங்கித் தான் பழக்கம். அவற்றுக்கு அதைத் திருப்பித் தர வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று நேரும்  என்ற விஷயமே தெரியாது.
அவர் மார்பில் புல்லரித்து, தொண்டையும் முதுகும் தேள் விஷம் எறிய மாதிரி விறுவிறுத்தன. அவர் கூட்டி விழுங்கினார்.
பாபா அதற்குள் பக்கெட்டை எடுத்துக் கொண்டு ஹாலுக்குப் போகப் போனவன், கூட்டம் நிற்பதைப் பார்த்துத் திரும்பினான். அவனது உணர்ச்சி பொங்கும் கண்கள் ரங்கையரைப் பார்த்து ஒரு கணம் நிலைத்து நின்றன. அவன் கன்னச் சதை துடித்தது. உதடு சட்டென்று கோணிற்று.
“ரங்கண்ணா ஆ ஆ ஆ...” என்று வாய்விட்டுக் கதறினான். தயக்கங்களும் துயரும் கனத்த அந்த மௌனத்தைப் பிளந்து எறிந்தவாறு பாபாவின் கனத்த குரல் ஒரு ரிஷபத்தின் ஹூங்காரம் போல் கேட்டது. சுப்பண்ணா குமுறிக் கொண்டு வந்த துக்கத்தைத் துண்டை வாயில் பொத்தி அடைத்துக் கொண்டார்.
கணபதி குழந்தை மாதிரி விசித்து விசித்து அழுதான். உமாசங்கருக்கும் மாதவனுக்கும் தாரை தாரையாக வழிந்து கண் நனைந்தது.
“பாபா... பாபா” என்று பதறிப் போய் அவனை நெருங்கி அவனது பட்டயம் தைத்தது போன்ற அகன்ற மார்பைத் தழுவிக் கொண்டார் ரங்கையர். பேசாத அந்த மௌனியின் பெருந்துக்கம் மலை முகடுகள் சரிவதற்குச் சமானம் என்று பளிச் பளிச் சென்று எல்லார் மனசிலும் ஓடிற்று.
‘இவர்கள் எதற்கு அழுகிறார்கள்? எனக்கு அனுதாபம் சொல்ல முடியாததற்கா? எனக்கு இப்படி முடிந்ததற்கா? என்னைத் தேற்ற வந்து, நான் தேறுதல் சொல்ல நேர்ந்தது போல் இது என்ன வேடிக்கை! எத்தனை குழந்தைகள் இவர்கள். இந்த குழந்தைகளுக்கெல்லாம் ஓர் அம்மா தேவை என்கிற மாதிரி அல்லவா இவர்கள் அழுது வடிந்து நிற்கிறார்கள்! என் துக்கங்கள் துரத்துவதற்காக இவர்களையெல்லாம் விட்டு சந்நியாசியாக ஓடி விடலாம் என்று நினைத்தால் நடக்குமா? இந்த பந்தங்களின் வலை பின் இழுக்கும்போது எத்தனை நாளைக்கு அந்த மர்கட சந்நியாசம் சாத்தியமாகும்? நான் பந்தமா பட்டிருக்கிறேன்? இல்லை. தீட்சை வாங்கி பிட்சா பாத்திரத்தை ஏந்தித் தேசாந்திரம் போனால் தானா சந்நியாசம்? தன்னைத் தியாகம் செய்வதன்றோ சந்நியாசம்? எதற்கோ என்றைக்கோ என்னை நான் தியாகம் செய்து விட்டதாக நினைத்த மமதையின் மேல் ஜகதீஸ்வரி சரியான அடி கொடுத்தாள்! எப்படி புழுவாய்த் துடித்து விட்டேன்... அவள் சோதனையில் நான் தோற்றுப் போனேன்.’
‘அடி வாங்கிக் கொண்டு ஊளையிடுகிற நாய் மாதிரி ஓலமிட்டு விட்டேன்! இதோ இந்தக் குழந்தைகள் எனக்காக அழுகிறார்கள். அழுது என்னைத் தேற்றுகிறார்கள் குழந்தைகளால் தேற்றப்பட வேண்டிய சாமான்யன் நான் என்று சுட்டிக் காட்டி அழுகிறார்கள்.’
‘இந்த பாசம் என்னைப் பந்திக்கிறதோ? இல்லை இல்லை. இவர்களுக்கு நான் பந்தப்பட்டவனல்ல. ராகவனுக்கோ ஜமுனாவுக்கோ அந்தக் குழந்தை யோகிக்கோ பந்தப்பட்டவனல்ல. இந்த ஆனந்தபவன் இந்தக் குழந்தைகள்... ராகவன்... ஜமுனா... போயி... ஆனந்தராவ் எல்லோருமே என் அழுக்கை அலசி விட்டுக் கொண்டு ஓடும் நதியின் பிரவாகங்கள், நானும் ஓட வேண்டியவனே. வயிறு பசித்து வந்த ஜீவன்களுக்கு இலை போட்டுப் பரிமாறி, ஜாடராக்னியைக் குளிர்வித்து ஜீவனம் செய்ய எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. விதியை உதறி விடுதலை பெற, இன்னும் எனக்கு அதிகாரம் வரவில்லை. பெரியண்ணா ஆனந்தராவ் எப்பேர்ப்பட்ட ஞானி! ஹார்ட் அட்டாக் என்று உயிருக்குக் கெடு வைத்து விட்ட போதும் ஹோட்டல்... ஹோட்டல் என்ற கர்மாவைச் செய்ய என்ன துடிக்கிறார். விடுதலையா? இங்கேயே பெற முடியாத விடுதலை இனி எங்க கிடைக்கும்!’
முக்தாபிமானீ முக்தோ ஹி பத்தேச
பத்தாமி மான்யபி
கிம்வதந்தீதி ஸத்யேயம் யாமதி
ஸாகதிர்பவேத்
என்கிறதே சாஸ்திரம், விடுதலை அடைந்தவனாக நினைப்பவனுக்கு விடுதலையே. பந்தமுற்றோனாய் நினைப்போனுக்கு பந்தமே; நினைக்கிற நிலையே சித்திக்கிறது!
ரங்கையரின் நினைவோட்டம் அடங்கியது. சமையல் கட்டிற்குள் நுழைந்தார். ஆனந்தபவனின் அடுக்களையிலிருந்து ஸ்டோர் ரூம் வரை அவருக்குக் காத்திருந்த காரியங்களில் அவர் சீக்கிரம் மூழ்கிப் போனார்.[தொடரும்]



No comments:

Post a Comment