Tuesday, 15 January 2013

ஜமுனா-1

ஜமுனா
1
காலையில் காபி சாப்பிடுவோர் ஒவ்வொருவராகப் படி ஏறி ஏறி வந்து கொண்டிருந்தனர். ஆனந்த பவன், மெயின் ரோட்டில் இருந்து ஏழு படி உயரம். கோவிலுக்கு மலை ஏறுவது மாதிரி தான் ஏறி வரவேண்டும். அவ்வளவு உயரம் ஏறுவதை யாரும் பொருட்படுத்தவில்லை. நல்ல காப்பிக்கும் டிபனுக்கும் அதுவும் ஒரு விலைதானே!
சர்வர் ரங்கையர், பணம் வாங்கும் மேஜைக்குப் பின் சுவரில், உயரத்தில் மாட்டியிருந்த சுவாமி படங்களுக்குப் பூ மாட்ட வந்தார். முதலாளி ஆனந்தராவ், நாற்காலியைப் பின்னால் இழுத்துக் கொண்டு கல்லா மேஜையை விட்டு எழுந்தார். கல்லா ஒரு மேடையில். அந்த மேடையை விட்டு இறங்கி இரும்பு கேட்டின் ஓரத்தில் நின்று, படிக்கட்டுகளில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டிருப்பதைக் கவனித்தார்.
மெயின் ரோட்டில் இடமும் வலமுமாக வருவோர் போவோரை வேடிக்கை பார்க்கலானார். அருகிலேயே பஸ் ஸ்டாண்ட். எனவே காலை நேரத்துச் சுறுசுறுப்பு வேகமாகப் பரவியிருந்தது.
தெரிந்த வாடிக்கைக்காரர் ஒருவர் வரவே, “வாங்கோ, ராஜப்பன்... நேத்து ராத்திரி ரேடியாவிலே படே குலாம் அலி பாட்டு வச்சிருந்தானே.. கேட்டீரா?”
“கேட்டேன் ராயரே... ரெண்டாவது ரெக்கார்ட் அற்புதமாயிருந்தது.”
“முதல் ரிக்கார்ட் மட்டுமென்னவாம்? அந்நேரத்துக்கு நான் உம்மை நினைச்சுண்டேன்.”
வாக்கிங் ஸ்டிக்கும் கையுமாக வக்கீல் வாசுதேவாச்சார் அதிகாலை வாக்கிங்கிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். எழுபது வயசுப் பழம் என்று அந்த மிடுக்கைப் பார்த்துச் சொல்ல முடியாது.
“என்ன வக்கீலண்ணா... தயவே காணோமே... நேரா போயிண்டிருக்கீரே?...”
“போடா ஆனந்தராவ்... நீ தினம் இப்படிக் கூப்பிட்டுக் கூப்பிட்டே எனக்கு காபி பழக்கம் வீக் பாயிண்டாப் போச்சு.
இன்னையிலிருந்து விட்டுடலாம்னு டிஸைட் பண்ணினேன்” என்று அந்தத் தீர்மானத்தைக் காற்றில் பறக்கவிட்டவாறே படிக்கட்டில் ஏறினார்.
“காபியை விடுங்கண்ணா... நான் வேண்டாங்கலே! காலை வாக்கிங்குக்கு அப்புறம் கடையை எட்டிப் பார்த்துட்டுப் போங்கோ. நீங்க வந்து போகலேன்னா எனக்குக் காபி சாப்பிடாத மாதிரி இருக்கு. இன்னிக்கு எவ்வளவு தூரம் போயிட்டு வந்தீங்க?”
“தாழம்புதர் தாண்டி பால்நாங்குப்பம் ரோடு வரைக்கும் போனேன்.”
“அடேயப்பா ரெண்டு ரெண்டரை மைல் இருக்குமே! ஒங்க வயசுக்கு நாங்க நடமாடறோமோ இல்லையோ?” ஆனந்தராவின் பெரிய முகத்தில், வயதானாலும் பிரகாசம் மங்காத கண்களில், பிரியம் தெரிந்தது.
வஞ்சனையின்றி வளர்ந்த உடம்பில், மொத்து மொத்தென்று குத்திக் கொஞ்சி விளையாடத் தூண்டும் சதைப் புஷ்டியும், தொந்தியும் அவர் மனசின் போஷாக்காகவே தெரிந்தன. வாசுதேவாச்சார் கிரிமினல் புலி. ஒரு பார்வையிலேயே குற்றவாளிக்குக் குலை நடுங்கும். ஊரே அவரைப் பார்த்தால் மரியாதையோடு பயந்து ஒதுங்கும். ஆனால் ஆனந்தராவ் அந்த இரும்புக் கோட்டைக்குள்ளும் கூட ஒரு காந்த ஊசி மாதிரி நுழைந்து விடுவார்.
வெறும் பிசினஸ் பேச்சு அல்ல அது. தானாக இழைந்து ஓடி வந்து மனசோடு குலாவும் பேச்சு. அதனால் வாசுதேவாச்சாரின் கிரீடம் கூட அங்கே இறங்கி விட்டது.
ஆனந்தராவ் உள்ளே திரும்பி, “மாதவா வக்கீல் அண்ணா வந்திருக்கார்... காபியை விட்டுடப் போறேங்கிறார். கவனி...” என்று குரல் கொடுத்தார். மறுபடியும் வாத்சல்யப் புன்னகை.
“நீ எங்கே என்னை நல்ல கதிக்கு விடப்போறே? டிக்ரியா ஒரு காபி கொண்டா மாதவா” என்று அமர்த்தல் புன்னகையோடு ஹாலுக்குள் நுழைந்தார் வாசுதேவாச்சார்.
அவர் உள்ளே போனதும் கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா கிருஷ்ணமூர்த்தி, கையில் பிளாஸ்கோடு வேகமாகப் படியேறினான்.
“என்ன கிட்டு பிரசவமாயிடுத்தா?”
“இல்லீங்க ராயர்வாள்... ராத்திரி ஒம்பதுக்கு ஆரம்பிச்ச வலி இன்னும் நின்ன பாடில்லே. இன்னும் ரெண்டு மணி ஆகுமாம்...!”
“கவலைப் படாதே... தலைச்சனோல்லியோ... வலி இருக்கத்தான் செய்யும். உடுப்பி கிருஷ்ணன் காப்பாத்துவான். நல்லபடியா க்ஷேமமா, பிரசவம் ஆகும். ஆண் கொழந்தைதான். ஸ்வீட்டுக்கு எங்கிட்டே தானே ஆர்டர் கொடுக்க வரப்போறே! பாரேன்.”
“சாந்தா துடியாத் துடிக்கிறா ராயரே...!”
“த்சு...த்சு... பாவம்! கொழந்தைக்கு ஒல்லியான உடல் வாகு. ம்ம்.. ஆஞ்சநேய சுவாமிக்கு வடைமாலை சாத்தறதா வேண்டிக்கோ கிட்டு.”
ஆனந்தாவின் கரிசனமும், வாஞ்சையும் கிட்டுவின் முகத்தில் படர்ந்திருந்த கவலையைக் குறைத்தன.
“காபிக்கு வந்தியா?”
“ஆமாம், ராயர்வாள்”
“போ...போ... கிச்சன்லே உமாசங்கர் தான் இருக்கான். நீயும்தான் என்ன பண்ணுவே? ஒண்டிக்கட்டை, கூட மாட ஒத்தாசைக்கும் ஆளில்லே.”
கிட்டு உள்ளே போனான்.
உடனே பால்கார வடிவேலு, சைக்கிளில் பால் கேனோடு ஒய்யாரமாக வந்து, பெடல் ‘நக்’கென்று படியில் இடிக்க ஓரத்தில் நிறுத்தினான்.
“வடிவேலு... இன்னும் கொஞ்சம் காலம்பறவே வந்துடப்படாதா?”
“நான் என்னா சாமி பண்ணட்டும்? எவ்வளவு கறுக்கலே கிளம்பினாலும் நாலு மைல் வர்றதுக்குள்ளே பொழுது விடிஞ்சுடுது. ஒங்களுக்குப் பரவால்லே... பக்கத்து சந்திலே வீடு... அஞ்சு பத்துக்கு டக்குணு வந்து கல்லாவிலே குந்திடுவீங்க.”
‘கண கண’ வென்று சைக்கிள் மணியை முழக்கியபடி பேசினான்.
உமாசங்கரும் சாரங்கனும் வெளியே வந்து கேனுக்கு வடிவேலு கட்டியிருந்த கயிற்றை அவிழ்ப்பதை வேடிக்கை பார்த்தவாறே நின்றனர். உமாசங்கர் முகம் மட்டும் சுண்டியிருந்தது.
“காபிக்குப் பால் காய ஒரு மணி நேரமாவது ஆகும். காயாத பால்லே காபி போட்டா ஆனந்தபவன் பேரு ரிப்பேராக வேண்டியதுதான். “மாருதி கேப்” காரனுக்கு மட்டும் விடிகாலையிலே பால் எப்படி வர்றதாம்?” என்று பொரிந்தான் உமாசங்கர்.
வடிவேலுவை அது தாக்கிற்று.
“மாருதி கேப்புக்கு பால் ஊத்தறதை இவன் பாத்தானா? இவனுங்க என்ன சாமி அதிகாரம் பண்றது? பாத்தாலும் புரூஃப் பண்ண முடியுமா? இந்த சைக்கிள்ளே இன்னிக்கு நேத்தா கேன் கட்டி வர்றேன்? பத்து வருசம், ஆனந்தபவனைத் தவிர ஒரு ஓட்டலுக்கு நான் பால் ஊத்தறதா ப்ரூஃப் பண்ணட்டும், நான் வியாபாரத்தை விட்டுட்டு எருமை மேய்க்கறேன் சாமி...”
வடிவேலு விடுவிடு வென்று பேசிக் கொண்டே, கயிற்றை அவிழ்த்தான்.
“விடுடா வடிவேலு... அவனுக்குப் பால் காயற கவலை... உனக்கு சைக்கிள் மிதிக்கிற தொல்லை... ரெண்டு பேரும் ஒரு அட்ஜஸ்மெண்டுக்கு வந்துடுங்கோ... மடமடண்ணு சொரபாணம் மாதிரி உனக்கு ரோஷம் வந்துடறது. ஆனந்தபவனை நீ விட்டுடுவியா? இதுதான் உன்னை விட்டுடுமா? உமா, வடிவேலுக்கு ஒரு டிகிரி காபி கொடுத்து சமாதானம் பண்ணிக்கோ.”
பொங்கிய வடிவேலு, தண்ணீர் தெளித்த மாதிரி அடங்கி விட்டான்.
பால் கேனை சாரங்கனின் தோள் மீது ஒரு கையைப் போட்டபடி பிடித்துக் கொண்டு, படியேறினான் உமாசங்கர். வடிவேலு சைக்கிளைப் பூட்டிக் கொண்டு பின்தொடர்ந்தான்.
பூ சாத்தி முடிந்ததா என்று திரும்பிப் பார்த்தார் ஆனந்தராவ்.
ஒரு கொத்து ஊதுவத்தியைக் கொளுத்தி உள்ளங்கையால் மறைத்தவாறே தீக்கொழுந்தை அவித்தார் ரங்கையர். நெருப்புப் பொறி சிதறிற்று. மின்மினி பறப்பது போல.
அதிகாலைக் குளியலும் பூஜையும் முடிந்து விட்டன என்பதன் அடையாளமாக, ரங்கையர் முகத்தில் விபூதிப் பட்டை பிரகாசித்தது.
கடை மூட எப்படியும் மணி பத்தரை ஆகும். கணக்கை முடித்துக் கொண்டு ஆனந்தராவ் கிளம்புகிறவரை ரங்கையர் உடன் இருப்பார். ஐந்து மணி முதல் ஆஜர் அவர்தான். வயசு ஐம்பத்தைந்து, என்ன குளிர்! என்ன மழை! எதுவும் இந்த வழக்கத்தைக் குலைத்ததில்லை. ‘இந்த மாமூல், தள்ளாமையில் கூட மாறாது போலிருக்கே’ என்று யோசித்த ஆனந்தராவுக்கு, வெட்கமாக இருந்தது.
காரணம், ஒன்பது மணிக்குத்தான் அவர் குளிக்கப் போவார். அப்படிப் பழக்கமாய் விட்டது. அதனாலேயே குளிக்காமல் முதலில் கல்லாவில் உட்காரக் கூடாது என்று ரங்கையர் கெடுபிடிக்கு மரியாதை தந்து, அவரையே கொஞ்ச நேரம் கல்லா பார்க்க விட்டு விடுவார் ஆனந்தராவ்.
அப்புறம் ஆனந்தராவின் இரண்டாவது பிள்ளை ராஜாமணி ஒன்பது மணிக்கு வருவான். காலையில் கிரிக்கெட் ப்ராக்டீஸுக்குப் போய் விட்டுக் குளித்து வர அவ்வளவு நேரமாகி விடும். அப்புறம்தான் அவருக்கு ஓய்வு கிடைக்கும்.
ஸ்டூலின் மீது நின்றிருந்த ரங்கையர், கீழே இறங்கி அதற்கு மேலே படிந்த கால் தூசை ஒரு துணியால் தட்டிவிட்டு பின்னரே ஆனந்தராவ் கல்லாவுக்குப் போனார்.
ரங்கையர் ஸ்டூலை எடுத்துக் கொண்டு போய் மெயின் ரோட்டுக்குப் பார்வையாகப் போட்டுவிட்டு, மெனுபோர்டை எடுத்து வைத்தார். ஈரத் துணியில் நேற்றைய ஸ்பெஷலை அழித்துவிட்டு இன்றைய ஸ்பெஷலை எழுதத் தொடங்கினார்.
“இட்லி கொத்ஸு... மெதுவடை... பொங்கல் அவியல்” அப்போதுதான் ஆனந்தராவுக்கே அன்றைய அயிட்டம் தெரிந்தது.
“சாஹு போட்லியா... ரங்கா?”
“சாஹுதான் நேத்திக்குப் போட்டோமே அண்ணா.”
“ஓ! மறந்துட்டேன்.”
சாம்பிராணிப் புகை காட்ட நெருப்பை அள்ளி வரச் சாம்பிராணிக் கரண்டியை எடுத்துக் கொண்டு உள்ளே போனார், ரங்கையர்.
‘வேற யாராவது க்ளோஸா கவனிச்சாள்னா ஓட்டல் என்னிதா, ரங்கனோட தான்னு சந்தேகப்பட்டுடுவா. அவன் கட்டளை தான் ஓட்டலை நடத்தறது’ என்று நினைத்தார் ஆனந்தராவ், அடுத்த கணம் ‘கிருஷ்ண... கிருஷ்ண’ என்று மனசிற்குள் அபராதம் சொல்லிக் கொண்டார்.
“ஓட்டல் என்னிதா என்ன... இந்த ரங்கையர்... சரக்கு மாஸ்டர் சுப்பண்ணா... சமையல் ராமையா... ஸ்டோர் ரூம் மரியதாஸ்... இவர்களோடது. நான் என்ன, வெறும்
அடையாளம், நாற்காலியிலே உட்கார்ந்திருக்கேன். சும்மா காசை வாங்கிப் போட்டுட்டா ஆச்சா... இன்னிக்கு நேத்தா! பதினெட்டு வருஷமாச்சு. என்ன நெருக்கடி எவ்வளவு சோதனை.’
ஆனந்த பவனின் வளர்ச்சி சிறு செடியாக, மரமாக எத்தனையோ காற்று மழைகளை எதிர்ப்பட்டு உருவான கதை அவர் மனசில் மீண்டும் ஓடிற்று.
ஐந்தாம் வருஷம் சம்பத்துச் செட்டியார் கட்டிடத்தை வாங்கி, வேறு விலாசத்தில் கடை போடக் காலி செய்து தீர வேண்டுமென்று வந்து நின்றது ஞாபகம் வந்தது.
“செட்டியார்வாள்! இது வெறும் வியாபார ஸ்தலமில்லே. ஒரு குடும்பம். பதிமூணு வருஷமா ஊரோடே பழகிட்ட குடும்பம். பிடிவாதம் பிடிச்சுக் குடும்பத்தைக் கலைச்சிடாதீங்க. எங்களுக்கு வேலை கிடைக்காம போயிடாது. எங்க முதலாளியும் பட்டினியா இருந்துடப் போறதில்லை. ஆனா இந்தக் குடி சிதறிடும். நீங்க வக்கீலுக்கும் கோர்ட்டுக்கும் அழுது, காரியத்தை வேணும்னா சாதிச்சுடலாம். ஊர்ப் பகை வந்துட்டா நீங்க தொழில் செய்யவிடாது.” இது ரங்கையர்.
ரங்கையர் அதிகமாகப் பேசமாட்டார். எப்போதாவது பேசுவார். பெரிய மௌனத்தை அவசியம் ஏற்பட்டுக் கலைப்பதால் அந்தப் பேச்சில் கண்டாமணி போன்ற வலிமையும் தெளிவாக ஒலிக்கும்.
எதிர்ச்சாரி கடைக்காரர்கள்... வக்கீல் வாசுதேவாச்சார்... சேர்மன் முதலியார்... பெட்ரோல் பங்க் சிதம்பரம். ஒருவரா இருவரா... எத்தனை பேர்! சம்பத்து செட்டியார் பின்வாங்கி விட்டார்.
‘அண்ணன் தம்பியும், பெத்த பிள்ளைகளுமா சிப்பந்திகள் துணை. கிருஷ்ணப் பிரசாதமா கஸ்டமர்களோட வாஞ்சை. நானா இந்த ஓட்டலை நடத்திண்டிருக்கேன்... கிருஷ்ண... கிருஷ்ண... எல்லாம் நீ விளையாடிண்டிருக்கே.. . உன் சக்கரம் சுத்திண்டிருக்கு. நான் சம்பளம் இல்லாத குமாஸ்தா...’ என்று தமக்குள் முனகிக் கொண்டார்.
அவருடைய பிள்ளை ராஜாமணி சைக்கிளில் வந்து இறங்கினான். கிரிக்கெட் பேட்டை கேரியரிலிருந்து பிரித்து எடுத்து லாவகமாகச் சுழற்றிக் கொண்டே படியேறி காலண்டர் மாட்டியிருந்த சுவரில் சாய்த்து வைத்துவிட்டுத் திரும்பினான்.
ஸ்போர்ட்ஸ் பனியன்... பேண்ட்... கான்வாஸ்ஷý அகன்று விரிந்த மார்பு. லேசாக அரும்பிய மீசை. சந்தன நிறம், ஆனந்தராவ் மாதிரியே பெரிய கண்கள். ஆனால் அவற்றில் லட்சியமும் கனவுகளும் மிதந்தன. ‘சிவுக்’கென்று வெளிவந்த மாதிரி காணப்பட்ட கீழ் உதடு சற்றுப் பருமன்.
“ஏண்டா ராஜா... விளையாடப் போகலியா?”
தந்தையும் மகனும் வீட்டில் கூடத் தமிழ் தான் பேசுவர். ஏதோ ஒரு நேரத்தில், மனசு தோய்ந்த அந்தரங்கத்தில்தான் கன்னடம் வரும்.
“இல்லேப்பா... சந்துருவுக்கு ஜுரம், அவன் வரல்லே. காப்டன் நரசிம்மன் மெட்ராஸுக்குப் போகணும்னான், அந்திம்பேரிடமிருந்து டெலிகிராம் வந்திருக்குண்ணு போய்ட்டான். இவங்க ரெண்டு பேரும் போயிட்டா பௌலிங்குக்கு தோதான ஆளில்லே... வந்துட்டேன். நீங்க போய்க் குளிச்சிட்டு வாங்க” என்று ஷýவை அவிழ்த்து ஓரமாக விட்டவன், கல்லா மேடையில் ஏறப் போனான்.
“அரே பகவான்... மறந்தே போயிடறது அப்பா. ஸ்டோர் ரூமுக்குப் போய் வேஷ்டி மாத்திகிட்டு வந்துடறேன். ரங்கையர் பார்த்தா கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவார்” என்று வேகமாக ஸ்டோர் ரூமுக்குப் போனான்.
ஓட்டல் தொடங்கும்போது ராஜாமணி ஐந்து வயசுப் பையன். ரங்கையர் கையைப் பிடித்துக் கொண்டு, கடைக்கு வருவான், அடுக்களையில் அவனை உட்கார வைத்து வெண்ணெய் தோசை போட்டுக் கொடுத்துஅவன் சாப்பிடுவதை, தாய் மாதிரி ரங்கையர் கரிசனத்தோடு பார்ப்பார்.
‘இப்போது எவ்வளவு வளர்ந்து விட்டான்...’ என்று நினைத்தார் ஆனந்தராவ்.
ராஜாமணி வந்ததும் கல்லாவை விட்டு ஆனந்தராவ் கிளம்பவும், பால்கார வடிவேலு தலையைச் சொறிந்து கொண்டு எதிரே வரவும் சரியாக இருந்தது.
“என்னடா வடிவேலு?”
“தவிடும் புண்ணாக்கும் வாங்கணும்,”
“பத்து மணிக்குப் பட்டுவாடா பண்ணச் சொல்றேன்.”
“நான் ஒரு நடை ஊருக்குப் போயிட்டு சாயந்தரம் வேற சந்தைக்கு வரணுமே சாமி!”
“ஏழரை மணிக்கு எந்தப் புண்ணாக்குக் கடை திறக்கப் போறது? டவுனிலே ஏதாவது ஜோலியிருந்தா பார்த்துண்டு வாடா... பணம் சேரணுமோல்லியோ!
“சரி, சாமி! இந்த உமாசங்கர் பையனைக் கொஞ்சம் வாயை அடக்கி வைக்கச் சொல்லுங்க.”
“என்னடா அவனோட போட்டி... போன வருஷம் கடைக்கு வந்த பையனும், பதினெட்டு வருஷமா பாலூத்தறவனும் சமமாயிடுவீங்களோ... கள்ளுச் சுள்ளுண்ணு பேசிடறான். ஆனா நீ தர்ற பாலைப் பத்தியும் உன்னைப் பத்தியும் என்ன மதிப்பு வச்சிருக்கான தெரியுமா? போடா... சின்னப் பிள்ளையாட்டம்...”
அவனை அனுப்பி வைத்தார்.
அடுக்களைக்குப் போகும் வழியில், ஆனந்தராவ் நுழைந்தார். வீட்டுக்குப் போகும்போது அடுப்படி, அரைவை, சாமான் அலம்பும் இடம், ஸ்டோர் ரூம் எல்லாவற்றையும் ஒரு சுற்றுப் பார்த்து விட்டுப் போகும் பழக்கம், ரங்கையர் பண்ணிப் பண்ணியே அவருக்குப் படிந்து விட்டது.
நாலு அடி எடுத்து வைத்திருக்க மாட்டார். பின்னாலிருந்து ரங்கையர் கூப்பிட்டார்.
“அண்ணா, ஒரு விஷயமில்லே...”
“என்னது...?”
“நீங்க கொஞ்சம் ஸ்டோர் ரூமுக்கு வரணும்.”
“வர்றேனே...”
“சுப்புணி மூட்டை கட்டிண்டு நிக்கறான். யாரும் தடுக்கலே. அவன் தோரணையைப் பார்த்தா தீர்மானம் பண்ணிட்டான் போலிருக்கு. நானும் பேசல்லே. நீங்க வந்து சொல்லுங்கோ.”
சர்வர் சுப்புணி ஒரு ரேஸ் பைத்தியம்! ஞாயிற்றுக் கிழமை பிருந்தாவனில் பெங்களூர் போகாவிட்டால் தலை வெடித்துவிடும். போன ஞாயிற்றுக்கிழமை கையில் காசில்லாமல் போகவே, சர்வர் மணியின் பெட்டியில் கை வைத்து விட்டான். கண்டுபிடித்து விட்டார்கள். அவனும் ஒப்புக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டான். அந்த அவமானம் தாங்கவில்லை.
“சரி... நான் போய் விசாரிக்கிறேன்.”
ரங்கையர் திரும்பிவிட்டார். முதலாளி யாரையாவது விசாரிக்கும்போது, அவர் கூட யாரும் இருக்க மாட்டார்கள்.
ஆனந்தராவ் ஸ்டோர் ரூமை நோக்கி நடந்தார்.
[தொடரும்]

1 comment:

  1. என்ன எழுத்து லாவகம்?.. நடக்கறதை நேரில் பார்க்கிற மாதிரி அப்படி நேரில் பார்க்கிற கூட்டத்தில் நாமும் ஓராளாய் நிற்கிற மாதிரி..

    'என்ன தவம் செய்தனை?..'

    ReplyDelete