Thursday, 31 January 2013

ஜமுனா-11


11
திடீரென்று ஒரு இருட்டு, முன் வரிசையில் சீழ்க்கை ஒலிகள். கதவைத் திறந்து விட்டார்கள். திரையில் நெளிந்த கனவு மறைந்ததும் வெக்கையும் புழுக்கமும், பீடி சிகரெட்டுகளின் புகையுமாகக் குமட்டிற்று. கரண்டு ஆஃப் என்று யாரோ சொல்லும் வார்த்தை மிதந்து வந்தது. ராஜாமணி பத்து நிமிஷம் தாமதித்தான். அதற்கு மேல் பொறுக்காமல் வெளியே வந்தபோது கேட் கீப்பர் “சார் பாஸ்” என்று நீட்டினான்.
வேண்டாம்பா... என்ற மறுத்துவிட்டு நியூ சினிமாவை விட்டு வெளியே நகர்ந்தான் ராஜாமணி.
இரவு மணி பதினொன்றுக்கு மேல் ஆகியிருக்கும். சாலையில் விளக்குகள் இல்லை. கொஞ்ச நேரத்தில் வருமோ வராதோ... விளக்கு இல்லாத சாலைகூட ஒரு சுகம்தான்.
வெளியே வெம்மை தணிந்து காற்று குலாவிற்று. அண்ணாந்து பார்த்தான். ஏரிக்கரைக்கு மேலே பன்னிரண்டாம் பிறைச் சந்திரன். மூன்று நாளில் நிறையப் போகும் குதூகலத்தில் பவனி வந்தது. அம்பாரமாகக் குவிந்திருந்த கருமேகங்கள் சந்திரனின் நேர்ப் பாதைக்கு வழி விட்ட மாதிரி ஒதுங்கியிருந்தன.
ராஜாமணிக்கு ஜமுனா கவனம் வந்தது. அது மறந்து நினைக்கிற கவனம் இல்லை. இடைவிடாத ஊற்றுக்கண் போல் உள்ளிருந்து சுரந்து கொண்டேயிருந்த தியானம், தோல்வி... தோல்வி என்று அந்தத் தியானத்தில் ஒரு சிதைவும் சேர்ந்ததால், எதிலாவது மனசை அமிழ்த்தி மறக்கத்தான் சினிமாவுக்கு வந்தான்.
அந்தப் படமும் ஒரு காதல் கதைதான். புறக்கணிக்கப்பட்டதாகத் தன்னைக் கருதி குடியில் தன்னை அழித்துக் கொள்பவன் கதை. ஏனோ முடிவு வரை காத்திருந்து அந்தத் துயரில் தன்னைக் கரைத்துக் கொள்ள அவனுக்குப் பிடிக்கவில்லை.
இப்படிப் பளிச்சென்ற ஜமுனா மறுத்து விடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவனது இளமை, படிப்பு, அந்தஸ்து, லட்சியக் கனவுகள் எல்லாமே பொய்ம் மணல் போல் புதைந்துவிட்ட மாதிரி உணர்ந்தான் ராஜாமணி.
அசட்டுத்தனமாக ஆரம்பித்துப் பரிதாபமான முறையில் சரிந்து விட்டோமோ என்ற மனம் நொந்தது. எல்லாமே முடிந்து போனது போலவும் தேர் திரும்ப முடியாது முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டது போலவும் அவனுக்கு ஒரு திகைப்பு.
ஜமுனா... ஜமுனா... ஜமுனா...
அந்தக் கண்ணிமைகளும் குறுவியர்வை படிந்த மேலுதடும் அவன் மனசில் குறி பார்த்து வீசும் கத்திகளாக மேலும் மேலும் வந்து பாய்ந்தன.
நிராசைகளால் உருவாக்கப்பட்டது வாழ்க்கை என்ற வேதாந்தக் கசப்பு பிறந்தது. அந்த நிஜத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்குத்தான் சினிமா... சங்கீதம் என்று மனிதர்கள் அழகான பொய்களைச் சிருஷ்டித்திருப்பதாக நினைத்தான்.
இளைஞனின் எண்ணங்களில் முதற்காதலின் தீவிரம் எழுச்சியும் வீழ்ச்சியுமாகப் பின்னும் எண்ணிக்கையற்ற நினைவுக் கோலங்களில் அவன் மனம் தத்தளித்தது.
ஜமுனா... ஜமுனா...
“பால்ய நினைவுகளோடு நின்று விடாமல் அவளை ஏன் சந்தித்தோம்? அந்தச் சந்திப்பும் திருமணமானவளாக இன்னொருவனின் சொத்தாக அவள் ஆன பின்பு நேர்ந்திருக்கக் கூடாதா?’
சர்க்கரை பூசிய முலாம் பழமும், அவள் சுறுசுறுப்பும், அந்தச் சாதுரியமும் அவனை இடைவிடாமல் துரத்தின.
‘எனக்கு வேண்டும், என்ன தைரியம்?’ பார்த்த இரண்டாவது சந்திப்பில் பால்ய சிநேகிதத்தை நினைவூட்டி அவளை அப்படிக் கேட்டது எத்தனை பெரிய குற்றம் என்று கண்டனம் ஒரு பக்கம் எழுந்தது.
ராஜாமணி பூதராங் குளத்தை நெருங்கியபோது, கீழண்டைப் புறமாகத் தர்க்காவிற்குப் பக்கத்தில் ஜட்கா வண்டிகள் நிற்குமிடத்தில் தொப்பென்று ஏதோ சத்தம் கேட்டது. மனம் துணுக்குற்ற நின்று கவனித்தான். பிறையும் நட்சத்திரமுமாக பச்சைக் கொடி பறந்த தர்க்காவிற்கு அருகில் ஜன நடமாட்டம் இல்லை. மீண்டும் எகிறித் துள்ளுகின்ற மாதிரி தொப்பென்ற சத்தம்.
சற்று நெருங்கிப் பார்த்தான். பின்னங்கால்களைக் கட்டிப் போட்டிருந்த கழுதை ஒன்று குப்பை மேய்ந்து கொண்டு நின்றது. ஒருமுறை பிளிறிவிட்டு முன்னங்கால்களால் சற்று நகர்ந்து ஒரு குதிகுதித்துப் பின்னங்கால்களை நகர்த்திற்று.
ராஜாமணிக்குப் புன்னகை வந்தது. விரைவில் அது மறைந்து கழுதையின் மீது ஒரு பரிதாபம் பிறந்தது... தோல்வி உருவாக்கியிருந்த வேதாந்தம், அவன் மனசில் கால்கள் கட்டப்பட்ட கழுதைக்கும் வாழ்க்கைக்கும் ஒரு முடிச்சுப் போட்டது.
சிறிது நேரம் அந்தக் கழுதையின் சோகத்தில் அவன் பங்கேற்றுக் கொண்டு நின்றான்.
எதிரில் மிட்டாய் வண்டியைத் தள்ளிக் கொண்டே வந்து கணகணவென்று மணி அடித்தார் சோடேலால், ராஜாமணி திரும்பிப் பார்த்தான்.
“பாஸந்தி ஹை?” என்று கேட்டான். சோடேலாலின் பாஸந்தி ஒரு மறக்க முடியாத சங்கதி.
“ஹை” என்று அவன் தேவையைக் கேட்காமல் தொன்னையை எடுத்து பாஸந்திப் பாத்திரத்தின் தட்டைத் திறந்து கொண்டே பேசத் தொடங்கினார்.
“படா ஸாப் கைஸா ஹை?”
“அப்பாதானே... நல்லா இருக்கார்.”
“ஒடும்பு நல்லா இல்லே” என்று கொச்சைத் தமிழில் சொன்னார் சோடேலால்.
“வயசாயிடுத்து.”
“ஓட்டலை நீ கவனிக்கணும்.”
வயதானவர்கள் வயதானவர்களுக்குச் செய்யும் சிபாரிசு என்று நினைத்தவாறு ராஜாமணி, காகித அட்டையில் செய்து நீட்டிய ஸ்பூனில், பாஸந்தியை சாலையில் நின்றவாறே ருசி பார்த்தான்.
அவருடைய குறும்புக் கண்களில் ஒரு நகைச்சுவை ஒளி பிறந்தது.
“ஷாதி நஹீ ஹோகா?”
“இன்னும் ஆகல்லே.”
“ஜல்தி கரோ... ஆனந்த பவன் கோ படா ஹோட்டல் பனோ.”
ஆனந்த பவனைப் பெரிய ஓட்டல் ஆக்க வேண்டுமாம். கொஞ்ச நாட்களாக எல்லா மூலைகளிலிருந்தும் அதே குரல் கேட்கிறது. ஆனந்தபவன்... ஆனந்தபவன்... அந்தக் கல்லா மேடையின் நாற்காலியில் அவன் கனவுகளையெல்லாம் கட்டிப் போட்டு, உயரப் பறக்க விரும்பும் அவன் இறக்கைகளை முறித்துவிட்டு, பெல் அடித்து பில்வாங்கும் முடிவே இல்லாத சள்ளைக்கு அவனை ஆளாக்கவே எல்லோரும் முயற்சிக்கிறார்கள்.
ஜமுனா கூட அதைத்தான் கேட்டாள்.
“ஜமுனா... ஜமுனா.”
தொன்னையைத் தூக்கி எறிந்து விட்டு ராஜாமணி. ஜேபியில் சில்லறையை எடுத்து நீட்டினான்.
பஸ் ஸ்டாண்ட் நெருங்கியபோது பளிச்சென்று தெருவிளக்குகள் எரிந்தன.
பஸ் ஸ்டாண்டில் மின்சாரக் கம்பத்தில் பெரிய மூங்கில் தட்டி கட்டியிருந்தது. சிவப்பு எழுத்துக்களில் நாளைக்கு சர்வ கட்சி ஹர்த்தால் நடக்கப் போவதாக எழுதி வைத்திருந்தது.
நாளைக்கு ஹோட்டல் இருக்காது... என்று ராஜாமணி நினைத்துக் கொண்டு நடந்தான். ஆனந்தபவனின் கல் படிக்கட்டுகளில் ஏறி, எஃகு மடிப்புக் கதவை உலுக்கினான். இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குப் போய்த் தூக்கமில்லாமல் தவிக்கப் பிடிக்கவில்லை.
உள்ளே ஏதோ பேச்சுக் குரல்கள் கேட்டன. எல்லோரும் பேச்சு சுவாரசியத்தில் ஆழ்ந்திருந்தால் கலகலவென்ற அதிர்ந்த ஸ்ப்ரிங்க கதவைக் கவனிக்கவில்லை. கை மட்டும் நுழைகிற இடைவெளித் திறப்பில் உள்பக்கமாகத் தொங்கிய பூட்டைக் கடகடவென்ற ஆட்டினான்.
பேச்சுக் குரல் நின்றது.
“யாரது?” என்று உமாசங்கர் குரல் கேட்டது.
“வந்துதான் பாரேன்” என்றான் ராஜாமணி.
“ராஜாவா? இதோ வந்துட்டேன்.” சற்று நேரத்தில் கல்லா மேடையருகில் எரிந்த ஜீரோவாட் வெளிச்சத்தில் அழுக்கு வேட்டியுடன் அவன் சாவியை எடுத்து வருவது தெரிந்தது.
கதவைத் தள்ளித் திறந்து கொண்டே உள்ளே நுழைந்தான் ராஜாமணி.
“ஏன் இன்னும் தூங்காம முழிச்சுக்கிட்டிருக்கீங்க... நாளைக்கு ஹர்த்தால் தானேன்னு சீட்டாட ஆரம்பிச்சுட்டீங்களா?”
“சீட்டா... என்ன ராஜா.. அதைவிட முக்கியமான விஷயம் நடந்துக்கிட்டிருக்கு.”
“என்னது?” என்று உள் படிக்கட்டில் ஏறினான் ராஜாமணி.
ஃபேமிலி ரூமுக்குப் பக்கத்தில் உள் ஹாலில் நுழையம் எதிர்க் கையில் டேபிளின் பக்கத்தில் சப்பணம் போட்டுக் கொண்டு சுப்பண்ணா நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர் கால் விசிறி மாதிரி ஆடிக் கொண்டிருந்தது. மேஜை மீது ஓட்டலின் வெள்ளைப் பூனை சுருண்டு படுத்திருந்தது.
“என்ன ராஜா, தூக்கம் வரலியா?” என்று கேட்டவாறே எழுந்திருக்கப் போனார் சுப்பண்ணா.
“உக்காருங்க மாமா” என்று அவரைத் தடுத்து விட்டு. “என்ன சங்கதி... பஞ்சாயத்தா? என்ற கேட்டவாறே எதிர் நாற்காலியில் ராஜாமணி போய் உட்கார்ந்தான்.
“பஞ்சாயத்தில்லே, ஊர்வம்புதான்.”
ஹாலுக்கு வெளியே இருந்த முற்றத்தில் பயங்கரமான குறட்டை ஓசை வந்தது.
“யார் மாமா அது?”
“வழக்கமான கேஸ்... ஊதுவத்திக்காரரு... ஊரைச் சுத்தின அலுப்பிலே வந்து படுத்துட்டார். படுத்ததிலே இருந்து இப்படி ஒரே அவுட்டு சத்தம்தான்.”
நாளைக்கு ஹர்த்தால் என்ற விச்ராந்தி ஓட்டல் முழுவதும் தெரிந்தது. உள்ளே பாத்திரங்களைத் தண்ணீர் கொட்டி கடமுடவென்ற உருட்டியவாறே அலம்பும் ஓசை வந்தது.
“மாமா. அலமேலு இன்னும் வீட்டுக்குப் போகலே?” என்று சப்பண்ணாவைக் கிளப்பினான் சாரங்கன்.
“எலேய் மணி... இவன் என்னைக் கிளப்பி விடறான்!” என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார் சுப்பண்ணா.
“மணி இருந்தாத்தானே?” என்று ஐயாசாமி பதில் கொடுத்தான்.
“வீட்டிலே தங்கம் தனியா இருப்பாளோ” என்று 
உமாசங்கர் மேலும் கிளறினான்.
“டேய் உமா... நீ பெரிய வம்பன். ஒண்ணுமே தெரியாத சாதுவாட்டம் இருந்துட்டு கிளறிக் கிளறி மைசூர்ப்பாகு பிடிச்சடுவே” என்று கூறியவாறே வெற்றிலைச் செல்லத்தை இடுப்பிலிருந்து எடுத்து மேஜை மேல் வைத்தார் சுப்பண்ணா.
“என்ன மாமா... நீங்க பாட்டுக்கு சரக்கூடம் கட்டறேள்? விஷயம் என்ன?”
“இது தெரியாதா ஒனக்கு... நம்ம மணி இருக்கானோல்லயோ... அவன் தங்கத்தை மோப்பம் பிடிச்சுட்டு அலையறான், நேத்து அவ கழுத்திலே போட்டிருந்த மூணு பவுன் சங்கலியை சந்தைக் கூட்டத்திலே கோட்டை விட்டுட்டாளாம்..”
சுப்பண்ணா சொல்லிக் கொண்டே போகும்போது பாபா கையைக் கட்டிக் கொண்டு வந்து சுவர் ஓரமாக நின்றான்.
“பாபா வேறே கதை சொல்றான்... நம்ம ரங்கையர் ஆத்துக்கு எதுத்தளாப்பிலே இருக்கிறானே... ஒரு மெடிகல் ரெப்ரஸன்டேடிவ் - மோகன்... நம்ம ஓட்டல்லேகூட கணக்கு வச்சிருக்கானே அவன்...”
சாலையில் ஒரு தெய் நாய் எந்தச் சோகத்திலோ ஓலமிட்டது.
“என்னடாது அச்சான்யம்...ம்..சரி... அவனுக்கும் தங்கத்துக்கும் பழக்கம் உண்டாம். இவளேதான் அவன்கிட்டே செயினைக் கழட்டிக் கொடுத்தாள்னு பாபா சொல்றான்...!”
“என்ன பாபா?” என்று அவன் பக்கம் திரும்பினார் சுப்பண்ணா.
அவன் மெதுவாகத் தலையசைத்தான்.
“லோகம் எப்படியெல்லாம் சொழல்றதுன்னே புரியல்லே ராஜா...” என்று அவர் ஏதோ சொல்லிக் கொண்டு போனார். ராஜாமணி காதில் எதுவும் விழவில்லை.
குமாரசாமி கோவிலில் ஜமுனாவின் பின்னால் மோகன் வந்ததும், வேறு ஏதாவதும் இருக்கலாம் என்று ஜமுனா சொன்னதும், ஒன்றையொன்று துரத்திக் கொண்டு அவன் நினைவில் மோதின. அந்த மோகன், பெண்களை நைச்சியம் செய்யும் அவன் பார்வை. ஒரு கள்ளப் புன்னகை... அவன் ரங்கையர் வீட்டுக்கு எதிரில் குடியிருக்கிறான் என்ற ஞாபகம் எல்லாம் அவன் மனத்தில் அலைகளாக மோதின.
“ஜமுனா... ஜமுனா... உன்னைப் போன்ற தேவதைகளை சைத்தான்கள் சீரழிக்குமா?”

Wednesday, 30 January 2013

ஜமுனா-10



10
கிறீச் கிறீச் சென்று ராட்டினம் இரையும் ஓசை வந்தது. தெருக்கதவு ஒந்திரித்தது போல் லேசாகத் திறந்திருந்தது ராஜாமணி வாசற்படியிலேயே நின்றான். கூப்பிடலாமா என்று யோசித்தான். காலை மணி பத்து. ரங்கையர் ஓட்டலில் இருந்தார். அதைத் தெரிந்து கொண்டே அவர் பெயரைக் கூப்பிடுவது நாடகம் மாதிரிப்பட்டது. ஜமுனாவைப் பெயர் சொல்லி அழைக்கும் உரிமை தனக்கு வரவில்லை என்று அவன் உள்ளூர உணர்ந்தான்.
ஆனந்தலட்சுமி ஊருக்குப் போய்விட்டது. அவனுக்குத் தெரியாது. அவளும் கூட இருப்பாள்! 
அதனால்  கதவைச் சுவாதீனமாகத் திறந்து கொண்டு உள்ளே போக முடியவில்லை.
அது மட்டும்தானா காரணம் என்று அவன் தன்னைக் கேட்டுக் கொண்டான். மனசின் அடிவாரத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஒரு தெரு நாய் மாதிரி படுத்திருந்து பல்லைக் காட்டியது.
ஜமுனாவை நினைக்கும்போதெல்லாம் அது உறுமிற்று. அவளது சுறுசுறுப்பு, ராணி மாதிரி ஓர் அநாயாச கம்பீரம், இமையை நிமிர்த்தி அவள் பார்க்கும் பார்வை, அந்த அழகான புன்னகையின் அதிகாரம். அவன் படிப்பு, அந்தஸ்து எல்லாம் அந்த அழகின் முன்னால் சாமான்யப்பட்டுபோய்த் தோன்றும் தாழ்வு மனப்பான்மையைத்தான் ராஜாமணி அனுபவித்தான். விதியின் சீட்டாட்டத்தில் சீட்டுக்கள் கை மாறிவிட்ட மாதிரி அவன் உணர்ந்தான். அவள் உள்ளவாறு ராணியாக இருக்க வேண்டியவள். தான் அவளுக்கு சேவகனாக இருக்க வேண்டியவன்.
குமாரசாமி கோயிலில் அவளைச் சந்தித்த பிறகு தினசரி அப்படி ஒரு சந்திப்புக்கு ஏங்கி அவன் கோயிலுக்கு வரத் தொடங்கினான். அடுத்த நாளில் இருந்து அவள் வருவதையே நிறுத்திவிட்டது அவனுக்கு உறைத்தது. அவள் எவ்வளவு கண்டிப்பானவள் என்பதும் தான் எவ்வளவு சராசரி என்றும் உறுத்திற்று.
உள்ளே ராட்டின ஓசை நின்று பக்கெட்டைக் கிணற்றுச் சுவர் மேல் வைப்பதும், பிறகு ஏதோ பாத்திரத்தில் அந்தத் தண்ணீரை ஊற்றவதும் தெளிவாய்க் காதில் விழுந்தன.
“போஸ்ட்” என்று எதிர்ச் சாரியில் சைக்கிளைத் தள்ளிக் கொண்டே வந்த போஸ்ட்மேன் கேசவலு நாயுடு, வீட்டெதிரில் நின்றார். ராஜாமணிக்கும் ஆனந்தபவனுக்கும் அவர் மிகவும் பரிச்சயமானவர்.
இந்நேரத்தில் ஜமுனா வீட்டெதிரில் நிற்பதைப் பார்த்தால் ரிடையராகப் போகும் கேசவலு நாயுடு சட்டென்று மோப்பம் பிடித்து விடுவார். ஆனது ஆகட்டுமென்று தைரியமாகக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தான்.
கரகரவென்று ராட்டின ஓசை கயிறு கிணற்றின் உள்ளே இறங்கிக் கொண்டிருப்பதைத் தெரிவித்தது. செருப்புச் சத்தம் கேட்டு ஜமுனா திரும்பிப் பார்த்தாள்.
கூந்தலில் ஒரு கற்றைச் சுருள் பிரிந்து நெற்றியில் விழுந்திருந்தது. முகத்தில் குறு வியர்வை. கொசுவத்தை இரண்டாக மடித்து இடீப்பில் செருகியிருந்ததால் செக்கச் சிவந்த முழங்கால்கள் வெளித் தெரிந்தன. அப்படியும் கொசுவம் நனைந்திருந்தது.
தெரு வாசற்படியை அடுத்து ஒரு சிறிய நடை, அதைத் தாண்டியதும் வால் மாதிரி நீண்ட வாசலில் கண்ணைப் பறிப்பது போல் வெள்ளை வெளேரென்று ஜமுனாவின் புடவை, ரவிக்கை, ப்ரா எல்லாம் வரிசையாக ஒரு கொடியில் காய்ந்தன. வெய்யிலில் உடைகளின் வெண்மை கண்ணைப் பறித்தது. அப்போது தான் உலர்த்திய சேலையிலிருந்து நீர் சொட்டிற்று.
“ரங்கையர் இருக்காரா?” - ஒரு பொய்யில் ஆரம்பித்தான் ராஜாமணி.
பக்கெட் தண்ணீர் விளிம்பைத் தொட்டுக் கிணற்றுக்குள் சப்தித்தது. ஒரு கையால் கயிற்றைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் முகத்தில் வியந்திருந்த கூந்தலை ஒதுக்கி விட்டவாறு அவனைப் பார்த்தாள். வளையல்கள் கலகலத்தன.
வெய்யிலில் நெற்றியைச் சுளித்துக் கொண்டு அவன் பார்த்ததும் ராஜாமணிக்குத் தன் துணிச்சல் ஆவியாவதை உணர்ந்தான்.
“அப்பா ஓட்டல்லேதானே இருப்பார்.”
அதற்கு மேல் அங்கே நின்று கொண்டிருப்பதற்குத் தனக்கு ஆதாரமில்லாதது புலப்பட்டது. அவனை வெளியே கிளம்ப விடாமல் ஏறுவெய்யிலில் புடத்தில் வைத்த தங்கம் போல் ஒளிரும் அவளது அழகு அவனைத் தடுத்தது.
ஜமுனா அவன் இன்னும் தாமதிப்பதைப் பார்த்து ஏதோ புரிந்து கொண்டாள். முகத்தைத் திருப்பிக் கொண்டு பக்கெட் இன்னும் நிரம்பக் கயிற்றைத் தளர்த்தி விட்டாள். நிரம்பிய பக்கெட் கயிற்றைச் சுண்டி இழுத்தது.
கிறீச் கிறீச் சென்ற பக்கெட்டை இயக்கும்போது ராட்டினம் இரையத் தொடங்கிற்று. ராஜாமணி வேலையின்றி வெட்டியாக நிற்பது போல் மோசமாக உணர்ந்தான். தண்ணீரை எடுத்துச் சுவரோரமாக வைத்திருந்த பக்கெட்டில் நிரம்பினாள். இரண்டு கைகளையும் ஈரம் போக அவள் உதறிவிட்டபோது, வளையல்கள் துள்ளிச் சிரித்தன. ஒரு விரலால் நெற்றியில் படிந்த குறுவியர்வையை வழித்துச் சுண்டினாள்.
வயிற்றில் செருகியிருந்த கொசுவத்தை அவிழ்த்து விட்டுக் கொண்டு அவன் அருகில் வந்தாள். என்ன பேசுவது என்று புரியாமல் மழுங்கி நின்ற ராஜாமணிக்கு. அவள் சமீபம் ஜிவ்வென்று ரத்தத்தைப் பொங்க வைத்தது.
துணி சோப்புவு அவள் உடம்பின் மணமும் கலந்த ஒரு வாசனை, ராஜாமணியை மேலும் தடுமாற வைத்தது. துணிகளை எல்லாம் துவைத்து முடித்த திருப்தியும் ஒரு தூய்மையும் அவள் முகத்தில் அயர்ச்சியாகப் படிந்திருந்தன.
கரைந்தது போக லேசாக மிஞ்சியிருந்த குங்குமத்தின் சுவடும், மேலுதட்டின் மேல் இழிகளாகப் பூத்திருந்த வியர்வையும், கைகளிலும் கால்களிலும் காணப்பட்ட ஈரமும், அவளதுஅழகில் ஒரு அயர்ச்சிக் களையைச் சேர்த்திருந்தன. செஞ்சந்தன நிறத்தில் மிளிர்ந்த அவளது வயிற்றுப் பாகமும், திரண்ட தோள்களின் வசீகரமும் ராஜாமணியின் இளமையை விழிக்கச் செய்தன.
அந்த சமீபத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் துணிச்சல் தனக்கு இல்லையே என்று அவன் வருந்தினான். ஜமுனா சாவதானமாக, சேலையின் பக்கத்தில் காயப் போட்டிருந்த டவலை எடுத்து கைகளைத் துடைத்துக் கொண்டாள்.
அப்புறம்? என்ற கேட்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் தன்னைச் சபலத்தின் தரை மட்டத்தில் தாழ்த்தி விட்டு விட்டு மீண்டும் ராணியானதை உணர்ந்தான் ராஜாமணி. அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.
“இங்கே ஆனந்தலட்சுமின்னு ஒருத்தர் வந்தாங்களே... அவங்க...?”
“காத்தாலே நாலரை மணிக்கு கேரளா எக்ஸ்பிரஸ்லே போயிட்டாங்க” என்ற அவள் பளிச்சென்று பதில் அளித்தாள்.
“எங்கே?”
“காசிக்கு...”
“அவங்க யாரு?”
“எனக்குத் தெரியாது...”
“நிஜம்மா...?!”
வாசலில் காயப் போட்டிருந்த வடகத்தை விட்டு வெய்யில் நகர்ந்து விட்டதைக் கவனித்த ஜமுனா, வெய்யிலுக்கு நேராக அதை மீண்டும் இழுத்து விட்டுக் கொண்டே அவனைக் கோபமாகத் திரும்பிப் பார்த்தாள்.
“சாரி... நிச்சயமாகவான்னு கேட்க நெனைச்சேன்” என்று தடுமாறினான்.
அவனது தடுமாற்றத்தைப் பார்த்ததும் ஜமுனாவுக்குப் புன்னகை வந்தது. சிரமத்தோடு அடக்கினாள்.
“எனக்குத் தெரிஞ்சவரை அதுதான் நிஜம். அதுதான் நிச்சயம்...”
“ரங்கையருக்கு அவங்க ஒறவா?”
அவள் நாரத்தங்காய் ஊறிய ஜாடியை வெய்யிலுக்கு நகர்த்தினாள்.
“அதான் சொன்னேனே... எனக்குத் தெரியாது...”
அவள் மறைக்கிறாள் என்று ராஜாமணிக்குத் தோன்றிற்று. பதில்கள் இப்படிக் கத்தியில் செதுக்குவது போல் ஒன்றிரண்டு வார்த்தைகளாய் நறுக் நறுக்கென்று வராமல் இருக்கலாமே என்று அவன் மனசு ஏங்கிற்று.
அவன் படிப்பு, புத்தகங்கள், அனுபவம் எதுவுமே அந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்வது என்று உதவாமல் போனது. அவனுக்கு இன்னும் அவமானத்தை உண்டாக்கிற்று.
“நீ ஏன் இப்பல்லாம் கோவிலுக்கு வர்றதில்லே?”
“கோவிலைச் சுத்த நான் போனா என்னைச் சுத்தறவா அதிகமாயிட்டா.”
பேசுவதற்கு அவனுக்கு ஒரு பிடி கிடைத்தது.
“சாரி ஜமுனா... எனக்கு அது நோக்கமில்லே.”
“உங்க நோக்கம் என்னவோ... எனக்கென்ன வந்தது? இப்ப வேறென்ன கேட்கப் போறேள்?”
“நீ ரொம்ப கோவிச்சுக்கறே. நீயும் நானும் புதுசாவா பார்த்துண்டிருக்கோம். பன்னெண்டு வருஷத்துக்கு முந்தி நாம் எவ்வளவு ஒத்துமையாப் பழகி இருக்கோம்.”
“...........”
“எதையோ பார்த்துப் பயந்துட்டேன்னு ரயில்வே ஸ்டேஷன்லே மணி ஐயர் கிட்டே மந்திரிச்சண்டு வர நீயும் நானும் ஒண்ணாப் போவோமே... ஆஸ்பத்திரிக்கு எதிரிலே காங்கிரஸ் மைதானத்திலே கல்பெஞ்சிலே உட்கார்ந்துண்டு கொடுக்காப்புளி வாங்கிச் சாப்பிடுவோமே...”
திடீரென்று ராஜாமணிக்கு நினைவுகள் ஒரு தைரியத்தை வழங்கின. அவன் அவற்றில் தோய்ந்து மூச்சு விடாமல் பேசத் தொடங்கினான்.
“நெய் வாங்கிவர அருணாசல ஐயர் கடைக்குப் போவோம். அப்போ புதுசா பிரஸ் வச்சிருந்தாங்க. அது லொடக் 
லொடக்குனு அடிக்கிற சத்தத்தைக் கேட்டு எவ்வளவு ஆச்சரியமா நீ பார்த்திருக்கே... ஒரு ஈய ஒரு ரூபாயை மஹாலட்சுமி சோடா பாக்டரிலே கொடுத்து சில்லுனு தண்ணீத் தொட்டியிலே அமிழ்ந்திருந்த கலர் ரெண்டு வாங்கிக் குடிச்சுட்டு வெளியே வர்றப்ப என்னை மடக்கிண்டானே... நீ போய்த்தானே நம்ம சர்வர் ஒருத்தனைக் கூட்டி வந்தே?”
ஜமுனா அவனது ஞாபக சக்தியில் கட்டுண்டு நின்றாள் அவளது கனிந்து சிவந்த உதடுகளில் பழைய காலம் ஒரு புன்னகையாய்ப் பாதரசம் போல் மினுமினுத்தது.
“நீ கான்வென்ட்டுக்குப் போனதும் திடீர்னு மாறிட்டே.”
“டொமினிக் சேவியோவுக்குப் போனதும் நீயும்தான்” என்று ஒருமையில் வந்த விளியை நறுக்கென்று நாக்கைக் கடித்து நிறுத்தினாள்.
பின்பு “நீங்களும்தான் மாறிட்டேள்” என்றாள்.
“பார்த்தா கோவப்படற அளவுக்கு நான் ஒண்ணும் மாறல்லே.”
“பார்வை விகல்பமானா கோபம் தன்னாலே வரும்.”
ராஜாமணிக்கு அவள் வேலியிடுவது துல்லியமாக உறைத்தது.
“நாம பார்க்காம போன அஞ்சு வருஷததிலே உன் அழகு அற்புதமா பூரிச்சிருக்கு.”
ஜமுனாவின் முகம் குப்பென்று சிவந்தது.
“அதனாலேதான் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை மொறைச்சுப் பார்க்கிற மாதிரி நான் பார்க்கிறேன். அது ஒனக்கு விகல்பமாப் படறது.”
அவள், நீர் சொட்டிக் கொண்டிருந்த சேலையை ஒன்றாய்ச் சேர்த்து, இன்னொரு தரம் முறுக்கிப் பிழிந்து விட்டாள்.
“இப்போ ராகவன் எங்கே இருக்கான்?”
“ஷெவ்ரான் டாங்கர்ஸ்... எண்ணெய்க் கப்பல். ஃபாகோஃபா கோன்னு அமெரிக்காவிலே ஒரு தீவாம். அங்கேயிருந்து எண்ணெய் எடுத்துண்டு தேசம் தேசமா சுத்தறது...”
“லீவிலே வருவானோ?”
“ரெண்டு மாசத்திலே வரணும்.”
“அதுக்குள்ளே நான் போயிடுவேன்.”
“எங்கே?”
“ஐ, எஃப்.எஸ்.டெஸ்ட் எழுதப் போவேன். செலக்ஷன் கெடைச்சடும். கெடைச்சுட்டா அஸிஸ்டெண்ட் கன்ஸர்வேட்டர் டிரெய்னிங்... டேராடூன்லே.”
அவள் ராட்டினத்தைக் கழற்றி எண்ணெய் போடுவதற்காக எடுத்து வந்தாள். நடந்து கொண்டே பேச்சுக் கொடுத்தாள்.
“ஆனந்தபவனை யார் பார்த்துப்பா?”
“ரங்கையர்... சுப்பண்ணா... எங்க அப்பா!”
அவளது அழகின் சிம்மாசனத்துக்கு இணையாக தான் உயர்ந்து வருவதுபோல் அவனுக்குப் பிரமை தட்டிற்று. ஜமுனா அவனை விசித்திரமாகப் பார்த்தாள்.
“ஏன் வெளியே போகணும்? சொந்தத் தொழிலும் ஊரும் இருக்கறச்சே யார்கிட்டேயோ கை கட்டி ஏன் உத்தியோகம் பார்க்கணும்?” ராட்டின உருளையை ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தாள்.
“காப்பி கிளப் போய் ஒரு உத்தியோகமா... இல்லே தொழிலா...? பி.எஸ்.ஸி முடிச்சட்டு இந்தக் குட்டையையே வளைய வளைய வர்றத்துக்கு என்ன பிடிப்பு இருக்கு?”
ஜமுனா ராட்டினத்தைக் கிணற்றின் மீது மாட்டினாள்.
“சொந்த பந்தம் எல்லாம் ஒரு பிடிப்பில்லையா...? எல்லா ஆபீசரும் ஆனந்தபவன் காப்பியை சாப்பிட்டாத்தான். அக்கடான்னு வேலை செய்யறதா அப்பா சொல்றாரே.
“ஆனந்தபவன் காப்பி இருக்கட்டும். இப்ப நீ எனக்கு ஒரு காப்பி தரமாட்டியா?”
ஜமுனா தைரியமாக அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“மாட்டேன்.”
“மாட்டியா?”
காப்பி தரமாட்டேன் என்று சொல்லிவிட்டு ஜமுனா உள்ளே போனாள். அவள் வெளியே வரும்போது தோலைச் செதுக்கி அழகாக அரிந்த முலாம்பழத் துண்டங்களின் மீது சர்க்கரையைத் தூவி ஒரு பிளாஸ்டிக் தட்டில் எடுத்துக் கொண்டு வந்தாள்.
“தட்டு அழகாயிருக்கே!” என்று சிலாகித்தான் ராஜா.
“அண்ணா ஹாங்காங்கிலே வாங்கி வந்தான்.”
“ராகவன்பாடு ஜாலி... ஹாங்காங், சிங்கப்பூர் எல்லாம் அவனுக்கு வாணியம்பாடி, ஆம்பூர் மாதிரி இருக்கு.”
“எல்லாம் இக்கரைக்கு அக்கரைதான்” என்று சூள் கொட்டினாள் ஜமுனா.
“ஏன் அப்படிச் சொல்றே?”
“நான் சொல்லலே. அவன் சொல்றான். வருஷம் பூரா தண்ணீலே மெதந்துண்டு நாடோடி மாதிரி அலையறேன்னு வருத்தப்படறான். சொந்த ஊர்ப் பாசம் அவனை அரிச்சண்டிருக்கு. பொழுது தப்பினா ஒரு விபத்து. நித்திய கண்டம் பூர்ணாயுசு.”
“சொந்த ஊரை விட்டு வெளியே போனாத்தான் அந்தப் பாசம் வரும்.”
“அதுக்காகத்தான் நீங்களும் போகப் போறேளா?
ஒரு விள்ளலை வாயில் போட்டுக் கொண்ட ராஜாமணி. நிமிர்ந்து பார்த்தான். எதையோ விழுங்கியதைப் போல் அவளது தொண்டை விம்மித் தணிந்தது. அந்தக் கழுத்தில் உண்டான அசைவு அதை முத்தமிட வேண்டும் போல் ஒரு கிளர்ச்சியைத் தோற்றுவித்தது. ராஜாமணி அவளையே பார்த்தான். அணு அணுவாக அவளது கண்கள் உதடு என்று ஒவ்வோர் அங்கத்திலும் முலாம்பழத்துச் சர்க்கரை மாதிரி அவன் கரைந்தான்.
“சாப்பிடுங்கோ” என்று நறுக்கென்று சொன்னாள்.
“ஜமுனா” அடிக்கடி வரம்புகளை ஞாபகப்படுத்தியது ராஜாமணியின் மனசில் அவள் மீது இருந்த மரியாதையை அதிகப்படுத்திற்று.
“இங்கே எனக்குண்ணு யார் இருக்கா?” என்று அவன் குரல் ஏங்கிற்று.
“இன்னும் யார் வேணும்?”
“நீ” என்று பளிச்சென்று கிடைத்த சந்தர்ப்பத்தைத் துணிச்சலோடு பயன்படுத்திக் கொண்டான் ராஜாமணி.
“அசட்டுப் பிசட்டென்று பேசாதேங்கோ. நாம ரெண்டு பேரும் பால்ய சிநேகிதம்கிற ஒறவு ஒண்ணைத் தவிர வேறு மாதிரி எதுவும் கற்பனை பண்ணிக்க வேண்டாம்.”
“ஜமுனா” என்று மெதுவாகக் கூப்பிட்டான் ராஜாமணி. அவள் பார்வை வாசற் கூடத்தில் உட்கார்ந்திருந்த அவனைச் சந்தித்தது. ராஜாமணியின் முகம் சிறுத்து விட்டது. கூம்பிச் சுண்டியிருந்த அந்த முகத்தோற்றம் பரிதாபமாக இருந்தது.
“நீங்க மாத்வ ராயர். நான் ஸ்மார்த்த ஐயர் ஆத்துப் பொண்ணு நடக்கிற கதை ஏதாவது இருந்தாப் பாருங்கோ.”
ராஜாமணி நிலைகுலைந்தான்.
“இந்த வித்தியாசம் இல்லேன்னா. இல்லேன்னா?”
“வேற ஏதாவது...”
ராஜாமணிக்கு அவள் சொன்னதில் ஏதோ நுட்பமான அர்த்தம் இருப்பதுபோல் பட்டது அது என்ன என்ற அவன் மனம் குடைந்தது. மிகுந்த ஏமாற்றத்தோடும் விவரிக்க முடியாத மனப் பளுவோடும் அவன் வெளியேறினான். ஒந்திரித்திருந்த கதவைத் திறந்து கொண்ட அவன் வெளியேறியபோது அந்த வீட்டுக்கு எதிர் மாடியில் கிராதியைப் பிடித்தவாறே, மோகன் அவளைப் பார்த்துச் சிரித்ததையும் ஜமுனா பொய்க் கோபத்தோடு உதடுகள் துறுதுறுக்க அவனுக்கு அழகு காட்டியதையும் ராஜாமணி கவனிக்கவில்லை.

Tuesday, 29 January 2013

ஜமுனா-9



9
“மணி நாலரை ஆச்சே... இன்னும் ரங்கையரைக் காணோமே” என்று தமது பழைய வெஸ்ட் எண்ட் வாட்ச்சின் 
பழுப்பேறிய டயலைப் பார்த்துவிட்டுப் பதைத்தார் ஆனந்தராவ்.
திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாலைச் சுறுசுறுப்போடு காணப்பட்டது. அங்கே நாலைந்து வண்டிகள்தான் நிற்கும் அவற்றில் பாம்பே கேரளா எக்ஸ்பிரஸும் ஒன்று. பெட்டிப் படுக்கைகள், தூக்குப் புட்டிகள், முகமன்கள், வைரப் புன்னகைகள், பட்டுப் புடவைகள்.
“வந்துடுவார் அண்ணா... ரங்கையர் சங்கதி தெரியாதா? கரெக்ட் டயத்துக்கு வந்து நின்னுடுவார்” என்ற பதற்றம் இல்லாமல் பதிலளித்துவிட்டு பிளாட்பார விளிம்பிற்குப் போய் எட்டி வெற்றிலைத் தாம்பூலத்தைத் துப்பிவிட்டு வந்தார் சுப்பண்ணா.
“காலையிலே நீ பல் துலக்கினியோ” என்று முகத்தைச் சளித்துக் கொண்டு கேட்டார் ஆனந்தராவ்.
“ஆச்சுண்ணா, உமாசங்கர் விடிகாலை மூணு மணிக்கு எழுப்பி ஒரு டிகிரி காப்பி கொடுத்தான்.”
“காப்பியை யார் கேட்டது... பல்...?”
“தொலக்கிண்டுதாண்ணா சாப்பிட்டேன்.”
“ஒடனே வெற்றிலை புகையிலை ஆசமனம் பண்ண ஆரம்பிச்சாச்சா?”
“ஹிஹ்ஹிஹ்ஹி” என்று அசட்டு இளிப்போடு தலை குனிந்தார் சுப்பண்ணா.
வேலூர் கோட்டையில் ஆனந்தராவ் தண்ணீர்ப் பந்தல் வைத்திருந்த காலத்திலிருந்து சுப்பண்ணாவின் வாய் இப்படி கவுளி கவுளியாக வெற்றிலையை மென்று துப்பிக் கொண்டிருக்கிறது. இதில் என்ன சுகமோ என்று நினைத்தார்.
“வண்டி நாலே முக்காலுக்கு இல்லே?”
“இன்னிக்குப் பத்து நிமிஷம் லேட். ஒங்களுக்கு ஏன் கவலை? ஒரு பொடிநடை வெளியே போய்ப் பார்த்துவிட்டு வர்றேன்.” - சுப்பண்ணாவுக்குப் புகையிலை தீர்ந்துவிட்ட ஞாபகம் பளீரென்று வந்தது.
“ரொம்ப தூரம் போயிட வேண்டாம். ஒன்னைத் தேடறதுக்கு ஒரு ஆள் அனுப்ப முடியாது.”
“நாற்சந்தி வரைக்கும் போறேன்.”
தூக்கக்கலக்கம் இன்னம் நீங்காத முகங்கள். சிலவற்றில் கவலைகள். பிரயாணக் கிளர்ச்சி தெரியும் முகங்கள். வெள்ளை வெளேரென்ற ஒரு குழந்தை சாக்ஸும் ஷýவுமாக பிளாட்பாரத்தை ஒரு விளையாட்டு மைதானமாகக் கருதி கலகலவென்று சிரித்துக் கொண்டு இங்குமங்கும் ஓடிற்று.
இவர்கள் எல்லாம் எங்கே எந்தக் காரணங்களுக்காகப் போகிறார்கள்? இந்தப் பிரயாணம் சந்தோஷமா.. துக்கமா.. எதை இன்னோர் ஊரில் அவர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கிறது?
ஆனந்தலட்சுமியும் புறப்படப் போகிறாள்.
நூல் தொய்ந்த காற்றாடியைச் சுண்டி மீண்டும் அது பறந்த பழைய வானத்திற்கு இழுத்தது போல் ஒரு விசை நினைவுகள்... நினைவுகள்.
வேலூர்க் கோட்டையில் ஜில்லா கோர்ட்டுக்கு அருகாமையில் சுப்பண்ணாவும் ரங்கையரும் மட்டும் உதவியாகக் கொண்டு அவர் தண்ணீர்ப் பந்தல் நடத்தினார். ஆனந்தலட்சுமி ஒரு வழக்கு சம்பந்தமாக அங்கே வருவாள். கோர்ட்டு பியூன் கூப்பிடுகிறவரை நாலுபேர் கண்களில் படக்கூடாது என்று தண்ணீர்ப் பந்தலில் காத்திருப்பாள்.
மணமான மறுவருஷமே ஆனந்தலட்சுமி விதவையானவள். புருஷன் வீட்டுச் சொத்தில் அவளுக்குப் பங்கில்லை என்ற பலாத்காரமாக அவள் கணவனின் பங்காளிகள் அதை அபகரித்துக் கொண்டார்கள். இதை விடுவதாவது என்று அவள் வீட்டார் அவளிடம் கையெழுத்து வாங்கி வழக்கு நடத்தினார்கள்.
அவள் அழகு அகால வைதவ்யத்தால் அபூர்வமாகச் சுடர்விட்டது. ஆனந்தராவுக்கும் எந்தக் கவலையும் இல்லாமல் மனம் செழிப்பாக இருந்த நேரம். ஆனந்தலட்சுமியின் பார்வையும் புன்னகையும் ஏதோ ஒரு பிறவியில் அவர்களுக்கிடையே இருந்த ஏதோ ஒரு சொந்தத்தை ஞாபகப்படுத்துவது போலத் தாக்கின.
ஆனந்தராவின் பாந்தமான முகத்திலும் கனிவான பேச்சிலும் அவளும் ஒரு புகலிடத்தை உணர்ந்தாள். வீட்டுக்குரியவள் பூட்டைத் திறந்து சுவாதீனமாக உள்ளே பிரவேசித்தது போல அவர் மனசில் அவள் நுழைந்தாள்.
அவருக்கும் கங்காபாய்க்கும் கல்யாணமாகி ஐந்து வருஷம் ஆகியிருந்தது. நீச்சு நிலையின்றி ஓடிய இளமை வேகம் அடங்கி மோகம் தீர்ந்து மிதப்பு நிலைக்கு வந்துவிட்ட பருவம்தான். எந்தக் குறைகளும் அவர்களிடையே இல்லை. எனினும் ஏதோ ஒரு வெற்றிடம். ஆனந்தலட்சுமியால் நிரப்பப்படவென்றே காத்திருந்தது.
ஆனந்தராவ் எதையும் மனைவியிடம் மறைப்பவர் அல்ல. சொன்னார். அதைச் செய்வதைத் தவிர வழி ஏதும் தெரியாதவர் போல் நடந்ததை எல்லாம் அவளிடம் சொன்னார். கங்காபாய் பதில் பேசவில்லை. கண்டிக்கவில்லை. ஒப்பாரி வைக்கவில்லை. வாழ்க்கையே பறிபோனது போல் ஓலமிடவில்லை. மௌனமானாள்.
அவர்களிடையே ஒரு கதவு சாத்தப்பட்டு விட்டது என்று ஆனந்தாவுக்கு ஸ்பஷ்டமாகப் புரிந்தது.
பாவமோ புண்ணியமோ, துரோகமோ என்று அவர் மனத்தில் மெல்லிய கூக்குரல்கள் எழுந்தன. ஆனந்தலட்சுமியின் புன்னகையிலும் அன்பிலும் அவை அடங்கிப் போயின.
கேஸ் அவள் பக்கம் தீர்ப்பான பின்னும் ஒரு வருஷம். ஜட்ஜ்மெண்ட் காப்பி. சொத்து சுவாதீனம், எத்தனையோ சந்தர்ப்பங்கள், வளர்ந்தவை. வளர்த்துக் கொண்டவை. திருப்பத்தூரில் ஓட்டல் வைக்க ஆனந்தராவைச் சிலர் வற்புறுத்தினர்.
அவர் திருப்பத்தூரில் ஓட்டல் திறந்தபோது ஆனந்த லட்சுமிக்கு அங்கே வர முகாந்திரம் குறைந்தது. எனினும் அவள் வந்தாள். இரண்டாவது பயணத்தில் அவள் வீடு திரும்பும் வேளையில் தடிக் கம்புகளுடன் ஏழெட்டுப் பேர் ஓட்டல் மாடியேறி வந்து விட்டனர். அவள் வீட்டு ஆட்கள்.
அவர்களிடம் ‘என் இஷ்டம்’ என்று ஒரே வார்த்தையில் ஆனந்தராவ் மேல் பாய்ந்த அவர்கள் கோபத்தைத் தடுத்தாள் அவள்.
“உன் இஷ்டமா... தொலைஞ்சு போ... வீட்டு வாசல் படி ஏறினா கொலை விழும்” என்று ஒருவன் கத்தினான். அவர்கள் வாய்க்கு வந்ததுபோல் திட்டிவிட்டு வெளியேறினார்கள்.
ஒரு வார்த்தையில் சகல உறவுகளையும் தன் பொருட்டு அவள் அறுத்துக் கொண்டது. ஆனந்தராவுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பாயிற்று. கச்சேரித் தெருவில் ஒரு வீடு பார்த்து அவளைக் குடி வைத்தார்.
உலகத்தின் பார்வையில் ஒரு படி தான் கீழிறங்கி விட்டதை அவர் அந்தராத்மா உணர்ந்தது. கங்காபாயின் மனமாகிய மௌனக் கோட்டையின் கதவுகள் மூடிவிட்டதும் பளிச்சென்று தெரிந்தது.
எனினும் நம்பி வந்தவள் என்ற கடமை உணர்ச்சியை அவர் பெரிதாகக் கருதினார்.
அவள் வரும்போது 57 சவரன் நகைகளோடு வந்திருந்தாள் சுக துக்கம் லாப நஷ்டம் என்று ஓடிய கால ஓட்டத்தில் அவரது ஓட்டல் வியாபாரத்துக்கும் ஒரு விபத்து வந்தது. கடையை மூட வேண்டிய நிர்ப்பந்தம். முதல் போதவில்லை. வியாபாரம் படுத்துவிட்டது. கடன் தலையை மிதித்தது.
நகைகளை மூட்டை கட்டி வந்து நீட்டினாள் ஆனந்தலட்சுமி.
“உன்கிட்டே இருந்துகூட நான் வாங்கிக்கணுமா?”
“ஏன், என்னண்டே வாங்கப்படாதா?”
“இதை வாங்கிக்கிறதை விட மறுபடியும் தண்ணீர்ப் பந்தல் வச்சுடலாம்.”
ஆனந்தலட்சுமியின் முகம் சுண்டி மார்பு விம்மிற்ற.
“மெய்தான். நான் என்ன ஒங்களண்டே தாலி கட்டிண்டவளா என்ன? உங்க கஷ்ட நஷ்டத்திலே எனக்கு என்ன பாத்தியத்தை இருக்கு?”
அவள் தாபம் அவரைத் தகித்தது.
“கொடு, லட்சுமி” என்று அவர் வாங்கிக் கொண்டார்.
“இதோ, இன்னியிலே இருந்து ஓட்டல் உன்னிது. ஏன்னா உன் மூலதனத்திலேதான் இனிமே அது மூச்சு விடணும். நான் அந்த ஓட்டலுக்கு இனிமே வெறும் மானேஜர் தான். ஓட்டல் விலாசத்தைக் கூட மாத்திப்பிடறேன்.”
வாக்களித்தவாறே செய்தார். ஓட்டல் விலாசம் மாறிற்று. நியூபாரத் கபே ஆனந்தபவனாயிற்ற. வியாபாரம் ஓங்கி ஊருக்குப் பிரியமான பொதுச் சொத்தாக அது வளர்ந்தது. ஆனந்தலட்சுமியின் ராசி என்று அவர் நினைத்தார்.
லாபம் வந்து நகைகளை மீட்டுக் கொண்டு வந்தார். அவள் வாங்க மறுத்து விட்டாள்.
“ஓட்டல்லே எனக்கிருக்கிற சொந்தத்தைப் பறிக்க நினைக்கிறேளா?” என்று கேட்டாள்.
வாய் பேசாமல் நகைகளை எடுத்துக் கொண்டு போய் இரும்புப் பெட்டியில் வைத்து மூடினார் ஆனந்தராவ்.
கட்டில், பீரோ, ரேடியோ, ஃபேன் என்று ஆனந்த லட்சுமியின் வீட்டில் ஓட்டல் லாபம் தளும்பிக் 
கொண்டிருப்பதைப் பொறுக்காதவர்கள் கங்காபாயைத் தூண்டி விட்டார்கள்.
விட்டுக் கொடுத்த எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து கங்காபாய் போராடத் தொடங்கினாள். கங்காபாய்க்கும் அவருக்குமிடையே பிளவு ஏற்படாமல் தான் ஒரு பாலமாக இருக்கவே ஆனந்தலட்சுமி விரும்பினாள்.
ஆனந்தராவின் நிம்மதி குலைந்ததும் குடும்பத்தில் விரிசல் விழுந்ததை அவள் உணர்ந்தாள். அதற்குத் தானே பொறுப்பு என்று ஊர் வாய் சொல்வது அவளை உறுத்தத் தொடங்கிற்று. கங்காபாய் போராட்டத்தின் முற்றுப்புள்ளி போல் பிறந்த வீட்டிற்குப் போனாள்.
அவளை விரட்டி அடித்துவிட்டு மாதிரி ஒரு விகாரத் தோற்றத்திற்குத் தான் ஆளானதை ஆனந்தலட்சுமி உணர்ந்தாள். எல்லா பந்தங்களுக்கும் ஒரு முடிவு உண்டு என்ற நினைவு அவளைக் கவிந்தது.
திடீரென்று ஒரு நாள் தனக்கு ஒரே துணையாக இருந்த சித்தியை அழைத்துக் கொண்டு ஆனந்தலட்சுமி எங்கேயோ புறப்பட்டாள். ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷன் முத்திரையோடு ஆனந்தராவுக்கு ஒரு கடிதம் வந்தது. அப்புறம் பல வருஷங்கள் தாண்டிச் சென்றன. ஆயிரம் அனுபவங்களுக்கு மத்தியிலும் நம்பி வந்தவளைக் காப்பாற்ற முடியாமற் போன வடு ஆனந்தராவை உறுத்திக் கொண்டே இருந்தது.
கூலியாள் பின்தொடர ரங்கையர் வந்தார். ஸ்தூல சரீரத்துடன் சாய்ந்து சாய்ந்து நடந்தவாறே ஆனந்தலட்சுமி பின்னால் வந்தாள்.
பெட்டி படுக்கைகளை வெளியே வைத்துவிட்டு ரங்கையர் நகர்ந்தார். வெயிட்டிங் ரூம் காலியாக இருந்தது. யாரோ உட்கார்ந்து விட்டுப் போனதன் அறிகுறியாக மின் விசிறி சுற்றிக் கொண்டிருந்தது.
“உக்காரு.”
ஆனந்தலட்சுமி நின்று கொண்டேயிருந்தாள். அவர் உட்கார்ந்தார். அவளும் உட்கார்ந்தாள்.
மின் விசிறி கடூரமாகக் கரகரத்தது. முகட்டில் தொங்கிய ஓட்டடை அந்தக் காற்றில் படபடத்தது. அவர் பெருமூச்சு விட்டார். அவள், ஆனந்தராவை ஆறுதலூட்டுவது போல் பார்த்தாள்.
“லட்சுமி... இருவத்தி அஞ்சு வருஷம் மனசிலே சொமந்த பளுவை எறக்க விடமாட்டேங்கிறே.”
இப்போது அவள் பெருமூச்சு விட்டாள்.
“நான் திரும்பி வந்தது தப்பு. பாழும் மனசு கேக்கல...”
“இன்னிக்கும் ஓட்டல் உன்னிது தான். இந்த வயசுலே குடும்பத்தை நீ குலைக்க முடியாது. கங்காபாய் கூட ஒப்புத் துண்டுட்டா. கச்சேரித் தெருவிலே அதுக்குப் பக்கத்து வீடு காலியா இருக்கு.
ஸ்டேஷனுக்குள் சுவாதீனமாக உலவும் ஒரு பெரிய கறுப்புப் பூனை உள்ளே நுழைந்தது. பளபள வென்று அதன் கண்கள் ஜ்வலித்தன. மெதுவாக அது கத்திற்று.
“மறுபடியும் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். நான் பிராயச்சித்தத்துக்காக காசிக்குப் போறேன். யார் யார் பொழப்பிலே எல்லாம் நொழைஞ்ச பாவத்தை கங்காதேவி மடியிலே விடப்போறேன். மறுபடியும் ஏன் பாரத்தை அதிகப்படுத்தறேள்?”
“லட்சுமி... ஓட்டல் உன்னிது.”
“என்னிது எதுவுமே இல்லே. எல்லாம் ஒங்களோடது. பகவானோடது. என்னிதெல்லாம் பாபங்கள் தான். மாங்கல்யம் போனதும் மனசை அடக்க முடியாத பாபம், போட்டியா வந்து சொந்தக்காரியை வயிறெரியச் செய்த பாபம்...”
அவர் இடைமறித்தார்.
“என்னைச் சந்திச்ச பாவம். என்னோட கொஞ்ச நாள் வாழ்ந்த பாவம்...” - ஆனந்தராவ் அடுக்கினார்.
தன்னைத்தானே குத்திக் கொள்ளும் அந்த சுய வதை அவள் வாயை அடைத்தது. அவள் மௌனம் அவர் வயிற்றிலிருந்து ஒரு நீண்ட பெருமூச்சை வரவழைத்தது.
“சரி... இந்தா...” - அவர் மடியிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தார்.
“இது என்ன?”
“உன் நகைகள், கொஞ்ச பணம்.”
‘எனக்கெதுக்கு? என்னண்டே மெஸ் நடத்திச் சேர்த்த பணமே நெறைய இருக்கு.”
“இருந்தா இருக்கட்டும். இதையும் வாங்கி வை.”
“என்கிட்டே கொடுத்தா கழுத்து நெறையக் கங்கையின் பிரவாகத்திலே சேர்ப்பேன்... ஏன் எங்கிட்டே 
கொடுக்கிறேள்? கடனைக் கழிக்கவா...?”
“பந்தமில்லாமே போனப்பறம் பாக்கி எதுக்கு?”
“மனசுக்குள்ளற கூட ஒரு பந்தம் வேண்டாங்கிறேளா... கேவலம், என் நகைக்குக் கூடவா ஒங்களோட இருக்கிற சொந்தமில்லே...?”
அவர் மனசில் அம்பு தைத்தது.
“இதை வச்சுண்டு நான் என்ன செய்யப் போறேன்?”
“என் மருமகள் கழுத்திலே மாட்டுங்கோ. நடுவிலே வந்த ஓடுகாலியின் நகை உங்களுக்குப் பிரியமில்லேன்னா ரங்கையன் பெண் ஜமுனா கழுத்திலே மாட்டுங்கோ.”
அவர் முகத்தில் வழி தெரிந்த மாதிரி ஒரு வெளிச்சம் பிறந்தது.
“சொல்ல மறந்துட்டேன். ரங்கையன் எங்கே?”
“வெளியே நிக்கறான்.”
ஆனந்தலட்சுமி வெளியே எழுந்து போய்க் கவனித்தாள். ரங்கையர் டிக்கெட் கொடுக்கும் அறைக்கு எதிரில் நின்று யாரோடோ பேசிக் கொண்டிருந்தார். அவள் திரும்பி வந்தாள்.
“ஜமுனாவுக்கு ரங்கையன் எப்போ கல்யாணம் பண்ணப் போறான்?”
“அவளோடே அண்ணன் ராகவன் ஏதோ மெர்ச்சண்ட் நேவியிலே வேலை செய்யறான். ஹாலண்டு கப்பல் கம்பெனி. முக்கால்வாசி ஒலகத்தைச் சத்திட்டான். இந்த லீவிலே திரும்பி வரப் போறானாம். அப்பதான் ஏற்பாடு செய்வான்.”
“எவ்வளவு நாளாகும்?”
“நாலஞ்சு மாசமாகும்... ஏன்?”
“இல்லே, அவ்வளவு நாள் தாமதிக்கப்படாது. அந்தப் பெண் யாரோ எதிர் வீட்டிலே ஒரு பையனோட சிநேகிதமா இருக்காப் போலிருக்கு. அவனை என்னாலே நம்ப முடியல்லே. ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்துடறதுக்கு முன்னாடி அவளோட கல்யாணத்தை முடிச்சுடறது நல்லது.”
ஆனந்தராவுக்கு இடி விழுந்த மாதிரி இருந்தது?
“ஜமுனாவா?”
“அவள்தான்.”
“நீ எப்படித் தெரிஞ்சுகிட்டே?”
“பொம்மனாட்டிகளுக்கு இந்த மாதிரி விஷயத்திலே மோப்ப சக்தி அதிகம்.”
ஜமுனாவா... ஜமுனாவா... அவர் மனத்திற்குள் அந்தக் கேள்வி மடியவில்லை. ஒவ்வொரு முறை ஒரு புதிய தொனியோடு புதிய திகிலோடு எழுந்து எழுந்து அடங்கிற்று. பரமவைதீகமான ரங்கையர் வாழ்வில் அவருடைய ஆசார சீலத்திற்கு என்னென்ன சோதனை!
மெர்ச்செண்ட் நேவியில் காப்ஸ்யூல் சூப் சாப்பிட்டுக் கொண்டு விஸ்கியும் ஃபீஃபுமாக உலகம் சுற்றும் ராகவன். காதலிக்கும் ஜமுனா.
முதல் மணி அடித்தது. ரங்கையர் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு போய் பிளாட்பார ஓரத்தில் வைத்தார்.
இரண்டாவது மணிக்குப் பின் வண்டி வந்து நின்றதும் இடம் தேடி சுப்பண்ணாவும் ரங்கையரும் ஆளுக்கொரு மூலைக்கு ஓடினார்கள். வண்டி குறைந்த நேரம் தான் நிற்கும்... பலர் அந்த ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டார்கள். கடைசியில் இடம் கிடைத்தது. அவள் பெட்டியில் ஏறினாள்.
ஆனந்தலட்சுமி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். காசியின் சத்திரங்களும், கங்கையின் பிரவாகமும், நாம ரூபம் அழிந்த அநாதை போல் அவள் உயிர் விளக்கு அவியப்போகும் காலமும் அவர் மார்பைச் சுருட்டி இழுத்தன.
திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆனந்தலட்சுமியின் கண்ணீர் சிதறுவதற்கு முன்பு வண்டி புறப்பட்டு விட்டது.

Monday, 28 January 2013

ஜமுனா -8


8
“ஒங்க தொழிற்சங்கத்திலே என்னையும் சேர்த்துக்கப்படாதா?” என்று கேட்டார் ஆனந்தராவ்.
ஐஸ் பாக்ஸுக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த மேஜையில் உட்கார்ந்திருந்த இருவரும் சிரித்தனர். ஒருவர் ஓட்டல் தொழிலாளிகள் சங்கத்தை ஆரம்பிப்பதற்காகப் பத்து நாட்களாக அலைந்து கொண்டிருக்கும் கண்ணப்பன், இன்னொருவர் கிரைண்டிங் மிஷின் ஏஜெண்டு நீலகண்டன்.
“என்ன சார் சிரிக்கிறீங்க?” என்று கேட்டார் ஆனந்தராவ்.
“இது தொழிலாளிகள் சங்கம். ஒங்களுக்குத்தான் தனியா ஓட்டல் முதலாளிகள் சங்கம் இருக்கே, அதிலே சேர்த்துடுங்கோ.”
“அந்த சங்கத்திலே என்னை சேத்துக்க மாட்டேனுட்டாளே” என்று உதட்டைப் பிதுக்கினார் ஆனந்தராவ்.
சர்வர் ரங்கையர் இருவருக்கும் காப்பி கொண்டு வந்து வைத்தார்.
“ஏன்?”
“சாப்பிடுங்கோ சார்... சொல்றேன்!”
கண்ணப்பன் காப்பி டபராவைத் தொட்டுப் பார்த்தார்.
“சூடாயிருக்கு... அப்புறமா சாப்பிடறேன். விஷயத்தை சொல்லுங்க.
கிரைண்டிங் மிஷின் நீலகண்டன் காப்பியைக் குடிக்கத் தொடங்கினார். சர்வர் ரங்கையர் கண்ணப்பனின் டபராவை எடுத்துக் காப்பியை ஆற்றலானார்.
“சர்க்கரை விலை ஏறிடுத்து. காப்பிக் கொட்டை விலை ஏறிடுத்து...” என்று ஆரம்பித்த ஆனந்தராவ், ஒரு மிடறு காப்பியைப் பருகிய நீலகண்டனைப் பார்த்து, “காப்பி எப்படி சார் இருக்கு?” என்று கேட்டார்.
“ஏ ஒன்!”
“ஒம்ம மாவு அரைக்கிற மிஷினை வாங்கப் போறேன்னு நெனச்சு சொல்லாதீங்கே. ஃபேக்டைச் சொல்லுங்கோ.”
“நீங்க வாங்கலேன்னா என் வியாபாரமே படுத்துடப் போவுதா என்ன...? ஏன் ராயரே, ஒம்ம கடைக்கே எதுக்குப் பத்து வருஷமா காப்பிக்கு வந்துட்டிருக்கிறேன்... சொல்லுங்கோ?”
“பலே பலே...!” என்று நீலகண்டனின் ரோஷத்தைச் சிலாகித்தார் ஆனந்தராவ்.
“காப்பி ஏ ஒன்” என்று ரங்கையர் ஆற்றிய டபராவில் ஒரு மிடறு பருகி விட்டுக் கண்ணப்பன் சொன்னார்.
“விலை என்ன தெரியுமா... நீங்க தர வேண்டாம்... ஸேம ரேட் மூணு ரூபா. மத்த கடையிலே மூணரை ரூபா முன்னே சொன்னேனே வெலைவாசி ஏறிட்டது. காப்பி விலையையும் மசால் தோசை மாதிரி மெயின் அயிட்டங்கள் விலையையும் ஏத்தச் சொன்னாங்க. நான் மாட்டேன்னுட்டேன். நான் முதலாளியா இருக்க லாயக்கில்லேன்னு சங்கத்திலே 
சேர்த்துக்க மாட்டேனுட்டாங்க.”
கண்ணப்பன் மெதுவாகச் சிரித்தார்.
“கிராக்கி பிடிக்கணும்கிற நோக்கமில்லே. கஸ்டமர் கையிலே காசை ஊர் ஒலகமெல்லாம் பிடுங்கிண்டு ஓடறது. நாவார வயிறார சாப்பிடவாவது வரலாம்னு ஓட்டலுக்கு வர்றார் கஸ்டமர். அவர் ஜேப்பிலேயும் வயித்திலேயும் அடிச்சா அனுப்பட்டும்? எனக்கு லாபம் மினிமமா வந்தாப் போறும். கஸ்டமர் வயிறு எரிஞ்சுண்டு ஆனந்தராயன் கூட கெட்டுப்பிட்டான், காசு ஆசை பிடிச்சுண்டுத்துன்னு வையாம போனாப் போறும்.”
கண்ணப்பன் உதட்டை மென்று கொண்டே ஆனந்தராவை உற்றுக் கவனித்தார்.
அந்த நேரத்தில் ஒரு பெரிய பித்தளைத் தூக்குடன் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.
“சாம்பார் இல்லேம்மா... தினம் ஒன்னோட இதே தொந்தரவாப் போச்சு” என்று சாரங்கன் சள்ளென்று சீறி விழுந்தான்.
பேச்சை நிறுத்திவிட்டு சாரங்கனையும் அந்தப் பெண்ணையும் ஒரு பார்வை பார்த்த ஆனந்தராவ் விஷயத்தைப் புரிந்து கொண்டார்.
“என்னடா சாரங்கா... இவாளும் ஒருவகை கஸ்டமர் தாண்டா... நம்ம ஓட்டல் சாம்பார் ருஜிக்காகவோ, வேற ஏதோ கொறைக்காகவோ சாம்பார் கேட்க வர்றா. இருக்கறதை ஊத்தி அனுப்பு. பாப்பா, காசைக் கொண்டாம்மா” என்று வாங்கிப் போட்டுக் கொண்டு அந்தச் சிறுமியை உள்ளே அனுப்பினார் ஆனந்தராவ்.
“ஆச்சா... நான் ஒண்ணும் பெரிய தியாகி இல்லே நானும் மனஷன் தான். ஆனா விபரீதமான காசு எனக்கு வேண்டாம். வெலைவாசி ஏறிப் போய்ண்டேதான் இருக்கும். என்னாலே சமாளிக்க முடியறவரை இந்த விலையைத்தான் வைக்கப் போறேன். தலையும் முழுகிண்டு போற லெவல் வந்தா நானும் வெலையை ஏத்தியாகணும். ஆச்சா... மொதலாளிகள் சங்கத்திலே இருந்து எனக்கு கெட்டவுட். இப்ப நீங்க என்னடான்னா தொழிலாளிகள் சங்கத்திலேயும் என்னைச் சேத்துக்க மாட்டேங்கறேள்... அப்ப எனக்குச் சங்கமே கெடையாதா?” என்று கேட்டார் ஆனந்தராவ்.
நீலகண்டன் சிரித்தார்.
“நீங்க ஒரு தனிப் பிரகிருதி ராயரே” என்று ஆரம்பித்தார் கண்ணப்பன்.
“என்னைத் தனின்னு ஒதுக்கிடாதீங்கோ... ஆனந்த பவன்லேயும் தொழிற்சங்கம் ஆரம்பியுங்கோ. நான் வேண்டாங்கல்லே. நானும் அதிலே ஒரு மெம்பர் ஆகணும்... எல்லோருக்குமா நானே சந்தா கட்டறேன்.”
“தொழிற்சங்க சட்டம் இடம் தராது ராயரே.”
“அதாவது வேஜஸ், போனஸ், டூட்டி அவர் இதையெல்லாம் கண்டிஷன் பண்ணத்தானே...”
“மாதவா” என்று மணியைத் தட்டினார் ஆனந்தராவ் அவன்தான் வந்தான்.
“அவர்கிட்டே உன் சம்பளம் என்னன்னு சொல்லுடா.”
மாதவன் தயங்கினான்.
“உண்மையைச் சொல்லுடா... நீ ஸ்டாம்பு மேலே எவ்வளவுக்கு கையெழுத்து போடறே... என்ன வாங்கறே...”
“ரெண்டும் ஒணுதானே அண்ணா.”
“அதுதான் எவ்வளவு?”
“முந்நூறு ரூபா... கம்பெனி சாப்பாட்டோட.”
“போனஸ்?”
“மூணு மாச போனஸ்.”
“எத்தனை அவர் வேலை செய்யறே?”
“ஷிஃப்ட் ஸிஸ்டம். எட்டு மணி நேரம்.”
ஆனந்தராவ் கண்ணப்பன் முகத்தைப் பார்த்தார்.
“மத்த ஓட்டல்லே ஸீனியர் சர்வருக்கு இருநூறு. போனஸ் ரெண்டு மாசம்தான். புகாரா சொல்ல வரல்லே. இதான் நெலமை. எனக்கும் தொழிலாளிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கறதா நெனைக்கிறேளா...?”
கண்ணப்பன் விரல் நகத்தால் உதட்டைக் கீறிக் கொண்டார்.
“என் மொதல் இங்கே சொல்பம் தான். எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட அம்மா ஒருத்தி இந்த ஓட்டல் நொடிக்கிற நெலமை வந்தப்ப. கழுத்திலேயும் கையிலேயும் போட்டிணடிருந்த நகையெல்லாம் கழட்டிக் கொடுத்தா. ஐம்பத்தேழு சவரன், அதை விக்கலே. பாங்கிலே வைக்கறது. மூட்டுக்கறது மறுபடியும் ஒரு கஷ்டம் வந்தா வைக்கறது இப்படியேதான் மொதலை ரொடேட் பண்ணிண்டு வர்றேன்.”
திடீரென்று தன் அந்தரங்க விஷயம் ஒன்றை ஆனந்தராவ் பகிரங்கப்படுத்தியதால் ஒரு கூச்சம் கண்ணப்பனைத் தாக்கிற்று.
“இன்னம் நான் வாடகை வீட்டிலே தான் குடியிருக்கிறேன். என் பையனை பி.எஸ்ஸி., படிக்க வச்சேன். அதே மாதிரி எங்க சரக்கு மாஸ்டர் சுப்பண்ணாவோட தம்பியையும் பி.ஏ., படிக்க வச்சோம். ரங்கையர் பையன் பி.யூ.ஸி. படிச்சு நின்னுட்டான். அவர் பொண்ணு எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணினா. எல்லாம் ஓட்டல் செலவிலே தான். ஓட்டல் என்னோடதுன்னு நான் எப்பவும் நெனைக்கறதில்லே. மானேஜ்மெண்ட் பாத்துக்கறேன். ரஷ்யாவிலே தொழிலாளி சம்பளத்தை விட தொழிற்சாலை டைரக்டர் சம்பளம் அதிகம்னு சொல்றாளே... அதே மாதிரி நானும் மாசா மாசம் என் குடும்ப செலவுக்கு அதிகமா எடுத்துண்டுறேன். இப்ப சொல்லுங்கோ, என்னை ஏன் தொழிற் சங்கத்திலே சேத்துக்கப்படாது?”
கண்ணப்பன் மௌனமாக யோசித்தார்.
“நான் செஞ்சதையெல்லாம் சொல்லிக் காட்டவரல்லே. என் கை எவ்வளவு கிளீனா இருக்கன்னு காட்டத்தான் சொல்றேன். குக் சுப்பையாவுக்கு ஓட்டல் கல்யாணம் பண்ணி வச்சது. காப்பி மாஸ்டர் வைத்தாவுக்கும், சர்வர் சுப்புணிக்கும் பெண் பார்த்துண்டிருக்கோம். அதுக்கும் ஓட்டல்தான் கல்யாணம் பண்ணி வைக்கும்.”
கண்ணப்பன் கனைத்துக் கொண்டே ஆரம்பித்தார்.
“நீங்க ஒரு எக்செப்ஷன் ராயரே... ஒம்ம மாதிரியே இருந்துட்டா... எங்களுக்கு வேலை இல்லே.”
“மத்தவா எப்படி இருக்காளோ தெரியாது. ஆனந்த பவனைப் பொறுத்தவரைக்கும் எல்லாரும் ஒரு யூனிட்டாத்தான் இருக்கோம். நீங்க தனித் தனியா தொழிலாளிகளை விசாரியுங்கோ... சங்கம்னு வெறுமனே சந்தா வாங்கி ஆரம்பிச்சா மட்டும் போறாது... எங்க சுப்புணி ரேஸுக்குப் போயிண்டிருக்கான். வைத்தாவுக்கு சினிமாப் பைத்தியம். எங்க பாபாவுக்கு படிக்க ஆசை. இந்தக் கொறைகளுக்கெல்லாம் உள்ளபடியே உங்க சங்கம் ஒரு சிகிச்சை பண்ணணும்.”
“நான் அப்புறமா வர்றேன் ராயரே” என்று கண்ணப்பன் எழுந்திருக்கப் போனார்.
‘2இருங்கோ, உட்காருங்கோ” என்று அவரைக் கையமர்த்தினார் ஆனந்தராவ், ரங்கையர் நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.
“நான் கவர்ன்மெண்டை ஏமாத்தறதில்லே. ஒழுங்கா டாக்ஸ் கட்டிண்டு வர்றேன். கலப்படம், பழசை புதுசாக்கிப் போடறது அதெல்லாம் நம்ம ஓட்டல்லே கெடையாது. சானிட்டரி இன்ஸ்பெக்டர் வந்தா சாப்பிட்டு பில் கொடுத்துட்டுப் போறார். பெரிசா பில்டிங் கட்டலேன்னாலும் லாபம் வந்துண்டுதான் இருக்கு. லாபத்தை எல்லாம் ஓட்டல்லேயே இன்வெஸ்ட் பண்ணிண்டு வர்றேன்.”
“இந்த ஓட்டலுக்கு புரொப்ரைட்டர் நீங்கதானே?” என்று மடக்கினார் கண்ணப்பன்.
“அப்படி ஒரு காலம் போட்டு இருக்கு. லைசென்ஸ்லே. அதுக்கே நேரா என் பேரை எழுதிண்டு போறாங்க. அவ்வளவுதான்.”
ஏழரைக்கு மேல் மின்சாரப் பற்றாக் குறையால் சட்டென்று விளக்கு அணைந்தது.
“மறுபடியும் லைன் கொடுப்பாங்க! பத்து நிமிஷமாறதோ அரை மணி ஆறதோ” என்றார் ஆனந்தராவ்.
ரங்கையர் மெழுகுவர்த்தி எடுத்து வர ஸ்டோர் ரூமுக்குப் போனார். போகப் போகவே “சாரங்கா, ஸ்டால்லே நேத்து ஆறு மெழுகுவர்த்திகளையும் அணைச்ச எடுத்து வச்சிருக்கேன். கொளுத்தி டேபிள் மேலே வை!” என்று உள்ளே குரல் கொடுத்தார்.
இருட்டில் எதிரே உட்கார்ந்திருந்த கண்ணப்பனைப் பார்த்து ஆனந்தராவ் பேசினார்.
“இந்த ரங்கையர் இருக்கிறாரே... இவருக்கு லேபர் ஆக்ட் என்னன்னு சொன்னாலும் கேக்க மாட்டார். விடிகாத்தாலே அஞ்சு மணிக்கு ஓட்டலுக்கு வந்துட்டு, ராத்திரி பத்து மணிக்கு நான் கல்லா கட்டற வரைக்கும் கூட இருந்துட்டுக் கடையைச் சாத்திண்டு சாவி எடுத்துண்டு வருவார். நான் எவ்வளவோ சொல்லிப் பாத்தாச்சு. லீவுன்னும் ஷிஃப்டும் விட்டாக்கூட இவர் ஓட்டலுக்கு வந்துடறார். என்னிக்காவது அந்த பனியனைக் கழட்டிட்டு இஸ்திரி போட்ட சொக்கா போட்டுண்டு வந்தா அன்னிக்குத்தான் ரங்கையர் லீவ் எடுத்துண்டார்னு அர்த்தம். அது வருஷத்துக்கு ஒரு நாள் கூட இருக்காது.”
ரங்கையர் மெழுகுவத்தியைக் கொளுத்திக் கொண்டு அது அணையாதவாறு உள்ளங்கையால் தடுத்தவாறு மெதுவாக வந்தார். மெழுகுவர்த்தியின் வெளிச்சம் அவர் முகத்தில் வீசிற்று. ஆனந்தராவ் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
கல்லா மேஜையின் மீது எரியும் மெழுகுவர்த்தியைச் சாய்த்து உருகின மெழுகைச் சொட்டவிட்டு மெழுகுவர்த்தியை அதன்மீது நிறுத்தினார். கையோடு கொண்டு வந்த இன்னொரு மெழுகுவர்த்தியை அந்தச் சுடரில் காட்டிப் பற்ற வைத்துக் கொண்டு போய் அவர்கள் உட்கார்ந்திருந்த மேஜையில் மெழுகைச் சாய்த்து ஒட்ட வைத்தார்.
நீலகண்டன் “சரி ராயரே... அப்ப ஒரு மேஜர் மெஷினுக்கு ஆர்டர் எழுதிக்கட்டுமா? என்று கேட்டார்.”
“நீலகண்டன் சார்... கோவிச்சக்கப்படாது. ஒமக்கு ஆர்டர் குடுத்து மேஜர் சைஸிலே மாவாட்டற மிஷின் கொண்டாந்து எறக்கிட்டீர்னா... நம்ம ஓட்டல்லே மாவட்டறதுக்குன்னே பிறவி எடுத்திருக்கான் ஒரு பய, கணபதின்னு பேரு. மலங்க மலங்க முழிச்சண்டு தேமேன்னு நிப்பான். அவனைக் கொடுக்க நம்ம ஓட்டல்லே வேறே வேலை கெடையாது. அநாதியா அவனை வீட்டுக்குத்தான் அனுப்ப வேண்டியிருக்கும். மிஷினை விட மனுஷாள் முக்கியம். இல்லையா... நீங்களே சொல்லுங்கோ.”
நீலகண்டனுக்கு இவ்வளவு நேரம் காத்திருந்தது ஒரு வியர்த்தமாகப்பட்டது.
“நீங்களே சொல்லுங்கோ. மெஷினை வாங்கிண்டு கணேசனை ஆட்குறைப்புச் செஞ்சா நீங்க போராட்டம் மறியல்னு அமர்க்களப்படுத்திட மாட்டேளா?”
“ஒம்ம ஓட்டல்லே அது நடவாது ராயரே. நான் வர்றேன். இவ்வளவு நேரம் காத்திருந்தது ஒரு வேஸ்டு” என்று எழுந்தார் நீலகண்டன்.
“லைட் வரட்டுமே... ரோடெல்லாம் இருண்டு கெடக்கப் போறது. அப்புறமாந்தான் போவேள்... ஒக்காருங்கோ” என்று அவர் ஏமாற்றத்தோடு புறப்படுவதை ரசிக்க முடியாமல் சொன்னார் ஆனந்தராவ்.
விளக்கு வந்தபின் அவர்கள் எழுந்து போனார்கள். இரண்டு தினங்களாக ஆனந்தராவ் முகத்தில் ஓர் ஆயாசத்தையும் இனங்காண முடியாத ஒரு வெறுமையைக் கவனித்து வந்த ரங்கையருக்கு சற்றுத் தெம்பு ஏற்பட்டது. பழைய நிலைக்கு ஆனந்தராவ் மீண்டுவிட்ட தெம்பு. அவரிடம் சொல்லக்கூடாது என்று மறைத்து வைத்திருந்த ஒரு விஷயத்தைக் கொஞ்சம் தெம்பாக இருக்கிற இந்த நேரத்தில் சொல்வானேன் என்று தயங்கினார்.
சொல்லாவிட்டால் நாளைக்கு ரொம்ப அலங்கலாய்த்துக் கொள்வார் என்ற கவலை ஏற்படவே, மெதுவாக கல்லா மேடை அருகே வந்து நின்றார்.
“என்ன ரங்கா?” என்று நிமிர்ந்தார் ஆனந்தராவ்.
“நாளைக்குக் காலம்பற எக்ஸ்பிரஸ்லே பொறப்படறாளாம்.”
ஆனந்தராவுக்கு யார் என்று புரிந்தது. அவர் முகம் இருண்டது.
“நீ சொல்லிப் பார்த்தியோ!”
“நீங்க சொல்லியே கேக்கலியே அண்ணா.”
ஆனந்தராவின் மேலுதடும் நெற்றிச் சதையும் நடுங்கின. அவர் கண்களை மூடிக்கொண்டார். ஓரிரு விநாடிகள் கனத்து நகர்ந்தன.
ம்ம்ம் என்று பெருமூச்சு ஹூங்காரமாக வெளிவந்தது. அவர் கண்ணைத் திறந்தார்.
“வண்டி எத்தனை மணிக்கு?”
“இங்கே நாலு அம்பதுக்கு வர்றது”
“நாலு மணிக்கெல்லாம் குதிரைவண்டி ஒண்ணை வீட்டுக்கு வரச் சொல்லிடு. நான் காலம்பற நாலே காலுக்கு வீட்டண்டை வர்றேன்.”
ஆனந்தராவ் சற்று நிறுத்தினார். பின்பு காலையில் நிகழும் வாகன சஞ்சாரத்தை அர்த்தமின்றி வெறித்துப் பார்த்தார்.
“ஸ்டேஷனுக்கு நீயும் நானும் போய் வருவோம்” என்றவர், சட்டென்று கல்லாவிலிருந்து எழுந்தார்.
“ரங்கா, கொஞ்ச நாழி கல்லாவைப் பார்த்துக்கோ... எனக்கு ரொம்ப ஆயாசமா இருக்கு. சித்தே சாயறேன்” என்று ஸ்டோர் ரூமை நோக்கி நடந்தார்.

Friday, 25 January 2013

ஜமுனா-7


ஜமுனா-7
கரகரவென்ற தேங்காய்த் துருவியின் கைப்பிடி சுழன்றது. பரப்பி வைத்திருந்த வாழை இலையில் லேஸ் லேஸாக தும்பைப் பூவாய்த் துருவல் உதிர்ந்தது. மணைமேல் உட்கார்ந்து கைப்பிடியைச் சுற்றிய ஜமுனா சற்று நிறுத்தி, மூடியைத் திருப்பி விட்டுக் கொண்டாள்.
அந்தச் சின்னக் கூடத்து ஓரமாக ஒரு காலை மடக்கியவாறு உட்கார்ந்து வெங்கடேச புராணம் படித்துக் கொண்டிருந்தாள் ஆனந்தலட்சுமி. அந்தி வெளிச்சம் மங்கிக் கூடம் இருண்டு விடவே மழமழவென்று தும்பு தூசு இல்லாமல் துப்புரவாய் இருந்த வாசலுக்கு எழுந்து வந்தாள்.
ஆனந்தலட்சுமி நகர்ந்ததைப் பார்த்த ஜமுனா, சட்டென்ற எழுந்து “இருங்கோ மாமி, லைட்டைப் போட்டுடறேன்” என்று ஸ்விட்சைப் போட்டாள்.
புத்தகத்தை கவிழ்த்து வைத்து விட்டு ஆனந்தலட்சுமி கையெடுத்து வெளிச்சத்தைக் கும்பிட்டாள்.
பாலாகத் துடைத்து வைத்திருந்த விளக்கு ஷேடும் பல்பும் விளக்கின் வெளிச்சத்திற்குத் தடையாய் நின்றது அழுக்கு ஸ்டூலைப் போட்டுக் கொண்டு மெனக்கெட்டு அதை ஜமுனா சுத்தப்படுத்தியதை ஆனந்தலட்சுமி மத்தியானம் கவனித்தாள். அவள் வந்து இது இரண்டாவது நாள். எத்தனை தான் அவள் கவனிப்பாள்?
பளபளவென்று முகம் பார்க்கிற மாதிரி துலக்கிய பாத்திரங்கள். ஏதோ ஓர் எக்ஸிபிஷனுக்கு அடுக்கிய மாதிரி பெரிய டப்பா, சின்ன டப்பா என்று கிரமப்படி அடுக்கிய சமையலறை ஷெல்ஃப், துளித் தண்ணீர், ஒரு கறை, சிறிது அழுக்கு? ஊஹூம்... சமையல் அறையில் பூஜை செய்யலாம். அத்தனை நறுவிசு.
பேசிக் கொண்டே சிரித்துக் கொண்டே ரத்தத்தில் ஊறிவிட்டது போன்ற லகுவோடு இயல்பாக ஜமுனா காரியம் ஆற்றும் பதவிசும், வீட்டை ஒரு கோயில் மாதிரி கட்டிக் காக்கின்ற நேர்த்தியும் ஆனந்தலட்சுமிக்கு அங்கலாய்ப்பை ஏற்படுத்தின.
‘தனக்கு ஒரு மகன் இல்லையே!’
ஆனந்தலட்சுமி வாசலிலேயே நிற்பதை உணர்ந்த ஜமுனா, நிமிர்ந்து பார்த்தாள்.
அங்குமிங்குமான தலை நரையில், முகத்தின் கோடுகளும் சுருக்கங்களும் தீட்டிய முதுமையில் ஆனந்தலட்சுமியின் அழகு மறைந்து விடவில்லை. வெள்ளை நிறம், புன்சிரிப்போடு சற்றுப் பிரிந்த உதடுகளின் வழியே தெற்றுப் பல் எட்டிப் பார்த்தது. சிற்பக் கச்சிதத்தில் தான் அந்த மூக்கு அமையும். கண்களில் இன்னம் ஒரு காந்தம் இருந்தது. பிரியத்தையும் வாத்சல்யத்தையும் கவருகின்ற காந்தம். இளமையில் இவளைப் பார்க்கின்ற அதிர்ஷ்டம் வாய்க்கவில்லையே என்று ஜமுனா ஆதங்கப்பட்டாள்.
“என்ன மாமி?” என்று தன்னையே பார்த்துக் கொண்டு நின்ற ஆனந்தலட்சுமியைச் சற்று வெட்கத்தோடு கேட்டாள்.
“எனக்கு ஒரு பிள்ளை இல்லாமேப் போச்சேன்னு அங்கலாய்க்கிறேண்டி அம்மா!” என்ற பெருமூச்செறிந்தாள் ஆனந்தலட்சுமி.
ஜமுனாவுக்குப் புரிந்தது. பெருமிதத்தை ஒரு புன்னகையால் மறைத்துக் கொண்டு சொன்னாள்:
“யாரையாவது தத்து எடுத்துக்கோங்க.”
“உன் மாதிரி பொண்டாட்டி கிடைக்கிறாள்னா நூறு பேர் ஸ்வீகாரம் வரக் காத்திருப்பாங்க. ஒனக்குச் சமதையா ஒருத்தனைப் பொறுக்கறது சிரமம்.”
கலீரென்று சிரித்தாள் ஜமுனா.
“எதுக்கு வேலை மெனக்கெட்டு தேங்காயைத் துருவிண்டிருக்கே?”
“ஒரு தேங்காய் சும்மா இருந்தது. அழுகி வீணாகிடப் போறதேன்னு துருவறேன்.”
சாத்தியிருந்த கதவுக்கு வெளியே சைக்கிள் மணி அடித்தது. ஜமுனா எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். மோகன் வெளியே நின்றான். சைக்கிள் ஹாண்டிலில் மாட்டியிருந்த கைப்பையைக் கழற்றி அவளிடம் நீட்டியவாறே அவளைப் பார்த்துச் சிரித்தான்.
அந்தச் சிரிப்போடு அவனுடைய பார்வையில் பல அர்த்தங்கள் புரண்டன. தெருவில் விளக்குப் போட்டு விட்டார்கள். அந்த வெளிச்சத்தில் முகம் கழுவி அழகாக மை தீட்டி லேசாகப் பவுடர் பூசிப் பொட்டிட்டிருந்த ஜமுனாவின் அழகு, அவனை அவள் முன்பு எப்படி மண்டியிட வைத்திருக்கிறது என்று ஓர் அர்த்தமும் தொனித்தது.
‘உஸ்ஸ்’ என்று வாயைக் குவித்து, வெகு மெதுவாக ஓர் உஸ் போட்டாள் ஜமுனா. அவளது கண்கள் ஒதுங்கி, திறந்த கதவுக்குப் பின்னால் ஆனந்தலட்சுமி இருக்கிறாள் என்ற இரு தரம் புரண்டு எச்சரித்தன.
“ரொம்ப தாங்க்ஸ்” என்று அவள் வாய், உபசாரமாகச் சொல்லிற்று.
“வெறும் தாங்க்ஸ் மட்டும்தானா?” - அவளுடைய எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மோகன் துணிந்து கேட்டான்.
“சில்லறை ஏதாவது வேணும்னா மீந்திருக்குமே, அதை வச்சுக்கங்க.”
மோகன் முகம் சுண்டிற்று. ஞாபகப்படுத்துகிறாளோ என்று எண்ணியவாறே ஜேபியில் கையை விட்டு எடுத்து நீட்டினான்.
 அவனுக்கு மட்டும் தெரியும்படியாக நாக்கைத் துருத்தி அவள் பரிகாசம் செய்தாள்.
வாங்கிக் கொண்டு அவள் இன்னொரு முறை “தாங்க்ஸ்” சொன்னாள்.
மோகன் முகம் குளிர்ந்துவிட்டது. சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அவன் நகர்ந்தான். கதவை லேசாக ஒருக்களித்து விட்டுப் பையோடு திரும்பிய ஜமுனா, ஆனந்தலட்சுமியைக் கவனித்தாள்.
அவள் முகத்தில் லேசாக நிழல் படிந்திருப்பது ஜமுனாவுக்குள் எச்சரிக்கை ஏற்படுத்தியது.
“யார் ஜமுனா... இந்தப் பிள்ளையாண்டான்?”
“எதிர்த்த சாரி வீட்டில் இருக்கிறார். என்னமோ மெடிகல் ரெப்ரசண்டேடிவாம்.”
“பிரம்மச்சாரியா?”
“தெரியலே... அப்பாகிட்டே எப்பவாவது வந்து வேதங்கள், ஆசார அனுஷ்டானங்கள் பத்திப் பேசிண்டிருப்பார். இருட்டினப்புறம் கடை கண்ணிக்குப் போக எனக்கு இஷ்டமிருக்கிறதில்லே. எப்பவாவது அனுப்புவேன். அவரும் பிரியமா வாங்கிண்டு வருவார்.”
ஆனந்தலட்சுமிக்கு மனசு சமாதானம் ஆகவில்லை.
“நீ ஜாக்கிரதையாவே இரு கொழந்தே, நீ கல்மிஷம் இல்லாமே பழகினாலும் உலகம் அப்படியே இருக்கணும்னு நிர்ப்பந்தம் இல்லே.”
“நான் என்ன அவ்வளவு பச்சைக் குழந்தையா மாமீ? ஒரு வரம்பு வச்சிருக்கேன். கொஞ்சம் தாண்டினா பளிச்சுணு ஒரு வார்த்தை விட்டா, பெரம்படி மாதிரி விழும்.”
இப்போது ஒரு மாதிரி அவள் சமாதானமாகிவிட்டாள்.
“ரங்கையர் பெரிய ஆசார சீலர். எங்க சித்தி அவரை வாய் ஓயாம புகழ்ந்திண்டிருப்பா. அவருடைய வைதீகத்துக்கும் அனுஷ்டானத்துக்கும் எவ்வளவு மதிப்பு உண்டுன்னு ஒனக்குத் தெரியாது.”
முகத்தின் குளிர்ச்சி மாறாமல் புன்முறுவலோடு ஜமுனா அதைக் கேட்டுக் கொண்டு வந்தாள்.
“இப்படி ரெண்டே ரெண்டு வேளை மட்டும் ஆசார சுத்தியா ஸ்நானம் பண்ணி பூஜைக்கு அப்புறம் ஆகாரம் எடுத்துக்கறது. விடிகாலையிலே எழுந்து கெணத்து ஜலத்தை இறைச்சு ஸ்நானம் பண்ணி, அரைமணி நேரம் வேத அத்யயனம் பண்றது. இந்தப் பூமியிலே பொறந்துட்ட தோஷத்துக்காக ஒரு கர்மாவைப் பண்றாப்பிலே சப்ளையரா இருக்கிறது. அதிலே ஒரு அந்தரங்க சுத்தி, செய்யற காரியத்திலே மனசை லயிக்க விட்டு ஈஸ்வரார்ப்பணமா காரியம் பண்றது, இதெல்லாம் சாமான்யம்னு நெனைக்கிறியா ஜமுனா? எல்லாம் ஒரு தபஸ் மாதிரி, என்னமோ நாலுலே ஒருத்தர் ஒங்க அப்பான்னு நெனச்சுண்டுடாதே. மஹாகனவான். இல்லாட்டி தங்க விக்கிரகமாட்டம் ஒன்னைப் பெத்திருக்க முடியாது.”
ஆனந்தலட்சுமி எங்கே சுற்றி வளைக்கிறாள் என்று ஜமுனாவுக்குப் புரிந்தது. குறுக்கிடுவதால் பிரயோசனம் இல்லை என்று விட்டு விட்டாள்.
“எதுக்குச் சொல்றேன்னா, அவர் பொண்ணு நீங்கற நெனப்பு சதா ஒன்னைக் காவல் காக்கணும்.” - மேலும் ஏதோ சொல்லப் போன ஆனந்தலட்சுமி சட்டென்று நிறுத்திக் கொண்டாள்.
அவளது கண்களில் கரகரவென்று கண்ணீர் சுரந்து, மூக்குக் கண்ணாடியில் திவலைகள் தெறித்தன.
கண்ணாடியைக் கழற்றி, சேலைத் தலைப்பால் ஆனந்தலட்சுமி கண்களைத் துடைத்துக் கொண்டாள். கைப்பையை ஆணியில் மாட்டிவிட்டு, சரேலென்று திரும்பிய ஜமுனா, ஆனந்தலட்சுமிக்கு ஆதரவாகப் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.
“என்ன மாமீ...?” - அவள் குரல் வாஞ்சை ஆனந்தலட்சுமியின் திடீர்த் துயரத்தைப் புரிந்து கொண்டது போல் அதற்கு அரவணைப்பான கனிவோடு ஒலித்தது.
சட்டென்று கண்ணாடியைத் துடைத்து மாட்டிக் கொண்டே ஆனந்தலட்சுமி, “ஒண்ணுமில்லேடி கொழந்தே! என்னமோ ஞாபகம் வந்துடுத்து” என்று அருகில் உட்கார்ந்திருந்த ஜமுனாவின் முதுகை நீவினாள்.
“என்ன வாங்கிண்டு வரச் சொன்னே?”
“மைதா மாவு தீர்ந்து போயிடுத்து.”
“இப்ப மைதாவுக்கென்ன அவசியம் வந்துடுத்து?”
ஜமுனா பதில் தரவில்லை.
“தேங்காய் ஏன் துருவறேன்னா அழுகிடும்கிறே. மைதா மாவு ஆயிட்டது வாங்கி வரச் சொன்னேங்கிற. ஒண்ணுமறியாக் கள்ளியாட்டம் பலகாரம் பட்சணம் செஞ்சுவச்சேன்னா நான் சாப்பிட மாட்டேன், பாத்துக்கோ!”
“எனக்குப் பால்போளி சாப்பிட ஆசை வந்துட்டுது மாமி.”
ஜமுனாவின் சாமர்த்தியத்தைக் கண்டு ஆனந்த லட்சுமிக்கு வருத்தமதான் வந்தது.
“எனக்குப் பால் போலி பிடிக்கும்னு ரங்கையர் சொன்னாரா?”
“இல்லையே!”
கண்ணாடியை மறுபடியும் கழற்றினாள் ஆனந்தலட்சுமி, அவளது சேலைத் தலைப்பு மீண்டும் கண்களைத் துடைத்தது.
“மாமீ... மாமீ...”
“பலகார பட்சணம் சாப்பிடவா வந்தேன். இந்தப் பாழும் மனசிலே பந்தம் இன்னும் போகல்லே. கடைசித் தடவையா பார்த்துடுடணும்னு தோணித்து.”
“............”
“ஒனக்குப் புத்தி சொல்ற யோக்யதை எனக்கில்லேடீ கொழந்தே! நீ கள்ளம் இல்லாத பால் மாதிரி இருக்கே. நான் திரிஞ்சு போய் தெருவிலே கொட்ட வேண்டிய பால்.”
ஜமுனா சட்டென்று எழுந்து உள்ளே போனாள். கூடத்தை ஒட்டிக் கிழக்கும் மேற்குமாக இருந்த இரண்டு அறைகளில் மேற்கு அறையில் நுழைந்து சிறிய பீரோவைத் திறந்து உள்ளங்கை அகலத்துக்கு, கையடக்கமாக இருந்த டிரான்ஸிஸ்டர் ஒன்றை எடுத்தாள். அறை விளக்கைப் போட்டு ஸ்டேஷன் தேடி மறையைத் திருகினாள். சென்னை வானொலியில் உபந்யாசப் பிரவசனம் ஒன்று வெண்கலக் குரலில் கேட்டது. விளக்கை அணைத்து விட்டு வெளியே வந்தாள்.
“மாமீ, இந்தப் பிரவசனத்தைக் கேளுங்கோ, மனசு நிம்மதியா இருக்கும்.”
ஆனந்தலட்சுமி டிரான்ஸிஸ்டரை வாங்கினாள்.
“இதேதுடீ அம்மா... ரொம்ப நன்னா இருக்கே!”
“அண்ணா ராகவன் ஜப்பான் போயிருந்தப்போ வாங்கிண்டு வந்தான் மாமி.”
ஆனந்தலட்சுமி பிரவசனத்தில் மூழ்கினாள். ஜமுனா தேங்காய் துருவ எழுந்தாள். நாலைந்து சுற்றிலேயே மூடி தீர்ந்துவிட்டது. இரண்டு மூடிகளையும் சமையல் அறைக்கு எடுத்துப் போனாள். உள்ளே விளக்குப் போடும் ஓசை கேட்டது.
எவர்சில்வர் தட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்த ஜமுனா, துருவல் கொட்டியிருந்த வாழை இலையை வாகாகத் தூக்கித் தட்டில் வைத்துக் கொண்டாள். தேங்காய்த் துருவியைச் சாய்த்துப் பிடித்து ஊதினாள். தட்டின் குறுக்கே துருவியை வைத்தபின், ஆணியில் மாட்டியிருந்த பையை எடுத்துக் கொண்டே மீண்டும் சமையலறைக்குப் போனாள்.
ஒருக்களித்தவாறு திறந்திருந்த தெருக்கதவின் வழியே உடம்பை நெளித்துக் கொண்டு சுவாதீனமாக ஒரு நாய் உள்ளே நுழைந்தது. தெரு நாய், கறுப்பு நிறம், கதவு லேசாக ஓசைப்பட்டதைக் கவனித்து ஆனந்தலட்சுமி திரும்பினாள்.
திருட்டுத்தனத்தோடு அவளைப் பார்த்து லேசாக வாலை ஆட்டிற்கு அது.
“ஜம்னா, நாய் வந்திருக்கு” என்று சமையல் அறையை நோக்கிச் சொன்னாள்.
“வந்துட்டேன் மாமி.”
தெரு நாய் ஆனந்தலட்சுமியை கண்ணோட்டம் விடுவதுபோல்  ஒருமுறை பார்த்துவிட்டு ஆட்சேபகரமாக எதுவும் காணாததால் சுவாதீனமாகப் படுத்துக் கொண்டது.
“இந்தத் தெரு நாயை எல்லாம் உள்ளே சேத்தறது எனக்குப் பிடிக்கலே அம்மா, அது மொகத்தைப் பார்த்தியோ, ஒரு திருட்டுத்தனம் தெரியறது. ஆமா.. கோயிலுக்குப் போகலியா?”
“சுவாமியை நாம தரிசிக்கப் போனா, நம்மைத் தரிசிக்க நாலு பேர் வந்துடறா.”
“அதான் லோகம். நானும் சின்ன வயசிலே அப்படி அனுபவப்பட்டிருக்கேண்டியம்மா” - அவள் பிரவசனத்தின் வால்யூமைக் குறைக்கத் தவறான மறையைத் திருகினாள்.
“ரூப் தேரா மஸ்தானா... ப்யாருமேரா தீவானா” என்று ஸ்டேஷன் மாறி டிரான்ஸிஸிடர் இயங்கிற்று.
“இதை அணைச்சுவிடுடீ கொழந்தே, என் கதையை ஒங்கிட்டே கட்டாயமாக சொல்லிடணும்னு என் மனசு துடிக்கிறது.”
டிரான்ஸிஸ்டரை வாங்கி நிறுத்தினாள் ஜமுனா.
“சமையல் உள்ளுக்கு வந்துடுங்கோ மாமி. நீங்க பேசறச்சே நான் வேலையை செஞ்சுக்கறேன்.”
வெங்கடேச புராணத்தில் காகித மூலையை மடித்து விட்டு எழுந்தாள் ஆனந்தலட்சுமி.
“இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டுப் போனேள்னா எனக்கும் உங்க கதையைக் கேட்ட மாதிரியும் இருக்கும். திருப்தியும் கெடைக்கும்.
ஆனந்தலட்சுமி வேதனையோடு சிரித்தாள்.
“இப்ப நான் தங்கி இருக்கிறதே, அதிகப்படி கொழந்தே! ரங்கையர் மாதிரி ஆசாரசீலர் ஆத்திலே தங்க துளி யோக்யதை கூட எனக்குக் கிடையாது. இந்தக் கட்டையாலே நாலு பேருக்கு ஏதோ உபகாரம் செய்யணுமனு கர்மா இருந்தது. சித்தி போனதும் அதுவும் போயிடுத்து. பாவ மூட்டை பளு அதிகமாயிட்டது கொழந்தே. நாலு க்ஷேத்திரங்களைத் தரிசனம் பண்ணி எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு கொறைச்சுண்டு காசிக்குப் போகப் போறேன். பகவான்சீட்டை அனுப்பற வரைக்கும் காத்துண்டு இருப்பேன். கங்கா நதியிலே இந்தக் கட்டை கரைஞ்சுடுத்துன்னா போறும்.”
முறத்தில் மைதா மாவுப் பொட்டலத்தை அவிழ்த்துக் கொட்டிய ஜமுனா, எதிரில் வந்து உட்கார்ந்த ஆனந்த லட்சுமியை ஏறிட்டுப் பார்த்தாள்.
கங்கையின் பிரவாகம் அவள் மனக் கண்ணில் தோன்றி மறைந்தது. போன முறை லீவில் வந்தபோது, ராகவன் அவளையும் வட தேச யாத்திரைக்குக் கூட்டிச் சென்றான்.
பண்டாக்களின் களேபரம்... யாத்திரிகர்களின் சந்தடி... ஆயிரம் கவலைகள்... இன்ப துன்பங்கள்... எதையும் பொருட்படுத்தாமல் பாவ புண்ணியங்களைத் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டு செல்லும் கங்கா நதியின் கம்பீர ஓசை அவள் மனச் செவியில் விழுந்தது.[தொடரும்]

Thursday, 24 January 2013

ஜமுனா-6

6
வாழையிலைக் கட்டுக்குப் போட்டிருந்த நார்க்கட்டை பேனாக் கத்தியால் அறுத்தார் ரங்கையர். மூன்று கட்டுகள். கட்டு அறுந்தும் சிறைவாசம் நீங்கிய ஆசுவாசத்தோடு வாழையிலைகள் விரிந்து கொடுத்தன. நல்ல கிளிப் பச்சை நிறத்தில், தொட்டுப் பார்ப்பதிலேயே ஒரு சுகமும் ஆசையும் தூண்டும் மிருது. ஆனந்தபவனில் மட்டும்தான் அந்த இலையில் சாப்பிடும் இதம் கிடைக்கும்.
காலையில் ஒடுகத்தூரிலிருந்து வரும் முதல் சிங்கிளில் எஸ்.கே.பி.எம் டிரைவர் கோவிந்தன் கொண்டு வந்து இறக்கி விடுவான். வருஷக் கணக்கு ரங்கையருக்கு ஞாபகமில்லை. ரொம்ப நாளாக நடக்கும் மாமூல் அது, ஸ்டாண்டில் பஸ்ஸை நிறுத்தி விட்டு, கோவிந்து பல்துலக்க ஆனந்தபவனுக்கு வருவான்.
ஸ்டாலுக்கு எதிர் டேபிளில் தான் உட்காருவான். அந்த டேபிளுக்கு யார் சர்வராக இருந்தாலும் ரங்கையர்தான் கோவிந்துவைக் கவனிப்பார். அவர் கையில் பலகாரம் சாப்பிடாமல் போய்விட்டால் ஏதாவது ஒரு ஆக்ஸிடென்ட்டோ, தகராறோ நடக்கப் போகிறது என்று கோவிந்து கண்டுபிடித்து வைத்திருந்தான்.
ஒடுகத்தூர் வாழைத் தோட்டங்களில் ஆனந்தபவனுக்கேற்ற வாழை மரங்களை பஸ்ஸில் போகும் போதும் வரும்போதும் கவனித்துக் கொண்டு போவான். டிரைவர் வேலையிலிருந்து கொண்டே பையனைப் படிக்க வைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக்கிவிட்டான். கந்திலியில்தான் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணனுக்கு வேலையாகி இருந்தது.
கிருஷ்ணனும் ஹாஸ்டலில் இடம் கிடைக்காமல் ஆனந்தபவன் சாப்பாட்டில்தான் காலேஜ் முடித்தவன். எனவே இன்றைக்கும் அவனுக்கு ஒரு காரியரில் நாள்தோறும் இரண்டு வேளை. வண்டியில் சாப்பாடு போகிறது.
காலையில் டிபன் சாப்பிடும் போது பெரிய பெண் பிரசவத்திற்கு வீடு வந்திருப்பதையும், கிருஷ்ணனுக்கு நிச்சயதார்த்தம் செய்ய யோசிப்பதையும் ரங்கையரிடம் சொல்லியிருந்தான் கோவிந்து.
வழக்கமாக வாழையிலைக் கட்டை அறுக்கும் போதெல்லாம் ரங்கையருக்கு கோவிந்துவின் குடும்ப ஞாபகம் வரும், ஆனந்தபவனின் தொழில் சக்கரம் இயங்க, இப்படிப் பல சின்னஞ்சிறு பல்சக்கரங்கள். ஒன்றை ஒன்று தள்ள, ஆனந்தபவனின் இயக்கத்தில் அந்தரங்க சுத்தியான பிரீதியோடு உருளுகின்ற பல்சக்கரங்கள்.
சாயந்திர டிபனுக்காகக் கொஞ்ச இலைகளை ஒதுக்கிவிட்டு மீதியை ராத்திரி சாப்பாட்டிற்காக ஒதுக்கினார். நீளவாக்கில் இருந்த இலைகளை மும்மூன்றாக வகிர்ந்து கொண்டே சமையல் கட்டைச் சுற்றி நோட்டம் விட்டார் ரங்கையர். வைத்தா காப்பி அடுப்பின் முன்னே ஸ்டூலில் உட்கார்ந்தவாறு சினிமாப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான். டபரா செட்டுகள் காப்டனுக்கு முன்னே நிற்கும் பட்டாள அணிவகுப்பு மாதிரி வரிசை வரிசையாக நின்றன.
அடுப்பில் பால் காய்ந்தது. சந்தை நாள் என்று அரிசி மூன்றுபடி அதிகமாக வேக வைத்து விட்டார்கள் சாப்பாட்டு ரேட் ஏறிவிட்டதால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் பல பேர் சாப்பிட வரவில்லை. சாதமும் சாம்பாரும் மீந்துவிட்டன. சர்வர் மணி வாழை இலை வைத்து, சட்னி வழித்துக் கொண்டிருந்தான். அவனைத் தவிர வேறு சர்வர் யாரையும் காணோம்.
டிபன் அடுப்பில் வெந்நீர் காய்ந்து கொண்டிருந்தது. ஊமை நெருப்பில் குருவி இறகு போல் சாம்பல் மூடிக் கிடந்தது.
க்ளீனர் பாபா அராபிய அடிமை மாதிரி மார்பின் மேல் கையைக் கட்டிக் கொண்டு, பில் எழுதும் டெஸ்கிற்கு மேல் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தான். ஏழிலிருந்து பத்து மணிவரை ஏதோ அடிதடி நடக்கிற மாதிரி இயங்கிய சமையல்கட்டு விச்ராந்தியாக ஓய்வெடுத்தது.
மத்தியானம் இரண்டரை மணியானால் ஆனந்த பவனில் இப்படி ஒரு மௌனம் பரவிவிடும். சாப்பாட்டு வேளை தவறிவிட்டதால் உதிரிகள் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காப்பி சாப்பிட வரும் வாடிக்கைக்காரர்கள் தவிர, வேறு நடமாட்டம் இராது. சாயந்திரப் பரபரப்பிற்குத் தயாராவது போல் எல்லாரிடமும் ஒரு சாவதானம் தெரியும்.
வெளியே ப்ளைவுட் அடித்துத் தடுத்திருக்கும் ஃபேமிலி ரூமில் சர்வர்கள் மாநாடு கூடிவிடும். அரட்டைக் கச்சேரியின் மெயின் அயிட்டம் நேற்றுப் பார்த்த சினிமா, அதை விட்டால் சினிமா சம்பந்தப்பட்ட பாலிடிக்ஸ்.
ரங்கையர்தான் அவர்களை வேலையில் முடுக்கிவிடும் சாவி. அவரைப் பார்த்தால் கூட அந்நேரத்தில் யாரும் காணாத மாதிரி நழுவி விடுவார்கள், ரங்கையரும் கண்டுகொள்ள மாட்டார்.
லெட்ரீனுக்குப் போய்விட்டு டப்பாவை வைத்துக் குழாயடியில் கால் அலம்பியவாறு சுப்பண்ணா சமையலறைக்குள் நுழைந்தார். பாபாவை நெருங்கியதும் நின்று அவன் படிக்கிற புத்தகத்தை எட்டிப் பார்த்தார்.
“என்ன பாபா புத்தகம்?”
அவன் வெட்கத்தோடு சிரித்தான்.
“கதை புஸ்தகமா?”
அவன் புத்தகத்தை மடித்து நீட்டினான். வாழை இலை அரிந்து கொண்டே ரங்கையர் எட்டிப் பார்த்தார்.
வி.மயாக்கோவ்ஸ்க்கிய் என்று பெயரும் ஒரு பட்டாம்பூச்சிக்கு வலை போட்டடி ஓடும் ஒரு சிறுவன் படமும் தெரிந்தன. கீழே கொட்டை எழுத்தில் தலைப்பு போட்டிருந்தது. “நல்லது என்றால் என்ன? கெட்டது என்றால் என்ன?”
“கொழந்தைங்க புஸ்தகம். இதை எங்கேடா பிடிச்சே?”
“புஸ்தகக் கண்காட்சியிலே வாங்கினேன்.”
“என்ன விலை!”
“எண்பது பைசா.”
“எண்பது பைசாக்குள்ளே நல்லது கெட்டது என்னன்னு தெரிஞ்சுக்க வாங்கினாயாக்கும்... அதுவரையிலே உத்தமம்தான். வைத்தா மாதிரி ஒரு சினிமாக் கழிசடையைக் கட்டிண்டு அழாமே, இதைப் படிக்கிறியே...” என்று வைத்தாவைச் சீண்டினார் சுப்பண்ணா.
“ஒம்ம விமரிசனம் என்ன... நீர் மறியல் போராட்டம் பண்ணினீர்னாலும் பத்திரிகை ப்ரிண்ட் ஆகாமெ நிக்கப் போறதில்லே. நானும் படிக்காம விடப் போறதில்லை” என்று பத்திரிகையிலிருந்து முகத்தைத் திருப்பாமலேயே பதிலளித்தான் வைத்தா.
“அதான் ஏற்கெனவே நாரா நரம்பா உருகிப் போயிருக்கியே இன்னும் ஏண்டா சினிமாக்காரிகளைப் பாத்துப் பாத்து எளைச்சுப் போறே வைத்தா?”
மாதவன் உள்ளே வந்து அரட்டையில் கலந்து கொண்டான்.
“அவன் இன்னமும் உருகி உயிரை விட்டுடாமே வச்சுண்டிருக்கிறதுக்குக் காரணமே சினிமா நடிகைகள்தான் மாமா.”
“இதோ வந்துட்டார் விஞ்ஞான மேதை!” - விமரிசனத்தை மட்டும் உதிர்த்தானே ஒழிய, வைத்தா பத்திரியைலிருந்து கண்ணைத் திருப்பவில்லை.
“எப்படிடா சாரங்கா...?” என்று கேட்டு விட்டு தமாஷ் பார்க்க விரும்பினார் சுப்பண்ணா.
“என்னிக்காவது ஒரு நாள் அந்த நடிகைகள் ஒவ்வொருத்தியோடேயும் ஒரு லவ் சீன்லேயாவது நடிக்கணும்னு வைத்தாவுக்கு ஒரு லட்சியம். அதுதான்அவன் உசிரை அந்த ஒடம்பிலே ஒட்ட வச்சுண்டிருக்கு.”
“என்ன பிரமாதமான கண்டுபிடிப்பு” - வைத்தா படித்துக் கொண்டேதான் இருந்தான்.
‘இல்லேன்னு அடிச்சச் சொல்ல முடியுமா?”
“எதுக்குச் சொல்லணும்...?” வைத்தா படித்துக் கொண்டே பதில் தந்தான்.
“வைத்தா மாமா... ஒரு டபிள் ஸ்ட்ராங்க” என்று சர்வர் மணி வந்து நின்றான்.
“யாருக்கு... அக்பர் ரைஸ் மில்லா?” என்ற பத்திரிகையை மடித்துக் கீழே வைத்து விட்டு, டபரா செட்டைத் தூக்கினான் வைத்தா.
“அதெப்படி... அவ்வளவு கரெக்டா கேட்டுட்டே?”
“ரெண்டரை மணிக்கு மூதேவி அடிக்கும்போது அக்பர் ரைஸ் மில்காரர் தான் டபிள் ஸ்ட்ராங் காப்பி சாப்பிட வருவார்.”
ரங்கையர் இலை அரிந்து கொண்டிருப்பதைச் சுப்பண்ணா அப்போதுதான் கவனித்தார். அவருக்கு எதிரில் உட்கார்ந்தார்.
“பாபா, அந்த வெங்காயம் நறுக்கற கத்தியை எடு.”
பாபா எடுத்துத் தந்தான்.
“என்ன இந்நேரத்திலே.. வயத்துக் கோளாறா?”
ரங்கையர், லெட்ரீனுக்குப் போய் வந்ததைக் குறித்துக் கேட்கிறார் என்ற உணர்ந்து கொண்டார்.
“இல்லேண்ணா... இப்பத்தான் சாவகாசமா டம் கெடைச்சது” - வாயை நன்றாகக் கொப்புளித்து விட்டு வந்தார். ஓய்வு நேரம், அவருடைய வெற்றிலைப் புகையிலைப் பிரயோகத்திற்கும் சேர்த்து.
அவர்கள் மத்தியில் இலைநார் கிழிபடும் ஓசை மட்டும் சில விநாடிகள் கேட்டன.
“டேபிள் க்ளீன்” என்று வெளியே இருந்து சர்வர் மணி கொள்ளை போகிற மாதிரி கத்தினான். புத்தகம் படித்துக் கொண்டிருந்த பாபா பக்கெட்டை எடுத்தான்.
“கல்லாவிலே யார் இருக்கா?” என்று சுப்பண்ணா கேட்டார்.
“ராஜா.”
“பெரியண்ணா?”
“தூங்கறார். நேத்தியிலிருந்து மார்வலிக்கிறது, ஆயாசமா இருக்குன்னு மத்தியானத்திலே படுத்துக்கறார்!”
லாவகமாக ஒதுங்கி வால் வாலாகக் கிழிந்திருந்த இலை நுனியை வெட்டி எறிந்தவாறே சுப்பண்ணா கேட்டார்.
“நேத்து ஜம்னா வந்தாளாமே?”
வைத்தா சினிமாப் பத்திரிகையில் மூழ்கிவிட்டான். சோம்பலாக இருக்கிறதென்று ஒரு காபி சாப்பிடுவதற்காக சமையல் கட்டுக்கு ராஜாமணி வந்தான். ஜமுனா பெயர் அடிபடவே அவர்கள் பேச்சுக் கெடாமல் இருக்கத் திரும்பி ஸ்டால் எதிரில் சுவரோரமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.
ஒட்டுக் கேட்கிற மாதிரியும் தெரியாது. பேச்சும் காதில் விழும்.
“ஆமாம்.”
“மாதவன் என்னமோ சொன்னான். நம்பிக்கைப் படல்லே.”
“என்னன்னு?”
“ஆனந்தலட்சுமி வந்திருக்காளாமே?”
ரங்கையர் திரும்பி ஒருமுறை யாராவது கவனிக்கிறார்களாவென்று பார்த்துக் கொண்டார்.
“ஆமாம்.”
“எப்படி இருக்காங்க?”
“ரொம்ப எளைச்சுப் போய் இருக்காங்க, பேரைச் சொல்லி அனுப்பலேன்னா நானே அடையாளம் கண்டுபிடிச்சிருக்க முடியாது. எப்படி இருந்த அழகு, என்னம்மா கரைஞ்சு போயிருக்கு அண்ணா?”
“பதினஞ்சு வருஷமாயிருக்குமா...?”
“இன்னும் அதிகமாயிருக்கும். ராஜா ஆறு வயசுக் கொழந்தை.”
“எங்கே இருக்காங்க? ஜீவனம் எப்படி?”
“திருவல்லிக்கேணியிலே இருந்திருக்காங்க. பத்துப் பதினஞ்சு ஆபீஸ்காரங்களுக்கு சமைச்சப் போட்டு சின்ன மெஸ் மாதிரி நடத்திக் காலத்தைக் கழிச்சிருக்காங்க. கூடவே ஒரு சித்தி இருந்தாளே, ஒமக்கு ஞாபகம் வர்றதா?”
“பேஷா... மூக்குக் கண்ணாடியும் மடிசார்ப் புடவையுமா ஒரு பாந்தமான முகம். ரங்கையன் மாதிரி ஆசாரசீலம் யாருக்கும் வராதுடாப்பான்னு ஓயாமே உங்களைப் பத்தி பேசுவாங்கண்ணா...”
ரங்கையர் தலை குனிந்தவாறு இலையைக் கிழித்தார். பின்பு நிமிர்ந்து சொன்னார்:
“அவ போன மாசம் காலமாயிட்டாளாம்.”
“அட மகாதேவா... சிவ சிவ...”
“கைக்கு ஒதவி அள் இல்லாமே மெஸ் நடத்த வசதிப்படல்லே. ஆனந்தலட்சுமி மெஸ்ஸை மூடிட்டாங்களாம்.”
“இங்கே வந்திருக்கிற நோக்கம்?”
“வடக்கே கேதார்நாத் பசுபதிநாத்துண்ணு அப்படியே யாத்திரை கிளம்பி காசியிலே பிராணனை விடணும்னு உத்தேசம். திரும்பி இங்கே வர்ற அபிப்பிராயம் காணோம். அதுதான் கடைசித் தடவையா எல்லோரையும் பார்த்துட்டுப் போக வந்திருக்கா.”
“பெரியண்ணா போய்ப் பார்ததாரோ?”
அந்த நேரத்தில் மூலையில் உட்கார்ந்திருந்த ராஜாமணி எதிரில் சாரங்கள் வந்து நின்றான்.
“உஸ்ஸ்” என்று சத்தம் வராமல் ஜாடை காட்டி அவனை அகன்று போகச் சொன்னான் ராஜாமணி. சாரங்கனுக்கு ஏன் ராஜாமணி போகச் சொல்கிறான் என்று புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான், ராஜாமணியின் கவனத்தைக் கவர்கிற எதுவும் எங்கும் தென்படவில்லை. சுப்பண்ணாவும் ரங்கையரும் இலை அரிந்து கொண்டிருக்கிற காட்சியில் சுவாரஸ்யம் தெரியவில்லை.
‘இது என்னமோ ஒரு மூட்’ என்று சாரங்கன் அகன்றான்.
“நேத்து வீட்டுக்கு வந்தார். ஆனந்தலட்சுமி இருக்கிற நெலமையைப் பார்த்ததுமே அவர் கண்ணிலே பொல பொலன்னு ஜலம் வந்துடுத்து...”
“இருக்காதா பின்னே... எவ்வளவு பிரியமா இருந்தாரு அவகிட்டே. ஒரு வழியிலே பார்த்தா இந்த ஓட்டலே அவள் பேரிலே தானேண்ணா ஓடறது...”
ராஜாமணிக்கு மாடியில் இருந்த கிடங்கு அறையில் நியூ பாரத் கபே என்று எனாமல் அரித்த பழைய போர்டு ஒன்று கிடப்பது ஞாபகம் வந்தது. அதுதான் ஆனந்தபவனின் பழைய பெயர்.
“இங்கேயே இருந்துடச் சொல்லி பெரியண்ணா அவகிட்டே கேக்கலியா?”
“எவ்வளவோ சொல்லிப் பார்த்தாரு. கங்காபாய்க்கு இந்த வயசிலே இனிமே நீ ஒரு போட்டி ஆகமாட்டேன்னாரு...”
சுப்பண்ணா மௌனமானார்.
“ஆனந்தலட்சுமி துளிகூட ஒப்புக்கலே. பிடிவாதமா இருக்கா... பெரியண்ணாவுக்கு மனசு ஒடைஞ்சுட்டது. நேத்தியிலே இருந்து பெரிய சீக்கிலே விழுந்த மாதிரி ஆயிட்டார்...”
ராஜாமணிக்கு அதற்குமேல் அங்கே உட்கார முடியவில்லை. ஓசைப்படாமல் எழுந்து கல்லா மேடைக்குப் போனான். திறக்கக் கூடாத கதவு ஒன்றைத் திறந்து, அந்தரங்கமான எதையோ எட்டிப் பார்த்துவிட்ட மாதிரி அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
கல்லா மேஜையில் உட்கார்ந்து எதிரே தெரிந்த இன்றைய ஸ்பெஷல் போர்டைப் பார்த்தான்.
ஆனந்த பவன்.
இந்தப் பெயரை மாற்றுகிற அளவு ஒருத்திக்கு அப்பாவிடம் சொந்தம் இருந்ததா? அது எப்பேர்ப்பட்ட சொந்தம்...? சே...! நான் அதை ஒட்டுக் கேட்டிருக்க வேண்டாம்... அம்மா கங்காபாயின் முகம் அவனது மனசில் மூக்குக் கண்ணாடியோடு ஒடிசல் உருவம் ஆனந்தராவின் மீது பக்தியும் அன்புமாக வைத்திருக்கிற பாசத்தோடு தோன்றிற்று. மறுகணம் முகம் தெரியாத ஒருத்தி திருவல்லிக்கேணியில் ஒரு சந்தில் பத்துப் பேருக்கு சமைத்துப் போட்டுக் கொண்டிருந்துவிட்டு, உறவும் துணையும் இன்றி கங்கைக் கரையில், காசிச் சத்திரங்களில் ஏதோ ஒன்றில் மரணத்தின் வருகையை எதிர்பார்க்கும் காட்சி தோன்றியது.
இப்படிப்பட்ட சிதிலங்கள் கூட இந்த வாழ்க்கையில் உண்டா என்று அவன் திகைத்தான்.

Tuesday, 22 January 2013

ஜமுனா-5

5
“ஜம்னா...”
பிராகாரத்தைச் சுற்றிக் கொண்டிருந்த ஜமுனா, ஆண்குரல் ஒன்று தன்னை அழைக்கிற ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தாள்.
அரைமணி நேரம் பீரோவைக் குடைந்து போட்டுக் கழற்றி மாற்றிய உடைகளோடு ராஜாமணி நின்றிருந்தான்.
“அடடே...! நீ கூட...” என்று அவசரமாக வாயில் வந்துவிட்ட ஏக வசனத்தை நாக்கைக் கடித்து மாற்றினாள். ‘நீங்க கூட கோயிலுக்கு வர்றதுண்டா?”
இருட்டிக் கொண்டு விட்டதால் டாப் லைட் போட்டிருந்தது. விளக்கின் கீழே ஜமுனா நின்றாள். வெள்ளைக் கோடு போட்ட கறுப்பு வாயில். கறுப்பு ரவிக்கை. அவள் வேகமாகத் திரும்பிய திரும்பலில், நீளமான கூந்தல் ஒதுங்கி புஜத்தின் மீது உடைக்குப் பாந்தமாகத் தொங்கிற்று. அவனை ஒருமையில் கூப்பிட்டு விட்டு நாக்கைக் கடித்த காட்சி ராஜாமணியைச் சொக்க வைத்து விட்டது.
“இல்லே... ஏன்... இன்னிக்கு... இப்பத்தான் வந்தேன்” என்று சொல் பஞ்சமாகிவிட என்னமோ உளறினான் ராஜாமணி.
அதற்குள் ஒரு சிறுவர்கள் கூட்டம் கலகலவென்று கூச்சலும் கும்மாளமுமாக அவளுக்கும் அவனுக்கும் மத்தியில் வந்து நின்றது. அவர்கள் இருப்பதைப் பற்றிய அக்கறையோ பிரக்ஞையோ அவர்களுக்குச் சிறிதும் இல்லை.
பெரிய வாண்டு ஒருவன் கூவினான்.
“டேய்... நான் கத்துவேன். நீங்கள்ளாம் ஓடி ஒளிஞ்சுக்கணும் ரெடி... கிட்டுதான்... தேடிப்பிடிப்பான். ரெடி ஒன்...டூ...த்ரீ...”
வானரக் கூட்டம் கத்திக் குதூகலிப்பது போல் மூலைக்கு ஒருவராக ஓடினார்கள்.
“கில்லித்தாரா ரையா... ஓடி வாடா பையா...”
பிராகாரத்தின் வடக்கு வடமேற்கு மூலைகளில் சிரிப்பு பீறிடும் ஓசையும், ஒருவன் அதட்டும் ஓசையும் சட்டென்று எல்லாம் மௌனமாவதும் தொடர்ந்தன.
கிட்டு என்று அழைக்கப்பட்டவன் ஆள் வேட்டையைத் தொடர்ந்து கொண்டே ஓடினான்.
ஜமுனா, ராஜாமணியைப் பார்த்து வேடிக்கையும் குறும்பும் பொங்கச் சிரித்தாள்.
“நம்ம காலத்து விளையாட்டு இப்போ ரொம்ப மாறிப் போச்சு ஜமுனா...” என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டே தைரியமாக ஆரம்பித்தான் ராஜாமணி.
“காலம் மாறிவிட்டது. நாமளும் மாறிவிட்டோம். விளையாட்டும் மாற வேண்டியதுதானே!” என்று சிரிப்பு மாறாமல் சொன்னாள் ஜமுனா. சிரிக்கும்போது ஜமுனா மிகவும் அழகாக இருந்தாள். கன்னம், உதடு, கண்கள் எல்லாம் சிரித்தன.
தான் தடுமாறுவதற்காகவே அவள் சிரிக்கிறாள் என்று புரிந்தாலும், அவளது ஒவ்வோர் அங்கமும் அந்தச் சிரிப்பில் பரிபூர்ணமாக மலர்ந்து, அவளது பிரகாசத்தை அதிகரிக்கிற அனுபவத்தில் அவன் கரைந்தான்.
“எதுக்கு சிரிக்கிறேன்னு தெரியுது ஜமுனா. ஆனா இவ்வளவு பிரமாதமா நீ வளர்ந்து நிக்கற ஆச்சரியத்திலே எனக்கு வாய் உளர்றது!”
ஜமுனா வெட்கத்தோடு தலை கவிழ்ந்துக் கொண்டாள்.
“நான் என்ன அவ்வளவு பிரமாதமாவா வளர்ந்துட்டேன்?”
கோயிலின் வடமேற்கு மூலையில் “கில்லித் தாராரையா ஓடி வாடா பையா” என்று ஒரு குரல் வெடித்தது. சிரிப்பும் கும்மாளமும் மறுபடியும் கேட்டு அடங்கின.
“டேய் கோபு... பாச்சா... கோந்து... எத்தனை தரம்டா சுத்திச் சுத்தி வர்றது?” என்று பிரகாரத்தை ஒரே ஓட்டத்தில் அதற்குள் சுற்றிக் கொண்டு வந்த கிட்டு என்பவன் அவளுக்கும் அவனுக்கும் மத்தியில் நின்று கொண்டு, அழாக் குறையாகக் கத்தினான்.
ராஜாமணிக்கு ஆத்திரமாக வந்தது.
“இந்த விஷமக் கொடுக்குகளுக்கு வேறு இடம் கிடைக்கல்லையா, கோயில் தானா அகப்பட்டது? என்று ஜமுனாவைப் பார்த்துக் கேட்டான்.
கிட்டு என்பவன் அதைக் கேட்டு அவனைத் திரும்பிப் பார்த்து ஒருமுறை முறைத்துவிட்டு வடமேற்கு மூலைக்கு நகர்ந்தான்.
“அப்பாடா” என்று நெடுமூச்சு வந்தது ராஜாமணிக்கு.
“எவ்வளவு அற்புதமா வளர்ந்திருக்கே தெரியுமா?” என்று ஜமுனா ஜமுனா முதலில் கொடுத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கினான்.
புஜத்தில் தொங்கிய கூந்தலை எடுத்து பின்னால் வீசி விட்டுக் கொண்டு “போ, ராஜா” என்று சுவாதீனமாகச் சொல்லி விட்டு மறுபடியும் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“பரவால்லே ஜம்னா... நீ வா போன்னே கூப்பிடலாம். நான் புதுசா என்ன?”
“புதுசில்லேதான். ஆனா பி.எஸ்ஸி... படிக்கிறே...பெரிய ஆபீசராகப் போறே!”
அவளது விழிகளில் மரியாதையும் அன்பும் ஒளி வீசின.
ஜமுனா என்ன அழகாக மையிட்டுக் கொண்டிருக்கிறாள். பளிச்சென்று கண்ணைப் பிடுங்குகிற மாதிரியும் இல்லை. இல்லாத மாதிரியும் தெரியவில்லை.
“அம்மா சொன்னாளா..?” என்றான் ராஜாமணி.
“ஒனக்கெப்படித் தெரியும் அம்மாதான் சொல்லியிருப்பாங்கன்னு?” என்று திருப்பி மடக்கினாள் ஜமுனா.
“நீ தினம் நவக்கிரகம் சுத்த வர்றதா அம்மாதான் சொன்னாள்...” என்று உளறி விட்ட ராஜாமணி ஜமுனாவுக்காகக் கோயிலுக்கு வந்த விஷயத்தைத் தானே அம்பலமாக்கி விட்டதை நினைத்து, நாக்கைக் கடித்துக் கொண்டான்.
அவன் நாக்கைக் கடித்துக் கொண்டதைப் பார்த்து ஜமுனா, மீண்டும் சுளுக் கென்று சிரித்தாள்.
“நீ ஆளும் மாறிட்டே, தைரியமும் மாறிவிட்டது” என்று நறுக்கென்று சொன்னாள் ஜமுனா.
அவளது அழகின் போதையில் அது மட்டும் கோயிலாக இல்லாமல் ஒரு தனியிடமாக இருந்திருந்தால் தன் தைரியத்தை அவளுக்கு எப்படியெல்லாம் நிரூபித்துக் காட்டியிருக்கலாம் என்று மனசுக்குள் கற்பனை செய்து கொண்டான். கற்பனைதான் பிரமாதமாக ஓடிற்று. ஓரடி கூட அவளுக்கு முன்னால் நெருங்க, கால் ஒத்துழைக்கவில்லை. பார்வை மட்டும் ஜமுனாவின் கண்களையும் உதடுகளையும் விட்டு அங்குமிங்கும் நகராமல் தடுமாறிற்று.
“அபாரமாக கிரிக்கெட் விளையாடுறாயாமே...?”
“யார் சொன்னது?”
“சுசீலான்னு என் ஃப்ரெண்ட், ஈத்கா மைதானத்துக்குப் பக்கம் வீடு. தினசரி உன் விளையாட்டை அவள் வாச் பண்ணுவாளாம்.”
“ஓஹோ!”
முகம் தெரியாத சுசீலாவுக்கு மனசிற்குள் வாழ்த்துக் கூறினான்.
“இன்னிக்கு நீ அனுப்பின பாயாசம் ரொம்ப அற்புதமா இருந்தது ஜம்னா!”
வாண்டுகளின் சேனை குபீரென்று சிரிப்பொலி வெடிக்க மூலைக்கு ஒன்றாக ஓடி வந்து அவனுக்கும் அவளுக்கும் மத்தியில் நின்று கொண்டது.
‘டேய் போங்கடா... நான் விளையாட வரமாட்டேன். ஒவ்வொருத்தன் மூலஸ்தானத்து மூலையிலே எல்லாம் போய் ஒளிஞ்சுக்கறான். கோந்து, கோயிலுக்கு வெளியே தேர்மூலையிலே ஒளிஞ்சுண்டான்!” என்று கோபித்துக் கொண்டான் கிட்டு.
“ஹையா ஹையா!” என்று ஏக காலத்தில் நாலைந்து சிறுவர்கள் ஒரே தாளத்தில் கைதட்டினார்கள்.
“அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா...” என்று ஒரு வாண்டு ஆரம்பித்தான்.
“கிட்டு... அட கிட்டே ஊஊஊ” என்று வாண்டுகள் சேனை ஊளையிட்டது.
அதற்கு மேல் ராஜாமணியால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.
“டேய் அம்பி... ஒங்க லீடர் யார்றா?” என்றான்.
“ஏன் சார்?” என்று மார்பை விறைத்துக் கொண்டு ஒரு சிறுவன் முன்வந்தான்.
ராஜாமணி பாக்கெட்டில் கையை விட்டு பர்ஸை எடுத்தான். பிரித்து வைத்தபடி, சிறுவர்களை மனசிற்குள் எண்ணிவிட்டு, ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை அந்த லீடரிடம் நீட்டினான்.
“பத்து பேருக்கும் ஆளுக்கொரு சாக்லெட் வாங்கிக் கொடுடா அம்பி... வாங்கி சாப்பிட்டுட்டு மறுபடியும் இங்கே விளையாட வந்துடாதீங்க... வீதியிலேயே விளையாடுங்கோ.”
ராஜாமணி நீட்டிய நாணயத்தையும் அவனையும் ஒரு யோசனையோடு பார்த்துக் கொண்டு நின்றான் லீடர்.
“வாங்கிக்கோடா...” என்று ஒரு சாக்லெட் பிரியன் யோசனை கூறினான்.
லீடர் வாங்கிக் கொண்டான். பின்பு ராஜாமணியையும் ஜமுனாவையும் ஒரு தடவை மாறி மாறிப் பார்த்தான்.
“ஏன் சார்... உங்களுக்கு டிஸ்டர்ப்பா இருக்கா?”
“ஹத்” என்று பல்லைக் கடித்துக் கையை ஓங்கினான் ராஜாமணி.
வாண்டுக் கூட்டம் கூச்சலிட்டுக் கொண்டு பறந்தது. ஜமுனா வாயைப் பொத்தியவாறு விழுந்து விழுந்து சிரித்தாள்.
“தினசரி கோயிலுக்கு வர்றியே... இதே கதைதானா?”
“பட்டர் வந்து அதட்டுகிறவரை குதிப்பார்கள். அவர்களுக்கும் விளையாட இடம் இல்லை. பார்க், கிரவுண்டு எல்லாம் ரொம்ப தூரம். பொடிப் பயல்கள்” என்று விளக்கம் அளித்தாள் ஜமுனா.
“நாமகூட அப்படித்தானே... தண்டபாணி கோயில் தெரு மடப்பள்ளி என்று சுற்றுவோம்” என்றான் ராஜாமணி.
ஜமுனா அவனுடைய சொற்களைக் கவனியாமல் பேசினாள்:
“பாயாசம் நான் செய்ததில்லே...”
“அப்படியா!” - தன் பாராட்டு வீணாகிய சோர்வோடு கேட்டான் ராஜாமணி.
“வேறே யாரு?”
“எங்க ஆத்துக்கு வந்திருக்கிற ஆனந்தலட்சுமியம்மா செஞ்சது...”
“ஓ... காலையிலே. அவங்க வந்திருக்காங்கண்ணு தானே ரங்கையரைக் கூப்பிட வந்தே! யார் அது? பந்துவா?”
“யார்னு தெரியலே. நான் இதுவரைக்கும் அந்தம்மாவைப் பார்த்ததே இல்லே. ஒங்க அப்பா கூட வந்து பார்த்து ரொம்ப நேரம் பேசிண்டிருந்தாரே... அவர் போனப்பறம் எங்கப்பாவைக் கேட்டேன். ஒங்க அப்பாவுக்கு தூரபந்துவாம். ஆனந்தபவன் ஓட்டல் நடத்த ரொம்ப ஹெல்ப் பண்ணினவாளாம்.”
ராஜாமணி ஆச்சரியப்பட்டான்!
தனக்குத் தெரியாமல் ஆனந்தபவன் நடத்த இவவளவு உதவிய தூரபந்து ஒருத்தி இருப்பதும், அவள் தங்கள் வீட்டிற்கு வராமல் தங்கையர் வீட்டிற்கு வந்திருப்பதும் அவனுக்கு விந்தையாக இருந்தது. இதில் ஏதோ ஒரு புதிர் இருப்பதாக அவனுக்குப்பட்டது. அதை அப்புறமாக யோசித்துக் கொள்வோம் என்று ஒதுக்கி விட்டான்.
“அந்தம்மா போயிட்டாளா?”
“இல்லே.. அவங்க உத்தேசத்தைப் பார்த்தா இன்னும் ரெண்டு மூணு நாள் தங்கலாம்.”
“ஓஹோ...!” என்று அந்த விஷயத்தைக் கடந்து இனிமே நானும் தினம் கோயிலுக்கு வரலாம்னு பார்க்கறேன்” என்றான் ராஜாமணி.
“எதுக்கு...?” என்று அவன் பார்வையைக் கண்ட ஜமுனா, சட்டென்று கண்களைத் தாழ்த்திக் கொண்டாள், அவள் முகம் மாறிவிட்டது.
“வாயேன்... கோயில் எனக்கே சொந்தமா என்ன?” என்று அவள் குரலில் ஒரு விலகல் தொனிக்கக் கூறினாள்.
திடீரென்று அவள் அடைந்த மாற்றத்தைக் கண்டதும் ராஜாமணி அசட்டுப் பிசட்டென்று அவசரப்பட்டு விட்டோம் என்று நொந்து கொண்டான், சம்பாஷணையை சகஜமாக்க வேண்டிய சூழ்நிலை உருவாவது, அவனுக்கு உறைத்தது.
“ஜோசியர் எனக்கு டைம் சரியில்லேன்னு சொல்லியிருக்கார். நானும் ஒரு மண்டலம் நவக்கிரகம் சுத்தணுமாம்.”
யாரோ மெல்ல இருமும் ஓசை கேட்டு ராஜாமணி திரும்பினான்.
காதுக்குக் கீழே கோடாலி மாதிரி கிருதா வளர்த்துக் கொண்டு இன் பண்ணிய பேண்டோடு மோகன் வந்து கொண்டிருந்தான். ஆனந்த பவனில் ஆறு மாதமாகச் சாப்பிடும் கஸ்டமர். ராஜாமணியைப் பார்த்து “ஹலோ” என்று ஒற்றை விரலைத் தூக்கினான் அவன்.க
“ஹலோ” என்று ராஜாமணி பதிலுக்குக் கை உயர்த்தினான்.
“எங்கே... திடீர்னு கோயில் விஜயம்?” என்று அவன் கேட்கும்போது, ஜமுனா முகத்தை திருப்பிக் கொண்டு மெதுவாக நடந்தாள்.
“ஏன்... நான் எப்பவாவது வர்றது உண்டே!”
“ஐஸீ... நான் இன்னிக்குத்தான் பார்த்தேன்.”
ராஜாமணிக்கு சட்டைக்குள் முதுகு லேசாக வியர்த்தது.
‘இவனுக்கு என்ன பயப்படுவது’ என்று ஒரு துணிச்சலும் எழுந்தது.
“உங்க காலேஜ் எப்ப திறக்கிறது?” என்று மோகன் ஆரம்பித்தான்.
“ஜூலை ஸிக்ஸ்டீன்த்.”
“நீங்க தேர்ட் இயரா?”
ராஜாமணிக்கு எரிச்சல் தாளவில்லை.
“இல்லே, இது ட்வென்டி தேர்ட் இயர்.”
“ஐ மீன்... உங்க பி.எஸ்ஸி., விஷயத்தைக் கேட்டேன்.”
“ஆமாம்.”
“கெமிஸ்ட்ரிதானே மெய்ன்?”
“ஆமாம்.”
இதற்குள் ஜமுனா பிராகாரத்தைத் தாண்டி நவக்கிரகத்தை நெருங்கி விட்டிருப்பாள் என்று கணக்கிட்டான் ராஜாமணி. இவன் ஜமுனாவுடன் தான் பேசிக் கொண்டிருந்ததை நிச்சயம் கவனித்திருப்பான். இவனைக் கட் பண்ணிவிட்டு வேகமாகச் சென்று நவக்கிரகச் சுற்றில் ஜமுனாவோடு கலந்து கொண்டால் இவனுடைய மோப்பம் இன்னும் அதிகமாகும். ஓட்டலில் சாப்பிடும்போது மணி மாதிரி சர்வர் எவனிடமாவது வாயிருக்க மாட்டாமல் உளறி வைத்தானானால் அது ஒலிபரப்பாகிவிடும். இவனுக்கு ஜமுனா, ரங்கையர் பெண் என்ற விஷயம் ஒருக்கால் தெரிந்திருந்தால்...?
கம்ப்யூட்டர் வேகத்தில் சிந்தித்த ராஜாமணி அவனது அறுவையைச் சகிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தான். ஜமுனாவிடம் அன்று அதற்குமேல் பேச முடியாது. அந்தத் தவிப்பைத்தான் அவனால் தாள முடியவில்லை. அந்த மோகன் மீது அளவு கடந்த ஆத்திரம் வந்தது. பேசாமல் அறுவைப் பொறுப்பைத்தான் மேற்கொண்டான்.
“சார்... நீங்க ஆபீஸிலே வேலை செய்யறீங்களா...?”
“இல்லையே... நான் மெடிகல் ரெப்ரஸென்டேடிவா இருக்கேன்.”
“எந்த கம்பெனி?”
“க்ளெண்டோவ்ல்.”
“நான் கேள்விப்பட்டதே இல்லையே!”
“இப்பத்தான் ஸ்டார்ட் ஆகியிருக்கு...”
“ஐஸீ... ஹெட் க்வார்ட்டர்ஸ்?”
“நாக்பூர்.”
“ஐஸீ... என் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரு க்ளாக்ஸோவிலும் ஸ்க்விப்பிலேயும் ரெப்ரஸென்டேடிவா இருக்காங்க...”
மோகன் அவசரத்தோடு குறுக்கிட்டான்.
“அவங்களுக்குக்கூட தெரிஞ்சிக்க நியாயமில்லே. ஏன்னா போன வருஷம் தான் எங்க கம்பெனி ஆரம்பம் ஆகியிருக்கு. மருந்துகளே இன்னும் மார்க்கெட்டுக்கு வரல்லே...”
“மருந்து வராமே நீங்க எப்படி சார் ரெப்ரஸென்டேடிவா இருக்கீங்க?”
“யூஸீ... நான் வந்து... ஒரு பிரிலிமினரி மார்க்கெட் ஸ்டடி செஞ்சுட்டிருக்கேன். இந்த டிஸ்ட்ரிக்ட் பூரா என்னென்ன மருந்துகள் போறது? கிராக்கி எப்படி? இதெல்லாம் ஒரு வீக்லி ரிப்போர்ட் அனுப்பறது என் வேலை அடுத்த மாசம் எங்க கம்பெனி மருந்துகள் மார்க்கெட்டுக்கு வந்துடும்.”
ராஜாமணிக்கு அவனது அவசரமும் தடுமாற்றமும் ஓர் எச்சரிக்கை தந்தன.
“இவன் ஒரு ஃப்ராடோ?”
அவன் முகத்தை உற்றுப் பார்த்தவாறே ராஜாமணி கேட்டான்.
“கம்பெனி பேரு என்ன சொன்னீங்க?”
“க்ளெண்டோவ்ல்... இது ஒரு இண்டோ-பிரெஞ்ச் கூட்டு முயற்சி.”
“ஐஸீ...”
“வரட்டுமா. கோயிலைச் சுத்திட்டு ஓட்டலுக்குப் போகணும்” என்று பவ்யமாக விடை கேட்டான் மோகன்.
“என்ன சார்... அவசராமா?”
“நோ நோ... அவசரம் ஒண்ணுமில்லே. சாப்பிட்டப்புறம் செகண்ட் ஷோவுக்குப் போகணும்.”
“இன்னும் டயம் இருக்கே!”
ராஜாமணிக்குள் இன்னும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு போயேன் என்று ஒரு கறுவல்.
“இல்லே... ரூமுக்குப் போய்விட்டுப் போகச் சரியாய் இருக்கம்...பை... பை...”
கோயிலுக்குள் பைபை சொல்லிவிட்டுப் போகும் அவனை ராஜாமணி மன்னிக்கத் தயாராய் இல்லை. அவனோ அவசர அவசரமாகப் பிய்த்துக் கொண்டு கிளம்பினான்.

Monday, 21 January 2013

ஜமுனா-4

4
“சேது லெட்டர் போட்டிருக்காண்டா ராஜா” என்று ராஜாமணி சாக்ஸைக் கழற்றிக் கொண்டிருக்கும்போது சொன்னாள் கங்கா பாய்.
“என்னவாம்?” என்று அசிரத்தையோடு கேட்டான் ராஜாமணி. அவன் குரலில் தெரிந்த அசுவாரஸ்யமும் அலட்சியமும் கங்கா பாய்க்கு சுருக் என்று தைத்தன.
அவள் நடை வாசற்படியில் தெரிந்த ராஜாமணியின் உருவத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு நெடுமூச்செறிந்தாள். இரண்டு சகோதரர்களுக்கும் மத்தியில் துளிக்கூட பந்தமில்லாமல் இருப்பது அந்த தாய் உள்ளத்தை வருத்தியது.
சீடைக்காகப் பிசைந்து வைத்திருந்த மாவில் சிறுசு சிறுசாக உருண்டை உருட்டிக் கொண்டிருந்தாள் கங்காபாய். அவள் ஒரு சீடை ஸ்பெஷலிஸ்ட். ஆனந்தராவுக்கு சீடை என்றால் மிகவும் பிடிக்கும். மாதத்துக்கு ஒரு தரம் இரண்டு தரம் ஒரு பெரிய டின்னில் செய்து கொட்டி வைத்து விடுவாள். கறுமுறுவென்று பல்லில் பட்டதுமே நொறுங்கி விடுகிற மாதிரி கங்காபாய் சீடை தயார் செய்வாள்.
“என்னம்மா, பதிலே பேசலே? -” ராஜாமணி அம்மாவுக்கு நேரே கூடத்து ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தான்.
அவளுடைய ஒல்லியான உடம்பும் கண்ணாடி மாட்டிய கண்களும் தும்பைப் பூவாய் நரைத்த தலையும் கங்காபாயின் வயதை அதிகப்படுத்திக் காட்டின. பூஞ்சை உடம்பு, ஜலதோஷம் வந்தால் கூடத் தாங்காது. ஓடியாடி வேலை செய்து விட்டாளானால் ஒரு வாரம் படுத்துக் கொள்ள வேண்டியதுதான். தனக்கு இங்கே வலிக்கிறது இப்படியிருக்கிறது என்று ஒரு வார்த்தை வாய் திறந்து சொல்ல மாட்டாள். பூனை போல சுருண்டு படுத்துக் கொண்டு விடுவாள்.
அம்மா பதிலே பேசாததைக் கண்டதும் ராஜாமணிக்கு அவ்வளவு அலட்சியமாகத் தான் விசாரித்திருக்கக் கூடாது என்று பட்டது. என்ன இருந்தாலும் சேது அண்ணாவும் அவளுக்கு ஒரு மகன்தானே! அம்மாவின் பாசத்தில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு அல்லவா என்று உறைத்தது.
“அப்போ, நீ பேசப் போறதில்லே. மௌன விரதமாக்கும்... சரி, இரு. நீ மௌன விரதம் இருந்தா நான் உண்ணாவிரதம் இருக்கேன்...!”
கங்காபாய்க்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“நீ பெரிய காந்தி...! உண்ணாவிரதம் இருக்கப் போறே...”
“ஏம்மா... நான் காந்தியாக மாட்டேனா... மாட்டேன்னு சொல்லிடு... ஒரே வருஷத்தில் ஆயிக்காட்டிடறேன்...”
“ஒரு வாரத்துக்கு காந்தியா இருந்துட்டு அப்புறமா பிஸி பேளாஹூளி ஏம்மா செய்யலேன்னு சத்தம் போடுவே, அப்படித்தானே?”
“பெற்ற அன்னையே இவ்விதம் தன் மகனைப் புறக்கணித்தால் உலகம் எவ்விதம் மதிக்கப் போகிறது? அன்னையே... என் நெற்றியிலே வீரத்திலகம் இட்டு என்னைக் காந்தியாக ஆசீர்வதிக்க மாட்டாயா?” என்று நாடகக் கதாபாத்திரம் போல் வசனம் போசினான் ராஜாமணி.
கங்காபாய்க்குச் சிரிப்பு பொத்துக் கொண்டது. அவளை மசிய வைக்க இப்படி ஏதாவது செய்வான் அவன்.
“டிராமா கம்பெனிக்குப் போயிடு.”
“நான் டிராமாவில் சேர்ந்து விட்டால் டி.எஃப்.ஓ. ஆவது எப்படி? சொல் அம்மா சொல்...” என்று மறுபடியும் வசனம் பேசினான் ராஜாமணி.
இந்த வசனத்தால் கங்காபாயின் சிரிப்பு வற்றி விட்டது.
“நீ டி.எஃப்.ஓ. ஆயிடணும்னு துடிக்கிறே. சேதுவோ மாமனார் வீட்டு மாப்பிளையா கோயம்புத்தூர் ஓட்டலைப் பார்த்துண்டிருக்கான். அவருக்கும் வயசு ஆயிண்டே போறது. பதினெட்டு வருஷமா ராத்திரி பகல் பார்க்காமே, பிஸினஸைக் கட்டிண்டு ஒரு பக்கம் அழறார். நான் ஒருத்தி சீக்காளி, என்னையும் கட்டிண்டு, வாரத்துக்கு ரெண்டு நாள் எனக்கு சமைத்துப் போட்டுண்டு மாரடிக்கிறார். எங்க சந்தான பாக்கியம் அப்படியிருக்கு” என்று பெருமூச்செறிந்தாள் கங்காபாய்.
ராஜாமணி மெதுவாக ஊஞ்சலை உந்தி விட்டான். பழங்காலத்துச் சங்கிலி ஊஞ்சல், முன்னும் பின்னும் அசைய அசைய கிரீச் கிரீச் என்று சங்கிலி சத்தம் போட்டது.
“நான் என்னம்மா பண்ணட்டும்?”
“பண்றது என்னடா... உனக்கும் வயசாயிடுத்து. காலா காலத்திலே ஒரு கல்யாணம் பண்ணிண்டு ஓட்டலைப் பார்த்துக்கோ...”
ஒருமுறை உந்திவிட்டு ராஜாமணி ஊஞ்சலில் நீட்டிப் படுத்துக் கொண்டான். உறுதியான பர்மா தேக்கு, உட்கார்ந்தும் படுத்தும் ஊஞ்சல் பலகை மழமழவென்று தேய்ந்து போயிருந்தது. அந்த வழுவழுப்பை அனுபவிப்பதே ஒரு தனி சுகம்.
தலைக்குக் கீழே இரண்டு கைகளையும் கோர்த்து மடித்துக் கொண்டான் ராஜாமணி.
“ஓட்டலை என் தலையிலே கட்டறதுன்னு ஒங்களுக்குத் திட்டமிருந்தா, என்னை ஏம்மா காலேஜிலே சேர்த்தீங்க?”
ஊஞ்சல் வேகம் குன்றாமல் ஆடிற்று.
“காலேஜிலே படிச்சுட்டா என்னடா? போன வருஷம் பி.ஏ., படிச்சு ஃபெயிலாயி ஒருத்தன் சர்வரா வரல்லே?” - கங்காபாயின் தர்க்கம் அவனுக்கு கசப்பாய் இருந்தது.
“அப்ப பாஸ் பண்ணிட்டு நானும் சர்வரா போயிடட்டுமா?”
கங்காபாய் சீடை மாவை எண்ணெய் தொட்டு உருட்டி உருட்டிப் போட்டாள்.
“ஒன் கட்சியைத் தானே நீ பேசறே? பிள்ளைகளை வளர்த்து அவர் அடைஞ்ச சொகம் என்னடா?”
ராஜாமணி, கூடத்தில் ஓர் ஆணியில் மாட்டிய சரத்தில் தொங்கிய முத்துக்கிளி காற்றில் சுற்றுவதை வேடிக்கை பார்த்தான்.
“நான் பெரிய ஆபீசரானப்புறம் அந்த சொகத்தை நீங்க அனுபவிக்கத்தானே போறீங்க! நான் ஒண்ணும் சேது இல்லே, வசதியான மாமனார் வீடு கெடைச்சதும் அதுவே சொர்க்க லோகம்னு செட்டில் ஆயிட மாட்டேன்.”
சரிந்த மூக்குக் கண்ணாடியை நிமிர்த்தி விட்டுக் கொண்டு கங்காபாய் பேசினாள்.
“அவந்தான் போய்விட்டான். சொல்லிச் சொல்லிக்காட்டி. வந்துடப் போறானா...?” ஒங்க அப்பாவுக்கு நீயுவு அவனும் மட்டும் தான் பிள்ளைகள்னு நெனைச்சுடாதே. இந்த ஓட்டல்கூட ஒரு பிள்ளைதான். நீங்கள்ளாம் காப்பாத்தலேன்னாலும் அந்தப் பிள்ளை காப்பாத்தும்பார். கடைசியிலே அந்தக் கதிதான் அவருக்குக் கிடைக்கும் போலிருக்கு.”
இது அம்மாவின் வழக்கமான பல்லவி அல்ல என்று மட்டும் புரிந்தது. பெற்றோர்களின் மனக் குமைவு. அவர்களது அபிலாஷைகள் நொறுங்கும் சோகம். கடைசி காலத்தில் கிளைகள் வெட்டப்பட்டுத் தனித்திருக்கப் போகும் வெறுமை. இப்படி அவள் குரலில் என்னென்னவோ தெரிந்தன.
ராஜாமணி கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தான்.
வாழ்க்கை முழுவதும் ஆனந்த பவனின் கல்லாமேஜையில் பில் வாங்கிப் போட்டுக் கொண்டு, பிள்ளைகுட்டி பெற்று வயதாகித் தளர்ந்து ஆனந்த பவனின் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் வாழை இலைகளைப் போல் கனவுகளை வீசி எறிந்து விட்டு...
“மைகாட்” என்று அவன் வாய் முணுமுணுத்தது.
கிரிக்கெட் பிராக்டிஸ்... லெக்சரர் ராமபத்ரன்... டி.எஃப்.ஓ. சோமையா எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா...?
ஊஞ்சல் ஆட்டம் நின்று விட்டது.
அம்மா ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவள் மீண்டும் பேசினாள். அப்படி அவள் திடீர் திடீரென்று பேசுவாள்.
“இந்த ஓட்டலை நிலைச்ச நிக்க வைக்க அவர் என்ன பாடுபட்டிருக்கார் தெரியுமா? ஆரம்பத்திலே வேலூர் கோட்டையிலே கச்சேரிக்குப் பக்கத்திலே சின்ன தண்ணீர்ப் பந்தல் தானேடா வச்சிருந்தாரு!அப்ப எனக்குக் கல்யாணமாகி மொதல் வருஷம். ரங்கையனுக்கு பெரிய பையன் பொறந்துட்டிருந்தான். இப்ப கப்பல்லே தேசம் தேசமா சுத்திண்டிருக்கானே அந்த ராகவன் ரெண்டு மாசத்துக் கொழந்தை. ஒங்க அப்பா சரக்குப் போடுவார். ரங்கையன் சப்ளை பண்ணுவான். அன்னன்னிக்கு வியாபாரம் ஆயி லாபத்திலே ஒரு படி அரிசி, மளிகை சாமான், ஒண்ணே முக்காலணான்னு வாங்கிண்டு வருவார்.
இங்கே ஓட்டல் நடத்தக் கட்டடம் காலியா இருக்குன்னு சுப்பண்ணா வந்து கூப்பிட்டான். நன்னா நடந்துண்டிருக்கிற தண்ணீர்ப் பந்தலை மூட முடியாதுண்ணு அடிச்சுச் சொல்லிட்டார். விதி யாரை விட்டது? இங்கே இப்படி ஒரு ஓட்டல் நடத்தியாகணும்னு எழுத்து இருக்கறச்சே... மாத்த முடியுமா?”
கங்காபாய் பழைய காலத்தில் மூழ்கி விட்டாள்.
“ஒரு வருஷத்துக்கு ஒரு தபா கடையை மூடிடலாம்னு பார்க்கறேன் கங்காண்ணு அலுத்துப்பார். ஏகமானியா செலவு அப்ப என்ன... இட்லி அரைரூபா... காப்பி ஒன்னரை ரூபா... ஜனங்கிட்ட காசு நடமாட்டம் அதிகமில்லே... இவரோ தொழிலுக்கு புதுச... எந்த லகானை இழுத்துப் பிடிச்சா வண்டி ஓடும்னு தெரியாது. ம்ம்ம்... எல்லாம் பெரிய பாரதம்... மனசை அவர் விடும்போதெல்லாம் நான் தைரியம் தந்தேன். ஓட்டல்லே வேலை செய்யற பிள்ளைங்க ஒத்தாசையா நின்னாங்க... இல்லேன்னா நீ எங்கே காலேஜ் படிச்சிருக்கப் போறே... அவர் மாதிரியே தண்ணீர்ப் பந்தல் தொறந்திருப்பியோ... இல்லே, குமாஸ்தா உத்தியோகத்துக்கு மனுப் போட்டிண்டிருப்பியோ...”
ராஜாமணி யோசனையில் மூழ்கினான்.
ராமபத்ரன் அடிக்கடி லெக்சர்களின் போது சொல்வார்.
“இந்திய வாழ்க்கையில் சுதந்திரம் இல்லை. தகப்பனாரும் குடும்பமும் இங்கே பிரிக்க முடியாத தளைகள், எந்த இளைஞனும் அதிலிருந்துதப்பிச்சு ஓட முடியாது. இண்டிவிஜுவல் ஃப்ரீடம்னு நீங்க கற்பனை செய்யறதெல்லாம் ஒரு மிரேஜ். கானல் நீர். ரொமாண்டிக் ஆஸ்பிரேஷன் இருக்கறவங்களையெல்லாம் இங்கே றெக்கையைக் கத்தரிச்சுட்டு பறக்க விடுவாங்க, எவனாவது ஒரு ரெபல் பிச்சுண்டு வெளியே கிளம்பினாலும் அவனுடைய ஃபிளைட் பாதி தூரம் போறதுக்குள்ளே அவனைக் காபரா படுத்தி விடும். எமோஷனல் ஸெக்யூரிடி இல்லாததாலே சாமியே சரணம்னு அவன் மறுபடியும் குடும்பத்திலே வந்து விழுந்துடுவான்.”
ராமபத்ரன் பார்வை எவ்வளவு கூர்மையான கழுகுப்  õர்வை என்று நினைத்துக் கொண்டான்.
சரத்தில் முத்துக்கிளி மெல்ல அசைந்தாடியதைக் கவனித்தான். அது வென்டிலேட்டர் வழியாக வீசிய காற்றில் வட்டமாகச் சுற்றியது. பத்து வருஷத்துக்கு முன்பு கங்காபாய் பொழுது போகாமல் செய்து மாட்டியது அது. பத்து வருஷமாக இப்படியே தான் சுற்றிக் கொண்டிருக்கிறது.
“மாமி... மாமி...” என்று குரல் கேட்டு அவனது சிந்ஙதனைச்சரம் அறுந்தது. ஊஞ்சலில் படுத்தவாறே அவன் தலையை ஒருக்களித்துப் பார்த்தான்.
பாவாடை நாடா அவிழ்ந்து விட்டதால் ஒரு கை அறைக்கிப் பிடித்துக் கொண்டிருக்க. இன்னொரு கையில் எவர்சில்வர் தூக்கு ஒன்றைப் பிடித்துக் கொண்டு, பத்து வயதுச் சிறுமி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.
ராஜாமணி அந்தக் கோலத்தில் அவளைப் பார்க்கவே அவள் முகம் வெட்கத்தால் இன்னும் சிவந்தது.
“யாரம்மா அது?” என்று கங்காபாய் எழுந்தாள்.
“ஜம்னா அக்கா இதைக் கொடுத்தனுப்பிச்சாங்க” என்று இன்னொரு தடவை ராஜாமணியைப் பார்த்துவிட்டு வெட்கப்பட்டாள் அதை சிறுமி.
ஜமுனாவின் பெயரைக் கேட்டதும் ராஜாமணிக்கு எல்லாம் மறந்து போயிற்று. அவள் ஓட்டலுக்கு வந்ததும் அவனைப் பார்த்துச் சிரித்ததும், வீட்டுக்கு வரும் வரை தெப்போற்சவத்துத் தெப்பல் மாதிரி மனசில் ஆக்கிரமித்த இன்ப உணர்வும், மீண்டும் அவனைப் புதுப்பித்தன.
இடை ஒசியக் கையை வீசியவாறு நடந்த ஜமுனா, ஓட்டல் படி இறங்கும் பொழுது, மறுபடியும் ஒரு தடவை அவனைப் பார்த்து சிரித்தது பூவாண வெளிச்சம் போல் மனசைப் பிரகாசிக்க வைத்தது.
“ஏண்டி பொண்ணே நாடா அவிழ்ந்துடுத்தா?” கங்காபாய் கேட்டாள்.
கீழ்க்கண்ணால் ராஜாமணியைப் பார்த்தவாறே அந்தச் சிறுமி தலையாட்டினாள்.
“உள்ளார போயி கட்டிக்கோ.”
சர சர வென்று உள்ளே வந்த சிறுமி ஊஞ்சலைத் தாண்டி புழக்கடைக்குப் போகும் உள் நடையில் மறைவாக நின்றாள்.
அவன் கொடுத்த எவர்சில்வர் தூக்கின் மூடியைத் திறந்து பார்த்தாள் கங்காபாய்.
“ஜம்னா வீட்டிலே இன்னிக்கு என்ன விசேஷம்? பால் பாயசம் பண்ணியிருக்காளே” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.
கல்லாவில் தான் உட்கார்ந்திருந்தபோது, ஜமுனா ரங்கையரைக் கூட்டிக் கொண்டு போனது ராஜாமணிக்குக் கவனம் வந்தது.
அவள் சொல்ல வாயெடுப்பதற்குள் கங்காபாய் பேசிக் கொண்டே உள்ளே போய் விட்டாள்.
“இருடீ கொழந்தே! பாத்திரத்தை மாற்றி அலம்பிக் கொடுத்துடறேன்.”
“சரி மாமீ...” சிறுமியின் குரல் ராஜாமணியை உத்தேசித்து சிறு முனகலாக வெளி வந்தது.
கங்காபாய் பால் பாயாசத்தை வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு எவர்சில்வர் தூக்கை அலம்பப் புழக்கடைக்குப் போனாள்.
ரங்கையர் வீட்டிலிருந்து பலகாரங்கள் ஏதாவது சமயங்களில் வருவது உண்டு. ராஜாமணி அதை வெறும் பலகாரங்களாகத் தான் சாப்பிடுவான்.
இந்த முறை ஜமுனாவின் கரங்கள் அதைச் செய்திருக்கின்றன என்ற நினைவே அவனுள் கிளர்ச்சியை ஏற்படுத்திற்று.
அம்மா பால் பாயசத்தை எப்போது கொண்டு வருவாள் என்று அவன் மனம் ஏங்கத் தொடங்கிற்று. அவனது ஆவல் கங்காபாய்க்குத் தெரியவில்லை.
சிறுமியை அனுப்பிவிட்டு மனசில் விழுந்திருந்த சிக்கலை அறக்க முடியாத பளுவுடன், அவள் சீடையை உருட்ட உட்கார்ந்து விட்டாள்.
“அம்மா ஒரு கப்பிலே கொஞ்சம் பாயசம் கொண்டு வாயேன்!” என்று வாய் விட்டுக் கேட்டாள் ராஜாமணி.
“அடடே... சாப்பிடறச்சே குடுக்கலாம்னு இருந்துட்டேண்டா கொழந்தே” என்று அங்கலாய்த்தவாறே எழுந்தாள் கங்காபாய்.
“ரங்கையன் இந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டான்னா அவன் ஒத்தை மரமா தனிச்சப் போவான். இப்பவே சீமைய சுத்திண்டிருக்கிற பையன் அவன் கைக்கு ஒதவ மாட்டான். ம்ம்... காலமெல்லாம் ஒழைச்சு அவனும் என்னத்தைக் கண்டான்? அவன் சம்சாரம்தவறி எட்டு வருஷமாவப் போறது. இந்தப் பொண்ணு ஜம்னாதான் பூமியிலே வேர் பத்தினாப்பிலே அவனை ஒட்டி நிக்க வச்சா. பொண்ணு நல்ல கொணம். தங்க விக்ரகமாட்டம் இருப்பா. பேசினா கிளி கொஞ்சும். வயசுக்கு வந்த அஞ்சாறு வருஷமாகப் போகிறது. அவளுக்கு என்னிக்கு கங்கண யோகம் பொறக்கப் போறதோ?”
-அம்மா பேசிக் கொண்டே போய் பாயாசத்தை ஊற்றியவாறு பேசிக் கொண்டே திரும்பினாள், அவள் வார்த்தைகளில் ஒன்றைக் கூடத் தவற விடாமல் கூர்ந்து கேட்டான் ராஜாமணி.
பால்பாயாசம் அவனுக்கு அடிநாக்கு வரை  தித்தித்தது.
அதற்கப்புறம் சேது என்ன லெட்டர் போட்டிருந்தான் என்று விசாரிக்கவே மறந்து விட்டான்.
“ஜம்னா சின்னப் பொண்ணா இருக்கும்போது பார்த்தது. நாம கச்சேரித் தெருவிலே குடித்தனம் இருந்தப்ப.”
“அவ எப்பவும் உன்னை விசாரிக்கிறாடா. குமாரசாமி கோயிலுக்கு சாயந்திரமா நவக்கிரகம் சுத்த வர்றச்சே எப்பவாவது பாப்பா... பார்க்கிறப்பல்லாம் விசாரிப்பா...”
கங்காபாய் கொடுத்த க்ளூ பால் பாயாசத்தைவிட அதிகமாய் இனித்தது. குமாரசாமி கோயில், சாயந்திர வேளை என்று அவன் கவனமாகக் குறித்துக் கொண்டான்.
அவனோடு கிரிக்கெட் விளையாடும் நந்தகுமார் வீடு. குமாரசாமி கோயிலுக்கு வெகு அருகில், ஜன்னலைத் திறந்தால் கோயிலுக்கு வருவோர் போவோரை கவனிக்கும் சௌகரியத்தோடு அமைந்திருப்பது அவனுக்கு உடனே கவனம் வந்தது.