Tuesday, 22 January 2013

ஜமுனா-5

5
“ஜம்னா...”
பிராகாரத்தைச் சுற்றிக் கொண்டிருந்த ஜமுனா, ஆண்குரல் ஒன்று தன்னை அழைக்கிற ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தாள்.
அரைமணி நேரம் பீரோவைக் குடைந்து போட்டுக் கழற்றி மாற்றிய உடைகளோடு ராஜாமணி நின்றிருந்தான்.
“அடடே...! நீ கூட...” என்று அவசரமாக வாயில் வந்துவிட்ட ஏக வசனத்தை நாக்கைக் கடித்து மாற்றினாள். ‘நீங்க கூட கோயிலுக்கு வர்றதுண்டா?”
இருட்டிக் கொண்டு விட்டதால் டாப் லைட் போட்டிருந்தது. விளக்கின் கீழே ஜமுனா நின்றாள். வெள்ளைக் கோடு போட்ட கறுப்பு வாயில். கறுப்பு ரவிக்கை. அவள் வேகமாகத் திரும்பிய திரும்பலில், நீளமான கூந்தல் ஒதுங்கி புஜத்தின் மீது உடைக்குப் பாந்தமாகத் தொங்கிற்று. அவனை ஒருமையில் கூப்பிட்டு விட்டு நாக்கைக் கடித்த காட்சி ராஜாமணியைச் சொக்க வைத்து விட்டது.
“இல்லே... ஏன்... இன்னிக்கு... இப்பத்தான் வந்தேன்” என்று சொல் பஞ்சமாகிவிட என்னமோ உளறினான் ராஜாமணி.
அதற்குள் ஒரு சிறுவர்கள் கூட்டம் கலகலவென்று கூச்சலும் கும்மாளமுமாக அவளுக்கும் அவனுக்கும் மத்தியில் வந்து நின்றது. அவர்கள் இருப்பதைப் பற்றிய அக்கறையோ பிரக்ஞையோ அவர்களுக்குச் சிறிதும் இல்லை.
பெரிய வாண்டு ஒருவன் கூவினான்.
“டேய்... நான் கத்துவேன். நீங்கள்ளாம் ஓடி ஒளிஞ்சுக்கணும் ரெடி... கிட்டுதான்... தேடிப்பிடிப்பான். ரெடி ஒன்...டூ...த்ரீ...”
வானரக் கூட்டம் கத்திக் குதூகலிப்பது போல் மூலைக்கு ஒருவராக ஓடினார்கள்.
“கில்லித்தாரா ரையா... ஓடி வாடா பையா...”
பிராகாரத்தின் வடக்கு வடமேற்கு மூலைகளில் சிரிப்பு பீறிடும் ஓசையும், ஒருவன் அதட்டும் ஓசையும் சட்டென்று எல்லாம் மௌனமாவதும் தொடர்ந்தன.
கிட்டு என்று அழைக்கப்பட்டவன் ஆள் வேட்டையைத் தொடர்ந்து கொண்டே ஓடினான்.
ஜமுனா, ராஜாமணியைப் பார்த்து வேடிக்கையும் குறும்பும் பொங்கச் சிரித்தாள்.
“நம்ம காலத்து விளையாட்டு இப்போ ரொம்ப மாறிப் போச்சு ஜமுனா...” என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டே தைரியமாக ஆரம்பித்தான் ராஜாமணி.
“காலம் மாறிவிட்டது. நாமளும் மாறிவிட்டோம். விளையாட்டும் மாற வேண்டியதுதானே!” என்று சிரிப்பு மாறாமல் சொன்னாள் ஜமுனா. சிரிக்கும்போது ஜமுனா மிகவும் அழகாக இருந்தாள். கன்னம், உதடு, கண்கள் எல்லாம் சிரித்தன.
தான் தடுமாறுவதற்காகவே அவள் சிரிக்கிறாள் என்று புரிந்தாலும், அவளது ஒவ்வோர் அங்கமும் அந்தச் சிரிப்பில் பரிபூர்ணமாக மலர்ந்து, அவளது பிரகாசத்தை அதிகரிக்கிற அனுபவத்தில் அவன் கரைந்தான்.
“எதுக்கு சிரிக்கிறேன்னு தெரியுது ஜமுனா. ஆனா இவ்வளவு பிரமாதமா நீ வளர்ந்து நிக்கற ஆச்சரியத்திலே எனக்கு வாய் உளர்றது!”
ஜமுனா வெட்கத்தோடு தலை கவிழ்ந்துக் கொண்டாள்.
“நான் என்ன அவ்வளவு பிரமாதமாவா வளர்ந்துட்டேன்?”
கோயிலின் வடமேற்கு மூலையில் “கில்லித் தாராரையா ஓடி வாடா பையா” என்று ஒரு குரல் வெடித்தது. சிரிப்பும் கும்மாளமும் மறுபடியும் கேட்டு அடங்கின.
“டேய் கோபு... பாச்சா... கோந்து... எத்தனை தரம்டா சுத்திச் சுத்தி வர்றது?” என்று பிரகாரத்தை ஒரே ஓட்டத்தில் அதற்குள் சுற்றிக் கொண்டு வந்த கிட்டு என்பவன் அவளுக்கும் அவனுக்கும் மத்தியில் நின்று கொண்டு, அழாக் குறையாகக் கத்தினான்.
ராஜாமணிக்கு ஆத்திரமாக வந்தது.
“இந்த விஷமக் கொடுக்குகளுக்கு வேறு இடம் கிடைக்கல்லையா, கோயில் தானா அகப்பட்டது? என்று ஜமுனாவைப் பார்த்துக் கேட்டான்.
கிட்டு என்பவன் அதைக் கேட்டு அவனைத் திரும்பிப் பார்த்து ஒருமுறை முறைத்துவிட்டு வடமேற்கு மூலைக்கு நகர்ந்தான்.
“அப்பாடா” என்று நெடுமூச்சு வந்தது ராஜாமணிக்கு.
“எவ்வளவு அற்புதமா வளர்ந்திருக்கே தெரியுமா?” என்று ஜமுனா ஜமுனா முதலில் கொடுத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கினான்.
புஜத்தில் தொங்கிய கூந்தலை எடுத்து பின்னால் வீசி விட்டுக் கொண்டு “போ, ராஜா” என்று சுவாதீனமாகச் சொல்லி விட்டு மறுபடியும் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“பரவால்லே ஜம்னா... நீ வா போன்னே கூப்பிடலாம். நான் புதுசா என்ன?”
“புதுசில்லேதான். ஆனா பி.எஸ்ஸி... படிக்கிறே...பெரிய ஆபீசராகப் போறே!”
அவளது விழிகளில் மரியாதையும் அன்பும் ஒளி வீசின.
ஜமுனா என்ன அழகாக மையிட்டுக் கொண்டிருக்கிறாள். பளிச்சென்று கண்ணைப் பிடுங்குகிற மாதிரியும் இல்லை. இல்லாத மாதிரியும் தெரியவில்லை.
“அம்மா சொன்னாளா..?” என்றான் ராஜாமணி.
“ஒனக்கெப்படித் தெரியும் அம்மாதான் சொல்லியிருப்பாங்கன்னு?” என்று திருப்பி மடக்கினாள் ஜமுனா.
“நீ தினம் நவக்கிரகம் சுத்த வர்றதா அம்மாதான் சொன்னாள்...” என்று உளறி விட்ட ராஜாமணி ஜமுனாவுக்காகக் கோயிலுக்கு வந்த விஷயத்தைத் தானே அம்பலமாக்கி விட்டதை நினைத்து, நாக்கைக் கடித்துக் கொண்டான்.
அவன் நாக்கைக் கடித்துக் கொண்டதைப் பார்த்து ஜமுனா, மீண்டும் சுளுக் கென்று சிரித்தாள்.
“நீ ஆளும் மாறிட்டே, தைரியமும் மாறிவிட்டது” என்று நறுக்கென்று சொன்னாள் ஜமுனா.
அவளது அழகின் போதையில் அது மட்டும் கோயிலாக இல்லாமல் ஒரு தனியிடமாக இருந்திருந்தால் தன் தைரியத்தை அவளுக்கு எப்படியெல்லாம் நிரூபித்துக் காட்டியிருக்கலாம் என்று மனசுக்குள் கற்பனை செய்து கொண்டான். கற்பனைதான் பிரமாதமாக ஓடிற்று. ஓரடி கூட அவளுக்கு முன்னால் நெருங்க, கால் ஒத்துழைக்கவில்லை. பார்வை மட்டும் ஜமுனாவின் கண்களையும் உதடுகளையும் விட்டு அங்குமிங்கும் நகராமல் தடுமாறிற்று.
“அபாரமாக கிரிக்கெட் விளையாடுறாயாமே...?”
“யார் சொன்னது?”
“சுசீலான்னு என் ஃப்ரெண்ட், ஈத்கா மைதானத்துக்குப் பக்கம் வீடு. தினசரி உன் விளையாட்டை அவள் வாச் பண்ணுவாளாம்.”
“ஓஹோ!”
முகம் தெரியாத சுசீலாவுக்கு மனசிற்குள் வாழ்த்துக் கூறினான்.
“இன்னிக்கு நீ அனுப்பின பாயாசம் ரொம்ப அற்புதமா இருந்தது ஜம்னா!”
வாண்டுகளின் சேனை குபீரென்று சிரிப்பொலி வெடிக்க மூலைக்கு ஒன்றாக ஓடி வந்து அவனுக்கும் அவளுக்கும் மத்தியில் நின்று கொண்டது.
‘டேய் போங்கடா... நான் விளையாட வரமாட்டேன். ஒவ்வொருத்தன் மூலஸ்தானத்து மூலையிலே எல்லாம் போய் ஒளிஞ்சுக்கறான். கோந்து, கோயிலுக்கு வெளியே தேர்மூலையிலே ஒளிஞ்சுண்டான்!” என்று கோபித்துக் கொண்டான் கிட்டு.
“ஹையா ஹையா!” என்று ஏக காலத்தில் நாலைந்து சிறுவர்கள் ஒரே தாளத்தில் கைதட்டினார்கள்.
“அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா...” என்று ஒரு வாண்டு ஆரம்பித்தான்.
“கிட்டு... அட கிட்டே ஊஊஊ” என்று வாண்டுகள் சேனை ஊளையிட்டது.
அதற்கு மேல் ராஜாமணியால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.
“டேய் அம்பி... ஒங்க லீடர் யார்றா?” என்றான்.
“ஏன் சார்?” என்று மார்பை விறைத்துக் கொண்டு ஒரு சிறுவன் முன்வந்தான்.
ராஜாமணி பாக்கெட்டில் கையை விட்டு பர்ஸை எடுத்தான். பிரித்து வைத்தபடி, சிறுவர்களை மனசிற்குள் எண்ணிவிட்டு, ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை அந்த லீடரிடம் நீட்டினான்.
“பத்து பேருக்கும் ஆளுக்கொரு சாக்லெட் வாங்கிக் கொடுடா அம்பி... வாங்கி சாப்பிட்டுட்டு மறுபடியும் இங்கே விளையாட வந்துடாதீங்க... வீதியிலேயே விளையாடுங்கோ.”
ராஜாமணி நீட்டிய நாணயத்தையும் அவனையும் ஒரு யோசனையோடு பார்த்துக் கொண்டு நின்றான் லீடர்.
“வாங்கிக்கோடா...” என்று ஒரு சாக்லெட் பிரியன் யோசனை கூறினான்.
லீடர் வாங்கிக் கொண்டான். பின்பு ராஜாமணியையும் ஜமுனாவையும் ஒரு தடவை மாறி மாறிப் பார்த்தான்.
“ஏன் சார்... உங்களுக்கு டிஸ்டர்ப்பா இருக்கா?”
“ஹத்” என்று பல்லைக் கடித்துக் கையை ஓங்கினான் ராஜாமணி.
வாண்டுக் கூட்டம் கூச்சலிட்டுக் கொண்டு பறந்தது. ஜமுனா வாயைப் பொத்தியவாறு விழுந்து விழுந்து சிரித்தாள்.
“தினசரி கோயிலுக்கு வர்றியே... இதே கதைதானா?”
“பட்டர் வந்து அதட்டுகிறவரை குதிப்பார்கள். அவர்களுக்கும் விளையாட இடம் இல்லை. பார்க், கிரவுண்டு எல்லாம் ரொம்ப தூரம். பொடிப் பயல்கள்” என்று விளக்கம் அளித்தாள் ஜமுனா.
“நாமகூட அப்படித்தானே... தண்டபாணி கோயில் தெரு மடப்பள்ளி என்று சுற்றுவோம்” என்றான் ராஜாமணி.
ஜமுனா அவனுடைய சொற்களைக் கவனியாமல் பேசினாள்:
“பாயாசம் நான் செய்ததில்லே...”
“அப்படியா!” - தன் பாராட்டு வீணாகிய சோர்வோடு கேட்டான் ராஜாமணி.
“வேறே யாரு?”
“எங்க ஆத்துக்கு வந்திருக்கிற ஆனந்தலட்சுமியம்மா செஞ்சது...”
“ஓ... காலையிலே. அவங்க வந்திருக்காங்கண்ணு தானே ரங்கையரைக் கூப்பிட வந்தே! யார் அது? பந்துவா?”
“யார்னு தெரியலே. நான் இதுவரைக்கும் அந்தம்மாவைப் பார்த்ததே இல்லே. ஒங்க அப்பா கூட வந்து பார்த்து ரொம்ப நேரம் பேசிண்டிருந்தாரே... அவர் போனப்பறம் எங்கப்பாவைக் கேட்டேன். ஒங்க அப்பாவுக்கு தூரபந்துவாம். ஆனந்தபவன் ஓட்டல் நடத்த ரொம்ப ஹெல்ப் பண்ணினவாளாம்.”
ராஜாமணி ஆச்சரியப்பட்டான்!
தனக்குத் தெரியாமல் ஆனந்தபவன் நடத்த இவவளவு உதவிய தூரபந்து ஒருத்தி இருப்பதும், அவள் தங்கள் வீட்டிற்கு வராமல் தங்கையர் வீட்டிற்கு வந்திருப்பதும் அவனுக்கு விந்தையாக இருந்தது. இதில் ஏதோ ஒரு புதிர் இருப்பதாக அவனுக்குப்பட்டது. அதை அப்புறமாக யோசித்துக் கொள்வோம் என்று ஒதுக்கி விட்டான்.
“அந்தம்மா போயிட்டாளா?”
“இல்லே.. அவங்க உத்தேசத்தைப் பார்த்தா இன்னும் ரெண்டு மூணு நாள் தங்கலாம்.”
“ஓஹோ...!” என்று அந்த விஷயத்தைக் கடந்து இனிமே நானும் தினம் கோயிலுக்கு வரலாம்னு பார்க்கறேன்” என்றான் ராஜாமணி.
“எதுக்கு...?” என்று அவன் பார்வையைக் கண்ட ஜமுனா, சட்டென்று கண்களைத் தாழ்த்திக் கொண்டாள், அவள் முகம் மாறிவிட்டது.
“வாயேன்... கோயில் எனக்கே சொந்தமா என்ன?” என்று அவள் குரலில் ஒரு விலகல் தொனிக்கக் கூறினாள்.
திடீரென்று அவள் அடைந்த மாற்றத்தைக் கண்டதும் ராஜாமணி அசட்டுப் பிசட்டென்று அவசரப்பட்டு விட்டோம் என்று நொந்து கொண்டான், சம்பாஷணையை சகஜமாக்க வேண்டிய சூழ்நிலை உருவாவது, அவனுக்கு உறைத்தது.
“ஜோசியர் எனக்கு டைம் சரியில்லேன்னு சொல்லியிருக்கார். நானும் ஒரு மண்டலம் நவக்கிரகம் சுத்தணுமாம்.”
யாரோ மெல்ல இருமும் ஓசை கேட்டு ராஜாமணி திரும்பினான்.
காதுக்குக் கீழே கோடாலி மாதிரி கிருதா வளர்த்துக் கொண்டு இன் பண்ணிய பேண்டோடு மோகன் வந்து கொண்டிருந்தான். ஆனந்த பவனில் ஆறு மாதமாகச் சாப்பிடும் கஸ்டமர். ராஜாமணியைப் பார்த்து “ஹலோ” என்று ஒற்றை விரலைத் தூக்கினான் அவன்.க
“ஹலோ” என்று ராஜாமணி பதிலுக்குக் கை உயர்த்தினான்.
“எங்கே... திடீர்னு கோயில் விஜயம்?” என்று அவன் கேட்கும்போது, ஜமுனா முகத்தை திருப்பிக் கொண்டு மெதுவாக நடந்தாள்.
“ஏன்... நான் எப்பவாவது வர்றது உண்டே!”
“ஐஸீ... நான் இன்னிக்குத்தான் பார்த்தேன்.”
ராஜாமணிக்கு சட்டைக்குள் முதுகு லேசாக வியர்த்தது.
‘இவனுக்கு என்ன பயப்படுவது’ என்று ஒரு துணிச்சலும் எழுந்தது.
“உங்க காலேஜ் எப்ப திறக்கிறது?” என்று மோகன் ஆரம்பித்தான்.
“ஜூலை ஸிக்ஸ்டீன்த்.”
“நீங்க தேர்ட் இயரா?”
ராஜாமணிக்கு எரிச்சல் தாளவில்லை.
“இல்லே, இது ட்வென்டி தேர்ட் இயர்.”
“ஐ மீன்... உங்க பி.எஸ்ஸி., விஷயத்தைக் கேட்டேன்.”
“ஆமாம்.”
“கெமிஸ்ட்ரிதானே மெய்ன்?”
“ஆமாம்.”
இதற்குள் ஜமுனா பிராகாரத்தைத் தாண்டி நவக்கிரகத்தை நெருங்கி விட்டிருப்பாள் என்று கணக்கிட்டான் ராஜாமணி. இவன் ஜமுனாவுடன் தான் பேசிக் கொண்டிருந்ததை நிச்சயம் கவனித்திருப்பான். இவனைக் கட் பண்ணிவிட்டு வேகமாகச் சென்று நவக்கிரகச் சுற்றில் ஜமுனாவோடு கலந்து கொண்டால் இவனுடைய மோப்பம் இன்னும் அதிகமாகும். ஓட்டலில் சாப்பிடும்போது மணி மாதிரி சர்வர் எவனிடமாவது வாயிருக்க மாட்டாமல் உளறி வைத்தானானால் அது ஒலிபரப்பாகிவிடும். இவனுக்கு ஜமுனா, ரங்கையர் பெண் என்ற விஷயம் ஒருக்கால் தெரிந்திருந்தால்...?
கம்ப்யூட்டர் வேகத்தில் சிந்தித்த ராஜாமணி அவனது அறுவையைச் சகிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தான். ஜமுனாவிடம் அன்று அதற்குமேல் பேச முடியாது. அந்தத் தவிப்பைத்தான் அவனால் தாள முடியவில்லை. அந்த மோகன் மீது அளவு கடந்த ஆத்திரம் வந்தது. பேசாமல் அறுவைப் பொறுப்பைத்தான் மேற்கொண்டான்.
“சார்... நீங்க ஆபீஸிலே வேலை செய்யறீங்களா...?”
“இல்லையே... நான் மெடிகல் ரெப்ரஸென்டேடிவா இருக்கேன்.”
“எந்த கம்பெனி?”
“க்ளெண்டோவ்ல்.”
“நான் கேள்விப்பட்டதே இல்லையே!”
“இப்பத்தான் ஸ்டார்ட் ஆகியிருக்கு...”
“ஐஸீ... ஹெட் க்வார்ட்டர்ஸ்?”
“நாக்பூர்.”
“ஐஸீ... என் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரு க்ளாக்ஸோவிலும் ஸ்க்விப்பிலேயும் ரெப்ரஸென்டேடிவா இருக்காங்க...”
மோகன் அவசரத்தோடு குறுக்கிட்டான்.
“அவங்களுக்குக்கூட தெரிஞ்சிக்க நியாயமில்லே. ஏன்னா போன வருஷம் தான் எங்க கம்பெனி ஆரம்பம் ஆகியிருக்கு. மருந்துகளே இன்னும் மார்க்கெட்டுக்கு வரல்லே...”
“மருந்து வராமே நீங்க எப்படி சார் ரெப்ரஸென்டேடிவா இருக்கீங்க?”
“யூஸீ... நான் வந்து... ஒரு பிரிலிமினரி மார்க்கெட் ஸ்டடி செஞ்சுட்டிருக்கேன். இந்த டிஸ்ட்ரிக்ட் பூரா என்னென்ன மருந்துகள் போறது? கிராக்கி எப்படி? இதெல்லாம் ஒரு வீக்லி ரிப்போர்ட் அனுப்பறது என் வேலை அடுத்த மாசம் எங்க கம்பெனி மருந்துகள் மார்க்கெட்டுக்கு வந்துடும்.”
ராஜாமணிக்கு அவனது அவசரமும் தடுமாற்றமும் ஓர் எச்சரிக்கை தந்தன.
“இவன் ஒரு ஃப்ராடோ?”
அவன் முகத்தை உற்றுப் பார்த்தவாறே ராஜாமணி கேட்டான்.
“கம்பெனி பேரு என்ன சொன்னீங்க?”
“க்ளெண்டோவ்ல்... இது ஒரு இண்டோ-பிரெஞ்ச் கூட்டு முயற்சி.”
“ஐஸீ...”
“வரட்டுமா. கோயிலைச் சுத்திட்டு ஓட்டலுக்குப் போகணும்” என்று பவ்யமாக விடை கேட்டான் மோகன்.
“என்ன சார்... அவசராமா?”
“நோ நோ... அவசரம் ஒண்ணுமில்லே. சாப்பிட்டப்புறம் செகண்ட் ஷோவுக்குப் போகணும்.”
“இன்னும் டயம் இருக்கே!”
ராஜாமணிக்குள் இன்னும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு போயேன் என்று ஒரு கறுவல்.
“இல்லே... ரூமுக்குப் போய்விட்டுப் போகச் சரியாய் இருக்கம்...பை... பை...”
கோயிலுக்குள் பைபை சொல்லிவிட்டுப் போகும் அவனை ராஜாமணி மன்னிக்கத் தயாராய் இல்லை. அவனோ அவசர அவசரமாகப் பிய்த்துக் கொண்டு கிளம்பினான்.

No comments:

Post a Comment