ஜமுனா :20
“கெழக்கு மேற்கே போனா, மேற்கு கெழக்கே வருது. எல்லாமே ஒரு சக்கரம் தான். சுத்திண்டே இருக்கற சக்கரம்.”
கிச்சடியைக் கிளறி விட்ட சுப்பண்ணா தம்பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தார். தோசை மாஸ்டர் சாரங்கன் திரும்பிப் பார்த்தான். ஏறத்தள்ளிய விறகிற்கும் கிச்சடிப் பாத்திரத்திற்கும் சுப்பண்ணா உபதேசிப்பது மாதிரி இருந்தது. வைத்தாவின் கை, யந்திரமாக டபரா செட்டுக்குள் சர்க்கரையை வீசிற்று. டிகாக்ஷன் கெட்டிலை வாத்தாக வளைத்து வளைத்து ஆர்டருக்குத் தக்க மாதிரி நிரப்பிற்று. ஒரு பட்டர் மசாலேய்ய் என்று உமாசங்கர் ஹாலிலிருந்து உத்தரவை வீசினான். டபரா செட்டுகள் கிணற்றடியில் கலகலத்தன. குக் ராமையா சாம்பாருக்கு உப்பை அள்ளிப் போட்டார். பிளைவுட் தடுப்பினுள் கடா கடா குடுகுடு என்று அரவை மாஸ்டர் கணபதியின் ஓயாத யக்ஞம் நடைபெற்றது.
முந்தாநாள் மழை பெய்து ரங்கையர் வீட்டில் புயல் வீசியதும் அவருடைய கூடு இற்று விழுந்ததும் அந்த எல்லா இயக்கங்களின் மத்தியிலும் கனத்தன.
வாழ்க்கை ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனந்தபவன் தன் துயர்களைச் செரித்துக் கொள்ள நாள் ஆகுமோ என்னவோ! ஆனால் அன்ன விசாரத்திற்கும் அதன் பாந்தவ்ய நிழலுக்கும் வருகிற கூட்டத்தை அது சாந்தி செய்ய வேண்டுமல்லவா? ஆனந்த பவன் இயங்கிற்று.
ரங்கையர் இரண்டு தினங்களாக ஓட்டலுக்கு வரவில்லை. மெனு-போர்டை மாதவன் எழுதினான். கல்லா மேடையில் சுவாமி படங்களுக்கு உமாசங்கர் தூபம் காட்டினான். பூ மாட்டினான். எவ்வளவு கூட்டத்தை எதிர்பார்த்து எத்தனை லிட்டர் அரிசி போடுவது என்று ராமையா ஆலோசனை கேட்டார்.
சுப்பண்ணாவுக்கு மாலையில் கொத்ஸு போடலாமா சாஹு போடலாமா என்ற கவலை. காய்கறி வாங்கி வரவில்லை என்று கண்ணப்பனைப் பார்த்து அஸிஸ்டெண்ட் குக் ஐயாசாமி கத்தினான். ஸ்டோர் மானேஜர் மரியதாஸுக்கு இரண்டு முக்கியமான பட்டுவாடா அயிட்டம் இன்றைக்குக் கொடுக்கப்பட வேண்டுமே என்ற உதைப்பு. லேடீஸ் ரூம் சர்விங்கில் குறுக்கிடுகிறான் என்று மணி மீது உமாசங்கர் சீறி விழுந்தான். பாபாவின் நெடிய உருவம் மட்டும் ஹாலின் குறுக்கிலும் நெடுகிலும் பக்கெட்டை எடுத்துக் கொண்டு எவர் உத்தரவுக்கும் காத்திராமல் மேஜைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது.
ஆனந்தபவனின் தேரோட்டத்தில் குதிரைகள் துள்ளித் திமிறின. ஒரு சந்த லயத்தில் ஓடிய சக்கரங்கள் தூக்கித் தூக்கிப் போட்டன. எல்லாவற்றையுவு பார்த்துக் கொண்டு என்றுமே எவரையும் அதிகாரம் செய்தறியாத ஆனந்தராவ் கல்லாவில் உட்கார்ந்திருந்தார்.
எல்லாமே ரங்கையரின் ஆக்ஞை என்ற சாட்டை தவறிப் போனதை உணர்த்தின. சாரதியின் ஸ்தானம் காலியாகிக் கிடப்பதை நினைவுறுத்தின. இரண்டு நாள், இரண்டே நாள், கல்லாவில் உட்கார்ந்து விட்டு ஆனந்தராவ் பெருமூச்சு விட்டார். இந்த பாரத்தை எத்தனை நாளைக்குச் சுமப்பது என்பது அந்தப் பெருமூச்சு களைப்பையும் சோர்வையும் அறிவித்தது.
எனினும் என்ன.. ஆனந்தபவன் தன் லட்சியமாகிய இருசை விட்டுச் சுழன்று விடாமல் இயங்கிற்று.
“என்ன மாமா... கெழக்கு, மேற்கு என்று கிச்சடிப் பாத்திரத்துக்கிட்டே விடுகதை போட்டுண்டிருக்கீங்க?” என்று வெண்ணெயை வழித்துத் தோசை மீது பூசினான் சாரங்கன்.
“எல்லாம் ரங்கண்ணா கதைதான்.”
எல்லோரும் அறிந்திருந்தார்கள். எவரும் வாய் திறக்க அஞ்சினார்கள். அதுபோலவே சாரங்கனும் மௌனமானான்.
“சுவாமி விவேகானந்தர் தெரியுமா சாரங்கா?” கிச்சடியைக் கிண்டி விட்டார் சுப்பண்ணா.
“தலைப்பா கட்டிண்டு மார் மேலே கையை வச்ச மொறச்சுப் பார்ப்பாரே, அவர் தானே?”
அவரே தான்...
“கேள்விப்பட்டிருக்கேன். நேர்ல பார்த்ததில்லே.”
“த்ஸோ...த்ஸோ... அவர் ஒன்னைப் பார்க்கணும்னு ரொம்ப ஆவலா இருக்காராம். நீ இப்படிச் சொல்லிட்டா எப்படிடா?”
“நமக்கு எங்கே மாமா டயம் கெடக்கறது? ரொம்ப பிஸி.”
“ஆமா... ஆமா... தோசை வார்த்துண்டே இருக்கியோல்லியோ... எவ்வளவு பிஸி... என்ன ஓட்டம்?”
டண் டண் என்ற தோசைப் பலகையைக் கரண்டியால் தட்டினான் சாரங்கன். உமாசங்கர், மாப்பிள்ளை மாதிரி ஸ்டைலாக நடந்து வந்தான்.
“என்னடா உமாசங்கர். மணியோட என்னமோ சத்தம் போட்டியே?”
“அநாவசியமா லேடீஸ் ரூமுக்குள்ளே நொழஞ்சு என் சர்விங்கை மறிக்கிறான்.”
“டூரிஸ்டு பஸ் வந்திருக்கு மாமா... ஜிலு ஜிலுன்னு கலர்ஸ். எல்லாம் பெங்களூர் வாசிங்க...” ஐயாசாமி தூரத்தில் இருந்தே குறுக்கிட்டான்.
“ஃப்யூய்ய்” என்று காப்பி மெஷின் வைத்தாவிடமிருந்து ஒரு விசில் பிறந்தது.
சாரங்கன் ஆரம்பித்தான்.
“எல்லாம் சின்ன வயசா.. நடுத்தரம்... ரிடையர்ட் கேஸ் எல்லாம் சேர்ந்ததா?”
சுப்பண்ணா நமட்டுச் சிரிப்புடன் சேர்ந்து கொண்டார்.
“கோத்திரம் என்ன... ஜாதகம் கைவசம் வச்சிருக்காளாமா? சாரங்கன் ரொம்ப பிஸி, தோசை அடுப்பை விட்டுட்டு வர முடியாது. வரனைப் பாக்கறதா இருந்தா அடுப்படிக்கு வரச் சொல்லு.”
சாரங்கனுக்கு மூக்கு அறுந்தது. செல்ல ரோஷம் பிறந்தது.
“மாமா... நீங்க கிண்டல் பண்ணிக்கிட்டே இருங்கோ... தக்காளிப் பழமாட்டம் ஒரு பொண்ணை இழுத்துண்டு வந்து நிக்கறேன்.”
“சாரங்கா, தக்காளி வேண்டாண்டா?... இப்ப மார்க்கெட்டிலே ரொம்ப சீப், அழுகி வேறே போயிடும்!”
உமாசங்கர் தோசையை எடுத்துக் கொண்டு திரும்பினான்.
“டேய் உமா... அவா மறுபடியும் வர்றாப்பிலே பாருடா. அள்ளி விழுங்கிடாதே” என்று அவனுக்கும் ஓர் அஸ்திரத்தை மறந்து விடாது பிரயோகித்தார் சுப்பண்ணா.
ஐயாசாமி குரல் கொடுத்தான்.
“அவனுக்குச் சொல்லிக் கொடுக்காதீங்கோ மாமா. அவன் எக்ஸ்பர்ட்... லேடீஸ் ரூமுக்குள்ளே நுழைஞ்சதும் அவன் ஏர்-கண்டிஷன் ஆயிடுவான்.”
“என்னடா, ஐயாசாமி... ஒனக்கு சபலமாய் இருக்கா?” - உமாசங்கர் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போனான்.
“இருக்காதா பின்னே. ஏன் ராமையா... ஒன் அஸிஸ்டென்ட் ரூப்தேரா மஸ்தானா பாடிண்டு இந்தி சினிமாவே பார்க்கிறானே! லேடீஸ்ரூம் சர்விங் ஆசை இருக்காதா?” என்று வாய் பேசாது சாம்பாருக்குக் கொதி வந்து விட்டதா என்று பார்த்துக் கொண்டிருந்த ராமையாவையும் ஒரே கொக்கியில் மாட்டினார் சுப்பண்ணா.
“மாமா தன் சபலத்தை இப்படி அவனை இவனை வாரி விட்டுண்டே தீத்துக்கறார்” என்று ஐயாசாமி அவரை வெட்டினான்.
“போடு மக்காணி போடு” என்று தமக்கு வந்த அர்ச்சனையைச் சந்தோஷமாக அனுபவித்தார் சுப்பண்ணா.
“எட்டு பட்டர் மசாலேய்ய்” என்ற உமாசங்கர் அறிவிப்புத் தந்தான். சுர் சுர் ரென்று சாரங்கன் துடைப்பம் எண்ணெய் கலந்த தண்ணீரை வீசிற்று.
“என்ன மாமா... விடுகதையைப் பாதியிலே நிறுத்திட்டேன்?”
“எதுடா?”
“கெழக்கு மேற்கு, சுவாமி விவேகானந்தர்.”
“அவரை மீட் பண்ணத்தான் ஒனக்கு டயம் இல்லேன்னியே!”
“அந்த ஜோக்கை வெட்டித்தான் நீங்க அடுப்பிலே கிடாசிட்டேளே.”
“சரி வா வழிக்கு. உன் தாத்தா பூணல் மாட்டிக்கறதுக்கு முன்னாடி அவர் அமெரிக்கா போனார்!”
“எதுக்கு? ஏதாவது பிஸினஸ் விஷயமா? இல்லே சும்மா டூரா?”
“வழியறது அசடு. அரட்டையில்லாம கேளு.”
“நெஜம்மாவே கேட்டேன் மாமா.”
“சாமியாருக்கு என்னடா பிஸினஸ்? ஆங். ஒரு வகையிலே நீ சொன்னதும் சரிதான். அவர் பிஸினஸ் லோக உத்தாரணம். அதுக்குத் தான் அவரும் போனார். அங்கே போயி, சூறாவளி மாதிரி இந்து தர்மத்தைப் பிரசங்கம் பண்ணினார். வேதாந்த உபன்யாசங்கள் செய்தார். ராமகிருஷ்ணா மடத்துக்கு கிளைகள் ஆரம்பிச்சார் ஆயிரக்கணக்கான வெள்ளைக்காரப் பொண்டுகளும் இடிமுழக்கம் மாதிரி அவர் பேசின பேச்சைக் கேட்டு மயங்கி நின்னாளாம். இப்ப நம்மூருக்கு வந்திருக்காளே... ரங்கையரோடே மருமகள் சோனிகா கில்லரோ மோனிகா டல்ல ரோ!
“மோனிகா மில்லர் மாமா!” சாரங்கன் திருத்தினான்.
“ம்ம்... மோனிகா மில்லரோட பாட்டனாரும் பாட்டியும் சுவாமிஜியோட உபதேசத்திலே சொக்கி மடத்தை ஆரம்பிக்கிற கைங்கர்யத்திலேஈடுபாட்டாளாம். சுவாமிஜியோடே அவா எடுத்துண்டிருக்கிற போட்டோவை, சோனிகாவா... என்னடாது...? மோனிகா மில்லர் எங்கிட்டே காமிச்சா?”
“நீங்க அவனைப் பாத்தேளா மாமா?”
“பார்க்காமே எப்படி கனாவிலே வந்தா காமிப்பா?”
“எப்படி இருக்கா?”
“ஏதோ பெரிய ரிஷி குமாரத்தி மாதிரி செக்கச் செவேன்னு இருக்கா. கண்ணுலேயும் நெத்தியிலேயும் என்னவோ ஒரு சாத்மீகம் விளக்காட்டம் எரியறது. என்ன பவ்யம். என்ன விதரணை தெரியுமோ...”
“ம்...”
“ராகவன் போன துக்கம் அவகிட்டே எப்படி வெளிப்படுது தெரியுமா?”
“ம்...”
“அவ இந்த நாட்டிலே பொறக்க வேண்டிய பொண்ணுடா... அதுக்குத் தான் சொன்னேன். கெழக்கிலேருந்த ஒரு சாமியார் மேற்கே போனார். மேற்கே இருக்கிற மனுஷா ஒவ்வொருத்தரா கெழக்கே வந்துண்டிருக்கா. சும்மா டூருக்கு வல்லே. வெதவையா வாழணும்னு வந்திருக்கா.”
“இது சாத்தியப்படுமா மாமா?”
“ஒனக்கு சாத்தியப்படாது. சந்தேகம்! சபலம் இருக்கறதாலே சபலங்களையே பாத்துப் பாத்துச் சந்தேகம், அவளுக்கு சபலம் போய் ஜன்மா சாபல்யமாகணும்னு சிரத்தை. அது இருந்தா எல்லாம் சாத்தியப்படும்!”
“எது மாமா?”
“சிரத்தை. மனசிலே ஒரே எண்ணம்.”
“ரங்கண்ணா ஒத்துண்டாரா?”
“ரங்கண்ணாவா...?” அவர் கிச்சடிப் பாத்திரத்தை இறக்கிக் கீழே வைத்தவர் ஆவி பறந்த கரித்துணியை மேடை மீது போட்டு விட்டுப் பெருமூச்செறிந்தார்.
நாலு பட்டர் மசாலாக்களை தோசைக் கல்லிருந்து ஒவ்வொன்றாக உரித்துத் தட்டில் அடுக்கிவிட்டுச் சாரங்கன் மறுபடியும் எண்ணெய் கலந்த தண்ணீரைத் துடைப்பத்தில் தொட்டு விசிறினான்.
“அவரைக் கண்ணாலே பாக்க முடியலேடா. கண்ணை வெறிச்சுண்டு பேசாம பாக்கறார். விடு நிசப்தமா இருக்கு. நாளெல்லாம் கொட்டு கொட்டுனு கட்டில்லே படுத்துண்டு அந்த நிசப்தத்தோடே நிசப்தமா ஐக்கியமாய் முழிச்சிண்டிருக்கிறார். அவர் என்ன நெனக்கிறார்னே புரியல்லே. அண்ணா மொகத்தைப் பார்த்தா ஏதோ சந்நியாசியாயிட்ட மாதிரி தோன்றது. ஜம்னா விவகாரம் அவருக்குத் தாங்கலே.”
“ஜமுனா என்ன சொல்கிறாள்... சுப்பண்ணா” என்று வெளியேயிருந்த உமாசங்கர் திடீரென்ற பெருங்குரலில் கத்தினான். வாணலியை அடுப்பில் வைத்த சுப்பண்ணா வேகமாக வெளியே வந்தார். அதற்குள் பக்கெட்டை வைத்து விட்டு பாபாவும் மாதவனும் சுப்புணியும் திடுதிடுவென்று கல்லா மேடையை நோக்கி ஓடினார்கள். அங்கே ஏற்கெனவே ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது.
“வக்கீல் வாசுதேவாச்சார் முகமும், டிரைவர் கோவிந்தனுடைய முகமும் கவலைக்குறியோடு தெரிந்தன. சுப்பண்ணா வேகமாக நடந்தார்.
“மெள்ள... மெள்ள” என்று யாரோ குரல் கொடுத்தார்கள். சுப்பண்ணா போய்ச் சேருவதற்குள் கூட்டம் விலகி, ஆனந்தராவை தலைப்புறமும் கால்புறமுமாக இரண்டு பேர் பிடித்து நடந்தவாறே, ஸ்டோர் ரூமுக்கு நகர்வது தெரிந்தது.
“என்னடா உமா?” என்று வயிறு கலங்கக் கேட்டார் சுப்பண்ணா.
“பெரியண்ணா கல்லா மேலேயே மயங்கி விழுந்துட்டார்.”
“நீ போய் டாக்டரை அழைச்சுண்டு வா. கொஞ்சம் நகருங்கோ... எல்லாரும் ரூமை அடைச்சுக்க வேண்டாம். மாதவா, கல்லாவிலே போய் உட்காரு. பாபா, அங்கக் கூட்டம் போடாதீங்கோ... ஏற்கனவே இது ஸ்டோர் ரூம் சாமான் அடைச்சுண்டிருக்கு.”
சுப்பண்ணா தம்மையும் அறியாது அந்த நிமிஷம் ரங்கையரானார்.
டாக்டர் ரங்கநாதன் தமது ஸ்கூட்டரில் வந்தார்.
“என்ன சுப்பண்ணா? ராவ் எங்கே இருக்கார்?”
“உள்ளே படுத்திட்டிருக்கார்னா... குப்புனு வியர்த்து தலை மார்பெல்லாம் ஜலம் ஜலமா வழிஞ்சு இப்பத்தான் நின்னது!”
“ஸ்ஸ்ஸ்” என்று பற்களைக் கடித்தவாறே மூச்சு விட்டார் டாக்டர்.
“ஸ்கூட்டர் பெட்டியிலே...” என்று இழுத்தவர், “இரு... நானே போய்க்கறேன்” என்று மீண்டும் படியிறங்கி பிளட் பிரஷர் கருவியை எடுத்துக் கொண்டு வந்தார்.
ஆனந்தராவ் ஈஸிசேருக்கு எதிரில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு, அதன் மீது கால் நீட்டிப் படுத்திருந்தார். சட்டை நனைந்திருந்தது.
“என்ன ஆனந்தராவ், எப்படி இருக்கு?”
“கொஞ்ச நாழிக்கு முன்னாடி இருந்தாப்பிலே இருந்து யானை ஏறி மார் மேலே மிதிக்கிறாப்லே இருந்தது. டாக்டர்வாள்... திடீர்னு வியர்த்துக் கொட்டித்து. கண் இருண்டுடுத்து. அப்புறமா எனக்கு ஒண்ணுமே தெரியலே.”
“டாக்டர் பிரஷர் பார்க்கும் பட்டையைத் தோளில் கட்டிக் கொண்டே, காஸ்ட்ரிக் ட்ரபிளோ... என்னமோ? உருளைக்கிழங்கை நீர் விடமாட்டீர். அது உம்மை விடாது” என்ற செல்லமாகக் கோபித்தார். மெதுவாக அவர் கை பம்ப் செய்தது. மீட்டர் முள் தத்தளித்து வெறி பிடித்தது மாதிரி மேலே ஏறிற்று.
வீட்டிலிருந்து வந்திருந்த ராஜாமணியை டாக்டர் வெளியே அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து விட்டு அவன் காதில் மட்டும் விழும்படியாகச் சொன்னார்.
“இது ஹார்ட் அட்டாக். கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும் நர்ஸிங் ஹோமிற்கு வா.. மருந்து கொடுக்கறேன். ஏறி உட்காரு.”[தொடரும்]
No comments:
Post a Comment